Thursday, August 21, 2014

சீன வானொலியின் மூத்த ஹிந்தி அறிவிப்பாளர் மறைவு

சீன சர்வதேச வானொலி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட "ரேடியோ ஆஃப் பெய்ஜிங்'கின் ஹிந்தி அறிவிப்பாளராகப் பணியாற்றிய ஷியாமா வல்லப் உடல்நிலை சரியில்லாமல் திங்கள்கிழமை காலமானார்.
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷியாமா வல்லப். இவர் தனது கணவரும் ஹிந்தி மொழி அறிஞருமான ஜானகி வல்லபுடன் கடந்த 1958-ஆம் ஆண்டு சீனாவில் குடியேறினார். அங்கு "ரேடியோ ஆஃப் பெய்ஜிங்'கில் ஹிந்தி அறிவிப்பாளராக கடந்த 1962-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
சீனாவின் வெளிநாட்டு மொழிகளுக்கான அமைப்புடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்த ஷியாமா வல்லப், குழந்தைகளுக்கான பல சித்திரக் கதைப் புத்தகங்களை ஹிந்தியில் வெளியிட்டுள்ளார்.
தகவல் http://www.dinamani.com/

Thursday, August 14, 2014

விடைபெற்ற ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

நம்மிடமிருந்து விடைபெற்ற மற்றுமொரு 'வானொலிக் கலைஞன்'
 
இலங்கை வானொலியின் ஆரம்ப கால அறிவிப்பாளர்களில் ஒருவராகிய திரு.ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள் 29.07.2014 இலங்கை  சிலாபம் அரச மருத்துவ மனையில் காலமானார். அன்னாருக்கு வயது 74 ஆகும். 

220px-Rajaguru.jpg 
இளமைக் காலத்தில் 

திரு.இரா.சே.கனகரத்தினம் திரு.கனகரத்தினம் அவர்கள் இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான அறிவிப்பாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டுவரை சுமார் முப்பது ஆண்டுகள் பிரபல அறிவிப்பாளராகப்  பவனி வந்தார். இலங்கை வானொலியின் புகழ் பூத்த அறிவிப்பாளர்களாகிய கே.எஸ்.ராஜா, பி.எச். அப்துல் ஹமீத், மயில்வாகனம் சர்வானந்தா, வி.என்.மதியழகன், ஜோக்கிம் பெர்னாண்டோ, நடராஜா சிவம், ஜெயகிருஷ்ணா, ஜி.போல் ஆன்டனி, ராஜேஸ்வரி சண்முகம், சற்சொரூபவதி ஆகிய அத்தனை அறிவிப்பாளர்களுடனும் பணி புரிந்தவர் என்ற பெருமை மட்டுமல்லாது, இவர்கள் அத்தனை பேருக்கும் முன்னோடியும் ஆவார்.

இலங்கையின் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவதுதமிழ் வானொலி அறிவிப்பாளர் ஆவார்.திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் "பொதிகைத் தென்றல்" முதலான இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். திரையுலகின் பல கலைஞர்கள், கவிஞர்கள் பற்றிய பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர்.

200px-RSKanagaratnam1.jpg 

வயது முதிர்ச்சியின்போது திரு.கனகரத்தினம் அவர்கள் பிறந்தது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள சிலாபம் அருகே உள்ள 'மருதங்குளம்' என்னும் கிராமம் ஆகும். இவரது பெற்றோர் முத்தையா, பொன்னம்மாள் ஆவர். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை கனகரத்தினம். தந்தை முத்தையா தமிழ்நாடுஅரசவம்சத்தை சேர்ந்தவர்.கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் இவரது வீட்டில் இருந்தது. 'ராஜகுரு சேனாதிபதி' என்பது இவர்களின் குடும்பத்தின் பரம்பரைப்  பெயர்.மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் சென் மேரீஸ் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார். இவர் திருமணம் ஆகாதவர்.

 அக்காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்திருந்தவர்களில் மிகுந்த இலக்கிய புலமை கொண்டவராகத் திகழ்ந்த ராஜகுரு அவர்கள், இதன் காரணமாக 

kanaga_rathinam001.jpg 
இசைஞானி இளையராஜா மற்றும், பி.எச்.அப்துல் ஹமீத் இவர்களுடன்

இரா.சே.கனகரத்தினம் அவர்கள்.
 இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலி பரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். 'பொதிகைத் தென்றல்', 'காலைக்கதிர்', 'பாட்டொன்று கேட்போம்', இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார்.பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் இதழில் இவரது 'ராஜகுரு சேனதிபதி' என்ற பெயரின் சிறப்பைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள். கடந்த 1988 ஆம் ஆண்டில் 'மனம் போன போக்கில்' என்னும் பெயரில் ஒரு சிந்தனை நூலையும்

f-8-4.jpg 
(இ-வ) பின்வரிசையில் - பெனடிக், ஜோசப் ராஜேந்திரன், மயில்வாகனம், மஹதி ஹசன், ஜோக்கிம் பெர்னாண்டோ, சந்திரமோகன், சண்முகம் அமர்ந்திருப்போர் - விசாலாட்சி ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், பி. பி. தியாகராஜா, கனகரட்ணம் அப்துல் ஹமீத்.
 
வெளியிட்டிருந்தார்.இலங்கை வானொலி என்னும் மனம் மயக்கும் மந்திர ஊடகத்தில் இணைந்து மூன்று தசாப்தங்களாக எம்மையெல்லாம் மனம் மகிழச் செய்த அந்த வானொலிக் கலைஞனின் மறைவிற்கு அந்திமாலை ஆசிரிய பீடம் தனது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் இழப்பால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக. 

Thursday, August 07, 2014

இலங்கை வானொலி மன்னன் நடராஜசிவம்

‘விடை பெறுவது நடராஜ, சிவம், இந்தக் கம்பீரமான குரலைக் கேட்காத, சட்டென அடையாளம் காணாத இலங்கைத் தமிழனே இருக்க முடியாது. அவ்வளவுக்கு ஆழமான தனித்துவமான, ஆழமான, ‘பேஸ்’ குரல் அவருடையது. நேரில் பார்த்தால் குரலைப் போலத்தான் இளமையாக, தோற்றத்திலும் பேச்சிலுமாகத் தெரிகிறார் நடராஜ சிவம். இவர் குரல் வளம் கொண்ட அறிவிப்பாளர், வானொலித்துறை சார்ந்தவர் மட்டுமல்ல; நடிகர், கலைஞர் எனப்பல்வேறு முகங்கள் இவருடையது. இவர் இறுதியாக நடித்த காதல் கடிதம் திரைப்படம் தற்போது ஒளித்தட்டாக வந்திருக்கிறது. அதில் இவரது பண்பட்ட நடிப்பைக் காணலாம்.

