Saturday, July 11, 2026

இலங்கையின் தொலைத்தொடர்பு சேவை



இலங்கையின் தொலைத்தொடர்பு வரலாற்றின் மிக முக்கியமானதொரு மைல்கல்லைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு நினைவு அஞ்சல் தலையாகும். இந்த அஞ்சல் தலையில் மூன்று மொழிகளில் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) 'இலங்கை' (SRI LANKA) என்ற நாட்டின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் தலையின் மையப்பகுதியில் இலங்கையின் வரைபடம் சித்தரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் தொலைத்தொடர்புத் துறை கடந்து வந்த பாதையை விளக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனங்களின் படங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் பண மதிப்பு 2.00 ரூபாயாக அச்சிடப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல் தலை முக்கியமாக இலங்கையின் தொலைத்தொடர்பு சேவையின் 125 ஆண்டுகாலப் பூர்த்தியை (125 YEARS OF TELECOMMUNICATIONS) நினைவுபடுத்தும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் கீழ் பகுதியில் தமிழ் மொழியில் "125 வருட தொலைத்தொடர்பு சேவை" என்ற வாசகம் தெளிவாகக் காணப்படுகிறது. 125 ஆண்டுகள் என்ற இந்த நெடிய பயணம், இலங்கையில் நவீன தகவல் பரிமாற்றத்தின் தொடக்கத்தையும் அதன் அசுர வளர்ச்சியையும் உலகிற்குப் பறைசாற்றும் ஒரு வரலாற்று ஆவணமாக இந்த அஞ்சல் தலையை மாற்றுகிறது.

அஞ்சல் தலையில் உள்ள வரைபடத்தில் "1st Telegraph Transmission - 1858" (முதலாவது தந்திப் பரிமாற்றம் - 1858) என்று குறிப்பிடப்பட்டு, கொழும்பு (COLOMBO) மற்றும் காலி (GALLE) ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கு இடையே ஒரு சிவப்பு நிற இணைப்புக்கோடு வரையப்பட்டுள்ளது. இது 1858 ஆம் ஆண்டில் இலங்கையில் முதன்முதலாக கொழும்புக்கும் காலிக்கும் இடையே தந்திச் சேவை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டதை நினைவுகூர்கிறது. வரைபடத்தின் இருபுறமும் பழைய தந்தி அனுப்பும் கருவி (Telegraph key) மற்றும் ஆரம்பகால ஒலிபெருக்கி அல்லது தந்தி ஏற்பி சாதனம் ஒன்றின் படமும் அச்சிடப்பட்டு, தொழில்நுட்பத்தின் பழமையை நமக்கு உணர்த்துகின்றன.

சுருக்கமாகக் கூறின், இந்த அஞ்சல் தலை வெறும் தபால் கட்டணத்திற்கான ஒரு அச்சிடப்பட்ட காகிதம் மட்டுமல்லாமல், இலங்கையின் தொலைத்தொடர்புத் துறையின் ஆரம்பகால வரலாற்றைத் தன்னுள் அடக்கியுள்ள ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். தகவல்தொடர்பு சாதனங்கள் ஏதுமற்ற ஒரு காலத்தில், மின்சாரக் Signalகள் மூலம் நகரங்களை இணைத்த அந்தப் பெருமைமிகு வரலாற்றுத் தருணத்தை இன்றும் நமக்கெல்லாம் நினைவுபடுத்தும் ஒரு அரிய சேகரிப்பாகவும் இது திகழ்கிறது.


"அகில இந்திய வானொலி" என்ற பெயர் வந்த வரலாறு


 

இந்திய அரசு ஒலிபரப்பு சேவையின் டெல்லி நிலையம், 1936 ஜனவரி 1 அன்று, 18 அலிபூர் சாலையில் இருந்த தற்காலிக ஸ்டுடியோக்களிலிருந்து ஒலிபரப்பைத் தொடங்கியது. 20 கிலோவாட் மெகாவாட் டிரான்ஸ்மிட்டர் மால் சாலையில் அமைந்திருந்தது. அதற்குள், கட்டுப்பாட்டாளர் லயனல் ஃபீல்டன், செயலகத்தின் எதிர்ப்பையும் மீறி, 'அகில இந்திய வானொலி' என்ற பெயரை ஏற்றுக்கொள்ளுமாறு வைஸ்ராய் லார்ட் லின்லித்கோவை சம்மதிக்க வைத்தார். இந்தப் புதிய பெயர் 1936 ஜூன் 8 முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

