Thursday, August 29, 2013

ரேடியோ சிட்டி ஆரம்பித்துள்ள 'தமிழ் ஆன்லைன் ரேடியோ'

பிரபல எஃப்.எம் ரேடியோ நிறுவனமான ரேடியோ சிட்டி, தமிழ் ஆன்லைன் ரேடியோ ஆரம்பித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், இசைமைப்பாளர் டி.இமான், தயாரிப்பாளர் எஸ்.மதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு புதிய புதிய தமிழ் ஆன்லைன் ரேடியோவை துவக்கி வைத்தனர்.

முதல் வலை வானொலி நிலையமான பிளானெட்ரேடியோசிட்டி.காம் (planetradiocity.com) தனது முதல் இராந்திய வலை வானொலியான தமிழ் ரேடியோ சிட்டியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தமிழ் ரேடியோ சிட்டியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் தமிழ்ப் பாடல்கள் ஒலிபரப்பப்படும். இத்துடன் நேயர்கள் விரும்பிக் கேட்கும் 'லவ் குரு', 'ரகசிய போலீஸ் போடவா கோபி 911' ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது.

இதன் துவக்க நிகழ்ச்சி நேற்று (ஜூலை 24) சென்னையில் உள்ள ரேடியோ சிட்டி எஃப்.எம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் டி.இமான், தயாரிப்பாளர் மதன், ரேடியோ சிட்டி வானொலியின் சி.இ.ஓ அபூர்வா புரோஹித், ரேடியோ சிட்டி வானொலியின் டிஜிஜிட்டல் மீடியா மற்றும் நியூ பிசினஸ் மூத்த துணைத் தலைவர் மற்றும் பிசினஸ் தலைவரான ரச்னா கன்வார் மற்றும் ரேடியோ சிட்டி அலுவலகர்கள் என அனைவரும் கலந்துகொண்டார்கள்.

இனி, உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், இனியமையான தமிழ்ப் பாடல்களை இந்த தமிழ் ரேடியோ சிட்டி ஆன்லைன் வானொலியின் மூலம் கேட்கலாம். இதை கேட்கவிரும்புகிறவர்கள், பிளானெட்ரேடியோசிட்டி.காம் (www.planetradiocity.com) என்ற இணையதளத்திற்கு சென்று, அங்குள்ள ரேடியோசிட்டுடமில் (radiocitytamil) லிங்கை கிளிக் செய்தால், தமிழ்ப் பாடல்களையும், மிகச் சிறந்த தமிழ் இசைக் தொகுப்புகளுடன் நகைச்சுவையும், குதூகலமும் நிறைந்த லவ் குரு மற்றும் ரகசிய போலீஸ் படவா கோபி 911 போன்ற நிகழ்ச்சிகளையும் கேட்கலாம்.

இந்த புதிய ஆன்லைன் வானொலி குறித்து ரேடியோ சிட்டி நிறுவனத்தின் சி.இ.ஓ அபூர்வா புரோஹித் கூறுகையில், "பிராந்திய நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை ரேடியோ சிட்டி உணர்ந்தே உள்ளது. ஒரு எல்லைக்குள் தொடங்கப்படும் சேவைகள் சம்மந்தபட்ட பிராந்தியங்களில் சிறப்பாக இருக்கும் என்பது உண்மையே என்றாலும், வலை வானொலி நகரம் மற்றும் நாடு தாண்டி உலகளாவிய சேவைகளை வழங்கும். உலகின் மிகச் சிறந்த இசைகளுள் தமிழிசையும் குறிப்பிடத்தக்கது என்பதால் ஒரு வட்டத்திற்குள் முடங்கிவிடக் கூடாது. எனவேதான் தமிழ் இசையை உலகிலுள்ள அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் எடுத்துச் செல்கிறோம்." என்று தெரிவித்தார்.

