Showing posts with label இலங்கை வானொலி. Show all posts
Showing posts with label இலங்கை வானொலி. Show all posts

Saturday, January 10, 2026

மதுரக்குரல் மன்னனின் மௌனமான இறுதிப் பக்கம்

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 31

 


Monday, January 05, 2026

இலங்கை வானொலிப் புத்தகங்கள்: அப்துல் ஜப்பார்எழுதிய காற்று வெளியினிலே...

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 30


இலங்கை வானொலிக் காற்றின் தூதுவன் என்றே இவரைக் கூறலாம். சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் "காற்று வெளியினிலே..." - ஓர் இலங்கை வானொலி இலக்கியப் பேருரையாக வெளிவந்தது.

ஒலியின் ஓவியம் என்றால் அது அப்துல் ஜப்பார் அன்றி வேறு யார்? வானொலி என்பது ஒரு மாயக்கண்ணாடி. அதன் வழியே கேட்கும் குரல்கள் நமக்குள் உருவங்களைச் சமைக்கின்றன, உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. காலங்காலமாக வானொலித் துறையில் எத்தனையோ குரல்கள் வந்து மறைந்திருந்தாலும், ஒரு சில குரல்கள் மட்டுமே காலத்தின் சுவடிகளில் அழியாத தடங்களை விட்டுச் செல்கின்றன. அத்தகையதொரு ஆளுமைதான் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார். 

அவரது ஊடகப் பயணத்தின் அனுபவப் பெட்டகமாகத் திகழும் "காற்று வெளியினிலே..." (மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீடு) நூல், வெறும் நினைவலைகள் மட்டுமல்ல; அது ஒரு இலங்கை வானொலி காலத்தின் வரலாற்று ஆவணம்.

பன்முக ஆளுமையின் பரிமாணங்களை இந்த நூலின் ஊடாக அறி முடிகிறது. அன்புக் கவிஞர் அறிவுமதி குறிப்பிடுவது போல, ஜப்பார் அவர்கள் "தரையில் குத்தி மணிலாக்களைப் போடும் விளைந்த சிந்தனைகள் கொண்டவர்". அவரது ஆளுமை பல தளங்களில் விரிந்து கிடக்கிறது.

இலங்கை வானொலியில் டகக் கலைஞராக அவர் இருந்த காலத்தை மறக்கத்தான் முடியுமா?  இலங்கை வானொலியில் 'எஸ்.எம்.ஏ. ஜப்பார்' என்ற பெயரில் நாடகத் துறையில் தடம் பதித்தவர். பி.ஹெச். அப்துல் ஹமீது போன்ற இளைய தலைமுறை கலைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியாகவும், முன்மாதிரியாகவும் விளங்கியவர்.

விளையாட்டு வர்ணனையாளராக முத்திரைப் பதித்தவர். கிரிக்கெட் மைதானத்தின் விறுவிறுப்பைத் தனது சொற்களால் நேயர்களின் வரவேற்பறைக்கே கொண்டு வந்தவர். "விளையாட்டு வர்ணனைகளில் விளையாடிப் பார்த்தவர்" என்ற அறிவுமதியின் கூற்று மிகையானதல்ல.

லண்டன் ஐ.பி.சி (IBC) வானொலி மற்றும் தீபம் தொலைக்காட்சி வாயிலாக உலகத் தமிழர்களிடையே அரசியல் விமர்சகராக மட்டுமல்லாது ஓர் அரசியல் ஆய்வாளராகப் பரிணமித்தவர். தற்கால அரசியலைத் தனது 'சாட்டை' போன்ற சொற்களால் வெளுத்து வாங்கும் துணிச்சல் மிக்கவர்.

இவர் ஒரு வானொலி அனுபவப் பல்கலைக்கழகம். 184 பக்கங்களைக் கொண்ட இந்த நூல், அப்துல் ஜப்பார் அவர்கள் 'தினகரன்' வாரமஞ்சரியில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். கலைமாமணி வி.கே.டி. பாலன் கூறுவது போல், இது அவரது "அனுபவப் பல்கலைக் கழகத்தின் சுவைமிகு வகுப்பு".

புலம்பெயர் உறவுகளுடனான பிணைப்பாக இருந்தவர். பிரிட்டன், ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா எனப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு ஜப்பார் ஒரு உறவினராகவே மாறிவிட்டார். "இரண்டையும் (நினைவாற்றல் மற்றும் தமிழாற்றல்) குழைத்து இவர் புலம்பெயர்ந்த எம் தமிழ் உறவுகளிடம் உரையாடுகிற வெற்றி வரலாற்று வெற்றி" என அறிவுமதி இதனைச் சிலாகிக்கிறார்.

அரங்கம் அந்தரங்கம் நிகழ்ச்சியைத் தான் மறக்க முடியுமா? லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இவர் நடத்திய நேர்காணல்கள், ஒரு மனிதரின் ஆளுமையை மட்டும் வெளிப்படுத்தாமல், அவரது ஆழ்மனது உணர்வுகளையும் பதிவு செய்தன. இந்த நூலில் அத்தகைய சந்திப்புகளின் சுவாரசியமான பின்னணிகள் விவரிக்கப்பட்டுள்ளன.

தொன்மமும் நவீனமும் கொண்டத் தமிழாளுமை. ஜப்பாரின் மிகப்பெரிய பலம் அவரது மொழி. அவர் "அதிபுதிய வானூர்தியின் வேகத்தில் தொன்மத் தமிழைத் தூவி விடுபவர்". பழமையான இலக்கணச் செழுமையும், நவீன ஊடக வேகமும் அவரிடம் ஒருங்கே சங்கமிக்கின்றன.

அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது தனது முன்னுரையில் ஒரு முக்கியமான கருத்தைப் பதிவு செய்கிறார்: "தமிழைச் சரியாக உச்சரிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு கடித்துக் குதறாமல், தெளிவான குரலில் இனிமையுடன் தமிழை ரசித்து அழகுற உச்சரிக்கும் பாங்கு" ஜப்பாரிடம் இருந்தது. இதுவே அவரை ஈழத் தமிழ் மக்களிடமும், உலகத் தமிழர்களிடமும் கொண்டு சேர்த்தது.

இந்த நூல் இலங்கை வானொலி வரலாற்றுப் பதிவின் அவசியமாகக் கருதப்படுகிறது. காற்றலையில் கலை படைப்பவர்கள், அந்தக் காற்று கலைந்து போவது போல் காலத்தால் மறக்கப்பட்டு விடுவார்கள் என்ற ஆதங்கம் அப்துல் ஹமீதுக்கு உண்டு. அந்தத் துர்ப்பாக்கியத்தைப் போக்கும் முயற்சியே இந்த நூல்.

இலங்கையின் இலக்கியப் பிதாமகன் எஸ்.பொ அவர்களின் பெருமுயற்சியால், மித்ர வெளியீடாக இது அச்சு வாகனத்தில் ஏறி வெளிவந்தது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் பி.ஹெச். அப்துல் ஹமீது ஆகியோரின் நீண்ட கால விருப்பம் இந்த நூலின் மூலம் நனவாகியது.

ஒரு சுவைமிகு பயணம் தான் இந்த "காற்று வெளியினிலே..." நூல், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் எனும் ஒரு மனிதரின் வாழ்வை மட்டும் பேசவில்லை; அது தமிழ் வானொலித் துறையின் பொற்காலத்தை, அரசியல் மாற்றங்களை, மற்றும் ஒரு கலைஞனின் நேர்மையை நுட்பமாகப் பதிவு செய்கிறது. "அன்பூறிய நெஞ்சத்தின் ஒளிவு மறைவற்ற எளிய வியப்பு" இந்த நூல் முழுவதும் பரவிக் கிடக்கிறது.

ஊடகத் துறையில் நுழைய விரும்பும் மாணவர்களுக்கும், இலங்கை மற்றும் உலக அரசியல் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், தமிழ் மொழியின் சுவையை நுகர விரும்புபவர்களுக்கும் இது ஒரு பொக்கிஷம். 

நூல் தகவல்கள்:
தலைப்பு: காற்று வெளியினிலே...
ஆசிரியர்: சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
வெளியீடு: மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
பக்கங்கள்: 184
தொடர்புக்கு: 044 24721336


Sunday, January 04, 2026

இலங்கை வானொலிப் புத்தகங்கள்: இளையதம்பி தயானந்தா எழுதிய வானலையின் வரிகள்

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 29


பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நுணுக்கமான அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, இளையதம்பி தயானந்தா அவர்களின் "வானலையின் வரிகள்" நூல் குறித்த விரிவான விமர்சனத்தைக் காணலாம். வானொலியின் செவிநுகர் வனப்பில் ஒரு புதிய பரிமாணமாக இந்த "வானலையின் வரிகள்" நூல் உள்ளது எனலாம்.

ஊடகப் பண்பாட்டில் வானொலியின் பங்களிப்பு மகத்தான ஒன்றாகும். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குறிப்பாக 1960-களில் இருந்து 'தொடர்பியல்' ஒரு முக்கியமான சமூக ஆய்வியல் துறையாக உருவெடுத்தது. சந்தைப் பொருளாதாரத்தின் எழுச்சியும், பூகோள மயமாக்கலும் ஊடகங்களை ஒரு பெரும் சக்தியாக மாற்றின. இந்த மாற்றத்தின் விளைவாக 'வெகுசனப் பண்பாடு' என்பது 'ஊடகப் பண்பாடாக' பரிணமித்தது. இந்த வரலாற்றுச் சக்கரத்தில் வானொலி என்பது வெறும் தகவல் கருவியாக மட்டும் நில்லாமல், மக்களின் உணர்வுகளோடும் வாழ்வியலோடும் கலந்த ஒரு கலை வடிவமாக மாறியது. இந்த கலை வடிவத்திற்கு புதிய அர்த்தம் கற்பித்தவர்களில் இளையதம்பி தயானந்தா முக்கியமானவர்.

இலங்கை வானொலியின் பொற்காலமும் வீழ்ச்சியும் இங்கு பதிவு செய்தே ஆகவேண்டும். தென்னாசியாவில், குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கையில் வானொலியின் தாக்கம் என்பது ஒரு ஏகாதிபத்தியத்திற்கு இணையானது. 'ரேடியோ சிலோன்' என்றழைக்கப்பட்ட இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு, அனைத்திந்திய வானொலியையே தன் பாணியை மாற்றிக்கொள்ள வைத்த பெருமைக்குரியது. மயில்வாகனன் போன்ற ஆளுமைகள் வர்த்தகப் பிரிவில் கோலோச்சிய அதேவேளை, தேசிய ஒலிபரப்பில் சிவபாதசுந்தரம், சானா சண்முகநாதன் போன்றோர் தமிழ் மொழியின் செழுமையைப் பேணி வளர்த்தனர்.