ஃபீல்டனின் சுயசரிதையான 'தி நேச்சுரல் பென்ட்' (1960 ஆண்ட்ரே டுயட்ச் லிமிடெட், லண்டன்), இந்திய ஒலிபரப்பின் தொடக்க ஆண்டுகளின் இன்னல்களை வெளிப்படுத்துகிறது. டெல்லியில் இருந்த இம்பீரியல் செயலகத்தின் மெத்தனமான போக்கினால் அவர் பொறுமையிழந்திருந்தார்.  பிபிசியைச் சேர்ந்த மற்றொருவரான செசில் கோய்டர், 1936 ஆகஸ்ட் 19 அன்று அகில இந்திய வானொலியின் தலைமைப் பொறியாளராகப் பொறுப்பேற்றார். மற்றொரு ஆங்கிலேயரான சார்லஸ் பார்ன்ஸ், 1937 செப்டம்பர் 9 அன்று செய்தி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பின்னர் டிசம்பர் மாதம், லாகூரில் ஐந்தாவது நிலையம் (5 கிலோவாட்) செயல்பாட்டிற்கு வந்தது. (Source: This is All India Radio - U.L. Baruah)

Monday, June 29, 2026

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் எழுதிய "எனக்கும் இருக்கிறது ஒரு சரித்திரம்"


 கானல் அமீரகம்,

தமிழ் அலை இணைந்து நடத்திய

சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின்

"எனக்கும் இருக்கிறது ஒரு சரித்திரம்"

நூல் வெளியீட்டு விழாவில் எமது உரை 28.00வது நிமிடத்தில்...தொடுப்பு



நூல் அறிமுகம்:

தமிழ் வானொலிகள் வாயிலாக உலகமெங்கும் அறியப்ப யப்பட்ட சாத்தான்குளம் அப்துல்ஜப்பார் அவர்களின் நினைவலைகள் எனக்கு ம் இருக்கிறது ஒரு சரித்திரம் என்ற தலைப்பில் நூலாகி இருக்கின்றன. அவர் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் அவரது மகன் ஆசிப் மீரான். கிரிக்கெட் வர்ணனைகளின் அழகுக்காக என்றென்றும் அறியப்படுபவர் அப்துல் ஜப்பார். தான் எப்படி கிரிக்கெட் வர்ணனையாளராக ஆனேன் என அவர் எழுதி இருப்பதும், முதன் முதலாக வர்ணித்த ஒரு ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்திய தொடரும் மிக சுவாரசியம். ஆரம்பத்தில் தன் தந்தையைப் பற்றியும் தன் மகன், மகள் பற்றியும் அவர் எழுதிக்கொண்டே செல்வது இந்நூலை கீழே வைக்கவிடாமல் படிக்கச் செய்கிறது. 1950, ஜூன் 26. கொழும்பு வானொலியில் ஜப்பாரின் ஒலிபரப்பு வாழ்க்கை தொடங்கும் தினத்தில் நடந்தவற்றை எழுதி, பன்னிரெண்டில் தொடங்கி 82 வயது வரை தொடர்ந்தது என எழுதுகிறார். இக்காலகட்டத்தில் தனி மனிதர் ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் தாம் இவை என்றாலும் இந்த அனுபவங்கள் நம் பட்டறிவை விசாலமாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

வெளியீடு: கானல் அமீரகம், தமிழ் அலை, 044-24340200 விலை . 250

நன்றி: அந்திமழை | ஜூலை 2026

Monday, June 08, 2026

அகில இந்திய வானொலியின் வெள்ளி விழா அஞ்சல் உறை


 

வெள்ளி விழா அஞ்சல் உறையில் உறையும் வானொலியின் பொற்காலம்: அகில இந்திய வானொலியின் 25 ஆண்டுகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிறுவனத்தின் ஆரம்ப காலப் பயணத்தை, இந்திய அஞ்சல் துறையின் ஒரு சிறிய வெளியீடு எப்படிப் பிரதிபலிக்கிறது? இந்திய வானொலியின் வெள்ளி விழாவைக் கொண்டாடும் 1961 ஆம் ஆண்டின் இந்த முதல் நாள் கடித உறை (First Day Cover) அஞ்சல் அட்டை சேகரிப்பாளர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷமாக மட்டுமின்றி, நாட்டின் சமூகத் தொடர்பு வரலாற்றின் ஆவணமாகவும் திகழ்கிறது.


