Thursday, January 25, 2024

மறைந்தார் NCG

நம் வாழ்வில் ஒரு சில மனிதர்களை நாம் மறக்க முடியாது. அப்படியானவர்களில் ஒருவர் தான் மறைந்த N.C.ஞானபிரகாசம்  (NCG) ஐயா அவர்கள். என் வானொலி பயணத்தில் மிக முக்கியமானவர், என்றால் அது மிகையில்லை.


 

அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தோடு எட்டு வருடங்கள் பயணிக்க உதவியவர். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் துறையில் படிக்கும் போது பகுதி நேரமாக பணியாற்ற வாய்ப்பு கொடுத்து, படிப்பிற்கும் உதவியவர். 

வெளிநாட்டு ஆங்கில வானொலிகளில் மட்டுமே ஒலித்து வந்த DX PROGRAM, போன்று தமிழில் ஒன்று தொடங்க நினைத்த போது, முதலில் நினைவுக்கு வந்தவர் திரு. NCG அவர்கள் மட்டுமே. அகில இந்திய வானொலியின் வெளிநாட்டுச் சேவையான திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தில் அப்பொழுது அவர் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்தார்.

"வானொலி உலகம்" எனும் நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்து வழங்க வேண்டும் என்று கூறினேன். எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாக அனுமதி கொடுத்தார். 54 வாரங்கள் ஒலித்த அந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள். காரணம், அந்த நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு கடிதம் மற்றும் Reception Report அனுப்பும் நேயர்களுக்கு World Smallest QSL Cardனை அனுப்பினோம். 

ஒரு சில வெளிநாட்டு நேயர்கள் அவர்கள் எழுதும் கடிதங்களோடு அமெரிக்க டாலர்களையும் வைத்து அனுப்புவர். அது வான் அஞ்சலுக்காக அஞ்சல் தலை வாங்குவதற்கு எனக் குறிப்பிட்டு அனுப்புவர். அன்று அவர் கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது, "என்னப்பா, ஒரு வானொலி நிகழ்ச்சிக்கு டாலர் எல்லாம் அனுப்பி வைக்குறாங்க, எனக்கு தெரிஞ்சு தமிழில் ஒரு நிகழ்ச்சிக்கு இப்படி நேயர்கள் உலகம் முழுக்க இருந்து காசு அனுப்பியது இந்த நிகழ்ச்சிக்கா தான் இருக்கும்" என்றார்! 

பிற்பாடு அந்த நிகழ்ச்சி புத்தகமாக NCBHல் "உலக வானொலிகள்" என்ற தலைப்பில் வெளிவந்த போதும் முதல் மனிதராக வந்து வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

"வானொலி உலகம்" நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு ஒரு நேயர் பத்து பக்கங்களுக்குப் பாராட்டி ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தைப் படித்த அன்றைய இயக்குநர், திரு.ஸ்ரீநிவாசராகவன், "அப்படியென்ன அந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்புகிறீர்கள்" என்று NCGயிடம் கேட்டுள்ளார். 

உடனடியாக என்னை அழைத்து, உடனே புறப்பட்டு வாருங்கள். உங்கள் நிகழ்ச்சிக்கு யாரோ பத்து பக்க கடிதத்தை இயக்குநருக்கு எழுதிவிட்டார்களாம் என்று கூறியதும், பயந்தே போனேன்.

நேரில் சென்றவுடன், பயப்பட வேண்டாம், கடித விபரத்தைக்  கூறியதோடு, அந்த கடிதத்தினையும் காண்பித்தார். அந்த கடிதத்தை எழுதியவர் திரு.பாலசுப்பிரமணியம். மூத்த Dxer, பிற்பாடு நெருங்கிய நண்பராக இன்று வரை எனது நட்பு வட்டத்தில் தொடர்கிறார். 

இப்படி பலரின் நட்பும் கிடைக்கக் காரணமானவர். பத்திரிகையில் நான் எழுதிய ஏதேனும் ஒரு கட்டுரை வெளிவந்தால், முதல் அழைப்பு இவரிடம் இருந்து தான் வரும். ஒரு கட்டத்தில் காலை அழைப்பு வந்தாலே, ஓ, பத்திரிகையில் நாம் எழுதியது ஏதோ வெளிவந்துவிட்டது என்று நினைக்கும் அளவிற்கு எம் மீது பாசமும் அன்பும் வைத்தவர்.

