Wednesday, April 30, 2014

நேயர் விருப்பம்! - ஃப்ளாஷ்பேக் - இயக்குநர் பாண்டிராஜ்

பாடல்களால் தாலாட்டி, உணர்வுகளையும், நினைவுகளையும் சினேகமாய் ஸ்பரிசித்த வானொலியின் நினைவுகள் என்றென்றும் நிலையானது.
எங்கள் வீட்டில் ஒரு பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. அப்போதெல்லாம் ஊரெங்கும் ரெண்டே ரேடியோ பிராண்ட்தான். ஒன்று, குழந்தை வாயில் கைவைத்தபடியிருக்கும் விளம்பரத்திற்கு சொந்தமான மர்ஃபி, மற்றொன்று பிலிப்ஸ். நம் வீட்டு குழந்தைக்கு சட்டை தைப்பது போல, ரேடியோவுக்கு அழகாக உறை தைத்து போட்டிருப்போம். அதையும் மீறி பாச்சை, பல்லி ஏதாவது உள்ளே போய், ரேடியோவை மக்கர் பண்ண வைத்துவிடும். அதை எடுத்துக்கொண்டு ரிப்பேர் பண்ண அப்பாவுடன் செல்வேன்.
நற்சாந்துபட்டியில் ரிப்பேருக்கு கொடுத்துவிட்டு, என்னை அங்கேயே உட்கார்ந்து கையோடு வேலையை முடித்து வாங்கி வர சொல்லிவிடுவார் அப்பா. பிறகு வந்து வாங்கிக்கலாம் என்றால், “இல்லைடா, நம்ம ரேடியோவோட ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ கழட்டிடுவாங்க, பக்கத்துல இருந்து பார்த்துக்க”, என்பார். நானும் மெக்கானிக் அண்ணனையே முறைத்துக் கொண்டிருப்பேன். லேந்தர், பெட்ரமாக்ஸ், டார்ச் லைட் என எல்லாமே அவரிடம் ரிப்பேருக்கு வரும். மாலைவரை காத்திருந்து, அவர் சரி செய்து கொடுத்ததும் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வருவேன்.
எங்க ரேடியோவுக்கு மூன்று பேட்டரி போடவேண்டும். ஐந்து பேட்டரி ரேடியோ வைத்திருப்பது பெருமையாக பார்க்கப்பட்ட காலம் அது. பேட்டரி தீர்ந்து போகப்போகிறது என்றாலே, ரேடியோ இழுக்க ஆரம்பித்துவிடும். தினமும் பேட்டரியை கழற்றி வெயிலில் காயவைத்து சார்ஜ் ஏற்றுவோம். கடைசியாக வெயிலில் அல்ல, சூரியனுக்கு எடுத்துப்போய் காயவைத்தாலும் சார்ஜ் ஏறாது என உறுதியான பிறகுதான் புது பேட்டரி வாங்கவே கிளம்புவார் அப்பா. பேட்டரி தீர்ந்துபோய் ரேடியோ கேட்காமல் இருக்கும்போதெல்லாம், கை உடைந்தது போலிருக்கும். இதோடு மழை வந்துவிட்டால், இடி விழுந்துவிடுமென பயமுறுத்தி ரேடியோ போடவே விடமாட்டார்கள். ஒவ்வொரு ஆயுதபூஜைக்கும் சந்தனம், குங்குமம் வைத்ததன் சுவடில்லாத ரேடியோவை ஊர்ப்பக்கம் பார்ப்பதே கடினம். ஒரு ரேடியோ இருந்தால் அந்த வீட்டுக்கு கடிகாரமே தேவைப்படாது. ரேடியோவில் ஓடும் நிகழ்ச்சிகளை வைத்தே நேரத்தை கணக்கிட்டுவிடுவோம்.
எங்களூரில், திருச்சி வானொலி நிலையம், தெளிவாக எடுக்கும். தினமும் காலை, ‘பக்தி மாலை’யுடன் நாளை தொடங்குவதே, புத்துணர்ச்சியாக இருக்கும். அதைத் தொடர்ந்து தென்கச்சி.கோ.சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’. சரியாக ஏழே காலிற்கு, ‘ஆகாசவானியின் செய்தியறிக்கை’ என டெல்லியிலிருந்து சரோஜ் நாராயணசாமி மொறுமொறுப்பான குரலில் செய்திகள் வாசிப்பார். இந்த குரலுக்கு சொந்தகாரர் ஒரு ஆண், என நினைத்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கானோரில் நானும் ஒருவன்.