1961, ஜூன் 8: ஒரு வானொலி மைல்கல்

நீங்கள் பார்க்கும் இந்தக் கடித உறை, இந்தியத் தகவல் தொடர்பு வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இது, அகில இந்திய வானொலியின் (All India Radio - AIR) வெள்ளி விழாவை (25 ஆண்டுகள் நிறைவு) கொண்டாடும் விதமாக, 1961 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி இந்திய அஞ்சல் மற்றும் தந்தித் துறையால் வெளியிடப்பட்ட ஒரு முதல் நாள் கடித உறை (FDC) ஆகும்.

இந்தியாவில் பொது ஒலிபரப்பு சேவையின் துவக்கமானது 1927 இல் தனியார் வானொலி சங்கங்களால் தொடங்கப்பட்டாலும், அகில இந்திய வானொலி என்ற அதிகாரப்பூர்வப் பெயர் மற்றும் அமைப்பு 1936 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. அந்தத் துவக்கத்தின் 25வது ஆண்டை நினைவுபடுத்தும் வகையில்தான் இந்தச் சிறப்பு அஞ்சல் உறை வெளியானது.

அஞ்சல் உறையின் கலை

இந்தக் கடித உறையின் வடிவமைப்பு, வானொலியின் முக்கியத்துவத்தையும் தொழில்நுட்பப் பரிமாணத்தையும் கலைநயத்துடன் காட்சிப்படுத்துகிறது. முதல் நாள் கடித உறைக் குறி (First Day Cover Mark): உறையின் இடதுபுறத்தில் அமைந்துள்ள சிறப்பு முத்திரை, AIR என்ற அகில இந்திய வானொலியின் முதலெழுத்துக்களை ஒன்றிணைத்த சின்னத்தைக் கொண்டுள்ளது. இந்த எழுத்துக்களைச் சுற்றியுள்ள மையப்படுத்தப்பட்ட வட்டங்கள், வானொலி அலைகள் எல்லாத் திசைகளிலும் பரவுவதைக் குறிக்கின்றன. கீழே "SILVER JUBILEE ALL INDIA RADIO" மற்றும் "8 JUNE 1961" என்ற வாசகங்கள், விழா மற்றும் வெளியீட்டுத் தேதியைக் குறிக்கின்றன. இது, இந்த வெளியீட்டின் மையக் கருத்தை அழுத்தமாகக் காட்டுகிறது.

 

உறையின் மேல் நடுவில், வெளிர் நீல நிறத்தில் "BY AIR MAIL", அதற்குக் கீழே ஃபிரெஞ்சு மொழியில் "PAR AVION" மற்றும் இந்தியில் "ஹவாய் டாக் சே" (விமான அஞ்சல் மூலம்) என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்தக் கடித உறை, நார்வேயில் உள்ள Rolf Lövström என்ற அஞ்சல் அட்டை சேகரிப்பாளருக்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. 1960களில், அஞ்சல் உறையில் இவ்வாறு வெளிப்படையாக அச்சிடுவது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது.

வரலாற்று அஞ்சல் தலை மற்றும் முத்திரை

வெள்ளி விழா அஞ்சல் தலை, இந்தக் கடித உறையின் மைய ஈர்ப்புப் புள்ளி ஆகும். இந்த அஞ்சல் தலை (Postage Stamp) 15 புதிய பைசா (15 nP - New Paisa) மதிப்பில், அடர் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் தலையில் ஒரு உயரமான வானொலி அலைபரப்பி கோபுரம் (Transmitting Aerial) சித்திரிக்கப்பட்டுள்ளது. அதன் கீழே, அகில இந்திய வானொலியின் லோகோவான, 'வானொலிப் பெட்டி' வடிவமைப்பு மற்றும் மையத்தில் 'இந்தியா போஸ்டேஜ்' என்றும், 'ஆகாஷவாணி' (வானொலிக்கு இணையான சமஸ்கிருதச் சொல்) என்றும் எழுதப்பட்டுள்ளது. இது, தொலைத்தொடர்பில் AIR இன் வலிமையையும், தேசிய அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது. அஞ்சல் தலைக்கு மேலே "SILVER JUBILEE ALL INDIA RADIO" மற்றும் வலதுபுறத்தில் "8 JUNE 1961" ஆகிய தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளன.