40 வருடங்களுக்கும் மேற்பட்ட வானொலி அனுபவங்களைக் கொண்டிருக்கும் இவர்தான் சூரியனின் உதயத்துக்கும் அது உச்சிக்கு போவதற்கும் பின்புலமாக நின்றவர். அது அஸ்தமிக்கலாம் என்றிருந்த போதுமீள் உதயத்துக்கு வித்திட்டவரும் இந்தச் சிவம்தான் காரணம் என்றால் அது வெறும் புகழ்ச்சியல்ல. கலைஞன் என்பவன் உள்ளுக்குள் சதா இயங்கிக் கொண்டிருப்பவன்; தரையில் தூக்கிப் போட்ட மீனாக அவன் இருக்க விரும்பவும் மாட்டான் என்பார்கள். இதனால்தான் நமது இவ்வாரப் பிரமுகரும், எந்த தளர்ச்சியுமின்றி இயங்கியும் இயக்கியும் கொண்டிருக்கிறார். பழைய வானொலிக் கலைஞர்களில் இப்போதும் பிரகாசித்துக் கொண்டிருப்பவர்களில்
நடராஜ சிவமும் ஒருவர். அவர் தன் அனுபவங்களை புத்தகமாகத் தர வேண்டும்.
f-4-4.jpg
இடம்: பி. எச். வலம்: நடராஜசிவம்
பள்ளி வாழ்க்கையில் எல்லோருக்கும் வருவதுதான் ஒருதலைக்காதல். அதுவாகவே வந்துவிட்டு அதுவாகவே போய்விடும். பள்ளி காதல் படலை வரை என்று சொல்வாங்களே அதுமாதிரித்தான். நான் ஒரு கலை விழாவுக்கு போனால் அங்கே ஒரு பெண் நம்மைப் பார்க்க அவளை நான் பார்க்க அதை மற்றொருவன் பார்க்க பிறகு அந்த பெண்ணின் பெயரைச் சொல்லி என்னை அழைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த பிள்ளையின் பெயரை என் பாடக் கொப்பியில் எழுதிவைப்பேன். அப்படி நான் எழுதி வைக்காவிட்டாலும் பக்கத்தில இருக்கிறவன் எழுதி வைப்பான். இப்படி எத்தனையோ 'காதல்'! அந்த பிள்ளைகளின் பெயர் எனக்கு ஞாபகத்தில் இல்லை.........." என்று தனது பள்ளி வாழ்க்கையின் காதல் அனுபவங்களை சுருக்கமாக கூறிவிட்டு தனது பூர்வீகம் பற்றி பேசத் தொடங்குகிறார் நடராஜசிவம்.
"எனது அப்பா ஒரு தமிழ் ஆசிரியர். கொட்டாஞ்சேனை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக இருந்தார். சின்னையா சிவம் என்பதுதான் அவர் பெயர். சிவம் மாஸ்டர் என்றால் எல்லோருக்கும் தெரியும். என்னை இந்த துறைக்கு அழைத்துவர பிள்ளையார் சுழி வித்திட்டவர் என் அப்பாதான். சின்ன வயதிலேயே என்னை பேச்சு போட்டிக்கும் கட்டுரைகள் எழுதுவதற்கும் ஊக்கப்படுத்தியவரும் அவர்தான். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நுண்கலை பட்டப்படிப்புக்காக அப்பாவும் அம்மா சிவபாக்கியமும் தமிழ் நாட்டில் சிதம்பரத்தில் தங்கியிருந்த போதுதான் நான் பிறந்தேனாம்.
சிதம்பரத்தில் பள்ளிக்கொண்டு இருப்பவர்தானே நடராஜர்! அதனால்தான் எனக்கும் நடராஜ சிவம் என்று பெயர் சூட்டினார்கள். அதன் பிறகு கொட் டாஞ்சேனை புதுச்செட்டித்தெரு எனது வதிவிடமானது.
"தேர்ஸ்டன் கல்லூரியில் ஒரு தமிழ் பிரிவு இருந்தது. அதிலதான் எனது முதல் பாடசாலை பிரவேசம். முதல் நாள் அப்பாதான் என்னை தேர்ஸ்டன் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். அங்கே திருமதி திருநாவுக்கரசு என்ற ஆசிரியையிடம் என்னை ஒப்படைத்தார். பிறகு பாடசாலை முடியும் வரை வெளியிலேயே நின்று கொண்டிருந்த அவர் பாடசாலை முடிந்ததும் என் கரங்களை பிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற அந்த நாள் இன்றும் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
f-4-3.jpg
சுப்பர் அறிவிப்பாளர் மயில்வாகனத்துடன் (மத்தியில்) நமது பிரமுகர் மற்றும் கலைஞர் உதயகுமார்.