இருப்பினும், 70-களுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் சூழல்கள் மற்றும் அரசின் சந்தேகப் பார்வைகளால், வளம் மிக்க தமிழ்த் தேசிய ஒலிபரப்பு மெல்ல மெல்ல நலிவடையத் தொடங்கியது. செய்திகளுக்கும், மரண அறிவிப்புகளுக்கும் மட்டுமேயான ஒரு வறண்ட ஊடகமாக வானொலி சுருங்கிப் போன தருணத்தில், ஒரு 'கோடை மழை'யாகத் தோன்றியவர் இளையதம்பி தயானந்தா.

தயானந்தா: ஒரு புதிய குரலின் வருகையாகப் பார்க்கப்பட்டது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் பட்டதாரியான தயானந்தா, 90-களின் தொடக்கத்தில் இலங்கை வானொலியில் இணைந்தார். வறண்டு கிடந்த வானொலித் தளத்தில் அவரது வருகை ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியது. தயானந்தாவின் தனித்துவம் என்பது அவரது 'செவிநுகர் வனப்பு'. வெறும் தகவல்களை வாசிப்பவராக இல்லாமல், அந்தத் தகவல்களுக்கு உயிரூட்டும் ஒரு கலைஞராக அவர் திகழ்ந்தார்.

நேர்காணல்களில் உலகத்தரத்தினைக் கொண்டுவந்தவர். "வானலையின் வரிகள்" நூலின் மிக முக்கியமான அடிநாதமாகத் திகழ்வது தயானந்தா அவர்கள் இலங்கை வானொலிக்காக மேற்கொண்ட நேர்காணல்கள். பேராசிரியை சிவத்தம்பி குறிப்பிடுவது போல, தயானந்தாவின் நேர்காணல்கள் உலகத் தரமானவை.

அவரின் ஆளுமை வெளிப்பாடு இந்த நூலில் காண முடிகிறது. வழக்கமான நேர்காணல்கள் என்பது நேர்காணப்படுபவரைப் புகழ்வதிலோ அல்லது வெறும் தகவல்களைப் பெறுவதிலோ முடிந்துவிடும். ஆனால், தயானந்தா நேர்காணப்படுபவரைச் சற்று 'மடக்கிப் பிடிக்கும்' உத்தியைக் கையாண்டார். இது நேர்காணப்படுபவரின் ஆளுமையை விட, அவரது மனிதத்துவ உயிர்ப்பை வெளிக்கொணர உதவியது.

ஆழ்ந்த தயாரிப்புக்கு பின் தான் நேர்காணல் செய்பவர். தான் பேசப்போகும் பொருள் பற்றியும், நபரைப் பற்றியும் ஆழமான அறிவு கொண்ட ஒருவராகவே அவர் ஒலிவாங்கி முன் அமர்கிறார். இதனால் பதிலளிப்பவர் மிகுந்த விழிப்புணர்வுடனும், பொறுப்புடனும் பேச வேண்டிய சூழல் உருவாகிறது.

ஒரு கலைஞனின் படைப்புகளைத் தாண்டி, அந்தப் படைப்புக்கு பின்னால் இருக்கும் வலி, பயம் மற்றும் ஆதங்கங்களை இவரது கேள்விகள் வெளிச்சமிட்டுக் காட்டின.

வானொலியின் வலிமையை இவர் நன்கு உணர்ந்து இருந்தார். திரைப்படத்திற்கும் தொலைக்காட்சிக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு வானொலிக்கு உண்டு. அது கேட்பவரின் கற்பனைத் திறனைத் தூண்டுவது. தயானந்தாவின் ஒலிபரப்பு அணுகுமுறை, கேட்பவர்கள் தங்கள் மனக்கண்ணில் ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள வழிவகுத்தது. நேர்காணப்படுபவரின் உணர்ச்சிகளை வார்த்தைகளின் வழியாகக் கடத்தி, அவர்களை நேயர்களின் கண்முன்னே நிறுத்துவதில் அவர் வெற்றி பெற்றார்.

"வானலையின் வரிகள்" என்பது வெறும் எழுத்துகளின் தொகுப்பல்ல; அது ஒரு இலங்கை வானொலிக் காலத்தின் குரல் பதிவு. இலங்கை வானொலி நேயர்களுக்கும், ஊடகத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், தொடர்பியல் மாணவர்களுக்கும் இது ஒரு பாடப்புத்தகம் போன்றது. ஒரு அறிவிப்பாளர் எப்படி ஒரு சமூகத்தின் பண்பாட்டுத் தூதுவராக மாற முடியும் என்பதற்கு தயானந்தாவின் வாழ்வும் இந்தப் படைப்பும் சாட்சி.

இளையதம்பி தயானந்தா போன்ற ஆற்றல் மிக்க ஊடகவியலாளர்கள் வளர்க்கப்பட வேண்டியது ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம். அவரது எழுத்தும் குரலும் இலங்கைஊடகப் பரப்பில் என்றும் நிலைத்திருக்கும்.

நூல் விவரம்:
நூல்: வானலையின் வரிகள்
ஆசிரியர்: இளையதம்பி தயானந்தா
கிடைக்குமிடம்: அரபி பதிப்பகம் (044 - 24261 6761)


Saturday, January 03, 2026

இலங்கை வானொலிப் புத்தகங்கள்: விசாலாட்சி ஹமீது எழுதிய ஒலி அலையில் என் நினைவலைகள்

  நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 28


ஒலி அலையில் ஒரு பொற்காலப் பயணமாக விசாலாட்சி ஹமீதுவின் நினைவலைகள் இருந்தது. இலங்கை வானொலியின் வரலாறென்பது வெறும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மட்டுமல்ல; அது பல ஆளுமைகளின் குரல்களால் நெய்யப்பட்ட ஒரு கலைப் பனுவல். அந்தப் பனுவலின் மிக முக்கியமானதொரு அத்தியாயம், திருமதி விசாலாட்சி ஹமீது அவர்கள். அவரது ஐம்பதாண்டு கால வானொலிப் பயணத்தையும், வாழ்வியல் அனுபவங்களையும் தாங்கி வெளிவந்த "ஒலி அலையில் என் நினைவலைகள்" நூல், ஓர் அறிவிப்பாளரின் சுயசரிதை என்பதைத் தாண்டி, ஒரு காலத்தின் ஆவணமாகத் திகழ்கிறது.

குரலால் கோர்த்த தமிழ் மாலையாக இந்தப் புத்தகத்தைக் கூறலாம். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிட்டது போல, விசாலாட்சி ஹமீது அவர்கள் பிறப்பால் மலையாளியாக இருந்தாலும், தமிழால் வளர்ந்தவர்; தமிழை வளர்த்தவர். ஒரு மொழியின் மீது கொண்ட தீராத காதலும், முறையான பயிற்சியும் ஒருவரை எப்படி உச்சாணிக் கொம்பில் ஏற்றும் என்பதற்கு விசாலாட்சி அவர்களின் வாழ்வே சாட்சி.

அவரது குரல் வளம் வெறும் ஒலி சார்ந்ததல்ல; அது அறிவும், தெளிவும் கலந்ததொரு கலவை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை வானொலியின் காற்றலையில் அவர் பதிவு செய்த முத்திரை, இன்றைய தலைமுறை அறிவிப்பாளர்களுக்கு ஒரு பாடப்புத்தகம். வைரமுத்து அவர்கள் சொல்வது போல், "தமிழுக்குக் குரல் கொடுத்த தங்க மகள்" என்று இவரை அழைப்பது மிகப்பொருத்தம்.

துணிச்சலும் கடமையுணர்வும் கொண்டவர் விசாலாட்சி ஹமீது. இந்த நூலில் பதிவாகியுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் இலங்கை வானொலி நேயர்களை வியப்பிலும் மலைப்பிலும் ஆழ்த்துகின்றன. குறிப்பாக, இலங்கையின் இனக்கலவரக் காலத்தில், நிரந்தர அறிவிப்பாளர்கள் விடுப்பில் சென்றபோது, துணிச்சலோடு 45 நாட்கள் தமிழ் ஒலிபரப்பைத் தொய்வின்றி நடத்திய அவரது அசாத்தியத் திறன் பாராட்டுக்குரியது.

"வானொலி நிலைய வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் வந்தபோதும், உயிரைப் பணையம் வைத்துத் தன் கடமையை ஆற்றிய விசாலாட்சி அவர்களின் மன உறுதி, இன்றைய ஊடகவியலாளர்களுக்கு ஒரு பெரும் பாடம்.

"மதங்களைக் கடந்த மனிதம் கொண்டவர் விசாலாட்சி. அவர்களின் வாழ்க்கை ஒரு அழகான கவிதை போன்றது. இந்து மதத்தைச் சேர்ந்த கேரளாப் பெண்ணான இவருக்கும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தமிழகத்துப் பின்னணி கொண்ட வணிகப் பிரமுகரான திரு. ஹமீது அவர்களுக்கும் இடையே பாலமாக இருந்தது 'முத்தமிழ்'.

கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்கள் தனது வாழ்த்துரையில் குறிப்பிடுவது போல, இவர்களது இல்லறம் என்பது மதங்களைக் கடந்து கலையாலும், பண்பாலும் பிணைக்கப்பட்டது. 1974-களில் ஒரு பல்கலைக்கழக மாணவியாக அருந்ததி அவர்கள் விசாலாட்சியைப் பார்த்தபோது எழுந்த வியப்பு, இன்று ஒரு வரலாற்றுப் பதிவாக மாறியிருக்கிறது. பெயரில் இருந்த குழப்பம், அவர் பேசும் தூய தமிழைக் கேட்டுத் தெளிவடைந்ததாக அருந்ததி குறிப்பிடுவது, விசாலாட்சி அவர்களின் மொழிப் புலமைக்குச் சான்று.

பண்முகத்தன்மை கொண்ட ஆளுமை விசாலாட்சி ஹமீது. இவர்களை வெறும் அறிவிப்பாளராக மட்டும் நாம் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இவர் ஒரு சிறந்த பாடகர், ஆற்றல்மிக்க நடிகை, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தேர்ந்த ஓவியர்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள அவரது கணவரின் உருவப்படம் விசாலாட்சி அவர்களாலேயே வரையப்பட்டது என்பது பலருக்குப் புதிய தகவல். அவரது குடும்பம் இன்று நான்கு மதங்களையும், நான்கு மொழிகளையும் தழுவி ஒரு 'மினியேச்சர் உலகமாக' விரிந்து கிடப்பது, அவரது பரந்த மனப்பான்மைக்கும், அன்பிற்கும் சான்றாகும்.

