Showing posts with label பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி. Show all posts
Showing posts with label பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி. Show all posts

Monday, February 05, 2024

பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி புத்தக வெளியீடு

 

உலக வானொலி தினத்தில் இந்த ஆண்டு பன்முகப் பார்வையில் வரிசையில் அகில இந்திய வானொலிக்கான தொகுப்பு வெளிவர உள்ளது. இது வரை பன்முகப் பார்வையில் வரிசையில் சீன வானொலி, இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை, வேரித்தாஸ் வானொலியை அடுத்து தற்பொழுது அகில இந்திய வானொலிக்கான புத்தகம் வெளிவருகிறது.

இது வரை வெளிவந்த புத்தகங்களை விட, இது 450 பக்கங்கள் கொண்ட பெரும் தொகுப்பாக வெளிவருகிறது. அதுவும் தொகுதி - 1 மட்டுமே இது. இன்னும் நிறையக் கட்டுரைகள் வந்த வண்ணமே உள்ளது. அவற்றைத் தொகுதி - 2இல் தான் கொண்டு வரவேண்டும்.

இத்தனை பேர் அறிவிப்பு வந்தவுடன் எழுதித் தள்ளுவார்கள் எனக் கொஞ்சமும் நினைக்கவில்லை.  பத்து பாகங்கள் வெளியிட்டாலும், எழுதித் தீராத வரலாற்றினைக் கொண்டது அகில இந்திய வானொலி.

பன்முகப் பார்வை வரிசையைத் தொடங்கும் போது 15 வெளிநாட்டுச் சிற்றலை வானொலிகளை ஆவணப்படுத்தத் திட்டமிட்டு இருந்தோம். அதில் ஐந்து வானொலிகளுக்கான தொகுப்பு வெளிவந்துவிட்டது.

இனி வெளிவர இருப்பவை வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, மாஸ்கோ வானொலி, வத்திகான் வானொலி, சிங்கப்பூர் வானொலி, மலேசிய வானொலி, அட்வண்டிஸ்ட் உலக வானொலி (AWR), TWR வானொலி, HCJB வானொலி, பாகிஸ்தான் வானொலி, ஃபீபா வானொலி ஆகிய தமிழ் ஒலிபரப்பு செய்த, செய்துவரும் சிற்றலை  வானொலிகளை ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. விரைவில் அவையும் வெளிவரும்.

இது தவிர, புலிகளின் குரல், ஃபேமிலி ரேடியோ, எஸ்.பி.எஸ்.ஆஸ்ரேலியா போன்ற சிறப்பு நிலை வானொலிகளையும் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. பார்ப்போம், காலமும், சூழலும் ஒத்துழைத்தால், அனைத்தும் சாத்தியமே.

வாருங்கள் இணைந்து, இந்த வருடத்திற்கான உலக வானொலி தினத்தினை சென்னைப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடுவோம்.