ஐந்தாம் ஆண்டுவரை நான் தேர்ஸ்டனில் கல்வி பயின்ற போது எனக்கு பள்ளித்தோழனாக இருந்தவர்தான் ரட்ணம் வைத்தியசாலையின் உரி மையாளர் கணேஷ். நாம் இருவரும் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் இன்றும் கூட அந்த பசுமையான நாட்களை அசைபோடுவோம். தேர்ஸ் டனில் படிக்கும் போது பாடசாலை முடிந்ததும் நேராக வீட்டுக்கு செல்லாமல் பின்னேர ஆங்கில வகுப்புக்கு சென்றுவிடுவேன். அந்த வகுப்பு முடிந்த பிறகுதான் அப்பா என்னை வந்து அழை த்துச் செல்வார். சில நாட்களில் அப்பா வர லேட்டாகி விட்டால் எனக்கு ஆத்திரம் வந்து விடும். பள்ளி முடிந்து வீட்டுக்குப் போக முடியவில்லையே என்ற கோபம் தலைக்கேற பாடப் புத்தகத்தை கிழித்து போட்டு விடுவேன்.
பிறகு அப்பா வந்து ஏன்டா பாடப்புத்தகத்தை கிழித்தாய் என்று கேட்டு இரண்டு அடிபோட்டு அழைத்துச் செல்வார். அதன் பிறகு தேர்ஸ்டனில் தமிழ் பிரிவு நிறுத்தப்பட்டுவிட நான் டார்லி ரோட்டில் உள்ள சென்ஜோசப் கல்லூரியில் சேர்ந்தேன். அங்குதான் தமிழ் இலக்கிய மன்றங்களில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. என் முதல் மேடை அனுபவமும் அங்குதான் தொடங்கியது. நான் நடித்த அந்த முதல் நாடகத்தின் பெயர் ஞாபகத்தில் இல்லை.
ஆனால் எனக்கு மேக் அப் போட்டவர் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற ஒப்பனைக் கலைஞர் சுப்பையா என்பது என் ஞாபகத்தில் இருக்கிறது. என் முகத்தில் தாடியை ஒட்டி வைத்தார். நான் ஏற்ற பாத்திரம் என்னவென்றே எனக்குத் தெரியாத வயது. எனது அப்பா இலங்கை வானொலியில் சைவ நற்சிந்தனை என்ற நிகழ்ச்சியை செய்து வந்தார். அதனால் சின்ன வயதிலேயே இலங்கை வானொலிக்கு சென்று அங்கு நடக்கும் ஒலிபரப்பு விடயங்களை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
f-4-1.jpg
இளமையில்...

அப்போது இலங்கை வானொலியில் பாலர் நிகழ்ச்சி நடக்கும். அதை செந்தில் மயில்வாகனம் நடத்தி வந்தார். அவரிடம் அப்பா கேட்டுக்கொண்டதற்கு அமைய எனக்கு ஒரு பாடல்பாடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. எங்க வீட்டுக்கு யாராவது வந்தால் நான் பாடிக்காட்டும் "டடடா டடடா..." என்ற பழைய சினிமா பாட்டையே இலங்கை வானொலியிலும் பாடினேன்.
கொட்டாஞ்சேனையில் எனது வீட்டுக்கு பக்கத்தில ஒரு நாடக எழுத்தாளர் இருந்தார். இக்னேசியஸ் மொறாயஸ் என்பது அவர் பெயர். அவரை நான் அண்ணா என்றுதான் அழைப்பேன். அவருடன் நாடகம் சம்பந்தமான நிறைய விடயங்களை கேட்டு அறிந்திருக்கிறேன். அதன் பிறகு சரவணமுத்து மாமா நடத்திய சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றினேன். சிறுவர் மலர் நிகழ்ச்சிக்கு புதிதாக வரும் மாணவர்களுக்கு மாமா ஒரு கடிதத்தை கொடுத்து படிக்கச் சொல்வார். நாங்கள் கடிதத்தை வாசிக்கும் விதத்தை வைத்தே அந்த மாணவன் திறமையான ஆள்தானா என்பதை கண்டுபிடித்து விடுவார். நானும் போஸ்ட்கார்ட் வாசித்துதான் சிறுவர் மலரில் தொடர்ந்து பங்குபற்றும் வாய்ப்பை பெற்றேன்.
சிறுவர் மலர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் குட்டி நாடகங்களை அப்போது பாலாம்பிகை நடராஜாதான் எழுதி வந்தார். அவரின் நாடகத்தில் தான் நான் முதல் முதலாக சிறுவர் மலரில் நடித்தேன். நான் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த நாட்களில் அந்த நிகழ்ச்சியில் பி.எச். அப்துல் ஹமீத், உபாலி செல்வசேகரன், ராமதாஸ், கே. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
அதில் வீரகேசரி பிரதம ஆசிரியர் கே. பி. ஹரனின் மகன் சந்திரசேகரும் என்னோடு சிறுவர் மலரில் பங்கு பற்றினார். ரொம்பவும் திறமையான மாணவர். அப்போது அவருக்கு குட்டி நாடகங்களில் நல்ல கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டன. நாங்களே அவரின் நடிப்பை பார்த்து வியப்போம். அதுபோல் எங்களுக்கும் பிரதான பாத்திரங்கள் வழங்கப்பட்டன. பிறகு நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு நடித்து திறமையை நிரூபித்தோம். இப்படியான திறமையான கலைஞர்களுடன் இணைந்து நடித்து பழகியதால்தான் நாங்கள் கலைத்துறையில் வளர்ச்சி பெறவும் இன்று வானொலியில் நிலைத்து நிற்கவும் முடிந்திருக்கிறது.
f-4-2.jpg
மனைவி மகனுடன்

திருமணம் பற்றி கேட்டபோது "என்னோடு இலங்கை வானொலியில் ஒன்றாக அறிவிப்பாளராக பணிபுரிந்தவர்தான் புவனலோஜினி. ஒரே நிர்வாக பீடத்தில் ஒரு துறை சார்ந்த தொழிலை ஒரு ஆணும், பெண்ணும் செய்தால் இருவர் மனமும் இணைவது சகஜம் தானே! அது மாதிரிதான் நானும் புவனலோஜினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இரு வீட்டார் சம்மதத்தோடு நாரஹேன்பிட்டியில் எனது இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு எனது உறவினர்கள் ரிsதிருந்தார்கள். கல்யாணப் போட்டோவை ஒருவர் வீட்டிற்கு வந்து எடுத்துத் தந்தார். அதன் பின்னர் கூட்டு குடித்தனம் ஆரம்பமானது" என்கிறார் நடராஜ சிவம்.
வாழ்க்கையில் எதையாவது தவறவிட்டு இருக்கிaர்களா?
"வாழ்க்கையில் எதையுமே நான் தவறவிடவில்லை. கடவுள் நான் கேட்டதை எல்லாம் தந்திருக்கிறார். இப்போ வேண்டாம், வேண்டாம் என்றாலும் தந்து கொண்டுதான் இருக்கிறார்" என்று சிரிக்கிறார் சிவம்.
அது ஒரு காலம் என்று ஏங்குவது?
"எனக்கு கலையுலகில் நிறைய நண்பர்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்களில் ஜோர்ஜ் சந்திரசேகரனை கட்டாயம் குறிப்பிட வேண்டும். நானும் ஜோர்ஜியும் நகமும், சதையும் போல இருந்தோம். நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபற்றி இருக்கிறோம். அனுபவ ரீதியாக எவ்வளவோ கற்றிருக்கிறோம். அந்தக் காலத்தில் நான், ஜோர்ஜ் மற்ற நண்பர்களும் மேடை நிகழ்ச்சிகளை வெளியிடங்களில் செய்து விட்டு வருவோம்.
அப்படி வரும்போது நள்ளிரவாகி விடும். பஸ்ஸ¤ம் இருக்காது. அந்த நேரங்களில் கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருப்போம். தூக்கம் வந்து விட்டால் பிளாட்பாரத்தில் ஒரு பேப்பரை விரித்து அப்படியே படுத்து தூங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் பஸ் ஏறி சென்றிருக்கிறோம். எல்லாம் கலைக்காகத்தான். நள்ளிரவு நேரங்களில் நானும் ஜோர்ஜ் சந்திரசேகரனும் கொழும்பின் பிரதான வீதிகளில் சுதந்திரமாக கதைபேசி திரிந்த அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்...