தொழில்முறை நுட்பங்கள் கொண்டது இந்த நூல். இந்நூல் ஏன் ஒரு கையேடாகக் கருதப்படுகிறது என்பதற்குக் கலாசூரி அருந்ததி அவர்களின் அவதானிப்பு முக்கியமானது. இசைச்சித்திரங்கள் மற்றும் உரைநடை வாசிப்பில் விசாலாட்சி அவர்கள் காட்டும்: சொற்தெளிவு குரல், ஏற்ற இறக்கம்,  பொருத்தமான இடங்களில் நிறுத்தம் இவை அனைத்தும் வானொலிக் கலையில் ஈடுபட விரும்பும் எவருக்கும் அரிய தகவல்கள். 

எதனையும் அரைகுறையாகச் செய்யாமல், முழு ஈடுபாட்டுடன் செய்யும் அவரது பாங்கு, அவரது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஒரு கலைப்படைப்பாக மாற்றியது எனலா,. 

"ஒலி அலையில் என் நினைவலைகள்" ஒரு சாதாரண நினைவுக்குறிப்பு அல்ல. இது ஒரு பெண்ணின் விடாமுயற்சி, மொழியின் மீதான பற்று, இக்கட்டான சூழலில் காட்டிய துணிச்சல் மற்றும் மத நல்லிணக்கத்தின் அடையாளம்.வைரமுத்து அவர்கள் சொல்வது போல, "இலங்கை வானொலியின் வரலாற்றுப் பொன்னேடு" விசாலாட்சி அவர்களின் சேவையைத் தப்பாமல் குறித்துக்கொள்ளும். 

தமிழை நேசிக்கும் ஒவ்வொருவர் இல்லத்திலும், வானொலிக் கலையை நேசிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இந்நூல் இடம்பிடிக்க வேண்டியது அவசியம்.விசாலாட்சி ஹமீது எனும் அந்த மெல்லிடைப் பெண்ணின் குரல், காலவெளியைத் தாண்டி இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: விசாலாட்சி  ஹமீது, 567/2ஏ, ஹெவ்லாக் சாலை, கொழும்பு - 6, இலங்கை. பக்கங்கள் 140, விலை ரூ.50. 

Friday, January 02, 2026

இலங்கை வானொலிப் புத்தகங்கள்: சுந்தா எழுதிய மனஓசை

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 27


இந்தக் கட்டுரை சுந்தா அண்ணரின் நினைவுகளையும், இலங்கை வானொலி உலகின் பெருமையையும் காலத்திற்கும் நிலைபெறச் செய்யும் ஒரு சிறு முயற்சியாகும். ஒரு வானொலிக் கலைப் பயணத்தின் காலப்பதிவாக இந்த "மனஓசைப்" புத்தகம் அமைந்துள்ளது. இலங்கை வானொலி என்பது ஒரு காலகட்டத்தின் பண்பாட்டு அடையாளம். அந்த அடையாளத்தின் பின்னணியில் உழைத்த ஆளுமைகள் ஏராளம். அவர்களில் 'சுந்தா அண்ணா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வி.ஏ.சுந்தரலிங்கம் அவர்கள் மிக முக்கியமானவர். அவரது வானொலி அனுபவங்கள் 'மனஓசை' என்ற நூலாக வடிவம் பெற்ற விதம் ஒரு சுவாரசியமான வரலாறு. 

இது வெறும் புத்தகமல்ல; ஒரு இலங்கை வானொலிக் கலைஞனின் ஆன்மா, காலத்தின் சுவடுகளைத் தேடிச் செய்த பயணம் எனலாம். சென்னை அடையாறில் 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த புத்தகத்தின் விதை நடப்பட்டது.  சென்னை அடையாறில் இருந்த சுந்தா - பராசக்தி தம்பதிகளின் இல்லத்தில் தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. ஒரு காலத்தில் காலிலே சக்கரம் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுழன்று வேலை செய்தவர் சுந்தா அண்ணர். கலகலப்பான பேச்சும், ஓடி ஆடிப் பிறரை மகிழ்விக்கும் குணமும் கொண்ட அவர், அன்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து அதை எழுதியதை எண்ணும் போது மனது கனத்தது என்கிறார் பேராசிரியர் மெளனகுரு.

அவரது சுறுசுறுப்பான பழைய நினைவுகள் நிழலாடினாலும், உடல் நலிவுற்றிருந்த அந்த நிலையிலும் அவரிடமிருந்த பழைய கலகலப்பும், நகைச்சுவை உணர்வும் அப்படியே இருந்தன. 'மனஓசை' என்ற நூல் உருவாவதற்கான கருவை விதைத்தது அவரது சென்னை வாழ்க்கை.

பேச்சு நூலாக மாறிய கதை சுவாரஷ்யமானது. சுந்தா அண்ணரின் வானொலி அனுபவங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆவலாக இருந்தது. ஆனால், எழுத்து தனது துறையன்று என்றும், பேச்சே தனது பலம் என்றும் அவர் தயங்கினார். அவரது பலத்தையே ஆதாரமாகக் கொண்டு ஒரு நூலை உருவாக்கத் திட்டமிட்டு உருவாக்கிய நூல் இது எனலாம். 

அவரது நினைவுகள் அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்த ஒலிப்பதிவு நாடாக்களை இலங்கைக்குக் கொண்டு சென்று, அவரது மாணவரும் பேராசிரியர்  மெளனகுருவின் சக விரிவுரையாளருமான க. இன்பமோகன் அவர்களின் உதவியுடன் எழுத்துருவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் பராசக்தி அக்கா அந்த எழுத்துப் படிகளைத் திருத்தினார்கள். 

ஒரு தேர்ந்த ஒலிபரப்பாளரின் பேச்சு, இங்கே எழுத்து வடிவம் பெற்று 'மனஓசை' என்ற நூலாக மலர்ந்தது. இலங்கை ஒலிபரப்புக் கலை வரலாற்றின் ஆவணமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது. ஈழத்து வானொலித் துறையைப் பொறுத்தவரை ஜோர்ஜ் சந்திரசேகரம், விக்கினேஸ்வரன் போன்றோர் தங்களின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளனர். 

சோ. சிவபாதசுந்தரம், கே.எஸ். நடராஜா ஆகியோர் ஒலிபரப்புக் கலை பற்றி நுட்பமான நூல்களை எழுதியுள்ளனர். இந்த வரிசையில் சுந்தாவின் 'மனஓசை' ஒரு தனித்துவமான இடத்தைப் பிடிக்கிறது. இலங்கை வானொலியின் ஆரம்ப காலங்கள், தமிழ் மற்றும் சிங்கள ஒலிபரப்பாளர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியுடன் சகோதரத்துவத்தோடு பணியாற்றிய பொற்காலத்தை இந்நூல் விவரிக்கிறது. 

அந்த இனிய காலங்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கத்தைச் சுந்தா அண்ணர் இந்நூலில் அடிக்கடி வெளிப்படுத்துகிறார். இது ஒரு கலைஞனின் தாகம் மட்டுமல்ல, ஒரு மனிதாபிமானியின் ஆழ்ந்த வேண்டுதலும் கூட.

அனைவருக்கும் அண்ணரான சுந்தா1970-களில் ஈழத்தில் ஏற்பட்ட கலை எழுச்சியில் இளைஞர்களோடு தோளோடு தோள் நின்று உழைத்தவர் சுந்தா அண்ணர். வயது வித்தியாசம் பாராது அவர் இளைஞர்களுடன் பழகியதால், அவர் அனைவருக்கும் 'சுந்தா அண்ணர்' ஆனார். அவரது இல்லம் ஒரு கலைக்கூடமாகவே திகழ்ந்தது. பராசக்தி அக்காவின் இன்முகமும், அவர் அன்போடு தரும் சுவையான கோப்பியும், ஆழமான உரையாடல்களும் அந்த வீட்டை இளைஞர்களின் புகலிடமாக மாற்றின என்கிறார் பேராசிரியர்.

1970-களின் நடுப்பகுதியில் அவரது வீட்டின் ஒரு பகுதியில் பேராசிரியர் மெளனகுரு குடியிருந்தபோது, ஒரு குடும்ப நண்பராக அவரது ஆளுமையை உள்ளிருந்து உணரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்ததாகக் கூறுகிறார் இந்த நூலில். தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்கத் திடீர் திடீரெனச் சுவாரசியமான காரியங்களைச் செய்யும் அவரது குணம் வியப்பிற்குரியது.

ஒலிபரப்பாளரின் மொழிநடைக்கு இந்த நூல் ஒரு சான்றாகும். ஒரு சிறந்த வானொலித் தயாரிப்பாளர் நேயர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடுவது போலப் பேச வேண்டும் என்பது ஒலிபரப்புக் கலையின் அடிப்படைப் பாடம். கேட்ட மாத்திரத்தில் புரியக்கூடியதாகவும், ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாகவும் இருக்க வேண்டிய அந்த விசேட அம்சத்தை 'மனஓசை' நூலில் காணலாம்.

சுந்தா அண்ணர் தனது அனுபவங்களை, சம்பவங்களை மிகச் சுவைபட விவரிக்கும் விதம் 'கேட்டார் பிணிக்கும் தகைமையதாக' அமைந்துள்ளது. சுயவிமர்சனத்தோடும், நிதானமான முதிர்ச்சியோடும் தனது தவறுகளையும் வெற்றிகளையும் அவர் இதில் பதிவு செய்துள்ளார்.

பராசக்தி அக்கா, சுந்தாவின் உந்துசக்தி என்றால் மிகையில்லை. இந்த நூல் உருவானதில் பராசக்தி அக்காவின் பங்கு மிக முக்கியமானது. அவர் சுந்தா அண்ணரின் மனைவி மட்டுமல்ல; அவரது உந்துசக்தியாகவும், பரம ரசிகையாகவும், அதே சமயம் ஒரு நேர்மையான விமர்சகராகவும் இருந்தார். இந்த அழகான இணைப்பின் பலமே 'மனஓசை' புத்தகத்தின் வெற்றிக்குக் காரணம்.

ஈழத்து நாடகத் துறை, இலங்கை வானொலித் துறை மற்றும் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்நூல் ஒரு அரிய தகவல் பெட்டகமாகும். சாதாரண நேயர்களுக்கும் இது ஒரு சுவையான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. இலங்கையின் ஒலிபரப்புத் துறை வரலாற்றின் இன்னொரு பக்கத்தைத் தெரிந்துகொள்ள விரும்பும் எவரும் தவறவிடக்கூடாத ஒரு படைப்பு இது.

நூல் விவரம்:

தலைப்பு: மனஓசை
ஆசிரியர்: வீ. சுந்தரலிங்கம் (சுந்தா)
பக்கங்கள்: 330
வெளியீடு: தி பார்க்கர், 293, அஹமத் காம்ளக்ஸ், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600014



Thursday, January 01, 2026

இலங்கை வானொலிப் புத்தகங்கள்: சானா எழுதிய ப.பரமர்

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 26


"இலங்கை வானொலியில் நாடகங்கள்" என்ற மையக்கருத்தைச் சுற்றியும், சானா அவர்களின் வானொலி ஆளுமை மற்றும் அவரது 'ப. பரமர்' நூல் குறித்த தகவல்களையும் இந்தக் கட்டுரையில் காணலாம். இலங்கை வானொலியில் நாடகங்கள் ஒரு காலத்தில் நேயர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கின. 

