Saturday, March 21, 2026

போர்க்கால சூழலில் ஈரானிய வானொலி

1997இல் ஈரான் வானொலி எமக்கு நேரடியாக அனுப்பிய வண்ண அட்டை

இருளில் ஒளிவீசும் அலைவரிசைகள்: போர்க்கால சூழலில் ஈரானிய வானொலியின் முக்கியத்துவத்தை இந்தச் சூழலில் பதிவு செய்தே ஆகவேண்டும். நவீன உலகில் இணையமும் சமூக ஊடகங்களும் தகவல்களை உடனுக்குடன் வழங்கினாலும், போர் மற்றும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்படும் காலங்களில் இவை எளிதில் முடக்கப்படலாம். ஈரானில் தற்போது நிலவி வரும் பதற்றமான மற்றும் போர் மேகங்கள் சூழ்ந்த சூழலில், அந்நாட்டு மக்களுக்கு வெளியுலகத் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக 'ரேடியோ ஈரான் இன்டர்நேஷனல்' (Radio Iran International) உருவெடுத்துள்ளது.

ஈரான் போன்ற நாடுகளில் இணையம் முடக்கப்படும்போது அல்லது கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப்படும்போது, செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள்கூட ஜாமிங் (Jamming) தொழில்நுட்பத்தால் முடக்கப்படலாம். ஆனால், சிற்றலை (Shortwave) வானொலி அலைகளைத் தடுப்பது கடினம். 'ஈரான் இன்டர்நேஷனல்' போன்ற வானொலிகள் பாரசீக மொழியில் (Persian) துல்லியமான செய்திகளை வழங்குவதன் மூலம், தணிக்கையற்ற உண்மையான நிலவரங்களை மக்கள் தெரிந்துகொள்ள உதவுகின்றன.

போர்க்காலங்களில் வதந்திகள் வேகமாகப் பரவும். எப்போது தாக்குதல் நடக்கும், எங்கு பாதுகாப்பு தேடுவது போன்ற முக்கியமான தகவல்களை அதிகாரப்பூர்வ வானொலி அலைவரிசைகள் மூலம் மக்கள் பெற முடியும். இணையத்தைப் பயன்படுத்தும்போது ஒருவரின் இருப்பிடத்தைக் கண்டறியும் அபாயம் உண்டு, ஆனால் வானொலியைக் கேட்பவர்களைக் கண்டறிவது கடினம் என்பதால், இது மக்களுக்குப் பாதுகாப்பான ஒரு ஊடகமாகத் திகழ்கிறது.


 பகிர்ந்துள்ள அட்டவணையின்படி, இந்த வானொலி அலைவரிசைகள் சோபியாவில் (பல்கேரியா) உள்ள கொஸ்டின்ப்ரோட் (Kostinbrod) ஒலிபரப்பு நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்படுகின்றன. இதன் அலைவரிசை விவரங்கள் புகைப்படத்தில்.

இந்த அலைவரிசைகள் வாரத்தின் ஏழு நாட்களும் இடைவிடாமல் இயங்குகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களுக்கேற்ப அதிர்வெண்கள் மாற்றப்படுவது, தடையற்ற ஒலிபரப்பை உறுதி செய்கிறது ஈரான் வானொலி.

மின்சாரம் இல்லாத சூழலிலும் பேட்டரி மூலம் இயங்கும் சிறிய வானொலிப் பெட்டிகள் போதும். போரின் நடுவே தனிமையில் இருக்கும் மக்களுக்கு, வானொலியில் ஒலிக்கும் மனிதக் குரல்கள் ஒருவித மன வலிமையையும், தாங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்ற நம்பிக்கையையும் தருகின்றன.

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், ஒரு நாட்டின் நெருக்கடி நிலையில் வானொலி என்பது வெறும் பொழுதுபோக்குக் கருவி மட்டுமல்ல; அது மக்களின் அடிப்படை உரிமையான 'தகவல் அறியும் உரிமை'யைப் பாதுகாக்கும் ஒரு கேடயமாகும் என்பதற்கு மீண்டும் ஒரு சான்றாக இந்த சிற்றலை வானொலி அமைந்துள்ளது. ஆனால் நமது ஆகாஸ்வாணி தமிழில் தனது அனைத்து சிற்றலை ஒலிபரப்புகளையும் நிறுத்திவிட்டது. இது போன்ற ஒரு பேரிடர் வந்தால், நம் மக்களைச் சென்றடைய ஒரு சிற்றலை வானொலி கூட தமிழகத்தில் இல்லை!