அவருடன் இணைந்து FM RAINBOWல் பணியாற்றிய "சினிமா நேரம்" நிகழ்ச்சியாகட்டும், "நெஞ்சம் மறப்பதில்லை" நிகழ்ச்சியாகட்டும், இரண்டையும் இன்று எழுத்தாக்கினால், பல தொகுப்புகளாக வெளியிடலாம் சினிமா துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் அதில் ஆவணப்படுத்தினோம். இன்று ஒரு நிகழ்ச்சி கூட ஆவண காப்பகத்தில் இல்லை என்பது மிக வருத்தமான ஒரு செய்தி. காரணம் அன்று அனைத்து ஒலிப்பதிவுகளும் Spool Tapeல் செய்யப்பட்டது.

ஒரு முறை தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தோம். சிம்ரன் சிறப்பு விருந்தினர். நான் ஒலிப்பதிவு பொறுப்பிலிருந்தேன். ஸ்பூல் டேப் போதவில்லை. அவசரத்தில் ஒலிப்பதிவு செய்த முதல் டேப்பை அழித்துவிட்டேன். நிகழ்ச்சி முடிந்து சிம்ரனும் சென்றுவிட்டார். பிறகு திரும்பப் போட்டுப்பார்த்த போதுதான் தெரிந்தது, முதல் டேப் அழிந்துவிட்டது என்று. கொஞ்சமும் பதட்டமில்லாமல், சிம்ரனை மீண்டும் அழைத்து ஒலிப்பதிவு செய்தோம். இதில் அவர் நம்மைக் கடிந்துகொள்ளாமலேயே, ஒரு பாடத்தினை கற்றுக்கொடுத்ததை இன்றும் மறக்க முடியாது.

இப்படி இன்னும் ஏராளமான நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது. அனைத்தையும் இங்கு எழுத இயலாது. காரணம் எனது வாழ்வில் தொடர்ந்து பயணித்த ஒரு வழிகாட்டி. இனி யார் அழைத்துச் சொல்வார்கள், உனது கட்டுரை இதில் வெளிவந்துள்ளது என்று!

தான் எந்த ஒரு பணியைத் தொடங்கினாலும், சிறியவன் என்றும் பாராமல் அது பற்றி ஒரு கருத்தினைக் கேட்பார். அவரது இந்த செயல் நம்மையும் கற்றுக்கொள்ளச் சொல்லும். 

பைப்பாஸ் அறுவை சிகிச்சைக்குப்பின் சேலம் கோகுலம் மருத்துவமனையில்    பின் ஓய்விலிருந்தார். வியாழன் 25-1-24, அதிகாலை 12.30க்கு நம்மைவிட்டுப் பிரிந்தார். இன்று இரவு அன்னாரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நாளை மாலை மூன்று மணி வரை லாயிட்ஸ் காலனியில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது.

அவரது இழப்பு எமக்கே ஈடுசெய்ய முடியாத ஒன்று. இந்த சமயத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எப்படி வருத்தத்தினை தெரிவிக்க! ரேவதி மேடம், தோழர் கற்பகம், சபரி மற்றும் திரு.ராஜாமணி சாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, January 16, 2024

புத்தக அறிமுகம்: வானொலி ஒலிபரப்பும் உத்திகளும்

 


இந்த சென்னைப் புத்தகக் காட்சிக்கு வானொலித் தொடர்பாக என்ன புத்தகம் வாங்களாம்  என்று கேட்பவர்களுக்கு நான் பரிந்துறைக்கும் புத்தகம் நடா இராஜ்குமார் எழுதிய "வானொலி ஒலிபரப்பும், உத்திகளும்".

கனடாவின் புகழ்பெற்ற தமிழ் வானொலியான East FM 102.7ன் தலைவரும் கனடா தமிழ் ஊடகத்துறையின் முன்னோடியுமான நடா இராஜ்குமாரின் மிக முக்கிய படைப்பு இது.

இந்த புத்தகத்தில் வானொலி வரலாறு, தமிழ் வானொலியின்  தொடக்கம், வானொலிக் கலை, அடிப்படை தகுதிகள், தொழில் நுட்பங்கள், தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பு, செய்தி தயாரிப்பு போன்ற அடிப்படை தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாது இந்த துறையில் வருபவர்களுக்காக உரை எழுதுதல், பேட்டி காணுதல், கலையகம், வானொலி நெறிமுறைகள், சவால்கள் மற்றும் உத்திகள், தற்போதைய தொழில்நுட்பம், நிலையத்தின் நிலைத்தன்மை, வானொலியின் எதிர்காலம் போன்ற தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்.

"வானொலியில் தமிழ் ஆட்சி, வானமெங்கும் நமது ஆட்சி" என்ற முத்திரை சொற்றொடருடன் தொடங்கும் இந்த புத்தகம், வானொலித் தொடர்பாக இந்த வருடம் வெளிவந்துள்ள முக்கிய புத்தகமாகும்.