ஏதோ ஒரு இனம் புரியாத இன்பமும் சோகமும் என் தொண்டையை அடைத்துக் கொள்கிறது" என்று பெருமூச்சு விடுகிறார் நடராஜ சிவம்.
இப்போதும் பயப்படுகிற விசயம்?
"மனிதனென்றால் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும். இல்லையென்றால் அவன் மனிதனாக இருக்க முடி யாது" என்று நச்சென்று பதிலளிக்கும் நமது பிரமுகரிடம் உங்கள் இலக்கு என்ன என்று கேட்டதற்கு,
"எங்கட இந்து சமயத்தில் பேரானந்தம் என்று சொல்வார்கள். ஆன்மீக ரீதியாக அந்த ஆனந்தத்தை அடைய வேண்டும். அந்த பேரானந்தத்தை அடைய வேண்டும் என்பது என் ஆசை. இன்னும் அந்த இலக்கை நான் எட்டவில்லை" என்று சொன்னார்.
மறக்க முடியாத மனிதர்?
"பிரபல நாடக கலைஞர் சி.சண்முகம். அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகத்தின் கணவர். அவரை மறக்க முடியாதவர்களின் பட்டியலில் முதல் ஆளாக நான் குறிப்பிட வேண்டும். நான் இந்த அறிவிப்பாளர் துறைக்கு விரும்பி வரவில்லை. முயற்சியும் செய்யவில்லை. ஆனால் சி. சண்முகம் எனக்காக அறிவிப்பாளர் தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து என்னை அறிவிப்பாளர் சோதனை நிலையத்தில் அமரச் செய்து அந்த தேர்வில் என்னை வெற்றிபெறச் செய்து, எனக்கு இந்த அறிவிப்பாளர் வேலை கிடைக்க உந்து சக்தியாக இருந்தார். அதோடு நாடக உலகில் நான் பிரபலமாவதற்கும் காரணமாக இருந்தவரும் அவர்தான். அவரின் நினைவுகள் என் நெஞ்சில் பசுமரத்தாணி" என்று சொல்லும் அவரிடம் தங்களின் நாடக வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டோம்.
"லடீஸ் வீரமணியின் நாடக குழுவில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஒரு தடவை அவரின் 'யாருக்காக அழுதான்' நாடகத்தில் எனக்கு பாதிரியார் வேடம். பாதர் வேடம் போட வெள்ளை அங்கி வேண்டுமே! உடனே லடீஸ் வீரமணி என்னிடம், "செக்கடித்தெருவில் பாதர் சவரிமுத்து இருக்கிறார். அவரிடம் கேட்டால் வெள்ளை அங்கியை இரவல் வாங்கலாம்" என்று யோசனை சொன்னார். பாதர் சவரிமுத்து செக்கடித்தெருவில் ரொம்பவும் பெயர் பெற்ற குருவானவர்.
கருஞ்சுருட்டை புகைத்துக் கொண்டிருந்த அவரிடம் சென்று வெள்ளை அங்கியை இரவல் கேட்டேன். லடீஸ் வீரமணியின் நாடகமா? சரி கொண்டுபோய் பத்திரமாக திருப்பித்தர வேண்டும் என்ற நிபந்தனையோடு வெள்ளை அங்கியை என்னிடம் தந்தார். அதை வாங்கிக் கொண்டு வந்தேன். நாடக அரகேற்றம் முடிய அந்த அங்கியை சலவைக்கும் போட்டேன். அத்தேடு அந்த அங்கியை மறந்து தொலைத்துவிட்டேன்.
அதன் பிறகு பாதிரியாருக்குப் பயந்து கொண்டு நான் செக்கடித் தெரு பக்கமே போவதில்லை. எங்கே அங்கியை கேட்டு விடுவாரோ என்ற பயம். வழியில் பாதரை கண்டால் ஒளிந்து கொள்வேன். பாவம் பாதர். அவர் இப்போது உயிருடன் இல்லை. ஆனாலும் பாதரிடம் வாங்கிய அங்கியை திருப்பி கொடுக்காமல் போய்விட்டேனே என்ற ஆதங்கம் இப்போதும் என்னுள் இருக்கத்தான் செய்கிறது"
முதல் சினிமா பார்த்த அனுபவம்?