இலங்கை வானொலி என்பது உலகத் தமிழர்களின் இதயத்துடிப்பாக விளங்கிய ஒரு காலமுண்டு. அங்கு ஒலிபரப்பான வர்த்தகச் சேவையும், நாடகங்களும் கடல் கடந்தும் தமிழ் மக்களைக் கட்டிப்போட்டிருந்தன. அந்தப் பொற்காலத்தில், வானொலி நாடகங்கள் வழியாகத் தமிழ் மக்களின் வீடுகளுக்கே சென்று சேர்ந்த பெயர் சானா (சண்முகநாதன்). 

இன்று அவரை ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் பல இரசிகர்கள் அறிந்திருந்தாலும், அந்த ஆளுமை உருவான விதத்தையும், அவரது எழுத்துப் பயணத்தையும் 'பரியாரி பரமர்' (ப. பரமர்) என்னும் நூல் மிக நுட்பமாகப் பதிவு செய்கிறது. ஓவியராகத் தொடங்கி ஒலிபரப்பாளராக மலர்ந்த பயணம்பலருக்குத் தெரியாத ஒரு செய்தி என்னவென்றால், சானா அவர்கள் வானொலிக்குள் நுழைவதற்கு முன்பே ஒரு சிறந்த ஓவியராகத் திகழ்ந்தவர். 

யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் படிக்கும் போதே, பாடங்களைக் காட்டிலும் சித்திரம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இதற்காகவே சென்னை அரசு சித்திரக் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பயின்று, பின்னர் இலங்கை டெக்னிக்கல் கல்லூரியிலும் பயிற்சி பெற்றார்.

1937-ல் 'ஈழகேசரி' இதழில் ஒரு சைத்திரிகனாக (ஓவியராக) இணைந்தபோது, அங்கு ஆசிரியராக இருந்தவர் புகழ்பெற்ற சோ. சிவபாதசுந்தரம் (சோசி) அவர்கள். லண்டன் பி.பி.சி-யில் 'தமிழோசை'யைத் தொடங்கி உலகெங்கும் தமிழ் முழக்கம் செய்த அந்தப் பெரியவர் தான், சானாவிற்குள் இருந்த எழுத்தாற்றலைத் தட்டி எழுப்பினார். 

"பத்திரிகைக்கு எழுதுங்காணும்" என்ற அவரது விடாப்பிடியான வற்புறுத்தலே, சானாவைத் தூரிகையைக் கீழே வைத்துவிட்டுப் பேனாவைக் கையில் எடுக்க வைத்தது. சானாவை வானொலி நாடகங்களின் முன்னோடி எனலாம். சானா அவர்கள் இலங்கை வானொலியில் தயாரித்த நகைச்சுவை நாடகங்களுக்கு ஒரு தனிப் பாணி உண்டு. அந்தப் பாணியின் தொடக்கப் புள்ளியை நாம் 'பரியாரி பரமர்' நூலில் காணலாம். 

1939 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில் ஈழகேசரியில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள், உண்மையில் ஒரு நாடகத்திற்கான அனைத்துக் கூறுகளையும் கொண்டிருந்தன. நூலாசிரியர் தமிழை முறையாகப் பயிலாததால் முதலில் தயங்கினாலும், சோசியிடம் முறையாகத் தமிழ் கற்ற பின்பு, அவரது எழுத்து நடை ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது. 

'மரியாதை எதற்கு?' என்பது போன்ற இவரது ஆரம்பகால எழுத்துக்கள், பின்னர் வானொலி நாடகங்களில் நாம் கேட்ட அந்த இயல்பான உரையாடல் முறைக்கு அடித்தளமிட்டன. ஈழத்துத் வானொலித் தமிழின் இனிமையையும், அதில் பொதிந்துள்ள நையாண்டியையும் ஒருசேரக் கலப்பதில் சானா வல்லவர் என்பதற்கு இந்த 96 பக்கச் சிறுநூல் சான்றாகிறது.

பரியாரி பரமர்: ஓர் அங்கதப் பாத்திரம். வானொலி நாடகங்களில் நாம் ரசித்த கதாபாத்திரங்களைப் போலவே, இந்த நூலில் வரும் 'பரியாரி பரமர்' என்ற பாத்திரமும் வாசகர்களின் மனதில் ஆழமாகப் பதிகிறது. அக்கால ஈழத்துச் சமூகத்தின் முரண்பாடுகள், சடங்குகள் மற்றும் எளிய மனிதர்களின் மனநிலையைத் தனது அங்கதச் சுவையால் சானா தோலுரித்துக் காட்டுகிறார்.

 சித்திரக் கலைஞனாக இருந்ததால், ஒரு காட்சியினை விவரிக்கும்போது அதை ஒரு வானொலி நாடகம் போலக் காட்சிப்படுத்தும் திறன் இவருக்கு இயல்பாகவே கைவந்தது. இலங்கை வானொலி நாடகங்களில் சானா கையாண்ட அதே யதார்த்தமான நகைச்சுவை, இந்தத் தொகுப்பிலும் இழையோடுகிறது. 1940-களில் போர்ச் சூழலுக்கு மத்தியில் வாழ்ந்த மக்களின் துயரங்களுக்கு மருந்தாக அமைந்த இந்த எழுத்துக்கள், பிற்காலத்தில் அவர் தயாரித்த பல நகைச்சுவை நாடகங்களுக்கு ஊற்றாக அமைந்தன என்பதில் ஐயமில்லை.

ஒரு கலைக் குடும்பத்தின் கூட்டு முயற்சி இந்த நூல். இது வெளிவருவதற்குப் பின்னால் ஒரு பெரிய நட்புறவுப் பட்டாளமே இருந்திருக்கிறது. குரும்பசிட்டி சன்மார்க்க சபை நூல் நிலையத்திலிருந்து பழைய கட்டுரைகளைச் சேகரித்துக் கொடுத்த ஏ.ரி. பொன்னுத்துரை, நூலாக வெளியிடத் தூண்டிய ரசிகமணி கனக-செந்திநாதன் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிய எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ) என அனைவரும் ஈழத்து கலை உலகின் தூண்கள். இவர்களின் முயற்சியால், இன்று இலங்கை வானொலி வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு வெளியீட்டின் அதிபர் ஜனாப் எம். ஏ. ரஹ்மான் அவர்கள் இதனை நேர்த்தியாகப் பதிப்பித்துள்ளார். இலங்கை வானொலித் துறையில் ஆர்வம் உள்ளவர்களும், ஈழத்து நகைச்சுவை இலக்கியத்தை நேசிப்பவர்களும் தவறவிடக்கூடாத படைப்பு இது.

"இலங்கை வானொலியில் நான் தயாரிக்கும் நாடகங்களைக் கேட்டு மகிழும் பல இரசிகர்களுக்கு இந்தச் சானாவை நன்கு தெரியாது" என்று நூலாசிரியர் குறிப்பிடுவது போல, அவரது பன்முகத் திறமையின் ஆதிமூலத்தை நாம் இந்த நூலில் தரிசிக்கலாம். ஓவியக் கலை, பத்திரிகைத் துறை, அதன் பின் உலகளாவிய வானொலித் துறை எனச் சானா பயணித்த பாதை மலைப்பிற்குரியது.

ஈழத்துத் தமிழ் இலக்கியமும், வானொலி நாடகக் கலையும் இணைந்த ஒரு புள்ளியாக 'பரியாரி பரமர்' திகழ்கிறது. இந்த அரிய பொக்கிஷத்தை வாசிக்க விரும்புவோர் மித்ர வெளியீடு வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம் (தொடர்புக்கு: 044 24721336). வானதி பதிப்பக வெளியீடுகளைப் போன்றே நேர்த்தியான உள்ளடக்கத்தைக் கொண்ட இந்த நூல், ஒவ்வொரு இலங்கை வானொலிப் பிரியரின் சேகரிப்பிலும் இருக்க வேண்டியது அவசியம்.


Wednesday, December 31, 2025

இலங்கை வானொலிப் புத்தகங்கள்: சோ.சிவபாதசுந்தரம் எழுதிய ஒலிபரப்புக் கலை

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 25

1950களில் வெளிவந்த முதல் பதிப்பும் சமீபத்தில்
வெளிவந்த புதிய பதிப்பும் 

இலங்கை வானொலியில் பணியாற்றியவர்கள் எழுதிய புத்தகங்களில் இது மிக முக்கியமான புத்தகம் எனலாம். சோ.சிவபாதசுந்தரம் அவர்களின் பன்முகத்தன்மையை நாம் கூறித் தெரிய வேண்டியதில்லை. வானொலி உலகின் தமிழ் முழக்கம் என்றே அவரைக் கூறலம். சோ.சிவபாதசுந்தரம் அவர்களின் வாழ்வும் பணியும் வானொலிச் சார்ந்ததாகவே இருந்தது எனலாம். வானதி பதிப்பகத்தின் வெளியீடாக, 330 பக்கங்களில் மிளிரும் இந்தப் 'ஒலிபரப்புக் கலை' எனும் நூல், தமிழ் வானொலி இலக்கிய உலகிற்கு ஒரு முக்கியமான புத்தகமாகும்.

இந்நூலின் ஆசிரியர் சோ.சிவபாதசுந்தரம் அவர்கள், இலங்கையின் யாழ்ப்பாண மண்ணில் பிறந்தவராயினும், தமிழக வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமான ஒரு மூத்த வானொலி ஆளுமை. சட்டக் கல்லூரியில் பயின்று, பின்னர் பத்திரிகைத் துறையில் தடம் பதித்த இவர், சிறுகதைகள், இலக்கிய விமர்சனங்கள் மற்றும் பயணக் கட்டுரைகள் எனத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் தனது முத்திரையைப் பதித்தவர். 

குறிப்பாக, 'மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில்' என்ற இவரது நூல், பயண இலக்கியத் துறையில் ஒரு புதிய உத்வேகத்தையும் வழியையும் உருவாக்கிய பெருமைக்குரியது.சோ.சிவபாதசுந்தரம் அவர்களின் ஆளுமையில் மிக முக்கியமான பகுதி அவரது வானொலித் துறை சார்ந்த அனுபவங்கள். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வானொலி ஒலிபரப்புத் துறையில் அரும்பணியாற்றியவர். 

இலங்கை வானொலியில் தனது பணியைத் தொடங்கி, அதன் பின்னர் லண்டன் பி.பி.சி (BBC) நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து 'தமிழோசை' என்ற புகழ்பெற்ற தமிழ் வானொலியைத் தொடங்கி வைத்த பெருமை இவரைச் சாரும். இதன் மூலம் உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே தமிழ் மொழியின் பெருமையை முழங்கச் செய்தவர் இவர். 