சிறப்பு அஞ்சல் முத்திரை (Special Cancellation Mark), அஞ்சல் தலையின் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இது வட்ட வடிவில் ஒரு சிறப்பு முத்திரையாகக் (Cancellation Mark) குத்தப்பட்டுள்ளது. இந்த முத்திரை மும்பையில் (Bombay) அஞ்சல் நிலையத்தில் குத்தப்பட்டுள்ளது. முத்திரையின் மையத்தில் மீண்டும் ஒரு அலைபரப்பி கோபுரம் மற்றும் AIR சின்னம் இடம்பெற்றுள்ளது. இதன் விளிம்புகளில் "ALL INDIA RADIO" மற்றும் "SILVER JUBILEE" என்ற வாசகங்களும், கீழே தேதி "8-6-61" மற்றும் ஊரின் பெயர் "BOMBAY" என்றும் தெளிவாகக் குத்தப்பட்டுள்ளது. முதல் நாள் கடித உறைகளில், அஞ்சல் தலை வெளியான அதே நாளில், அதே இடத்தில் இந்தச் சிறப்பு முத்திரை குத்தப்படுவது, அஞ்சல் சேகரிப்பில் அதன் மதிப்பைக் கூட்டுகிறது.



பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படும் வரலாறு

இந்த முதல் நாள் கடித உறை, வெறுமனே ஒரு காகிதத் துண்டு அல்ல. இது இந்தியாவின் முதல் மிகப் பெரிய பொதுச் சேவை ஊடகமான அகில இந்திய வானொலி, பொழுதுபோக்கு, கல்வி, செய்தி என நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தனது குரலைக் கொண்டு சென்ற 25 ஆண்டுகளின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. 1961-இல் இந்தியா அடைந்த தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்பு முன்னேற்றத்தை, ஒரு சிறிய அஞ்சல் தலைக்குள் சுருக்கிக் காட்டுகிறது.

வானொலியின் பொற்காலத்தை நினைவுபடுத்தும் இந்த அஞ்சல் உறை, இந்திய அஞ்சல் சேகரிப்பாளர்களின் வரலாற்றின் ஒரு பகுதியாகவும், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய அஞ்சல் சேகரிப்புத் தலைப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஆவணமாகவும் இன்றும் மதிக்கப்படுகிறது.

Tuesday, June 02, 2026

நேபாள வானொலியின் பவள விழா: சிறப்பு தபால் தலை



தகவல் தொடர்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், நேபாள அரசாங்கத்தின் தபால் சேவைத் துறை, நேபாள வானொலியின் பவள விழாவை சிறப்பிக்கும் வண்ணம் ஒரு சிறப்பு முதல் நாள் உறை, தபால் தலை மற்றும் சிறப்பு முத்திரை ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. 1951 ஏப்ரல் 2 அன்று தொடங்கப்பட்ட நேபாள வானொலி, பல தசாப்தங்களாக அந்நாட்டு மக்களின் குரலாகவும், நம்பகமான ஊடகமாகவும் விளங்கி வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, XHDATA D-808 வானொலிப் பெட்டியில் நேபாள வானொலியின் புகழ்பெற்ற அலைவரிசை 1143 Khz ல் கேட்டுக்கொண்டு இருக்கும் போது அருகே கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த முதல் நாள் உறை, கடந்த காலத்தின் வானொலி நினைவுகளையும் தபால் தலை சேகரிப்பாளர்களின் ஆர்வத்தையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கிறது.