"கெயிட்டி தியேட்டர்லதான் அந்தப் படம் பார்தேன். 'அண்ணி' என்ற படம். மாந்தர் என்பவர் இவர்தானா.... என்ற பாடலை ஒரு சின்னப்பையன் காந்தி சிலையை பார்த்து பாடிக் கொண்டுபோவான். அந்த காட்சி இன்றும் என் ஞாபகத்தில் அப்படியே கருப்பு, வெள்ளைப் பாடமாக பதிந்து கிடக்கிறது. அந்தக் காலத்தில கிங்ஸ்லி, செல்லமஹால் உள்ளிட்ட சில தியேட்டர்களில் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது வெளியில் ஒரு ஸ்பீக்கரை பொருத்தி அந்த பட வசனங்களை ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள்.
அந்த திரைப்பட வசனங்களை கேட்பதற்காகவே சினிமா தியேட்டர்களுக்கு எதிரில் கால்கடுக்க நின்று பட வசனங்களை பாடமாக்கியிருக்கிறேன். பராசக்தி, ராஜாராணி, மனோகரா வசனங்கள் எல்லாம் நான் அப்படி வெளியே நின்று பாடமாக்கியதுதான். வீட்டில் படவசனங்களை பேசிக் கொண்டி ருப்பதை பார்த்த அப்பா படிப்பில் கவனம் செலுத்தாமல் சினிமா வச னம் பேசுவதாக சொல்லி என்னை அடித்திருக்கிறார். பாடசாலையில் எனக்கு குட்டி சிவாஜி என்ற பட்டப் பெயரையும் சூட்டி இருந்தார்கள். ஆனால் அந்த வசனங்கள்தான் பிற்காலத்தில் எனக்கு வசனங்கள் பேசி நடிக்கவும் தமிழை சரியாக உச்சரிக்கவும் உதவியது.
வாழ்க்கையை பற்றிய தங்களின் புரிதல் என்ன என்று நடராஜ சிவத்திடம் கேட்டோம்.
"வாழ்க்கை ஒரு மனிதனுக்கு அனைத்து உணர்வு, உணர்ச்சிகளுடன்தான் தொடங்குகிறது. பலம், பலவீனம், இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கியதுதான் மனித வாழ்க்கை. நானும் அவை அனைத்தையும் அனுபவித்தும் கடந்தும் தான் வந்திருக்கிறேன். மனிதன் என்பவன் தனது கடைசி காலகட்டத்தில். எல்லாவற்றையும் கடந்து ஒரு நிலைக்கு வந்த பிறகு தீமைகளை வடிகட்டி தூர எறிந்துவிட்டு நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு புள்ளியில் வந்து நின்று விட வேண்டும். அந்த இடத்திலிருந்து தான் உண்மை ஒளியை காணவேண்டும். அப்படி அவன் அந்த இடத்திற்கு வராவிட்டால் தொடர்ந்தும் அவன் இருளில் அடைபட்டுக் கிடக்கிறான் என்றுதான் அர்த்தம்.
நான் அந்த உண்மை ஒளியை தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறேன்..." என்று எம்மை கூர்ந்து பார்க்கும் நடராஜசிவத்தின் கண்களில் வாழ்க்கையை பொருள் கொண்டதாக அனுபவித்து, அந்த திருப்தியின் நிறைவைக் காணமுடிகிறது.

நன்றி http://www.thinakaran.lk/
http://www.yarl.com/ ஊடாக

Thursday, July 31, 2014

இலங்கை வானொலியின் புகழ்

தற்செயலாக தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. விஜே தொலைக்காட்சியின் நீயா நானா என்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஒருவர் இலங்கை வானெலியைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலரும் இலங்கை வானொலியைப் பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது நிகழ்ச்சி அமைப்பாளர் கோபிநாத்தும் அதைப்பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தார். இப்படிப் புகழ்ந்தவர்கள் வேறுயாருமல்ல, அத்தனை பேரும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இலங்கை வானொலி நேயர்கள். அவர்கள் புகழ்ந்தது இன்றைய இலங்கை வானொலியை அல்ல, எழுபது, எண்பதுகளில் ஒலிபரப்பிய அன்றைய இலங்கை வானொலியை என்பது அவர்கள் குறிப்பிட்ட பாடல்களில் இருந்து தெரிய வந்தது. அப்பொழுது அவர்கள் மாணவர்களாக, இளம்பருவத்தில் துள்ளித்திரிந்த காலம்.  கிராமங்களிலோ அல்லது நாட்டுப் பக்கங்களிலோ தொலைக்காட்சியே எட்டிப் பார்க்காத காலமது. அப்போது வானொலி ஒன்றுதான் அவர்களின் பொழுது போக்குச்சாதனமாக இருந்ததாம்.


அந்த நாட்களில் இந்திய வானொலியில் வர்த்தகசேவை இருந்தாலும் அது சரியான முறையில் இயங்கவில்லை. அதாவது மக்களைக் கவரக்கூடியதாக அதன் சேவை முழுநேர சேவையாக அமையவில்லை. அப்படி இல்லை என்று வானொலியைத் திருப்பினாலும் கர்நாடக சங்கீதமே காதில் கேட்கும். அதனால்தான் தென்னிந்தியாவில் பலரும் முழுநேர சேவையாற்றிய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பிய இலங்கை வானொலியின் நேயர்களாக மாறியிருந்தனர். இதற்கு இன்னுமொரு காரணமும் சொல்லியிருந்தனர். அதாவது அந்த நாட்களில் எல்லோரிடமும் வானொலிப் பெட்டியை வைத்திருக்கும்  வசதி இருக்கவில்லையாம். நவீன சாதனங்களான ஒலிப்பதிவுக் கருவிகளும் அதிகம் இருக்கவில்லையாம். எனவே இசை ஆர்வலர்கள் இலங்கை வானொலி ஒலிபரப்பையே அதிகம் நம்பியிருந்தார்களாம். இளம் வயதினர் பலர் பக்கத்து வீட்டிலேயோ அல்லத உணவு விடுதிகளிலேயோ இருந்து ஒலிபரப்பாகும் இலங்கை வானொலிப் பாடல்களைக் கேட்கவேண்டிய சூழ்நிலையில் இருந்தார்களாம்.