அதன்பின், திரைப்பட பாடல்கள் தொடங்கும். புது பாடல்கள் ஒலிபரப்பாகும் போது பக்கத்து வீட்டிலிருந்து, “அம்மா, கொஞ்சம் சவுண்ட் வைக்க சொன்னாங்க” என்று குழந்தையிடம் சொல்லி அனுப்புவார்கள். கொஞ்சம் சவுண்ட் அதிகரித்து வைத்தாலும், “சத்தத்த கூட்டுனா பேட்டரி சீக்கிரம் தீர்ந்திடும்டா”, என அப்பா விஞ்ஞானியாய் மாறி விளக்கி கொண்டிருப்பார். விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு முடியும்போது ஒன்பதரை மணிக்கு ஒரு இசை ஒலிபரப்புவார்கள். அதை கேட்டவுடன் பள்ளிக்கு நேரமாகி விட்டதென அடித்து பிடித்துக்கொண்டு ஓடுவோம்.
அப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் திருச்சிராப்பள்ளி வானொலியின் சென்னை அஞ்சலில், சுசித்ராவின் குடும்பம் என்ற நிகழ்ச்சி மிக பிரபலம். சரியாக மதியம் மூன்று மணிக்கு ஏதாவது ஒரு திரைப்படத்தின் ஒலிச்சித்திரம் ஒலிபரப்பாகும். ‘பாலும் பழமும்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ என டூரிங் டாக்கீசில் பார்த்த படங்களை ஒலிச்சித்திரம் கேட்கும்போது மனதில் ஓட்டிப்பார்ப்பேன். இரவில் வண்ணச்சுடரில் நாடகம் போடுவார்கள். அந்த நாடகத்தை யார் தலைமாட்டில் ரேடியோவை வைத்துக்கொண்டு கேட்பதென்று எனக்கும் என் அக்காவுக்கும் இடையில் போட்டியே நடக்கும்.
மேலும் தமிழில் கிரிக்கெட் கமென்டரியும் எப்போதாவது ஒலிபரப்பாகும். அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி, இருவரும் “நன்கு எழும்பி வந்த பந்தை, கபில்தேவ் மிக அழகாக, லாவகமாக அடித்து, இல்லையில்லை அடித்து என்பதை விட சற்று வேகமாக தள்ளி விட்டார் என்று சொல்லலாம்”, என்று விவரிக்கும்போது அந்த ஆட்டம் கண்முன் வந்து போகும். ஹிந்தியில் கமென்ட்டரி வரும்போது, “ஆட் ரன் கேலியே” என்றால் நாங்கள் இங்கே ‘அவுட் அவுட்’ என கத்துவோம். அவ்வளவுதான் நமக்கு அப்போது புரிந்த ஹிந்தி. (இப்போது வரையும் கூட அவ்வளவுதான்!!!)
ஆனால் இதையெல்லாம் தாண்டியும், இலங்கை வானொலி மேல் ஒரு தனி மயக்கம் இருந்தது. “இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழ்ச்சேவை”, என்று அந்த தமிழை கேட்பதே உற்சாகமாயிருக்கும். அப்துல் ஹமீதின் “பாட்டுக்குப் பாட்டு” நிகழ்ச்சியில், “அடுத்ததாக நாம் அழைப்பது(ம்), மட்டக்களப்பை சேர்ந்த திலீபன்”, என அவரின் அறிமுக உரைக்கே அவ்வளவு ரசிகர்கள். ‘மக்கள் குரல்’ நிகழ்ச்சிமூலம் கே.எஸ்.ராஜா, சமூக நடப்புகளை பகிர்வார். அதோடு, ஒரு நிமிடம் வரை தமிழில் மட்டுமே பதில் சொல்லும் போட்டியையும் நடத்துவார்.