பூர்ணா கலா லிம்பு என்பவரால் வடிவமைக்கப்பட்டு, நேபாளத்தின் ஜனக் கல்வி மையத்தினால் அச்சிடப்பட்ட இந்தத் தபால் தலை பல அரிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது. 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட இந்த செங்குத்து வடிவ தபால் தலை, புற ஊதாக் கதிர்களில் மங்கலாகத் தெரியும் பாதுகாப்பு இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒளிரும் மை மற்றும் டேகாண்ட் மை உள்ளிட்ட 6 வண்ணக் கலவைகளைப் பயன்படுத்தி, சுய-ஒட்டும் தன்மையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 45 mm x 35 mm அளவிலான இத்தபால் தலைகள், ஒரு தாளுக்கு 40 வீதம், மொத்தம் 5 லட்சம் பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டு உலகளாவிய சேகரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த முதல் நாள் உறையின் முகப்பில் நேபாள வானொலியின் அதிகாரப்பூர்வ சின்னமும், பின்னணியில் "ON AIR" என்ற ஒலிபரப்பு வாசகமும் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளன. இதன் வலதுபுறத்தில் ஒட்டப்பட்டுள்ள தபால் தலையின் மீது, "First Day Of Issue - 2025" மற்றும் நேபாள விக்ரம் சம்பத் ஆண்டு "2081 பைசாக் 20" எனக் குறிக்கப்பட்ட சிறப்பு வட்ட வடிவ ரத்து முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. நேபாள தகவல் தொடர்புத் துறையின் அதிகாரப்பூர்வ முத்திரையுடன் கூடிய இந்த உறை, வானொலி வரலாற்றையும் தபால் கலைத் துறையையும் நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷமாகும்.


Thursday, May 28, 2026

தக்கோலத்தில் ஒரு வானொலி

 


CISFஇன் ராஜா ஆதித்ய சோழன் (RTC) தக்கோலத்தில், “Radio Rangroot - Ek Awaaz, Ek Parivaar” என்ற புதிய வானொலியைத் தொடங்கியுள்ளது. இந்த வானொலியின் தாரக மந்திரம் "ஒரு குரல், ஒரே குடும்பம்" என்பதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள CISF பயிற்சி மையமான தக்கோலம் (RTC), பயிற்சியாளர்களின் அறிவுசார் மற்றும் உணர்வுசார் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, "Radio Rangroot: Ek Awaaz, Ek Parivaar" எனும் ஒரு புதிய சமுதாய வானொலியைத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்த வானொலி ஒலி அலைகள் ஊடாக அல்லாமல், கம்பிவட வானொலியாக அந்த வளாகத்தில் ஒலிக்கிறது. விரைவில் வான் அலைகள் ஊடாகவும் எதிர்பார்க்கலாம்.


இந்த வானொலியில் செவ்வியல் ராகங்கள், பாலிவுட் வாத்திய இசை, ஊக்கமூட்டும் செய்திகள், உடல்நலக் குறிப்புகள் மற்றும் பயிற்சி தொடர்பான தகவல்களை ஒலிபரப்புகிறது; அதே வேளையில், பயிற்சியாளர்கள் தங்கள் கவிதைகள், பாடல்கள், அனுபவங்கள், நினைவுக் குறிப்புகள் மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்தவும் இந்த வானொலி ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள வெளிப்புற ஒலிபெருக்கிகள், இந்த வானொலிச் சேவை பரவலாக மக்களைச் சென்றடைவதையும், அனைவரும் இதில் பங்கேற்பதையும் உறுதி செய்கின்றது.

நேர்மறைச் சிந்தனை, குழு உணர்வு, படைப்பாற்றல் மற்றும் கூட்டுப் பிணைப்பை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள "Radio Rangroot", "Ek Awaaz, Ek Parivaar" (ஒரு குரல், ஒரே குடும்பம்) என்ற உணர்வை மேலும் வலுப்படுத்துகிறது.


Wednesday, May 27, 2026

சென்னை வானொலியில் ராஜாஜி அடித்த ஜோக்


 சென்னை வானொலி நிலையத்தில் தமது சொற்பொழிவு ஒன்றை ஒலிப்பதிவு செய்ய வந்திருந்தார் ராஜாஜி.

ஒலிப்பதிவு முடிந்ததும் அதைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஒலிபெருக்கியில் ஒரு சிறு கோளாறு ஏற்பட்டதால் ஓர் இடத்தில் கரகரப்பு கேட்டது. ராஜாஜிக்கு எதுவும் எப்போதும் துப்புரவாக இருக்கவேண்டும். எனவே அக்கறையோடு கேட்டார், "மறுபடியும் ஒரு முறை பேசி விடட்டுமா?" என்று.

"அவசியமில்லை. ஒலிப்பதிவு சரியாக இருக்கிறது. ஸ்பீக்கர்தான் சரியில்லை” என்றார் எங்கள் பொறியாளர். உடனே ராஜாஜி: “நானும் ஸ்பீக்கர் (சொற்பொழிவாளர்), இதுவும் ஸ்பீக்கர். நீங்கள் எந்த ஸ்பீக்கரைச் சொல்கிறீர்கள்?”