ஊட்டி சமுதாய வானொலிக் கருத்தரங்கு

சென்னையில் சுட்டெரிக்கும் வெயில் தொடங்கிய வேலையில் நாங்கள் ஊட்டியில் சமுதாய வானொலித் தொடர்பான கருத்தரங்கில்...


ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தி வரும் வேகமான மாற்றங்களுக்கு மத்தியில், உதகமண்டலத்தில் (ஊட்டி) உள்ள விநாயகா இன் பாப்பீஸ் ஹோட்டலில் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் “செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சமுதாய வானொலி” என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் ஏர்மீடியா ஏற்பாட்டில் நடைபெற்றது. சமுதாய வானொலிகளின் வளர்ச்சி, சமூக பங்களிப்பு மற்றும் வானொலி ஒலிபரப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கொண்டு வரும் புதிய மாற்றங்கள் குறித்து விவாதிப்பதே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக அமைந்தது. மேலும், சமுதாய வானொலி நிலையங்களை தொடங்க ஆர்வம் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடக ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்நிகழ்வு ஏர்மீடியாவால்  ஒருங்கிணைக்கப்பட்டது



இந்தக் கருத்தரங்கில், யாம்  எழுதிய “சமுதாய வானொலிக் கையேடு” (Community Radio Handbook) என்ற புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஏர்மீடியா பிராட்காஸ்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Airmedia Broadcast Solutions Private Limited) நிறுவனத்தால் பதிப்பிகப்பட்டுள்ள இப்புத்தகம், புதிய வானொலி நிலையங்களைத் தொடங்க விரும்புபவர்களுக்கும், ஏற்கனவே இயங்கி வருபவர்களுக்கும் ஒரு முக்கிய வழிகாட்டியாக அமையும். இதில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் சமுதாய வானொலி நிலையங்கள் குறித்த தொகுக்கப்பட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன.



நிகழ்வில் எளிமையான ஒரு  உரையை ஆற்றினேன். அதில், இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள 'ரெஸ்ட்ரிக்டட் சர்வீஸ் லைசென்ஸ்' (Restricted Service License - RSL) முறையைப் போன்ற ஒரு அமைப்பை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். இத்திட்டத்தின் கீழ், “பொங்கல் எஃப்.எம்” அல்லது “ரம்ஜான் எஃப்.எம்” போன்ற சிறப்புச் சேவைகளுக்காக ஒரு மாதம் போன்ற குறுகிய காலத்திற்கு உரிமங்களை வழங்கலாம் என்றும், இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் வானொலி ஒலிபரப்பின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் என்றும் விளக்கினேன்.



 கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் திரு. பி. விஜயகுமார் பேசுகையில், சமுதாய வானொலி நிலையங்களை நிறுவுவதற்கு மத்திய அரசு தற்போது 12.5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குவதைக் குறிப்பிட்டார். இந்த மானியத்தைப் பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் எளிதான முறையில் வானொலி நிலையத்தைத் தொடங்குவது குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். மேலும், ரத்தினம் கல்லூரி (ரத்தினவாணி எஃப்.எம்) மற்றும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் (கலசலிங்கம் எஃப்.எம்) ஆகியவற்றின் பிரதிநிதிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், ஏர்மீடியா நிறுவனம் வழங்கி வரும் தொழில்நுட்ப ஆதரவு குறித்தும் விளக்கினர்.

இரண்டாம் நாள் அமர்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 24 மணிநேர தானியங்கி ஒலிபரப்பு மற்றும் உள்ளடக்கத் தயாரிப்பை மேம்படுத்துவது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதில் குறிப்பாக டி.ஜி.வைணவக் கல்லூரியின் இதழியல் துறைத் தலைவர் முனைவர்.பிரஹதி விரிவானதொரு உரையைக் காட்சிகளுடன் வழங்கினார். மேலும், வரும் டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச ஊடக மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் ராமகிருஷ்ணா கல்லூரியைச் சேர்ந்த முனைவர் சி. பிரவீன்குமார் மற்றும் சென்னை டி.ஜி. வைணவக் கல்லூரி இதழியல் துறை பேராசிரியர் முனைவர் அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஊடக வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைத்த இந்த மாநாடு, சமுதாய வானொலிகளின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கியத் தளமாக அமைந்தது.