ரேடியோ சிட்டி 91.1 எஃப்.எம் டிஜிடல் மீடியா மற்றும் நியூ பிசினஸ் மூத்த துணைத் தலைவர் மற்றும் பிசினஸ் தலைவர் ரச்னா கன்வார் கூறுகையில், "இந்தி ரேடியோ சிட்டு உள்பட 5 வலை வானொலி நிலையங்களைத் தொடங்கி பின்னர் பிராந்திய இசையைக் குறிப்பாக தென் இந்தியப் பிராந்திய இசையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல விரும்பினோம். இந்த ஆசை இப்போது நிறைவேறி உள்ளது. இந்தியப் பிராந்திய இசை குறிப்பாக தமிழ் இசைக்கு ஆன்லைனில் இருக்கும் இடைவெளியை இணைக்கும் பாலமாக இனி தமிழ் ரேடியோ சிட்டி செயல்படும். பழைய மற்றும் புதிய இசை ஆர்வலர்களுக்கு இதுவொரு சுரங்கமெனில் மிகையில்லை." என்று தெரிவித்தார். (டி.என்.எஸ்)
நன்றி: http://tamil.chennaionline.com

Tuesday, August 27, 2013

K.S..ராஜா பற்றிய ஒரு குறிப்பு: பழைய விகடனில் இருந்து

சாகும் வரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..!