ஒரு வகையில், உலகளாவிய ரீதியில் தமிழ் ஒலிக்க அடித்தளமிட்ட முன்னோடிகளில் இவரும் ஒருவர். இவர் இலங்கை வானொலியோடு தொடர்புடியவர் என்பதில் நமக்கும் பெருமை. இவரது அனுபவம் வெறும் ஒலிபரப்போடு மட்டும் நின்றுவிடவில்லை. லண்டன், பாரிஸ், லக்ஸம்பர்க், ஜெனீவா, ரோமாபுரி போன்ற ஐரோப்பிய நகரங்களில் உள்ள உலகத்தரம் வாய்ந்த வானொலி நிலையங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு வானொலி நிலையங்களுக்கும் நேரில் சென்று, அவற்றின் நிர்வாக முறைகளையும் தொழில்நுட்ப நுணுக்கங்களையும் மிக ஆழமாக ஆராய்ந்தவர். 

இந்த உலகளாவிய தேடலும், ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கும் இவரது எழுத்துக்களில் ஒரு முதிர்ச்சியையும், உலகளாவிய பார்வையையும் கொண்டு வந்துள்ளது. ஒரு சிறந்த ஆய்வாளராகவும், நிர்வாகியாகவும் இவர் பெற்ற அனுபவங்களே இந்த ஒலிபரப்புக் கலை எனும் நூலின் அடித்தளமாக அமைந்துள்ளன.இந்தப் புத்தகத்தின் 330 பக்கங்களும் ஆசிரியரின் நீண்ட கால அனுபவத்தையும், அவர் கண்ட உலகத்தையும் நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. 

சட்டக் கல்வியின் தர்க்கமும், பத்திரிகைத் துறையின் வேகமும், வானொலித் துறையின் நயமும் ஒருசேரக் கலந்த ஒரு தனித்துவமான நடை இவருக்கு வாய்த்திருக்கிறது. யாழ்ப்பாணத்துத் தமிழும், தமிழகத்துத் தமிழும் கைகோர்க்கும் ஒரு பாலமாக இவரது எழுத்துக்கள் திகழ்கின்றன. குறிப்பாக, ஒரு பயணக் கட்டுரையை எப்படி ஒரு வரலாற்று ஆவணமாகவும், இலக்கியப் படைப்பாகவும் மாற்ற முடியும் என்பதற்கு இவரது முந்தைய நூல்களைப் போலவே இந்தப் படைப்பும் சான்றாக நிற்கிறது.

வானதி பதிப்பகம் இத்தகைய வரலாற்றுப் பின்புலமும், ஆழமான அனுபவமும் கொண்ட ஒரு படைப்பாளியின் நூலை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. இலங்கை வானொலி, மீது பற்றுதல் கொண்டவர்களுக்கும், ஒலிபரப்புத் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கும், இலக்கியப் பயணங்களில் நாட்டம் உள்ளவர்களுக்கும் இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும். 

ஒரு மனிதர் தனது வாழ்நாளில் ஈட்டிய அனுபவங்களை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு சீரிய முயற்சியாகவே இதைக் கருத வேண்டும். தொழில்நுட்பங்கள் மாறினாலும், அடிப்படைத் தமிழ் உணர்வும், பண்பாட்டுப் பதிவுகளும் மாறாதவை என்பதை இந்நூல் உணர்த்துகிறது.இந்த அரிய படைப்பை வாசிக்க விரும்புவோர் வானதி பதிப்பகத்தை நேரடியாகவோ அல்லது 044 24342810 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 

சோ.சிவபாதசுந்தரம் போன்ற ஆளுமைகளின் எழுத்துக்களைப் போற்றுவது என்பது, நமது மொழிக்கும் பண்பாட்டிற்கும் மட்டுமல்லாது இலங்கை வானொலிக்கும் நாம் செய்யும் பெருமையாகும். இலங்கை வானொலிப் பிரியர்கள் தவறவிடக்கூடாத இந்த 330 பக்கப் பொக்கிஷம், உங்கள் வீட்டு நூலகத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Saturday, December 27, 2025

தபால் முத்திரைகளில் இலங்கை வானொலி

நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 21


 தெற்காசியாவின் வானலை ராஜா: தபால் முத்திரைகளில் இலங்கை வானொலியின் பொற்கால வரலாறு

தபால் தலை சேகரிப்பு (Philately) என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை ஆவணப்படுத்தும் ஒரு கலை வடிவமாகும். தபால் துறையில் பயன்படுத்தப்படும் 'வாசக முத்திரை ரத்து' (Slogan Cancellation) என்பது கடிதங்களில் ஒட்டப்படும் தபால் தலைகளை மீண்டும் பயன்படுத்த முடியாதபடி ரத்து செய்யும்போது, அஞ்சல் அலுவலகங்கள் பயன்படுத்தும் ஒரு தனித்துவமான முறையாகும். இது ஒரு குறிப்பிட்ட செய்தி, விளம்பரம் அல்லது பொதுநல விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பயன்படுத்தப்படுகிறது.

தபால் துறையில் ஒரு கடிதம் அஞ்சல் நிலையத்திற்கு வரும்போது, அதன் மீதான முத்திரை செல்லாததாக்கப்பட வேண்டும். இதற்காகப் பயன்படுத்தப்படும் முத்திரைகளில் வெறும் தேதி மற்றும் ஊர் பெயர் மட்டுமே இல்லாமல், ஒரு பிரத்யேக வாசகம் அல்லது விளம்பரம் இடம்பெற்றால் அது 'வாசக முத்திரை' எனப்படுகிறது.

இது தபால் தலை சேகரிப்பாளர்களிடையே மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு நாடு எதற்கு முக்கியத்துவம் அளித்தது என்பதை இத்தகைய முத்திரைகள் மூலம் அறியலாம். உதாரணமாக, குடும்பக் கட்டுப்பாடு, போர்க்கால நிதி சேகரிப்பு அல்லது ஒரு நாட்டின் மிக முக்கியமான வானொலி நிலையத்தைப் பற்றிய விளம்பரம் போன்றவை இதில் இடம்பெறும்.

1950-கள் மற்றும் 1960-களில் இலங்கை (அன்று சிலோன்) தெற்காசியாவின் தகவல் தொடர்புத் துறையில் ஒரு மாபெரும் சக்தியாக விளங்கியது. அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலி தெற்காசியாவின் 'வானலைகளின் ராஜா' என்று போற்றப்பட்டது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இதன் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது.

படத்தில் உள்ள கடித உறையை உற்று நோக்கினால், அது ஏப்ரல் 24, 1954 அன்று கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த கடிதத்தின் முத்திரையில் "LISTEN TO RADIO CEYLON" (இலங்கை வானொலியைக் கேளுங்கள்) என்ற வாசகம் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அப்போதைய இலங்கை அரசாங்கம் தனது வானொலி சேவையை உலகளாவிய ரீதியில் விளம்பரப்படுத்த தபால் துறையைப் பயன்படுத்தியது என்பதை அறிய முடிகிறது.

இந்த முத்திரையில் வானொலி நிலையத்தின் பெயரைத் தாண்டி, சில முக்கியமான தொழில்நுட்ப விவரங்களும் இடம்பெற்றுள்ளன. அந்த வாசகத்திற்கு கீழே 13M. 19M. 25M. 31M. 41M. 49M ஆகிய எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவை இலங்கை வானொலி ஒலிபரப்பப்பட்ட சிற்றலை  மீட்டர் பேண்ட்களைக் குறிக்கின்றன.

வானொலிப் பெட்டிகள் இன்றும் அரிதாகப் பயன்படுத்தப்படும் ஒரு காலத்தில், 1950-களில் இதுவே மக்களின் பிரதான தகவல் மற்றும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. இலங்கை வானொலியின் துல்லியமான ஒலிபரப்பும், நேயர்களைக் கவரும் நிகழ்ச்சிகளும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் அதைப் பிரபலமாக்கின. இதைக் கேட்பதற்காகவே மக்கள் குறிப்பிட்ட நேரங்களில் வானொலிப் பெட்டிகளைச் சுற்றித் திரண்டிருந்தனர்.

இலங்கை வானொலியின் இந்த வெற்றிக்கு பின்னால் பல திறமையான அறிவிப்பாளர்கள் இருந்தனர். 1950 மற்றும் 1960-களில் தெற்காசியாவில் புகழின் உச்சியில் பல அறிவிப்பாளர்கள் இலங்கை வானொலியில் இருந்தனர். அவர்களது காந்தக் குரலும், தெளிவான உச்சரிப்பும், நேயர்களுடன் அவர்கள்  உரையாடும் விதமும் அவர்களுக்குப் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது.

இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இந்தியா போன்ற நாடுகளில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு பி.ஹெச்.அப்துல் ஹமீது போன்றவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. வானொலியின் இந்த அசுர வளர்ச்சியைத் தான், படத்தில் உள்ள தபால் முத்திரை நமக்கு நினைவூட்டுகிறது.

படத்தில் உள்ள இந்த 1954-ஆம் ஆண்டின் தபால் உறை, இலங்கை வானொலியின் பொற்காலத்தை நமக்குக் காட்டும் ஒரு வரலாற்றுச் சான்றாகும். தபால் தலை சேகரிப்பில் இத்தகைய 'வாசக முத்திரைகள்' மிகக் குறைந்த காலமே புழக்கத்தில் இருக்கும் என்பதால், இவை சேகரிப்பாளர்களால் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன.

1950-களின் இலங்கை வானொலி என்பது வெறும் பொழுதுபோக்கு நிலையம் மட்டுமல்ல, அது தெற்காசிய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு மையமாக விளங்கியது. கே.எஸ்.ராஜா போன்ற ஆளுமைகளும், "Listen to Radio Ceylon" போன்ற தபால் முத்திரைகளும் அந்த உன்னதமான காலத்தின் அடையாளங்களாகும்.

ஒரு காலத்தில் ஒரு நாட்டின் தபால் துறையே ஒரு வானொலியை விளம்பரப்படுத்தியது என்றால், அந்த வானொலி எத்தகைய செல்வாக்கைக் கொண்டிருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். 

Friday, December 26, 2025

தெற்காசிய வானொலி வரலாற்றின் நாயகன்: வெர்னான் கொரயா

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 20


இலங்கை வானொலித் துறையின் வரலாற்றில், 1950-கள் மற்றும் 60-கள் ஒரு முக்கியக் காலமாகக் கருதப்படுகிறது. தொலைக்காட்சி எனும் ஊடகம் இலங்கைக்கு அறிமுகமாகாத அக்காலத்தில், மக்களின் ஒரே பொழுதுபோக்காகவும் தகவல் களஞ்சியமாகவும் விளங்கியது 'ரேடியோ சிலோன்'. இந்த சகாப்தத்தை வடிவமைத்த சிற்பிகளில் ஒருவரான வெர்னான் கொரயாவின் (Vernon Corea) எழுச்சிமிகு பயணமும், அவருக்கு வழிகாட்டியாக இருந்த கிளிஃபோர்ட் ஆர். டாட் (Clifford R. Dodd) அவர்களின் பங்களிப்பும் இலங்கை வானொலிவரலாற்றில் முக்கியமான அத்தியாயங்களாகும்.