இத்தனை பேரைக் கவர்ந்திழுத்த இலங்கை வானொலி 1922ம் ஆண்டுதான்  சோதனை முறையில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. 1925ம் ஆண்டு கொழும்பு வானொலி என்ற பெயரில் இயங்கினாலும் 1949ல் தான் இலங்கை வானொலி எனப் பெயர் மாற்றப்பட்டது. பின் இதே இலங்கை வானொலிதான் 1967ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவை ஒலிபரப்பாளராக ஈடுபட்ட அனைவருமே ஒரு காலத்தில் சினிமா கதாநாயருக்கு நிகராகக் கணிக்கப்பட்டார்கள். தமது கம்பீரமான குரலால் சர்வதேசம் எங்கும் நேயர்களைத் தேடிக் கொண்டவர்கள். முகம் காட்டாத கதாநாயகர்களாக, கதாநாயகிகளாக இருந்த இவர்களை நேரிலே சந்திக்க வேண்டும் என்று நேரடியாகவே பல மைல்கள் பயணம் செய்து இலங்கை வானொலி நிலையத்திற்கு வந்தவர்கள் பலர். இலங்கை வானொலி முற்றத்து மண்ணை எடுத்துச் சென்று பாதுகாப்பாகப் பூசை அறையில் வைத்த தமிழ் நாட்டு நேயர்களும் உண்டு என்று வானொலி நடிகர் கே. எஸ். பாலச்சந்திரன் ஒருமுறை குறிப்பிட்டதும் ஞாபகம் வருகின்றது.
அந்த வகையில் நான் சிறுவனாக இருந்தபோதும் சரி, பிற்காலத்தில் அந்த மண்ணில் வாழ்ந்த காலம் வரை இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்களாக ஈடுபட்டிருந்த பலரின் பெயர்கள் இப்பொழுதும் நினைவில் நிற்கின்றன. இவர்களில் வர்த்தக ஒலிபரப்பின் மூத்த அறிவிப்பாளராகக் கடமையாற்றிய எஸ்.பி. மயில்வாகனன் மறக்கமுடியாதவர். இவரைவிட வீ. சுந்தரலிங்கம், ராஜகுரு சேனாபதி கனகரட்ணம், வீ.ஏ. கபூர், எஸ். புண்ணியமூர்த்தி, எஸ்.கே. பரராஜசிங்கம், சற்சொரூபவதிநாதன், கே. எஸ். ராஜா, பி.எச். அப்துல் ஹமீட், விமல் சொக்கநாதன், சரா இமானுவேல், சில்வெஸ்டர் பாலசுப்ரமணியம், ராஜேஸ்வரி சண்முகம், பி.விக்னேஸ்வரன், ஜோர்ச் சந்திரசேகரன், எஸ். நடராஜசிவம், ஜோர்க்கிம் பெர்னாண்டோ, வி.என்.மதியழகன், மயில்வாகனம் சர்வானந்தா, ஆர். சந்திரமோகன், செல்வம் பெர்ணான்டோ, எஸ் கணேஷ்வரன், எழில் வேந்தன், கமலினி செல்வராஜன், கமலா தம்பிராஜா ,ஆகியோர் இப்பொழுதும் எனது நினைவில் நிற்கின்றார்கள். அதன் பின் பல அறிவிப்பாளர்கள் இலங்கை வானொலியில் திறம்படச் சேவையாற்றினாலும் அவர்களின் பெயர்களை எல்லாம் நினைவில் வைத்திருக்க முடியவில்லை.


இலங்கை வானொலியின் தமிழ் சேவை ஒன்றில் நாடகங்கள் பல இடம் பெற்றாலும், நான் அறிந்த வகையில் பி. விக்னேஸ்வரனின் நாடகங்கள் ஒரு காலகட்டத்தில் பல நேயர்களின் பாராட்டைப் பெற்றிருந்தன. எனது ஊரவர் மட்டுமல்ல, நான் படித்த நடேஸ்வராக்கல்லூரியில் அவரும் படித்ததால் படிக்கிற காலத்திலிருந்தே நான் அவரை அறிவேன். அதேபோல வர்த்தக சேவையான தமிழ் சேவை இரண்டில் இடம் பெற்ற நாடகங்கள் சில புகழ் பெற்ற நாடகங்களாக பலர் நேயர்கள் விரும்பிக் கேட்ட நாடகங்களாக இருந்தன. சில்லையூர் செல்வராஜனின் தணியாத தாகம், வரணியூரானின் இரைதேடும் பறவைகள், ராமதாஸின் கோமாளிகளின் கும்மாளம், கே. எஸ். பாலச்சந்திரனின் கிராமத்துக் கனவுகள் போன்றவை அந்தக் காலகட்டத்தில் பலராலும் கேட்கப்பட்ட புகழ்பெற்ற வானொலி நாடகங்களாக இருந்தன.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாடல்கள் பிடிக்கலாம். அந்தப் பாடலின் இசைக்காக, அதன் பாடல் வரிகளில் வெளிப்படும் கருத்திற்காக, அந்தப் பாடல் வரிகளில் வரும் சம்பவங்களோடு அவர்களுக்கும் ஏதோ வகையில் தொடர்பிருப்பதற்காக, அந்தப் பருவத்தில் அவர்களைக் கவருவதற்கு ஏதாவது காரணமிருக்கலாம். விஜே தொலைக்காட்சியில் நடந்த அந்த நிகழ்ச்சியின்போது ஒருவர் நேரத்தின் மகத்துவத்தைச் சொல்லித் தந்தது இலங்கை வானொலிதான் என்று அதற்குரிய விளக்கமும் தந்தர்ர். இன்னுமொருவர் பிறந்தநாள் இன்று பிறந்தநாள் என்று தமிழில் தொடங்கும் போதே ஒரு புத்துணர்ச்சி மனசுக்கள் ஏற்பட்டுவிடும், இப்போதெல்லாம் ஹப்பி பார்த்டே என்று ஆங்கிலத்தில்தான் தொடங்குகிறார்கள் என்று குறைப்பட்டுக் கொண்டார். இன்னுமொரு நேயர் ‘தோல்வி நிலையென நினைத்தால்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கப் பழகிக் கொண்டதாகக் குறிப்பிட்டார். நான்கூட மாணவனாக இருந்தபோது இந்தப் பாடலைக் கேட்டிருக்கின்றேன். இந்தப் பாடலை புளட் இயக்கத்தினர் தங்கள் சிற்றலை வரிசை வானொலியில் தங்கள் நிகழ்ச்சி தொடங்கும்போது தினமும் ஒலிபரப்புவார்கள். அகிம்சை முறைப் போராட்டம் எந்தப் பலனையும் தராது தோற்றுப் போனதால், தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் நோக்கித் தங்கள் பார்வையைத் திருப்பிய காலக்கட்டம் அதுவாக இருந்தது.