“நாளை சந்திப்போம், கலந்து சிந்திப்போம்” என்றும், சில நாட்களில், ‘நீயா’ படத்தின், “என்னை விட்டுட்டு போறீங்களா ராஜா?” என ப்ரியா பேசும் வசனத்தை போட்டுவிட்டு, “போக மாட்டேன், அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பேன்”, என அசத்தலாக விடைபெறுவார். இவர்களோடு மயில்வாகனன் சர்மானந்தா, நித்யகல்யாணி, ராஜேஸ்வரி சண்முகம், என ஒவ்வொரு அறிவிப்பாளருக்கும் தனி பாணி, அத்தனை தனித்துவம்.
நேயர் விருப்பத்தில் கடிதம் போட்டவர்களின் பெயரை அவர்களின் ஊர்ப் பெயரோடு சேர்த்து எதுகை மோனையோடு சொல்வார்கள். பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிரும்போது, “அம்மா, அப்பா, அம்மப்பா, அம்மம்மா, அப்பப்பா, அப்பம்மா”, என உறவுமுறைகளை பட்டியலிடுவதே தனி சந்தோஷம். ஒரு முறையாவது என் பெயரும் ரேடியோவில் வந்துவிடாதா என்ற ஏக்கத்தில் இந்நிகழ்ச்சிக்கு பலமுறை கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட எனது வாழ்த்து செய்தி ரேடியோவில் வந்ததில்லை. அதன் பின்தான் தெரியவந்தது, இன்லேன்ட் லெட்டர் இந்தியாவுக்குள் மட்டும்தான் போகும், இலங்கைக்கு ஏர்மெயிலில் எழுதவேண்டும் என்பது !!!
இவ்வளவு சந்தோஷமான நினைவுகளையும் தாண்டி, எம்.ஜி.ஆர். மற்றும் இந்திரா காந்தி அம்மையாரின் திடீர் மறைவின்போது, இடைவிடாது ஒலித்த சோகமான சாரங்கி இசைக்கும், இறுதி ஊர்வலத்தின் நேரடி வர்ணனைக்கும் நடுவில் பஞ்சாயத்து ரேடியோவில் குழாய் ஸ்பீக்கர் கட்டி, “உலகத்த ஆண்ட உத்தமர காணோமுன்னு ஊரே அழுகுதுங்க, நாட்ட ஆண்ட நல்லவர காணோமுன்னு நாடே அழுகுதுங்க”, என்ற ஊர்ப்பக்கத்து ஒப்பாரியை இடையிடையே போட்டு, ஒட்டுமொத்த ஊரும் ரேடியோ மூலம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது இன்றும் கண்முன்னே காட்சியாக விரிகிறது.
இப்படி வானொலியோடே வளர்ந்த என்னை கடந்த ஆண்டு, சென்னை அகில இந்திய வானொலி நிலையம், சிறந்த மனிதர்களில் ஒருவராக தேர்வு செய்து விருது கொடுத்தபோது, அடைந்த மகிழ்ச்சி சொல்லில் அடங்காதது. தொலைவில் நின்று பார்த்து ரசித்த ஒரு ஆளுமையின் தோள்களில், கை போட்டு பேசும் சிலிர்ப்பை தந்தது, அவ்விருது.
இன்றோ காரில் ஏறினால், மாற்றி மாற்றி கேட்க பத்து பண்பலைகள் வரிசைகட்டி நின்றாலும், ஆயுதபூஜைக்கு பொட்டு வைத்து கும்பிட்டு, கலர் கலராக உறை தைத்துப்போட்டு அழகு பார்த்து, ஸ்பேர் பார்ட்ஸ மாத்திடுவாங்களோ என பயந்து கையோடு ரிப்பேர் பண்ணி வந்த, என் பால்ய கால ரேடியோவின் நினைவலைகளில் மீண்டும் ஒரு நாள் மூழ்காதா என்றே, ஏங்குகிறது மனது !!!
தொடர்புக்கு:pandirajfb@gmail.com
Source: http://tamil.thehindu.com/ 