ற்பாடு செய்தவர்களே எதிர் பார்க்கவில்லை. மதுரை காந்தி மியூஸிய திறந்தவெளி அரங்கு திணறியது. எங்கெங்கும் ஆரவாரத் துடன் ரசிகர்கள் கூட்டம். 
இலங்கை வானொலியின் அலை வரிசைகளில் ஆதிக்கம் செய்த அபிமான அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சமீபகாலமாகக் கேட்க முடியாமல் தவித்த வானொலி நேயர்களுக்கு, ஈழப் போராட்ட நிதிக்கு அவர் இங்கு நேரடியாக நிகழ்ச்சிகளைத் தரப்போகிறார் என்ற செய்தி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அவர் கம்பீரக் குரலை நேரில் கேட்கவும் அவரைப் பார்க்க வும் ஆர்வத்துடன் பரபரத்தனர்.
'பராக்' சொல்வதுபோல் முதலில் ஒருவர் 'வருகிறார்... வருகிறார்... கே.எஸ்.ராஜா' என அறிவிக்க, அதைத் தொடர்ந்து பிரமாண்டமான மியூஸிக். மற்றொருவர் வந்து மைக் பிடிக்க, இவரும் கே.எஸ்.ராஜா Posted Imageவருவதை அறிவிக்கிறாரோ என நாம் எதிர்பார்த்து இருந் தோம். மைக்கைப் பிடித்தவுடன், ''வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்...'' என அதே மிடுக்கான குரல் ஒலிக்க, ராஜாவின் குரலை நேரில் கேட்ட மகிழ்ச்சியில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
லேசான சாம்பல் நிற சஃபாரியில் சற்றே குள்ளமாக, தொப்பி வைத்துக்கொண்டு, நாம் சற்றும் எதிர்பார்க்காதபடி வித்தியாசமான ராஜாவாக இருந்தார். தேனிசை மழையின் ஆரம்பத்தில் ஒரு மாணவி, கே.எஸ்.ராஜாவிடமே பர்சனாலிடி பற்றிக் கேட்டுவிட... அவர், ''நீங்கள் எப்படி எதிர்பார்த்தீர்கள்?'' என்றவுடன், ''கொஞ்சம் ஹைட்டா, வெயிட்டா அமிதாப் பச்சன் ஸ்டைலில் இருப்பீர்கள் என்று எதிர்பார்த் தேன்'' என்றார் அந்த மாணவி. ''அமிதாப்புக்கு என்னைப் போன்று அழகான தமிழ்க் குரல் கிடையாதே'' என்றார் கே.எஸ்.ராஜா. அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. 'பாட்டுக்குப் பாட்டு' இசை நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே சூடுபிடித்தது. அதிகாலை 3 மணி வரை பார்வையாளர்களைத் தனது பேச்சிலும் கிண்டலிலும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
மறுநாள் யானைக்கல்லில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்டில் கே.எஸ்.ராஜாவைச் சந்தித்தோம்.
தினமும் வானொலியில், வணக்கம் கூறி விடைபெற்று நழுவிவிடும் ராஜாவைப் பற்றிய முழு விவரம் தெரிய வேண்டாமா?
இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர். அம்மா ஆசிரியை, சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள். முக்கியமாக, பிளாஸ்டிக் சர்ஜரியில். படிப்பு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் ரசாயனப் பட்டதாரி.
''1966-ல் கொழும்பு ராயல் காலேஜில் படிக்கும்போது, மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்து நின்றவர் ஒரு சிங்களர். அந்த செயின்ட் தாமஸ், செயின்ட் பீட்டர்ஸ் பகுதிகளில் சிங்களர் கள்தான் அதிகம் என்றாலும், அவர்களும் தமிழரான என்னையே தெரிவு செய்தார்கள். (நடுநடுவே பயங்கரமான தும்மல். தமிழ்நாட்டு க்ளைமேட் ஏற்றுக்கொள்ளவில்லையாம்!)
''சிலோன் யுனிவர்சிட்டியில் கொஞ்ச நாட்கள் புரொஃபஸராகப் பணியாற்றினேன். எக்ஸாம் கவுன்சிலிலும் நியமித்தார்கள். அப்போதெல்லாம் பி.ஹெச்டி. வாங்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். 'ரேடியோவில் அறிவிப்பாளர் கேட்டு விளம்பரம் வந்திருக்கு. நீங்கதான் நன்றாகப் பேசறீங்களே. அப்ளை பண்ணுங்க'னு ஸ்டூடன்ட்ஸ் சொன்னாங்க.
அப்போதெல்லாம் பொதுவாக நாடகத்தில் பேசினவங்களைத்தான் தெரிவு செய்தார்கள். ஆனால், அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்கள், எனது உச்சரிப்பினையும் குரல் வளத்தையும் கண்டுகொண்டு, என்னையே அந்தப் பணிக்கு நியமித்தார். எனது முன்னேற்றத்துக்கு அவருடைய உற்சாகமும் உறுதுணையும்தான் முக்கியக் காரணம்'' என்றார் ராஜா.
Posted Image
1970-ல் ராஜாவின் நுழைவுக்குப் பின், வானொலி ஒலிப்பரப்பில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றிக் கேட்டபோது...
''சாதாரண பொதுமக்களுக்கும் நிலையத்துக்கும் மிகுதியான உறவினை ஏற்படுத்தும் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினேன். பி.பி.சி-யில் 'ஹீட்பரேட்' (இசை அணித் தேர்வு) - நிகழ்ச்சி யினை முதன்முதலாக அறிமுகப்படுத்தினேன். 'இசைச் செல்வம்' நிகழ்ச்சிகூட அதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.
நான் அமைக்கும் 'திரை விருந்து' நிகழ்ச்சி யினைத் தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள் மிகவும் பாராட்டியிருக்கிறார். நடிகர் திலகம் அவர்களும் அவருடைய துணைவியாரும் 'ஹீட் பரேட்' நிகழ்ச்சியினை மிகவும் ரசித்துக் கேட்ப தாகக் கூறியிருக்கிறார்கள்.
மாணவ - மாணவியருக்காக நடத்தப்படும் 'பொது அறிவுக் களஞ்சியம்' நிகழ்ச்சி, மக்களிடையே மிகுதியான வரவேற்பு. 1981-ல் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளே அரசுத் தேர்வுக்கு மிகுதியாக வந்திருந்தன. ''தொலைபேசி மூலம் உரையாடும் 'உங்கள் விருப்ப நிகழ்ச்சி'க்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு'' என்றார்.
''புதுமை என்றாலே எதிர்ப்புகள் இருக்குமே... தங்களுக்கு?''
''இல்லாமலா என்ன... ஆரம்பத்தில், வழக்க மான ஒலிப்பதிவு முறைக்கு எதிராகச் செயல் படுகிறேன் என்று சொல்லி, முழுமையாக இடையூறு செய்தார்கள். ஆனால், ரசிகர்களின் ஏராளமான கடிதங்கள், அதிகாரிகளின் மனத்தை மாற்றிவிட்டு, என்னையும் விருப்பம்போல் செயல்படவைத்துவிட்டது!''
உரையாடல் கவிதை மீது தொற்றியது.
''இலங்கையில் கவியரசர் கண்ணதாசனுக்கு ஏராளமான ரசிகர்கள். கருணா ரத்தின அபய சேகரர் என்பவர் ஒரு சிங்களக் கவிஞர். அவர் கண்ணதாசனின் தமிழ்க் கவிதைகளைச் சிங்களத் தில் மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டு, அப்படியே அதனைக் கவியாக வடித்துவிடுவார்'' என்றார் ராஜா.
ராஜா, இலங்கை வானொலியைவிட்டு வெளியேறிய நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினார்.
Posted Image''நான் எழுச்சிப் பாடல்களாக ஒலிபரப்பி னேன். உடன் இருப்பவர்களே பொறாமையினால் காட்டிக்கொடுத்துவிட்டார்கள். பின் என்ன, இடைநிறுத்தம் செய்துவிட்டார்கள். ராணுவத் தினரிடம் சித்ரவதை. நான்கு மாதக்கஷ்டம். அதைத் தொடர்ந்து வட இலங்கை நோக்கிப் பயணமாகிவிட்டேன். யாழ்ப்பாணம் குடா நாடு முழுமையாகப் போராளிகளின் கட்டுப்பாட் டில் இருப்பதால், பிரச்னை எதுவும் இல்லை.
இயக்கங்கள் அனைத்தும் ஒரு கொடியின் கீழ் இணைய வேண்டும். சமீபத்திய வவுனத் தீவு சண்டை ஒரு ஆரோக்கியமான அறிகுறி'' என்கிறார்.
''இப்போதெல்லாம் ஈழ மக்கள் இலங்கை வானொலியை நம்புவது இல்லை. 'லங்கா புவத்' - என்பதை 'லங்கா பொய்' என்றே கேலியாக அழைக்கிறார்கள்.
இந்தியப் பத்திரிகைகள் மற்றும் இந்திய வானொலி நிலையங்களில் ஒலிப்பரப்பாகும் செய்திகளையே நம்புகிறார்கள்'' என்கிறார்.
''சாகும் வரையிலும் அறிவிப்பாளராகப் பணியாற்றவே விரும்புகிறேன். ஆனால், மறுபடியும் இலங்கை வானொலி நிலையம் சென்றால், என்னால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாது இல்லையா?''
- அந்தக் கம்பீரமான குரலில், ஓர் இனம் புரியாத சோகம் இழையோடியது!
- பி.இளங்கோவன், ஆர்.தேன்மொழி