இதைவிட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தங்களுக்குப் பிடித்தமன பாடல்களின் சில வரிகளைப் பாடியும் காட்டினார்கள். இளமைப் பருவத்தில் இசையை ரசிக்கவும் நல்ல உணர்வுகளைத் துண்டிவிடுவதற்கும் காரணமாக இந்தப் பாடல்கள் இருந்தனவாம். ஜோடிகளாக வந்திருந்த பலர் தாங்கள் காதல் திருமணம் செய்வதற்கு இலங்கை வானொலியில் ஒலிபரப்பிய சிலபாடல்கள் ஒருவகையில் தங்களுக்கு உதவியதாகக் குறிப்பிட்டனர். பழைய நினைவுகளை மீட்டபோது, அவர்கள் குறிப்பிட்ட பாடல்களின் சிலவரிகளை இங்கே தருகின்றேன். நல்ல இசையோடு கூடிய அர்த்தமுள்ள பாடல்களாக அவை இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இசையில் ஆர்வம் இருந்திருந்தால், நீங்கள்கூட இப்படியான பாடல்களைக் கேட்டிருக்கலாம். உங்களுக்குக்கூட இது போன்ற சில பாடல் அனுபவங்கள் கடந்தகாலத்தில் என்றாவது ஒருநாள் ஏற்பட்டிருக்கலாம். அப்படியானால், இப்போது உங்கள் நினைவுகளையும் ஒருமுறை மீட்டிப் பாருங்கள்.
இதோ அவர்கள் குறிப்பிட்ட பாடல் வரிகளைப் பாருங்கள். கண்ணில் என்ன கார்காலம், (படம்-உன்கண்ணில் நீர் வழிந்தால். வைரமுத்துவின் பாடல் வரிகள்) நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா (படம் இதயக்கோயில். வைரமுத்துவின் பாடல் வரிகள்), அன்னக்கிளி உன்னைத் தேடுதே, ஈரமான ரோஜாவே (இளமைக்காலங்கள்), அந்தி மழை பொழிகிறது, உனக்குமட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன், ஒரு நாள் உன்னை நான் பார்த்தது, மலரே என்னென்ன கோலம், விழியிலே கலந்தது உறவிலே மலர்ந்தது, உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது, கண்ணன் ஒரு கைக் குழந்தை, நினைவோ ஒரு பறவை, என் தாய் என்னும் கோயிலிலே, உறவென்னும் புதிய,  வண்ணப்பூ சூடவா வெண்ணிலா, இந்த மேகக் கூந்தல் கலைந்தால், காதல் ஓவியம், ஆயிரம் மலர்களே மலருங்கள், உன் நெஞ்சிலே பாரம், உறவுகள் தொடர்கதை, உன்னை நான் பார்த்தது, கோவில் மணி ஓசை கேட்டது, மாஞ்சோலைக் குயிலே, பார்வை நூறு போச்சு, மின் மினிக்கு, நான் உங்கவீட்டுப் பிள்ளை, குயிலே குயிலே கவிக்குயிலே, நாலு பக்கம் வேடர் உண்டு., சித்திரச் செவ்வானம் சிரிக்க் கண்டேனே, என் இனிய வெண்ணிலாவே, ஒரே நாள் உனைநான் நிலாவில் பார்த்தது, மீன் கொடித் தேரில் மன்மத ராஜன், வான் நிலா நிலா அல்ல, மெட்டி ஒலி காற்றோடு, புத்தம் புதுக் காளை, பட்டுக் கன்னம் தொட்டு, அந்த மானைப் பாருங்கள் அழகு, நினைவாலே சிலை செய்து உனக்காக, காத்தாடி பாவாடை காத்தாட,  எங்கும் மைதிலி..மைதிலி என்னைக் காதலி, என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா, நான் தேடும் செவ்வந்திப் பூவிது (தர்மபத்தினி). இது போன்ற பல பாடல்களை அந்த நாட்களில் அவர்கள் கேட்டு ரசித்தார்களாம். இன்றும் நவீன வசதிகளைப் பயன்படுத்தித் தங்களுக்கு விருப்பமான அந்தப் பாடல்களை ஒலிப்பதிவு செய்து விரும்பிய நேரங்களில் போட்டுக் கேட்பதாகவும் அவர்களில் பலர் குறிப்பிட்டனர். இலங்கை வானொலி இன்று தென்றலாக மாறிவிட்டது. தெற்கேயிருந்த வருவதால் பொருத்தமானதுதான் என்கிறார்கள் தமிழகத்து நேயர்கள்.


இலங்கை வானொலியில் ஒலிபரப்பான பழைய பாடல்களில் எனக்குப் பிடித்தமான சில பாடல்களும் உண்டு. பாவாடைதாவணியில் பார்த்த உருவமா, நான் மலரோடு தனியாக ஏன் அங்கு நின்றேன் (இருவல்லவர்கள்), துயிலாத பெண் ஒன்று கண்டேன்.., காதல் நிலவே கண்மணிராதா.., நெஞ்சம் அலை மோதவே கண்ணும் குளமாகவே கொஞ்சும் ராதையைப் பிரிந்தே போகிறான்.. கண்ணன் ராதையைப் பிரிந்தே போகிறான். ( இந்தப் பாடல் எந்தப் படத்தில் என்று தெரியவில்லை. யாராவது தெரிந்தால் தயவு செய்து அறியத்தரவும்.) துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? இசைக்காகவோ அல்லது அதில் உள்ள கருத்திற்காகவோ எனக்குப் பிடித்த பாடல் வரிசையில் இந்தப் பாடல்களும் அடங்கும்.
 
 
இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்படாத பல பாடல்களும் உண்டு. நான் குறிப்பிடும் இந்தப் பாடல் தடைசெய்யப்பட்டதாகும். இந்தப் பாடல் என்றைக்குமே இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் போவதில்லை. என்னதான் உங்கள் மனம் கல்லாக இருந்தாலும்,‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே’என்ற இந்தப் பாடலை ஒரு கணம் கண்களை மூடி மௌனமாகக் கேட்டால் கரையாத கல்லையும் கரைய வைக்கும் யதார்த்தத்தைக் கொண்டதாகும். இந்தப் பாடல் ஒவ்வொரு தமிழனின் இரத்தத்திலும் கலந்து, உயிரில் உறைந்திருக்கிறது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ  முடியாது.