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
East FM 102.7
151, Nashdene Road
Unit 17,18 Scarborough
Ontario M1V2T3
Canada


Sunday, January 14, 2024

சென்னைப் புத்தகக் காட்சியில் உலக வானொலிகள்

 

நண்பர்களும் வானொலி ஆர்வலர்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்,
எதை?

உங்களது புத்தகங்கள் புத்தகக் காட்சியில் எந்த அரங்கில் கிடைக்கும்?

இந்த ஆண்டு எனது புத்தகங்களில் "உலக வானொலிகள்" புத்தகம் மட்டுமே நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [NCBH (அரங்கு எண் F49)] அரங்கில் கிடைக்கும்.


இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து வானொலிகளும் பண்பலை, சிற்றலை மற்றும் மத்திய அலை ஒலிபரப்புகள் மட்டுமல்லாது, பாட்காஸ்டிலும் ஒலிபரப்பத் தொடங்கிவிட்டன. இந்த நூலில் அந்த வானொலிகளின் இணைய முகரிகளோடு விரிவாகத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சர்வதேச ஊடகங்களை, குறிப்பாக வானொலிகளை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டவர்களுக்கு நிச்சயம் பயனுள்ள புத்தகமாக இது இருக்கும்.

மற்ற புத்தகங்கள் அனைத்தும் அமேசானில் கிடைக்கும். 



Saturday, January 13, 2024

சென்னைப் பல்கலைகழகத்தில் கனடா EAST FM தலைவர் நடா இராஜ்குமார்

 













சென்னைப் பல்கலைக்கழக இதழியல், தொடர்பியல் துறையில் கடந்த 10 ஜனவரி 2024ல் ஒரு முக்கிய கருத்தரங்கினை நடத்தினோம்.

"சர்வதேச கண்ணோட்டத்தில் தமிழ் வானொலிகள்" என்ற தலைப்பினில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கனடாவின் புகழ்பெற்ற வானொலியான EAST FMன் தலைவர் திரு.நடா இராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும்  தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வழங்கினார்கள்.

குறிப்பாக கனடாவில் பணியாற்ற தேவையான தகுதி, என்ன மாதிரியான வேலை வாய்ப்பு உள்ளது, அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் போன்றவற்றை சுவைப் பட தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, குரல் வளம் மிக்க மாணவர்களுக்கு தனது வானொலியில் வாய்ப்பினைத் தருவதாக வாக்குறுதி அளித்தார். இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்தது.

இந்த நிகழ்வை சாத்தியமாக்கியவர் Siva Parameswaran . இந்த சமயத்தில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

எம்மோடு இணைந்து ஆய்வு மாணவர்கள் தீப்தி சுரேஷ் மற்றும் மெளலி பிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்!


Friday, January 12, 2024

அசாத் ஹிந்த் வானொலியில் தமிழ்

 



BOSE: An Untold Story of an Inconvenient Nationalist எனும் புத்தகத்தினை இன்று புத்தகக் காட்சியில் பார்த்தவுடன் வாரி அனைத்துக் கொள்ளத் தோன்றியது. என்ன ஒரு செய்நேர்த்தி, வடிவமைப்பு. அழகான கட்டுமானம்.

சுபாஷ் சந்திர போஸ் புத்தகங்களில் எதைப் பார்த்தாலும், உடனே அதில்  Azad Hind Radio பற்றி என்ன எழுதியுள்ளார்கள் என்று ஆர்வத்துடன் தேட தொடங்கிவிடுவேன். அதே தான் இன்றும் நடந்தது, உடன் வந்த அன்பு மாணவர் விஷ்வா ஒவ்வொரு பக்கத்தினையும் கண்கள் விரிய பார்த்த என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்.

F18 Penguin அரங்கில் தான் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. 740 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ₹ 999. (10% கழிவு தனி) இந்த நூல் எனக்குப் பிடித்தமைக்குக் காரணம், அவ்வளவு மேற்கோள்கள் மற்றும் துணை தரவுகளை ஆசிரியர் கொடுத்துள்ளது தான். குறிப்பாக துணை நூற்பட்டியல் மலைக்க வைக்கிறது.

"நான் சுபாஷ் சந்திர போஸ் அசாத் ஹிந்த் ரேடியோ ஊடாகப் பேசுகிறேன், நான் இங்கு இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்" என்று தனது கம்பீரக் குரலில் "மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று பேசியதை, வரிகள் மாறாமல் அப்படியே இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் சந்திரஷுர் கோஸ்.

பத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அசாத் ஹிந்த் வானொலித் தொடர்பானத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். இதில் சுவாரஷ்யமானத் தகவல் என்னவெனில், இந்த வானொலி தமிழ் மொழியிலும் சிற்றலையில் (Shortwave) ஒலிபரப்பியது என்பது அனைவருக்கும் ஆச்சர்யம் ஊட்டும் செய்தி.