Wednesday, April 23, 2014

தமிழம் இணைய தளத்தினில்

திரு. பொள்ளாச்சி நசன் அவர்கள் தனது தமிழம் இணைய தளத்தினில் வெளியிட்ட தகவல் இது. வெளியான வருடம் 2005. எனவே முகவரிகள் அனைத்தும் பழையவை. தொடர்பு கொண்டால் பதில் வராது.

சென்னையிலிருந்து வெளிவருகிற வானொலி தொடர்பான இதழ் வான்9, ஒலி4. இந்த இதழ் இணையதளத்திலும் வலைப்பூவாக வெளிவருகிறது. உலகம் முழுவதும் ஒலிபரப்பப்படுகிற வானொலி நிலையங்கள் பற்றிய செய்தியைத் தாங்கி வெளிவருகிறது இந்த இதழ். தமிழ்ச் சிற்றலை வானொலிகளின் புதிய அலைவரிசைப் பட்டியலை வெளியிட்டு அதற்கான நேரங்களையும் குறிப்பிட்டுள்ளது. பல்வேறு வானொலி ஒலிபரப்புகள் பற்றிய செய்திக் குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. வானொலி தொடர்பாக நிகழுகிற விழாக்களை அறிமுகப்படுத்துகிறது. வானொலி வாசகர் சந்திப்பையும் குறிப்பிட்டுள்ளது. வானொலி நடத்துகிற போட்டிகள் பற்றிய குறிப்பும் இதழில் காணப்படுகிறது. உலக அளவில் ஒலிபரப்பாகுகிற நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கான தரமான வானொலி பற்றிய குறிப்பையும் இதழின் பின்பக்க உள் அட்டையில் குறிப்பிட்டுள்ளது. வானொலி நிகழ்ச்சியாளர்களுடனான நேர்காணலையும் வெளியிட்டுள்ளது. பெரிய அளவில் 16 பக்கங்களில் திங்கள் ஒருமுறை வெளிவரும் இந்த இதழ் தொடர வாழ்த்துகிறேன். 58 அன்னை சத்யாநகர் அரும்பாக்கம் 


வானொலிச் செய்திகளை முதன்மைப் படுத்துகிற சர்வதேசவானொலி. ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம், செலாம்பாளையத்தைச் சேர்ந்த தங்க. ஜெய்சக்திவேல் இந்த இதழின் ஆசிரியர். படிக்கும்போதே இதழ் நடத்தியவர். வானொலி கேட்பவராக இருந்து, படிப்படியாக வளர்ந்து இன்று சர்வதேச அளவில் வானொலி பற்றிய அரிய செய்திகளைத் தமது இதழில் வெளியிட்டு வருகிறார். சீன வானொலியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். வானொலி கேட்பதற்கான பல்வேறு கருவிகளை இதழில் அறிமுகப்படுத்தி வருகிறார். ஹாம் ரேடியோ பற்றியும், போட்காஸ்டிங் பற்றியும் இந்த இதழில் வெளியிட்டுள்ளார். முகவரி : 3. முதல் தளம், ப.மாளவியா அவின்யூ, நாதன்ஸ் ஆர்கேடு, எல்.பி.சாலை, சென்னை 41 