Via http://www.yarl.com/

Friday, July 25, 2014

அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர் பணி

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் All India Radio நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளரக் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: News Reader-cum-Translator(Tamil)
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 23,000
கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது. முதுகலை பட்டப்படிப்புடன் தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது விரும்பத்தக்கது.
பணித்தன்மை: ஆங்கிலத்திருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: News Reader-cum-Translator (Malayalam)
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.23,000
கல்வித்தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் மலையாள மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல்வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு செய்யும் வேகத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் நல்ல அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து மலையாள மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், மலையாளத்தில் தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.225. இதனை Director General(News) AIR, New DElhi என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குரல்வளத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் தமிழ், மலையாள மொழிகளில் பெற்றிருக்கும் அறிவு, மொழி பெயர்ப்பு திறன் மற்றும் தற்போதைய நடப்புகள் போன்றவற்றிலிருந்து வினாக்கள் அமைந்திருக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Inspector of Accounts, News Services Division, All India Radio, New Broad Casting House, Parliament Street, New Delhi-110001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:28.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://newsonair.nic.in/vacancy/NRT-Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, July 14, 2014

செய்தி ஊடகத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு? மத்திய அரசு பரிசீலனை: ஜாவடேகர்

செய்தி ஊடகத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) அனுமதிப்பது குறித்து அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் மத்திய அரசு கருத்து கேட்டு வருவதாக மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
செய்தி ஊடகத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன் இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்தையும் பெற விரும்புகிறோம்.
தற்போது, செய்தி ஊடகங்களில் 26 சதவீத அன்னிய நேரடி முதலீடு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. செய்திகள் அல்லாத வர்த்தகப் பதிப்புகள், பொதுப் பொழுதுபோக்கு ஊடகங்கள் ஆகியவற்றில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி உண்டு.
கையூட்டுச் செய்திகள் (பெய்டு நியூஸ்) தொடர்பான விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் கடைசிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. நானும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளேன்.
மத்திய அமைச்சர்கள் தங்கள் முதல் 100 நாள்களுக்கான முன்னுரிமைகளைப் பட்டியலிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளார். அதன்படி, அறிக்கை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.
தனியார் எஃப்.எம். வானொலியில் செய்திகள்?:
தனியாருக்குச் சொந்தமான பண்பலை வானொலிகளில் (எஃப்.எம்.) தற்போது செய்திகளை ஒலிபரப்ப அனுமதி இல்லை. எனவே, அவற்றில் செய்திகளை ஒலிபரப்புவதற்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
எஃப்.எம். வானொலி நிலையங்களுக்கான ஏலம் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விஷயத்தில் விரைவில் விதிமுறைகளை வெளியிடுவோம் என்றார் ஜாவடேகர்.
நன்றி: http://www.dinamani.com/ First Published : 02 June 2014 

Tuesday, July 08, 2014

தமிழ் மூலம் சீனம் கற்கலாம்! (வீட்டிலிருந்தபடியே!)

எளிமையான தமிழ் வழியே சீன வானொலி, 
சீன மொழி கற்றுத் தருகிறது!
உலகில் ஒரு பெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்து வருகிறது சீனா. இந்த நூற்றாண்டு சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்குரிய ஆண்டாக இருக்கும் எனப் பல வல்லுநர்கள் சொல்லிவிட்டார்கள்.
ஆங்கிலேயர்கள், சீனத்தை ஆண்டதில்லை. அதனால் சீனாவின் வர்த்தகத்தில் சீன மொழி முக்கியத்துவம் வகிக்கிறது. 
இன்னொருபுறம், உலகில் நால்வரில் ஒருவர் சீனர். ஒவ்வொரு ஆண்டும் அதிகமான வெளிநாட்டவர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர் அல்லது வணிகம் செகின்றனர். இதன் காரணமாக சீன மொழி முக்கியத்துவம் பெறுகிறது.
இப்போது தமிழ் மூலம் சீன மொழியைக் கற்க முடியும். சீன வானொலி இதற்கான வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்தப் பாடங்களை அதனுடைய இணையதளத்திலும் வெளியிட்டு வருகிறது. பாடங்கள் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 
கீழே ஓர் உதாரணம்:
வணக்கம் நேயர்களே, இன்று முதலாவது பாடம். அதன் தலைப்பு WEN HOU
என்பதாகும். தமிழ் மொழியில் வணக்கம் தெரிவிப்பது என்று பொருள். 
சீன வழக்கத்தின் படி, இருவர் சந்திக்கும் போது, ஒருவருக்கொருவர் NI HAO
என்று கூறுவர். 
NI என்றால், தமிழில் நீ என்பது பொருள். HAO என்றால், நன்று என்று பொருள். இதை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எவரும் பயன்படுத்தலாம். 
NI HAO என்று ஒருவருக்குச் சோல்லும்போது, எதிர்த்தரப்பினரும் NI HAO என்று பதிலளிப்பார். தமிழரும் இப்படித்தானே? இருவர் சந்திக்கும்போது, பரஸ்பரம் வணக்கம் தெரிவிப்பது வழக்கம் அல்லவா?
இப்போது நீங்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள், NI HAO (இதன் மூலம் உச்சரிப்புச் சோல்லிக் கொடுக்கிறார்கள்).
சீன மக்கள் காலத்தைக் குறிப்பிட்டு வணக்கம் தெரிவிப்பது உண்டு. எடுத்துக்காட்டாக, காலையில் ZAO SHANG HAO என்று கூறுவர். ZAO SHANGஎன்றால், காலை என்று பொருள். 
இப்போது, எங்களுடன் சேர்ந்து படியுங்கள். ஙூஅZAO SHANG HAO
முற்பகல் SHANG WU HAO என்று கூறுவர். SHANG WU என்றால், முற்பகலைக் குறிக்கும். இப்போது எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.

இப்படிப் போகிறது பாடம்...
'இன்று 4 சோற்களைத் தெரிந்து கொண்டோம். இந்த 4 சோற்களும், உங்கள் மனதில் பதிந்திருக்கின்றனவா? பாடத்துக்குப் பின் அதிக முறை பயிற்சி செயுங்கள். இந்த நிகழ்ச்சி பற்றி யோசனை தெரிவிக்க விரும்பினால், வான் அஞ்சல் அல்லது இ-மெயில் மூலம் எங்களுக்குத் தாராளமாகத் தெரிவியுங்கள். மீண்டும் சந்திப்போம்' என்று சோல்லி நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி செவ்வா, வெள்ளி இரு தினங்கள் ஒலிபரப்பாகின்றன. சீன வானொலியின் நிகழ்ச்சிகளை இரவு 7:30-8:30 வரை சிற்றலை 31.35 மீட்டர்-9570 கி.ஹர்ட்ஸ் , 31.04 மீட்டர்-9665 கி.ஹர்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளில் கேட்கலாம். 
பாடங்களை இணையதளத்திலும் தமிழில் பார்க்கலாம். இணையதள முகவரி: www.tamil.cri.cn
 
Source: Puthiya Thalaimurai FB