வெர்னான் கொரயாவின் வியக்கத்தக்க வானொலிப் பயணம் 1957 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முறைப்படி தொடங்கியது. வணிக சேவையின் புகழ்பெற்ற இயக்குநரான கிளிஃபோர்ட் ஆர். டாட், 1957 செப்டம்பர் 17 அன்று வெர்னனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், செப்டம்பர் 1 முதல் வர்த்தகச்  சேவையில் ஆங்கில அறிவிப்பாளர்கள் குழுவில் வெர்னான் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அக்காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1.75 ஆகும். ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ. 12 வரை அவர் ஈட்ட முடிந்தது. இன்று இது சிறிய தொகையாகத் தோன்றலாம், ஆனால் அன்றைய காலகட்டத்தில் இது ஒரு மரியாதைக்குரிய தொடக்கமாக அமைந்தது.

இலங்கையில் வணிக ஒலிபரப்பின் தந்தை என்று போற்றப்படும் கிளிஃபோர்ட் டாட், ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டவராக இருந்தார். 1950 செப்டம்பர் 30 அன்று ரேடியோ சிலோனில் வத்தகச் சேவையைத் தொடங்கிய பெருமை இவரையே சாரும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆசியாவின் மறுசீரமைப்பிற்காக உருவாக்கப்பட்ட 'கொழும்புத் திட்டத்தின்' (Colombo Plan) கீழ் ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு டாட் அனுப்பப்பட்டார். அவரது வருகைக்குப் பிறகு, ரேடியோ சிலோன் ஒரு புதிய உத்வேகத்தைப் பெற்றது. ஜவஹர்லால் நேரு, ஜே.ஆர். ஜெயவர்த்தனே போன்ற தலைவர்களின் கனவுத் திட்டமான கொழும்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக, ஒலிபரப்புத் துறையில் ஆஸ்திரேலியா செய்த முதலீடு, இலங்கையை ஆசியாவின் வானொலித் தலைநகராக மாற்றியது.

வெர்னான் கொரயா தனது வாழ்க்கையை வானொலி ஏணியின் அடிமட்டத்தில் ஒரு அறிவிப்பாளராகத் தொடங்கினாலும், கிளிஃபோர்ட் டாட் வழங்கிய ஊக்கத்தினால் மிக விரைவாக உயர்ந்தார். 1958 முதல் 1959 வரை அறிவிப்பாளராகவும், 1959 முதல் 1968 வரை நிகழ்ச்சி உதவியாளராகவும் பணியாற்றிய அவர், பின்னர் 1968 இல் வணிக மேலாளராகப் பொறுப்பேற்றார். அவரது கடின உழைப்பு மற்றும் திறமைக்கு மகுடம் சூட்டும் விதமாக 1974 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) செய்தி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (BBC) மேலாண்மைப் பயிற்சி பெறுவதற்காக 1970 இல் இங்கிலாந்து சென்ற வெர்னான், அங்கு ஆறு மாதங்கள் தங்கியிருந்து உலகத்தரம் வாய்ந்த ஒலிபரப்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். அதே ஆண்டில் நடந்த காமன்வெல்த் ஒலிபரப்பு மாநாட்டில் இலங்கை வானொலியின் இயக்குநர் ஜெனரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இது அவரது ஆளுமைக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும்.

"ரேடியோ சிலோனை எடுக்காத வானொலி பெட்டிகளை யாரும் வாங்கவில்லை" என்று புகழ்பெற்ற அறிவிப்பாளர் அமீன் சயானி கூறியது போல, இலங்கை வானொலியின் தாக்கம் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் முழுவதும் பரவியிருந்தது. அதிகாலை வேளையில் வெர்னான் போன்ற அறிவிப்பாளர்களின் குரலைக் கேட்பதற்காக இந்தியத் துணைக் கண்டமே விழித்திருந்தது. ரசிகர் அஞ்சல்கள் வெள்ளமென வந்து குவிந்தன.

வெர்னான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் இன்றும் பலரின் நினைவுகளில் நீங்காத இடம்பிடித்துள்ளன. டூ ஃபார் தி மணி (Two for the Money), கிடிஸ் கார்னர் (Kiddies Corner), பாண்ட்ஸ் ஹிட் பரேட் (Ponds Hit Parade), மாலிபன் பேண்ட்வாகன் (Maliban Bandwagon) மற்றும் சண்டே சாய்ஸ் (Sunday Choice) போன்ற நிகழ்ச்சிகள் வானொலி வரலாற்றின் மைல்கற்கள். குறிப்பாக, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அவர் வழங்கிய டு எவர் ஹிஸ் ஓன் (To Each His Own) என்ற நேயர் விருப்ப நிகழ்ச்சி, இலங்கையின் இளைஞர் தலைமுறையின் இசை ரசனையை மாற்றியமைத்தது. அமெரிக்காவின் 'கண்ட்ரி அண்ட் வெஸ்டர்ன்' (Country and Western) இசை வகையை இலங்கையில் பிரபலப்படுத்தியதில் அவருக்கு முக்கியப் பங்குண்டு.

வானொலி நிலையத்திற்கு உள்ளே மட்டுமல்லாது, வெளி உலகிலும் வெர்னான் ஒரு நட்சத்திரமாகவே திகழ்ந்தார். ஏராளமான இரவு விருந்துகள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் இராணுவ விழாக்களை அவர் தொகுத்து வழங்கினார். காலி முகத்திடலில் உள்ள பிரபல 'கோனட் க்ரோவ்' (Coconut Grove) ஹோட்டலில் இசைக்குழுக்களை அறிமுகப்படுத்துவதில் அவர் முன்னோடியாக இருந்தார். தீவு முழுவதும் பயணம் செய்த வெர்னான், ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு பெயராக மாறினார். 1960 மற்றும் 70-களில் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில், அவரது கம்பீரமான குரலில் ஒலிக்கும் "புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்ற வார்த்தைகளுக்காகவே மக்கள் காத்திருந்தனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் நெவில் ஜெயவீர குறிப்பிட்டது போல, ஆங்கில வர்த்தகச் சேவையில் மிகவும் பிரபலமான ஆண் குரல் வெர்னான் கொரயாவினுடையது தான். ஒரு வாத்து தண்ணீரைத் தேடிச் செல்வது போல, அவர் மிக இயல்பாக வானொலித் துறையைத் தழுவிக் கொண்டார். 1960-களின் சமூக மதிப்பீடுகளையும், இசை ரசனையையும் வடிவமைத்த ஒரு மாபெரும் ஆளுமையாக வெர்னான் கொரயா இன்றும் போற்றப்படுகிறார். அவரது வாழ்வும் பணியும், நவீன ஊடகவியலாளர்களுக்கு ஒரு சிறந்த பாடப்புத்தகமாகும்.


Thursday, December 25, 2025

இலங்கை வானொலியின் வெர்னான் கொரயா

நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 20


இலங்கை வானொலித் துறையின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, அதன் பொற்காலத்தை வடிவமைத்த ஒரு சில ஆளுமைகளில் வெர்னான் கொரயா (Vernon Corea) மிக முக்கியமானவர். 1950 மற்றும் 60-களில் தெற்காசியாவிலேயே செல்வாக்குமிக்க ஊடகமாகத் திகழ்ந்த 'ரேடியோ சிலோன்' (இலங்கை வானொலி) நிறுவனத்தின் அடையாளமாக அவர் திகழ்ந்தார். 

வெர்னான் கொரயா 1927 செப்டம்பர் 11 அன்று கட்டுநாயக்கவின் குரானா என்ற ஊரில் பிறந்தார். ஒரு பாரம்பரியமிக்க மற்றும் சமயப் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் அவர். அவரது தந்தை ரெவ். இவான் கொரயா ஒரு மதகுருவாகப் பணியாற்றியவர். வெர்னானின் குடும்பம் இலங்கைத் திருச்சபையில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. அவரது தந்தை பொரெல்லா புனித லூக் தேவாலயம் மற்றும் புனித பால் மிலாகிரியா தேவாலயம் ஆகியவற்றில் விகாரராகப் பணியாற்றியவர். வெர்னானின் ஒரே சகோதரர் எர்னஸ்ட் கொரயா, இலங்கையின் ஊடக மற்றும் இராஜதந்திரத் துறையில் பெரும் சாதனைகளைப் புரிந்தவர். அவர் 'சிலோன் டெய்லி நியூஸ்' பத்திரிகையின் ஆசிரியராகவும், கனடா மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெர்னான் கொழும்பில் உள்ள புகழ்பெற்ற ராயல் கல்லூரியில் தனது பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். அங்கு அவர் கல்வியில் மட்டுமல்லாது, விவாதக் கலை மற்றும் டென்னிஸ் விளையாட்டு எனப் பள்ளியின் அனைத்துச் செயல்பாடுகளிலும் ஒரு துருதுருப்பான மாணவராகத் திகழ்ந்தார். தந்தையைப் போலவே இறைப்பணியில் ஈடுபடும் எண்ணத்துடன் இந்தியாவின் கல்கத்தாவில் உள்ள பிஷப் இறையியல் கல்லூரியில் பயின்றார். இருப்பினும், ஊடகத் துறை மீதிருந்த ஆர்வம் காரணமாக அவர் குருத்துவப் பயிற்சியைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தார். இதுவே பிற்காலத்தில் இலங்கை வானொலிக்கு ஒரு சிறந்த அறிவிப்பாளர் கிடைப்பதற்குக் காரணமாக அமைந்தது.

1953 இல் இலங்கைக்குத் திரும்பிய வெர்னான், பதுல்லாவில் உள்ள உவா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்குதான் அவர் தனது வாழ்க்கைத் துணையான மோனிகாவைச் சந்தித்தார். இவர்களது முதல் மகன் ஹரிச்சந்திராவின் அகால மரணம் அவர்களைப் பெரிதும் பாதித்தது. இந்தத் துயரத்திலிருந்து மீள அவர்கள் கொழும்புக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு சிறிது காலம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு, 1956 ஆம் ஆண்டு ரேடியோ சிலோனில் ஒரு பகுதி நேர அறிவிப்பாளராக வெர்னான் இணைந்தார். இது அவரது வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அவரது திறமையைக் கண்டு வியந்த வணிக சேவையின் இயக்குநர் கிளிஃபோர்ட் ஆர். டாட் மற்றும் துணை இயக்குநர் லிவி விஜேமன்னே ஆகியோர், 1957 இல் அவரை நிரந்தர அறிவிப்பாளராக நியமித்தனர். வெர்னானின் குரல் வளமும், நேர்த்தியான உச்சரிப்பும் அவரை வெகுவிரைவில் நேயர்களின் விருப்பத்திற்குரியவராக மாற்றியது. லிவி விஜேமன்னே தனது குறிப்பில், வெர்னான் தீவிரப் பயிற்சிக்குப் பிறகு ஒரு சிறந்த அறிவிப்பாளராகத் தகுதி பெற்றுள்ளதை வெகுவாகப் பாராட்டியிருந்தார்.

