Thursday, May 28, 2026

தக்கோலத்தில் ஒரு வானொலி

 


CISFஇன் ராஜா ஆதித்ய சோழன் (RTC) தக்கோலத்தில், “Radio Rangroot - Ek Awaaz, Ek Parivaar” என்ற புதிய வானொலியைத் தொடங்கியுள்ளது. இந்த வானொலியின் தாரக மந்திரம் "ஒரு குரல், ஒரே குடும்பம்" என்பதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள CISF பயிற்சி மையமான தக்கோலம் (RTC), பயிற்சியாளர்களின் அறிவுசார் மற்றும் உணர்வுசார் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, "Radio Rangroot: Ek Awaaz, Ek Parivaar" எனும் ஒரு புதிய சமுதாய வானொலியைத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்த வானொலி ஒலி அலைகள் ஊடாக அல்லாமல், கம்பிவட வானொலியாக அந்த வளாகத்தில் ஒலிக்கிறது. விரைவில் வான் அலைகள் ஊடாகவும் எதிர்பார்க்கலாம்.


இந்த வானொலியில் செவ்வியல் ராகங்கள், பாலிவுட் வாத்திய இசை, ஊக்கமூட்டும் செய்திகள், உடல்நலக் குறிப்புகள் மற்றும் பயிற்சி தொடர்பான தகவல்களை ஒலிபரப்புகிறது; அதே வேளையில், பயிற்சியாளர்கள் தங்கள் கவிதைகள், பாடல்கள், அனுபவங்கள், நினைவுக் குறிப்புகள் மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்தவும் இந்த வானொலி ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள வெளிப்புற ஒலிபெருக்கிகள், இந்த வானொலிச் சேவை பரவலாக மக்களைச் சென்றடைவதையும், அனைவரும் இதில் பங்கேற்பதையும் உறுதி செய்கின்றது.

நேர்மறைச் சிந்தனை, குழு உணர்வு, படைப்பாற்றல் மற்றும் கூட்டுப் பிணைப்பை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள "Radio Rangroot", "Ek Awaaz, Ek Parivaar" (ஒரு குரல், ஒரே குடும்பம்) என்ற உணர்வை மேலும் வலுப்படுத்துகிறது.


Wednesday, May 27, 2026

சென்னை வானொலியில் ராஜாஜி அடித்த ஜோக்


 சென்னை வானொலி நிலையத்தில் தமது சொற்பொழிவு ஒன்றை ஒலிப்பதிவு செய்ய வந்திருந்தார் ராஜாஜி.

ஒலிப்பதிவு முடிந்ததும் அதைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஒலிபெருக்கியில் ஒரு சிறு கோளாறு ஏற்பட்டதால் ஓர் இடத்தில் கரகரப்பு கேட்டது. ராஜாஜிக்கு எதுவும் எப்போதும் துப்புரவாக இருக்கவேண்டும். எனவே அக்கறையோடு கேட்டார், "மறுபடியும் ஒரு முறை பேசி விடட்டுமா?" என்று.

"அவசியமில்லை. ஒலிப்பதிவு சரியாக இருக்கிறது. ஸ்பீக்கர்தான் சரியில்லை” என்றார் எங்கள் பொறியாளர். உடனே ராஜாஜி: “நானும் ஸ்பீக்கர் (சொற்பொழிவாளர்), இதுவும் ஸ்பீக்கர். நீங்கள் எந்த ஸ்பீக்கரைச் சொல்கிறீர்கள்?”

நிகழ்ச்சி அறையிலிருந்த எங்களோடு சேர்ந்து ராஜாஜியும் சிரித்தார்!

 (07.01.1979)