Wednesday, August 31, 2011

ஒலி அலைகளைத் தேடி...

அகில இந்திய வானொலி - விசாகபட்டிணம்



வானொலி நிலையங்களை நேரடியாக சென்று பார்ப்பது என்பதில் ஒரு அலாதியான பிரியம் இருக்கத்தான் செய்கிறது. வானொலி கேட்கின்ற நேயர்கள் அத்தனை பேருக்கும் வானொலி நிலையங்களை நேரடியாக தனது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. ஆனால் அந்த ஆர்வம் அனைத்து நேயர்களுக்கும் கைக்கூடுவது இல்லை. என்னுடைய நண்பர்களில் பலர் வெளிநாட்டு வானொலி நிலையங்களை யெல்லாம் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் நேரடியாக சென்று பார்த்தும் வந்துள்ளனர். எனக்கும் அது போன்ற ஆர்வம் உண்டு, அதுவே இங்கு ஒலி அலைகளைத் தேடியதாக அவ்வப்போது இங்கு பதிவு செய்யப்படுகிறது.

இந்த முறை நாம் பயணப்பட போவது ஆந்திர மாநிலத்திற்கு. சமீபத்தில் நான் அலுவல் நிமித்தமாக விசாகப்பட்டிணத்திற்கு சென்று வந்தேன். இம்முறை ஒரே ஊரில் இரண்டு நிலையங்களை காண்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதலில் நான் சென்று பார்த்தது அகில இந்திய வானொலி நிலையத்தினை. சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தினை
போன்றே இதுவும் வங்கக் கடலின் அருகிலேயே அமைந்துள்ளது.

நான் இரண்டு நாட்கள் மட்டுமே அங்கு தங்குவதாக இருந்தபடியால் முதல் நாளில் எனது அலுவல்களை முடித்துக் கொண்டேன். இரண்டாம் முழுவதும் வானொலி நிலையங்களை மட்டும் பார்க்க ஒதுக்கிக் கொண்டேன்.

எனது ரயில் பணத்தின் போதே பொதுவாக எந்த ஊர்களுக்குச் சென்றாலும் ஏதேனும் பெரிய டவர் தெரிகிறதா எனப் பார்ப்பது வழக்கம். காரணம் அது போன்ற பெரிய டவர்கள் மூலமே பண்பலை மற்றும் சிற்றலை வானொலிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இங்கு இன்னும் ஒன்றையும் குறிப்பாகச் சொல்ல வேண்டும். மத்திய அலை மற்றும் சிற்றலை ஒ−பரப்பு
கோபுரங்கள் நகரின் வெளியிலேயே நிர்மானிக்கப்படுகின்றன. ஆனால் பண்பலை கோபுரங்கள் மட்டும் நகரின் உள்ளேயே நிர்மானிக்கப்படுகிறது.

இதற்கான காரணத்தினை சொல்லித்தெரிய வேண்டியது இல்லை. ஆம் பண்பலையானது குறைந்த தூரத்திற்கு மட்டுமே செல்வதால் அதனை நகரின் மையப்பகுதியில் அமைக்கின்றனர். ஆனால் சென்னையில் பண்பலை ஒலிபரப்பியானது மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.

சென்னையைப் பொருத்தமட்டில் அது தொலைக்காட்சி நிலைய டவரில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே மிக உயர்ந்த டவர் அதுதான் என நிலையத்தில் உள்ளவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனவே தான் பண்பலை வானொலிகளைத் தொடங்கும் போது இதே டவர்களை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் சமீப காலமாக அந்தத் டவரில் எந்த ஒரு பண்பலை வானொலிகளுக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. காரணம் ஏறக்குறை அதில் பத்துக்கும் மேற்பட்ட பண்பலைவரிசைகள் தற்பொழுது ஒலிபரப்பாகி வருகிறது. இந்த டவரில் இருந்து செய்யப்படும் ஒலிபரப்பானது செங்குத்து வகை ஆன்டனாவில் செய்யப்படுவதால் நகர் பகுதி மட்டுமல்லாமல் கடல் பகுதிக்கும் செல்கிறது.


இதனால் ஒலி அலைகளானது வீணாக்கப்படுகிறது என்று ஒரு கூற்று கூட ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆனால் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது நகரை நோக்கிய ஆண்டனாக்களே பொருத்தப்பட்டுள்ளதை கீழே இருந்து பார்ப்பவர்கள் காணலாம்.

சென்னை சங்கதியை பிரிதொரு சமயத்தில் காணலாம். விசாகபட்டிணத்தில் நுழையும் போது அப்படி ஏதேனும் சென்னை டவரைப்போன்று தெரிகிறதா என உற்றுநோக்கினேன். எனக்கு கண்ணில் பட்டதொல்லாம் விசகபட்டிணத்தின் துறைமுகத்தில் உள்ள டவர்களும் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள டவர்களும்தான். இனிமேல் சென்னை செல்பவர்கள்
ஆவடி வழியாக சென்றால் கண்டிப்பாக உங்கள் பார்வையை ஒரு சுற்று சுற்றுங்கள் காரணம், ஆவடியில் தான் 100 கிலோ வாட் சக்தி கொண்ட சிற்றலை ஒலிபரப்பியானது 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

விசாகப்பட்டிணத்தில் சிற்றலை வானொலி நிலையம் இல்லை. ஆனாலும் இதுவும் ஒரு பழமையான நிலையம் எனலாம். 927 MW 100 kw விசாகபட்டிணத்தில் உள்ள அகில இந்திய வானொலியின் முகவரி:

Station Director,
All India Radio,
Sripuram,
Vishakapatnam – 530 003,
Andra Pradesh.