வெர்னான் கொரயா வானொலியில் பணியாற்றிய காலம் 'ரேடியோ சிலோனின்' பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. அவர் லிவி விஜேமன்னே, பேர்ல் ஒன்டாட்ஜே, ஜிம்மி பருச்சா, எர்ட்லி பீரிஸ் மற்றும் ஷெர்லி பெரேரா போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றினார். குறிப்பாக, தெற்காசியாவையே ஆட்டிப்படைத்த 'பினாகா கீத் மாலா' புகழ் அமீன் சயானி மற்றும் தமிழ் வர்த்தகச் சேவையின் அறிவிப்பாளர் எஸ்.பி. மயில்வாகனம் ஆகியோருடன் அவர் கொண்டிருந்த நட்பு மற்றும் தொழில்முறைத் தொடர்பு வியக்கத்தக்கது.

புகழ்பெற்ற சிங்கள அறிவிப்பாளர் கருணாரத்ன அபேசேகராவும் வெர்னானும் மிக நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். மொழிகளைக் கடந்து கலைப் பாலம் அமைத்த பெருமை இவர்களுக்கு உண்டு. ஒரு அறிவிப்பாளராக மட்டுமல்லாமல், நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும், இசைத் தேர்வுகளிலும் வெர்னான் புதுமைகளைப் புகுத்தினார். அவர் பணியாற்றிய காலத்தில் 'ரேடியோ சிலோன்' ஆசியாவிலேயே அதிக நேயர்களைக் கொண்ட வானொலியாகப் பெயர் பெற்றது.

இலங்கை வானொலி என்பது வெறும் தகவல் தொடர்புச் சாதனம் மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார அடையாளம். அந்த அடையாளத்தை உருவாக்குவதில் வெர்னான் கொரியா ஆற்றிய பங்கு ஈடு இணையற்றது. அவரது குரல் இலங்கையின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது மட்டுமல்லாமல், எல்லைகளையும் கடந்து நேசிக்கப்பட்டது. ஒரு ஆசிரியராக, மதகுரு மாணவனாகத் தொடங்கி, இறுதியில் ஒரு தேசத்தின் குரலாக மாறிய வெர்னான் கொரயாவின் வாழ்வு ஒரு உத்வேகமான பயணமாகும். 

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி, தனது 75 ஆவது வயதில் இங்கிலாந்தின் சர்ரே நகரில் அவர் காலமானார். தனது வாழ்நாளின் இறுதிவரை செய்திகளோடும், ஊடகத் துறையோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அவர், ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு பிபிசி செய்திகளைப் பார்த்துவிட்டு உறங்கச் சென்ற நிலையில், திங்கட்கிழமை அதிகாலையில் தூக்கத்திலேயே அமைதியாக இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். 

ஒரு மாபெரும் ஒலிபரப்பாளரின் இந்த அமைதியான புறப்பாடு, அவர் வாழ்ந்த நேர்த்தியான வாழ்வின் ஒரு அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. 2002 இல் அவர் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற ஊடகப் பாரம்பரியமும், அவர் பணியாற்றிய அந்த பழைய வானொலி இதழ்களின் அட்டைப்படங்களும் இன்றும் அவரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கின்றன. இலங்கை வானொலியின் வரலாற்றில் 'வெர்னான் கொரயா' என்ற பெயர் எப்போதும் ஒரு பொற்காலத் தடம் என்பதில் ஐயமில்லை.


Wednesday, December 24, 2025

இலங்கை வானொலி வெளியிட்ட "வானொலி வெளியீடு"

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 19


இலங்கை வானொலி வெளியிட்ட "வானொலி மஞ்சரி" எனூம் இதழை நாம் அறிவோம். ஆனால் சமீபத்தில் எம் கண்ணில் பட்ட இந்த "வானொலி வெளியீடு" எனும் இந்த இதழை முதல் முறையாகப் பார்க்கிறேன். இந்த இதழின் அட்டைப்படம் மட்டுமே நமக்குக் கிடைத்தது. முழுமையான இதழை  இந்தக் கட்டுரைப் படிப்பவர்கள் யாரேனும் வைத்திருந்தால் அனுப்பி உதவுங்கள். நிச்சயம் அது ஒரு வரலாற்று ஆவணமாகத் திகழும். 

இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தினால் (SLBC) 1963 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘வானொலி வெளியீடு’ (Radio Times) இதழின் இந்த அட்டைப்படம், இலங்கையின் ஒலிபரப்பு வரலாற்றில் ஒரு முக்கியமான காலத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அக்காலத்தில் வானொலி என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனமாக மட்டும் இல்லாமல், மக்களின் அன்றாட வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்த ஒரு அங்கமாகத் திகழ்ந்தது. 

இந்த இதழ் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தலைப்புகளைக் கொண்டு விளங்குவது, இலங்கையின் பன்முகத்தன்மையையும் அன்றைய அரசு ஊடகங்கள் கடைபிடித்த சமத்துவப் போக்கையும் பறைசாற்றுகிறது. குறிப்பாக, ‘வானொலி வெளியீடு’ என்ற தமிழ்ப் பெயர், தமிழ் பேசும் மக்களிடையே இந்த இதழ் கொண்டிருந்த செல்வாக்கையும், கலை மற்றும் இலக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் அது ஆற்றிய பங்கையும் தெளிவுபடுத்துகிறது.

இந்த இதழின் முகப்பில் உள்ள கருப்பு-வெள்ளை ஒளிப்படம், இலங்கை வானொலியின் வரலாற்றுப் புகழ்பெற்ற அறிவிப்பாளரான வேர்னன் கொரியா (Vernon Corea) முன்னிலையில் அமர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. 1960-களில் தெற்காசியாவின் மிகச்சிறந்த வானொலி ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்பட்ட அவர், ஒரு கன்சோல் சாதனம் முன்பாக அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பதை இந்தப் படம் காட்டுகிறது. அவரது தொழில்முறை ஈடுபாடும், ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பதில் அல்லது நேரலையில் வழங்கும்போதும் அவர் கடைபிடித்த நேர்த்தியும் அவரது உடல் மொழியில் பிரதிபலிக்கிறது. அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் அவரது செயல்பாட்டை உன்னிப்பாகக் கவனிப்பது, அக்கால வானொலி நிலையங்களில் நிலவிய ஒரு கூட்டுப்பணி கலாச்சாரத்தையும், வேர்னன் கொரியா போன்ற முன்னோடி அறிவிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.

வேர்னன் கொரியா இலங்கை வானொலியின் பொற்காலத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். ஆங்கில நேயர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த அவர், குறிப்பாக இசை மற்றும் நேர்காணல் நிகழ்ச்சிகளில் ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் அவர் ஒரு கன்சோலை இயக்கிக் கொண்டிருக்கும் காட்சி, ஒரு அறிவிப்பாளர் வெறும் குரல் கொடுப்பவராக மட்டும் இல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் எவ்வளவு ஆளுமை கொண்டிருந்தார் என்பதைப் பறைசாற்றுகிறது. 1963 ஆம் ஆண்டின் இந்த 'வானொலி வெளியீடு' அட்டைப்படம், வேர்னன் கொரியாவின் ஆரம்பகாலப் பணிகளையும், இலங்கை வானொலி ஒரு சர்வதேச ஒலிபரப்பு நிறுவனமாக வளர்ந்ததில் அவரது பங்களிப்பையும் நினைவுகூரும் ஒரு பொக்கிஷமாகத் திகழ்கிறது. வேர்னன் கொரியா இலங்கை வானொலியில் வழங்கிய புகழ்பெற்ற இசை நிகழ்ச்சிகளை இன்றும் மறக்க முடியாது. 

1963 செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 6 வரையிலான காலப்பகுதிக்கான நிகழ்ச்சிக் குறிப்புகளை உள்ளடக்கிய இந்த இதழ், வெறும் காகிதத் தொகுப்பாக இல்லாமல், ஒரு வரலாற்று ஆவணமாகவே கருதப்படுகிறது. மேலைநாட்டு உடைகளுடனும் சுதேச உடைகளுடனும் இருக்கும் நபர்கள், இலங்கையின் சமூக மாற்றத்தை ஒருங்கே பிரதிபலிக்கிறார்கள்.

இலங்கை வானொலியின் சின்னம் இடதுபுறம் பொறிக்கப்பட்டு, ‘ரேடியோ சிலோன்’ (Radio Ceylon) என்ற பெயருடன் காட்சியளிப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தெற்காசியாவிலேயே பழமையான மற்றும் செல்வாக்குமிக்க வானொலி நிலையமாகத் திகழ்ந்த இலங்கை வானொலி, இந்தியா போன்ற அண்டை நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘வானொலி வெளியீடு’ இதழின் மூலம் நேயர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடல்கள், நாடகங்கள் மற்றும் செய்திகளின் ஒலிபரப்பு நேரத்தைத் தெரிந்துகொண்டனர். இந்த இதழ்கள் அக்காலத்தில் வீடுகளின் வரவேற்பறையை அலங்கரித்ததோடு, வானொலிக்கும் நேயர்களுக்கும் இடையிலான ஒரு பாலமாகச் செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டைப்படத்தின் மேல் பகுதியில் உள்ள சிவப்பு நிற பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்கள், நவீன இதழியல் வடிவமைப்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் தெரிகிறது. அக்காலத்திலேயே இதழியல் துறையில் நிறத் தேர்வுகள் மற்றும் எழுத்துருக்களில் காட்டிய அக்கறை பாராட்டுதலுக்குரியது. இந்த இதழின் விலை 25 சதங்களாகக் குறிப்பிடப்பட்டிருப்பது, அன்றைய பொருளாதார நிலையையும் எளிய மக்களும் இந்த அறிவுக் கருவியை அணுகக்கூடிய வகையில் இருந்ததையும் காட்டுகிறது. தபால் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு செய்தித்தாளாக (Registered as a Newspaper) இது அங்கீகரிக்கப்பட்டிருந்தது, இதன் நம்பகத்தன்மையையும் சட்டப்பூர்வமான முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது.