சர்வதேச வானொலி: படப்படி இதழாக, தங்க. ஜெய்சக்திவேல் சென்னையிலிருந்து வெளியிடுகிற இதழ். உலக அளவில் ஒலிபரப்புகிற, பல்வேறு வானொலி தொடர்பான செய்திகளையும், நேர்காணல், துணுக்குகளையும் வெளியிடுகிற இதழ் இது. 
நன்றி: திரு.பொள்ளாச்சி நசன் மேலும் பார்க்க

Wednesday, April 16, 2014

வரலாற்றில் சர்வதேச வானொலி

நமது இதழ் கடந்த 1999ஆம் தொடங்கப்பட்டாலும், இந்த இதழ் உருவாவதற்கு காரணமாக இருந்தது ‘அட்சயப் பாத்திரம்’ எனும் உடுமலை அரசு கல்லூரி இதழ். மலரும் நினைவுகளை மீட்டெடுக்க உதவிய திரு. பொள்ளாச்சி நசன் அவர்களுக்கு நன்றி.
எங்களின் பழைய இதழ்களை பொக்கிசமாக பாதுகாத்து வரும் அவருக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகள். மேலும் பழைய இதழ்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

Thursday, April 10, 2014

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தம்

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தமானது, உலகளவில் ஊடக நிலைமையில் என்னென்ன எந்த மாற்றங்களை ஏற்படுத்தும்? ஊடகத்துறையின் புத்தாக்க வளர்ச்சி, எந்தெந்த வாய்ப்புகளையும் அறைகூவல்களையும் எதிர்நோக்குகின்றது? ஊடகம் எந்த வழிமுறைகளில் புதிய ஆற்றலை உருவாக்கி, மனித நாகரிகத்தின் வளர்ச்சிப் போக்கில் மேலதிக கடமைகளை ஏற்றுக்கொள்ளும்?போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டு கூட்டத்தின் போது நடைபெறும் ஒரு கருத்தரங்காக, சீன வானொலி நிலையமும் போ ஆவ் ஆசிய மன்றமும் கூட்டாக ஏற்பாடு செய்யும் ஊடக தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டம் உலகின் 20 நாடுகளின் ஊடகத் தலைவர்கள் சீனாவின் போ ஆவிற்கு வந்து, எண்ணியல் காலத்தில் ஊடகத்தின் வாய்ப்புகளையும் எதிர்நோக்கும் அறைகூவலை, செய்தி ஊடக புத்தக்கத்தையும் கடமையையும் பற்றி விவாதிப்பார்கள்.

 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டுக் கூட்டத்தின் முக்கிய கருத்தரங்கான செய்தி ஊடகத் தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டத்தை சீன வானொலி நிலையமும் போ ஆவ் ஆசிய மன்றமும் கூட்டாக நடத்துகின்றன. இக்கூட்டம் ஏப்ரல் 8ஆம் நாள் ஹெநான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் துவங்கியது. பல நாடுகளைச் சேர்ந்த 20க்கு மேலான செய்தி ஊடகங்களின் தலைவர்கள், ஒன்று கூடி, எண்ணியல் காலத்தில், செய்தி ஊடகங்களின் அறைகூவல்களையும் வாய்ப்புகளையும் பற்றி விவாதிப்பர்.

Wednesday, April 09, 2014

விக்கிபீடியாவில் அடியேன்...

தங்கவேல் ஜெய்சக்திவேல் (அல்லது தங்க. ஜெய்சக்திவேல் Thangavel Jaisakthivel பி: 21 சூன் 1978) வானொலித் துறையில் கொண்ட பற்றினால் வானொலி தொடர்பான படிப்பினைப் படித்து பிபிசி உலக சேவையில் பணியாற்றியவர். சென்னைப் புதுக்கல்லூரியில் காட்சி சார் அறிவியல் (Visual Communication) துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் தற்பொழுது திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
மேலும் விரிவாக படிக்க

நன்றி: திரு. உமா காந்தன்