நிகழ்ச்சி அறையிலிருந்த எங்களோடு சேர்ந்து ராஜாஜியும் சிரித்தார்!

 (07.01.1979)

Friday, April 10, 2026

கலசலிங்கம் சமுதாய வானொலியில் அறிவிப்பாளர் பயிற்சி பட்டறை


கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் கலசலிங்கம் வானொலி நிலையம் சார்பில், காட்சி சார் அறிவியல் துறைத் தலைவர் முனைவர். கற்பக சுந்தரம் ஏற்பாட்டில் ஏப்ரல் 11, 2026 அன்று வானொலி அறிப்பாளர் குறித்த ஒரு நாள்  பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பில், வானொலித் துறையின் நுணுக்கங்கள் மற்றும் நேரடி அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்கினோம்.  தனித்துவமான குரலால் வானொலித் துறையில் முத்திரை பதிக்க நினைப்பவர்களுக்கு, ஒரு அருமையான வாய்ப்பாக இருந்தது.





















Saturday, April 04, 2026

எது சிறந்தது? டி.ஏ.பியா அல்லது டி.ஆர்.எம்மா?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வானொலித் தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. பழைய அனலாக் (AM/FM) முறையிலிருந்து நாம் டிஜிட்டல் முறைக்கு மாறிக்கொண்டிருக்கும் வேளையில், DRM மற்றும் DAB/DAB+ ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் உலக அளவில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் பல வானொலி நிலையங்கள் டி.ஏ.பியில் ஒலிபரப்பி வருகின்றன. இதனால் டி.ஆர்.எம் வானொலிப் பெட்டியை விட டி.ஏ.பி வானொலிப் பெட்டிகள் சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன.

இவை இரண்டுமே டிஜிட்டல் முறையில் ஒலியை ஒலிபரப்பப் பயன்பட்டாலும், அவற்றுக்கிடையே அடிப்படையிலேயே சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

டிஜிட்டல் ஆடியோ பிராட்காஸ்டிங் (DAB) என்பது முக்கியமாக நகரங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட பிராந்தியங்களுக்குள் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது. இது ஒரே அலைவரிசையிலேயே பல வானொலி நிலையங்களைத் துல்லியமான ஒலியுடன் வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த அமைப்பாகும். இதன் மூலம் நேயர்கள் தங்களுக்குப் பிடித்தமான பல அலைவரிசைகளைத் தெளிவான ஒலித் தரத்துடன் கேட்க முடியும்.

DAB-ன் மேம்படுத்தப்பட்ட வடிவமான DAB+, பழைய முறையை விட மிகச்சிறந்த HE-AAC v2 எனும் நவீன ஆடியோ கம்ப்ரஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாக, ஒரு குறிப்பிட்ட அலைவரிசையிலேயே இன்னும் கூடுதலான வானொலி நிலையங்களை எவ்வித சிரமமுமின்றி ஒலிபரப்ப முடிகிறது. இது டிஜிட்டல் ஒலிபரப்பின் செயல்திறனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது.

இந்த DAB/DAB+ தொழில்நுட்பமானது பெரும்பாலும் 'Band III' மற்றும் 'L-Band' போன்ற உயர் அதிர்வெண் அலைவரிசைகளில் செயல்படுகிறது. இதன் காரணமாக, இதன் சிக்னல்கள் ஒரு மாநில அளவில் அல்லது குறிப்பிட்ட உள்ளூர் எல்லைக்குள் மட்டுமே சிறப்பாகச் செயல்படும் தன்மையைக் கொண்டுள்ளன. அதாவது, இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல சேனல்களை வழங்கவே பெரிதும் உதவுகிறது.

இதற்கு நேர்மாறாக, டிஜிட்டல் ரேடியோ மொண்டியல் (DRM) என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு தொழில்நுட்ப அணுகுமுறையைக் கொண்டதாகும். இது தற்போது நாம் பயன்படுத்தும் பழைய AM (Shortwave/Medium wave) மற்றும் FM அலைவரிசைகளிலேயே டிஜிட்டல் சிக்னல்களை அனுப்பும் தனித்துவமான திறன் கொண்டது. ஏற்கனவே இருக்கும் கட்டமைப்பைப் பயன்படுத்தி டிஜிட்டல் சேவையை வழங்க இது வழிவகை செய்கிறது.