விசாகபட்டிணத்தில் இயங்கி வரும் தினியார் பண்பலை வானொலிகள்

Radio City 91.1 (www.radiocity.in)
Big FM 92.7 (www.big927fm.com)
Red FM 93.5 (www.sunnetwork.org/redfm/index.htm)
Radio Mirchi 98.3 (www.radiomirchi.com)

ஞானவாணி அகில இந்திய வானொலியில் கோபுரத்தில் இருந்து ஞானவாணியின் ஒலிபரப்பு செய்யப்பட்டாலும் கலையகமானது வேறுஒரு இடத்தில் அமைந்துள்ளது. அதனைத் தேடி நமது அடுத்த பயணம் அமைந்தது. விசாபட்டிணத்தில் தொடங்கப்பட்ட ஞானவாணிக்கு ஒரு சிறப்பு உள்ளது. இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட நான்கு நிலையங்களுள் இதுவும் ஒன்றாகும்.



ஞானவாணி நேரடி ஒலிபரப்பு கலையகம், விசாகப்பட்டிணம்


ஆந்திர பல்கலைக்கழக்தின் வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த வானொலி நிலையமானது முதல் தளத்தினில் அமைந்துள்ளது. நியைத்தில் உள்ளகலையகத்தினையும் ஒலிப்பதிவு கூடத்தினையும் பார்க்கும் பொழுது, அகில இந்திய வானொலிக்குள் தான் இருக்கிறோம் என்ற எண்ணத்தினை ஏற்படுத்துகிறது. காரணம் தொடக்கக்கால ஞானவாணி நிலையங்களை
அமைப்பதில் அகில இந்திய வானொலியின் தொழில்நுட்பப்பிரிவினர் பங்கேற்றனர்.

நிலையத்தினில் ஒரே ஒரு முழுநேரப்பணியாளர் மட்டும் உள்ளார். அவரும் அகில இந்திய வானொ−யில் இருந்து ஓய்வுப் பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் அனைவரும் பகுதிநேர அறிவிப்பாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 150க்கும் அதிகமான ஞானவாணி நிலையங்கள் உள்ளன. இதில் எதுவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு எந்த ஆய்வுகளும் இல்லை. 350 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தினால் யார் பயனடைந்து வருகின்றனர் என்பது இங்கு கேள்விக்குறியாகி வருகிறது.

விசாகபட்டிணம் ஞானவாணி நிலையமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அங்குள்ள நிலையத்தினை கண்ட பொழுது ஒரு எண்ணம் தலைப்பட்டது. காரணம் இந்த அளவு வசதிகள் கொண்ட சமுதாய வானொலிகள் செயல்பட்டுவரும் விதம் ஆச்சரியம் அளிக்கிறது. ரேடியோ நேதர்லாந்தின் குறுந்தகடுகள் ஒரு புறமும் ஜெர்மன் வானொலியின் குறுந்தகடுகள் ஒருபுறமும்
வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. சொந்த நிகழ்ச்சிகள் சமீபகாலமாக அவ்வளவாகத் தாயரிக்கப்படுவதில்லையாம். இதனால் தொடர்ந்து ஒலிபரப்பான நிகழ்ச்சிகளையே மறுஒலிபரப்பு செய்து வருகின்றனர்.

ஞானவாணி நிலையத்தில் பல்வேறு வசதிகள் இருந்தும் ஏன் அதனை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என்று அங்குள்ள பொருப்பாளரிடம் கேட்ட போது, அதற்கு அவர் கூறிய பதில் ஒன்றும் வியப்பினை தரவில்லை. உள்ளூர் மொழியில் நீங்கள் எந்த நிகழ்ச்சியையும் ஒலிபரப்பாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பினால் நேயர்கள் சோர்ந்து விடுகின்றனர். எந்த ஒரு வானொலி நிகழ்ச்சியும் நேயர்களை எளிதாக சென்று சேர வேண்டும். ஆனால் அது ஞானவாணியில் இல்லை. இதைச்செய்யாமல் என்ன செய்தாலும் நேயர்கள் இந்த வானொலியைக் கேட்பது கானல் நீர் தான்.

ஞானவாணியைத் தொடர்பு கொள்ள:
Station Manager,
Gyanvani FM 106.4,
School of Distance Education (SDE),
Andhra University,
Visakhapatnam,
Andhra Pradesh – 530003.

நமது பயணத்தில் இரண்டு முக்கிய வானொலிகளை இந்த மாதம் கண்டோம். அடுத்த மாதத்தினில் வேறு ஒரு வானொலி நிலையத்திற்கு ஒலி அலைகளைத் தேடி நமது பயணத்தினைத் தொடர்வோம்.

No comments: