சென்னை வானொலி நிலையத்தில் தமது சொற்பொழிவு ஒன்றை ஒலிப்பதிவு செய்ய வந்திருந்தார் ராஜாஜி.
ஒலிப்பதிவு முடிந்ததும் அதைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஒலிபெருக்கியில் ஒரு சிறு கோளாறு ஏற்பட்டதால் ஓர் இடத்தில் கரகரப்பு கேட்டது. ராஜாஜிக்கு எதுவும் எப்போதும் துப்புரவாக இருக்கவேண்டும். எனவே அக்கறையோடு கேட்டார், "மறுபடியும் ஒரு முறை பேசி விடட்டுமா?" என்று.
"அவசியமில்லை. ஒலிப்பதிவு சரியாக இருக்கிறது. ஸ்பீக்கர்தான் சரியில்லை” என்றார் எங்கள் பொறியாளர். உடனே ராஜாஜி: “நானும் ஸ்பீக்கர் (சொற்பொழிவாளர்), இதுவும் ஸ்பீக்கர். நீங்கள் எந்த ஸ்பீக்கரைச் சொல்கிறீர்கள்?”
நிகழ்ச்சி அறையிலிருந்த எங்களோடு சேர்ந்து ராஜாஜியும் சிரித்தார்!
(07.01.1979)