DRM தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய பலம் என்பது அதன் பரந்து விரிந்த ஒளிபரப்பு எல்லை ஆகும். ஒரு சிறிய டிரான்ஸ்மிட்டரைப் பயன்படுத்தி ஒரு முழு நாட்டிற்கோ அல்லது ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கோ மிகத் துல்லியமான ஒலியை இதால் கொண்டு செல்ல முடியும். நீண்ட தூரத் தகவல் தொடர்புக்கு இது ஒரு மிகச்சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் ஆகாஸ்வாணி தனது நீண்ட தூர ஒலிபரப்புகளுக்கு இந்த DRM தொழில்நுட்பத்தையே பெருமளவில் பயன்படுத்துகிறது. இந்தியாவைப் போன்ற ஒரு பரந்த தேசத்தில், மூலை முடுக்கெல்லாம் வானொலிச் சேவையைத் தெளிவான ஒலியுடன் கொண்டு சேர்க்க இதுவே சிறந்த வழியாகும். இதனால் நாட்டின் குக்கிராமங்களுக்கும் தகவல்கள் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.


 அலைக்கற்றை திறனைப் பொறுத்தவரை, DAB/DAB+ முறையில் ஒரே அலைக்கற்றையில் 10 முதல் 20 நிலையங்களை ஒலிபரப்ப முடியும், ஆனால் DRM முறையில் சுமார் 3 முதல் 5 நிலையங்களை மட்டுமே ஒலிபரப்ப இயலும். இருப்பினும், DRM தொழில்நுட்பமானது அனலாக் சிக்னல்களை விட மிகக் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துகிறது என்பது அதன் மற்றொரு சிறப்பம்சமாகும். இது சுற்றுச்சூழல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நன்மையளிக்கிறது.

பயன்பாட்டு ரீதியாகப் பார்த்தால், அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பல சேனல்களை வழங்க DAB/DAB+ மிகவும் பொருத்தமானதாகும். ஆனால், புவியியல் ரீதியாகப் பெரிய பரப்பளவு கொண்ட இந்தியா போன்ற நாடுகளுக்குத் தடையற்ற சேவையை வழங்க DRM தொழில்நுட்பமே முன்னுரிமை பெறுகிறது. இந்த இரண்டும் அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்பத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்த இரண்டு தொழில்நுட்பங்களும் வெவ்வேறு வகையான ரேடியோ செட்களில் மட்டுமே செயல்படும் என்பதால், எதிர்காலத்தில் இவை இரண்டையும் ஆதரிக்கும் 'யுனிவர்சல் ரேடியோ'க்கள் சந்தைக்கு வருவது அவசியமாகும். இந்த இரண்டையும் எடுக்கும் வானொலிப் பெட்டியும் சந்தையில் கிடைக்கிறது. ஸ்டார் வேவ்ஸ் நிறுவனம் அதனை தயாரித்துள்ளது.

தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும், நேயர்களுக்கு இரைச்சல் இல்லாத தெளிவான ஒலியை வழங்குவதே இந்த டிஜிட்டல் புரட்சியின் இறுதி இலக்காகும்.

Thursday, April 02, 2026

தமிழகத்தில் டி.ஆர்.எம் ஒலிபரப்பு

 


தமிழ்நாட்டில் வானொலி ஒலிபரப்புத் துறை டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்வது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். குறிப்பாக டி.ஆர்.எம் தொழில்நுட்பம் மூலம் உயர்தர ஒலியை வழங்க சென்னை மற்றும் திருச்சி நிலையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தத் தொழில்நுட்ப மாற்றமானது நேயர்களுக்குத் தெளிவான ஒலியையும் கூடுதல் வசதிகளையும் வழங்குகிறது.

தெற்கு மண்டலத்தில் அமைந்துள்ள இந்த நிலையங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குத் தெளிவான வானொலி சேவையை வழங்குகின்றன. சென்னை ஏ, சென்னை சி மற்றும் திருச்சிராப்பள்ளி ஏ ஆகிய மூன்று முக்கிய அலைவரிசைகளும் இந்த டிஜிட்டல் புரட்சியின் முன்னணியில் உள்ளன. இந்த நிலையங்கள் அனைத்தும் ஒரே மாநிலத்தின் கீழ் வந்தாலும், அவற்றின் செயல்பாட்டு முறைகள் மாறுபடுகின்றன.