Thursday, January 11, 2024

இந்து இயர் புக்-2024ல் வானொலிக் கட்டுரை

 



நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். இந்த வருட இந்து தமிழ் திசை வெளியிட்டுள்ள "இயர் புக் 2024"-ல் வானொலித் தொடர்பான ஒரு கட்டுரையை எழுதியுள்ளேன்.

"புதியத் தொழில்நுட்பத்துடன் இன்றைய வானொலி ஒலிபரப்பு" எனும் தலைப்பிலான நீண்ட கட்டுரை இந்த வருட இயர் புக்கில் வெளிவந்துள்ளது. கட்டுரையை வெளியிட ஊக்குவித்த திரு.ஆதி வள்ளியப்பன் அவர்களுக்கும், தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி.

தரமானத் தாளில், அதிகப் பக்கங்களுடன், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, முக்கியக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ள இந்த இயர் புக், ஒவ்வொரு ஊடக படிப்பினைப் படித்துவரும் மாணவர்களின் கையிலும் இருக்க வேண்டிய ஒரு முக்கிய புத்தகமாகும்.

800 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ₹ 275. புத்தகக் காட்சியில் 10% கழிவில் கிடைக்கிறது.

கொசுறுத் தகவல்:

ஒவ்வொரு வருடமும் இயர் புக்குகளில் புதுமையாக ஏதேனும் இணைத்துள்ளார்களா? என்று தொடர்ந்து பார்த்து வருவேன். அதுவும் குறிப்பாக ஊடகங்களுக்கு என்று ஏதேனும் இடம் கொடுக்கப்பட்டுள்ளதா என்று.

ஒரு காலத்தில் மனோரமா இயர் புக்குகளில் உலக நாடுகளின் தூதரகங்கள் இந்தியாவில் எந்த இடங்களில் அமைந்துள்ளது போன்ற விபரங்களை முகவரிகளுடன் கொடுப்பார்கள். இதற்கும் ஊடகத்திற்கும் என்னத் தொடர்பு எனக் கேட்பவர்கள், கொஞ்சம் பொறுமை காக்கவும்.

ஆங்கில இயர் புக்குகளில் இன்னும் ஒரு படி மேலேச் சென்று வெளிநாடுகளில் இந்தியாவின் தூதரகங்கள் அமைந்துள்ள முகவரிகளையும், மின் அஞ்சல் முகவரியுடன் கொடுப்பார்கள். ஆனால், சமீப காலமாக எந்த இயர் புக்குகளிலும் இந்த தூதரக முகவரிகள் இடம்பெறுவதில்லை.

இந்த முகவரிகளைக் கொண்டுதான் ஒரு காலத்தில் அனைத்து நாடுகளின் வானொலிகளையும் தொடர்பு கொண்டோம். பெரும்பாலான தூதரகங்கள் புது தில்லியில் உள்ள சாணக்கியபுரியில் தான் அமைந்துள்ளன, என்பதே இயர் புக் மூலமாகத்தான் தெரிய வந்தது. பிற்காலத்தில் அந்த தூதரகங்களுக்கு நேரடியாகச் சென்றது வேறு கதை.

உலக வானொலிகளை எப்படித் தொடர்பு கொண்டோம் என்பதே இங்கு சுவாரஷ்யம் தரக்கூடியது. உதாரணமாக நெதர்லாந்து நாட்டின் Radio Nederland-ஐ தொடர்பு கொள்ள, முதலில் அந்த நாட்டின் தூதரக முகவரியை கண்டுபிடிப்போம். அதன் பின் அந்த முகவரிக்கு முன்

English Section,
Radio Nederland,
என்று எழுதி, அதன் பின்
C/o Embassy of Nederland,
6/50 F, Shantipath,
Chanakyapuri,
New Delhi - 110021
என்று அஞ்சல் அட்டையிலேயே எழுதி அனுப்புவோம். ஒரு மாதத்தில் அந்த வானொலிக்கு தூதரகம் அனுப்பிவிடும். இது போன்றே அனைத்து நாடுகளின் வானொலிகளையும் 25 பைசா அஞ்சலட்டையில் தொடர்பு கொண்ட அனுபவத்தை என்னவென்று சொல்வது!

இணையம் வந்துவிட்டபடியால், அனைத்து தூதரக முகவரிகளையும், இணையம் ஊடாக பெற்றுக் கொள்ள முடிவதால் கூட இன்றைய இயர் புக்குகளில் இது தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.  ஆனாலும், இது இயர் புக் அல்லவா, அந்த முகவரிகள் இருந்தால் இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்.

#