இன்று நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பல மாற்றங்களைக் கண்டிருந்தாலும், இதுபோன்ற பழைய இதழ்கள் நமது வேர்களை நமக்கு உணர்த்துகின்றன. 1960-களில் வானொலி என்பது ஒரு மந்திரப் பெட்டியாகக் கருதப்பட்ட காலத்தில், அதன் பின்னணியில் உழைத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் முகங்களை இந்த ‘வானொலி வெளியீடு’ வெளிச்சமிட்டுக் காட்டியது. இது போன்ற வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பது, வருங்காலச் சந்ததியினருக்கு இலங்கையின் ஊடகப் பரிணாம வளர்ச்சி மற்றும் தமிழ் மொழி வானொலி சேவையின் மகத்துவத்தை எடுத்துச் சொல்ல உதவும். இந்த அட்டைப்படம் ஒரு காலத்தின் சாட்சியாகவும், இலங்கைத் தமிழர்களின் கலைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும் இன்றும் ஒளி வீசுகிறது.


Tuesday, December 23, 2025

இலங்கையின் இரனவிலவில் அமெரிக்க வானொலி

நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 18


இலங்கையின் மேற்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இரனவில பகுதியில் நிறுவப்பட்ட அமெரிக்க வானொலி (Voice of America - VOA) ஒலிபரப்பு நிலையமானது, ஆசிய பிராந்தியத்தில் சர்வதேச தகவல் தொடர்பாடல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பனிப்போர் காலத்திற்குப் பிந்தைய உலகளாவிய அரசியல் சூழலில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் கலாச்சார விழுமியங்களை தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் மூலோபாய மையமாக இது செயல்பட்டது. இந்த நிலையமானது சர்வதேச ஒலிபரப்பு வாரியத்தின் (IBB) நேரடி மேற்பார்வையில் இயங்கியதுடன், இலங்கையின் நீர்கொழும்பு பகுதியில் உள்ள தபால் பெட்டி இலக்கம் 14 என்ற முகவரியின் கீழ் தனது நிர்வாகச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தது.

இந்த நிலையத்தின் புவியியல் அமைவிடமானது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நிலவரைபடத்தில் G.C. 07N30 அட்சரேகையிலும் 079E48 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ள இந்த தளம், கடல் மட்டத்திலிருந்து சீரான உயரத்தில் அமைந்திருந்ததால் சிற்றலைகள் (Shortwave) எவ்வித தடையுமின்றி நீண்ட தூரம் பயணிக்க ஏதுவாக இருந்தது. இந்தியப் பெருங்கடலை ஒட்டிய இந்த அமைவிடம், வளிமண்டல அயனமண்டல அடுக்குகளின் ஊடாக அலைகளைப் பிரதிபலிக்கச் செய்து, ஆசியக் கண்டத்தின் உட்பகுதிகள் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு உயர்தரமான ஒலி சமிக்ஞைகளை அனுப்ப உதவியது.

தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பொறுத்தமட்டில், இரனவில நிலையம் அக்காலத்தில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஒலிபரப்புத் தளங்களில் ஒன்றாக விளங்கியது. இங்கு மொத்தம் ஏழு பாரிய ஒலிபரப்பிகள் (Transmitters) நிறுவப்பட்டிருந்தன. அவற்றில் மூன்று ஒலிபரப்பிகள் தலா 250 kW சக்தியுடனும், எஞ்சிய நான்கு ஒலிபரப்பிகள் தலா 500 kW எனும் அதீத சக்தியுடனும் இயங்கின. இந்த 500 kW ஒலிபரப்பிகளானது மிகவும் தொலைதூர நாடுகளுக்குக் கூடத் தெளிவான ஒலியை வழங்கும் திறன் கொண்டவை. இவற்றுடன் இணைக்கப்பட்ட பிரம்மாண்டமான 'திரைச்சீலை உணர்சட்ட' (Curtain Antenna) தொகுதிகள் மூலம், ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் செய்திகளை ஒலிபரப்ப முடிந்தது.

இந்த நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம் குறித்த தரவுகள் உலக வானொலி மற்றும் தொலைக்காட்சி கையேட்டில் (World Radio TV Handbook 2007) விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்காலக்கட்டத்தில் வானொலி நேயர்கள் மற்றும் ஆய்வாளர்கள் நிலைய நிர்வாகத்துடன் தொடர்புகொள்வதற்கு மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்தினர். குறிப்பாக, manager_srilanka@sri.ibb.gov என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் உலகெங்கிலும் உள்ள நேயர்கள் தங்களின் நிகழ்ச்சித் தர அறிக்கைகளையும் (Reception Reports) கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். இது நிலையத்திற்கும் நேயர்களுக்குமான நேரடித் தொடர்பை உறுதிப்படுத்தியதுடன், ஒலிபரப்பின் தரத்தை மேம்படுத்தவும் உதவியது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இரனவில VOA நிலையம் என்பது வெறும் தொழில்நுட்பக் கூடம் மட்டுமல்லாது, ஒரு பிராந்தியத்தின் தகவல் பரவல் போக்கை தீர்மானித்த சக்தியாகவும் இருந்தது. நவீன செயற்கைக்கோள் மற்றும் இணையத் தொழில்நுட்பங்களின் வருகைக்கு முன்னர், சிற்றலை வானொலி ஊடாக உலகையே இணைத்த இந்த நிலையம், இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இத்தகைய உயர்திறன் கொண்ட அலைபரப்பிகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட சர்வதேசத் தொடர்பாடல் பணிகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியின் அடையாளமாக இன்றும் நேயர்களால் போற்றப்படுகின்றன.


வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது மற்றும் டிசம்பர் 31, 2016 முதல் இரனவிலவில் தனது செயல்பாடுகளை நிறுத்தியது. இலங்கை ஒலிபரப்பு சேவைக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையே ஜனவரி 15, 1985 தேதியிட்ட ஒப்பந்தத்தின் விதிகளின்படி இரனவில பகுதியில் 672 ஏக்கர் மற்றும் மூன்று ரவுட் நிலம் அதற்கு வழங்கப்பட்டது.

பின்னர் டிசம்பர் 09, 1991 அன்று ஒப்பந்தம் திருத்தப்பட்டு நிலப்பரப்பு 408 ஏக்கராகக் குறைக்கப்பட்டது. இந்த நிலத்திற்கு குத்தகை அடிப்படையில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் மாதத்திற்கு ரூ.40,000 செலுத்தி, குத்தகையாக செலுத்தப்பட்ட தொகையை சற்று அதிகரித்தது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, கட்டணம் ரூ. 100,000 ஆக இருந்தது. 

http://www.adaderana.lk/ எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 2017 ஆம் ஆண்டின் செய்தியின் படி இரனவிலவில் 400 ஏக்கர்களுக்கும் அதிகமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்ததை நன்றியுடன் இலங்கை அரசாங்கத்திடம் திருப்பித் தருவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்தது.

புத்தளம், இரனவிலவில் உள்ள ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ வளாகத்தின் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முன்மொழிவை அமைச்சரவை  அங்கீகரித்ததாகவும், அந்த நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரனவில நிலையம் மூடப்படுவது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்ட கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், மாறிவரும் நேயர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சிற்றலை ஒலிபரப்பு நிலையங்களை இயக்குவதற்கான அதிகரித்து வரும் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இரனவில நிலையத்தை மூட ஒலிபரப்பு வாரிய ஆளுநர்கள் (BBG) முடிவு செய்ததாகக் கூறியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் இலங்கையுடனான அதன் வலுவான உறவையும் இருதரப்பு கூட்டாண்மையையும் அமெரிக்கா மதிப்பதாகக் கூறியுள்ளது. “சுயாதீன அமெரிக்க நிறுவனமான ஒலிபரப்பு வாரிய ஆளுநர்கள் (BBG) நிர்வகிக்கும் இரனவில சிற்றலை நிலையம், இந்தக் கூட்டாண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சிற்றலை நிலையம் வாஷிங்டனில் இருந்து சிற்றலை ரேடியோ சிக்னல்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நேயர்களுக்கு வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா நிகழ்ச்சிகளை அனுப்பியது, இது அவர்களுக்கு அமெரிக்கா பற்றிய செய்திகள், இசை மற்றும் சிறப்பு ஆர்வமுள்ள நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியது.

“பல ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்களின் ஆதரவு இல்லாமல், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, அமெரிக்காவின் நிலையை உலகிற்குச் சொல்லும் அதன் பணியில் வெற்றி பெற்றிருக்க முடியாது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

“இருப்பினும், காலப்போக்கில், சிற்றலை ஒலிபரப்புகளுக்கான நேயர்கள் குறைந்துள்ளனர். மக்கள் FM வானொலி, செயற்கைக்கோள் தொலைக்காட்சி, வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட, மொபைல் போன்கள் வழியாக வழங்கப்படும் பிற செய்திகள் மற்றும் தகவல் ஆதாரங்களை நோக்கி அதிகளவில் திரும்பியுள்ளனர்.”

“BBG, தங்களுக்கு விருப்பமான ஊடகங்களில் நேயர்களைச் சென்றடைய உறுதிபூண்டுள்ளது. மாறிவரும் நேயளர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் ஷார்ட்வேவ் டிரான்ஸ்மிஷன் நிலையங்களை இயக்குவதற்கான அதிகரித்து வரும் செலவுகளைக் கருத்தில் கொண்டு, BBG இரனவில நிலையத்தை மூட முடிவு செய்தது.”

"நிலையம் அமைந்துள்ள நிலம் இலங்கை அரசாங்கத்திடமிருந்து குத்தகைக்கு வாங்கப்பட்டது, மேலும் அது மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் செயல்பாட்டின் போது, ​​அமெரிக்க அரசாங்கம் இரனவில சொத்தை மேம்படுத்தியுள்ளது, சாலைகள் கட்டுதல், நிலத்தை சுத்தம் செய்தல் மற்றும் சமன் செய்தல், வடிகால் கால்வாய்கள், வேலிகள் மற்றும் நவீன அலுவலக கட்டிடங்களை கட்டுதல். அமெரிக்க அரசாங்கம் பொது பயன்பாடுகளுக்கான சேவை இணைப்புகளையும், 4.2 மெகாவாட் சுயமாக உருவாக்கப்பட்ட மின்சார நிலையத்தையும் நிறுவியுள்ளது. இந்த மேம்பாடுகள் அனைத்தும் சொத்தின் மதிப்பை கணிசமாக அதிகரித்துள்ளன.”


"அமெரிக்க அரசாங்கம் இரனவிலவில் உள்ள 400 ஏக்கருக்கும் அதிகமான சொத்தை குத்தகைக்கு எடுத்ததை நன்றியுடன் இலங்கை அரசாங்கத்திடம் திருப்பித் தருகிறது." "வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா உலகெங்கிலும் உள்ள 236.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாராந்திர நேயர்களுக்கு 47 மொழிகளில் நம்பகமான மற்றும் புறநிலை செய்திகள் மற்றும் தகவல்களை வழங்கியது. கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக, VOA பத்திரிகையாளர்கள் அமெரிக்க பிராந்தியம் மற்றும் உலக செய்திகள் மற்றும் தகவல்களை வழங்கியுள்ளனர்."