சென்னை ஏ நிலையமானது 711 kHz என்ற டி.ஆர்.எம் அலைவரிசையில் இயங்குகிறது. அதே சமயம், இதன் அனலாக் ஏ.எம் ஒலிபரப்பு 720 kHz அலைவரிசையில் 200 kW என்ற மிக அதிக சக்தியுடன் தடையின்றித் தொடர்கிறது. இது டிஜிட்டல் மற்றும் அனலாக் ஆகிய இரண்டு வகை நேயர்களையும் சென்றடையும் வகையில் ஒலிபரப்பப்படுகிறது.

சென்னை ஏ நிலையத்தின் ஒலிபரப்பு சக்தியை ஆய்வு செய்யும் போது, சிமுல்காஸ்ட் முறையில் 8 kW சக்தியும், பியூர் டி.ஆர்.எம் முறையில் 80 kW சக்தியும் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்ப வேறுபாடு, டிஜிட்டல் வானொலிப் பெட்டிகள் வைத்திருப்பவர்களுக்கு மிகத் துல்லியமான ஒலியை வழங்க உதவுகிறது.

சென்னை ஏ நிலையத்தின் கால அட்டவணையைப் பார்த்தால், திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 03:00 முதல் மாலை 5:00 வரையும், சனிக்கிழமையும் "பியூர் டி.ஆர்.எம்" முறையில் பிரத்யேகமாக ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் நேயர்கள் எவ்வித இரைச்சலும் இன்றி உயர்தர வானொலி அனுபவத்தைப் பெற முடியும். வெள்ளி மற்றும் ஞாயிறு ஒலிபரப்பு இல்லை.

சென்னை சி நிலையமானது சற்று மாறுபட்டது, இது 783 kHz அலைவரிசையில் ஒலிப்புகிறது. இந்த நிலையத்திற்குத் தனியாக ஏ.எம் அலைவரிசை அல்லது ஏ.எம் ஒலிபரப்பிக் குறித்த விவரங்கள் இல்லை. இருப்பினும், இது 8 kW சக்தியில் பியூர் டி.ஆர்.எம் சேவையைத் தடையின்றி ஒலிபரப்புகிறது.



சென்னை சி நிலையத்தின் சிறப்பு என்னவென்றால், இது மாலை 5:00 முதல் அடுத்த நாள் மதியம் 3:00 வரை நீண்ட நேரம் பியூர் டி.ஆர்.எம் முறையில் ஒலிபரப்பாகிகிறது. இது சென்னை மாநகர நேயர்களுக்கு ஒரு நவீன டிஜிட்டல் வானொலி அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி ஏ நிலையமானது தென் தமிழகத்தின் முக்கிய நிலையமாகத் திகழ்கிறது. இது 927 kHz அலைவரிசையில் டி.ஆர்.எம் சேவையையும், 936 kHz அலைவரிசையில் 100 kW சக்தியுடன் ஏ.எம் சேவையையும் வழங்குகிறது. இதன் மூலம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் பயன் பெறுகின்றன.

திருச்சி நிலையமானது சிமுல்காஸ்ட் முறையில் 4 kW சக்தியையும், பியூர் டி.ஆர்.எம் முறையில் 40 kW சக்தியையும் பயன்படுத்துகிறது. இதன் பியூர் டி.ஆர்.எம் ஒலிபரப்பு திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 3:30 முதல் மாலை 4:30 வரை நடைபெறுகிறது. இது சென்னை நிலையத்தைப் போன்றே குறிப்பிட்ட நேரத்தில் டிஜிட்டல் சேவையை வழங்குகிறது.

இவ்வாறாக, தமிழ்நாட்டின் இந்த மூன்று முக்கிய நிலையங்களும் வெவ்வேறு மின்சக்தி மற்றும் கால அட்டவணைகளைக் கொண்டு டி.ஆர்.எம் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக ஒலிபரப்பி வருகின்றன. இது மாநிலத்தின் வானொலி ஒலிபரப்பு வரலாற்றில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி, நேயர்களுக்கு நவீன காலத்திற்கு ஏற்ப சேவைகளை வழங்கி வருகிறது.