நன்றி: விகடன் பொக்கிசம் Via http://www.yarl.com

ஊரில், ரேடியோவுக்கு முன், மைக் கட்டி, ஊரே கேட்கும்

கதிர் பாரதியின் கவிதை நூலுக்கு "யுவ புரஸ்கார்'
 சாகித்ய அகடமியின் விருதுகள் (புரஸ்கார்) நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், யுவ விருதுக்கு கதிர் பாரதியும், பால சாகித்ய விருதுக்கு ரேவதியும், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின், சாகித்ய அகடமி, ஒவ்வொரு ஆண்டும், சிறந்த எழுத்தாளர்களுக்கு, விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது. இதில், சாகித்ய அகடமி இலக்கிய விருது, பால சாகித்ய விருது, சாகித்ய அகடமி மொழிபெயர்ப்பு விருது, சாகித்ய யுவ விருது உள்ளிட்ட, பல விருதுகள் வழங்கப்படும். அந்தந்த மொழியில் உள்ள, சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கப்படும். இந்நிலையில், 2013ம் ஆண்டுக்கான, யுவ விருது, பால சாகித்ய விருது பெறுபவர்களின் பட்டியலை, சாகித்ய அகடமியின் செயலர், சீனிவாச ராவ் நேற்று வெளியிட்டார். சிந்து மொழியைத் தவிர்த்து, மற்ற, 23 மொழிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ் மொழியில், யுவ விருது, கதிர் பாரதியின், "மெர்சியாவுக்கு மூன்று மச்சங்கள்' என்ற கவிதை நூல், தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே போல், பால சாகித்ய விருதுக்கு, ரேவதியின், "பவளம் தந்த பரிசு' நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஊக்கம் தந்த தாய்மாமன்கள்:

இது குறித்து, "யுவ புரஸ்கார் விருது' பெறும் கதிர் பாரதி கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் உள்ள, முத்து வீர கண்டியன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவன் நான்; இமானுவேல், உதயகுமார், ஹென்றி, ராஜ்குமார் ஆகிய, என் நான்கு தாய்மாமன்கள், எனக்கு இலக்கிய தாயாக விளங்கினர். அவர்கள் கொடுத்த ஊக்கத்தினால், சிறுவயதில் இருந்தே நிறைய வாசித்தேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, ஜெயகாந்தனின், "சில நேரங்களில் சில மனிதர்கள்' புத்தகத்தை வாசிக்க வைத்தனர். நான், சென்னை, திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில், கவிதை வாசிக்கும் போதெல்லம், ஊரில், ரேடியோவுக்கு முன், மைக் கட்டி, ஊரே கேட்டும் வகையில், எங்கள் மாமன்கள் செய்தனர். இது, அதீத அன்பின் உச்சம். அந்த அளவு கடந்த அன்பே, என்னை தொடர்ந்து எழுத ஊக்குவித்தது. "நீ இலக்கியத்தில், யாருடைய முகத்தில் விழிக்கிறாயோ, அதுவே உனக்கு இலக்கிய வாழ்வு' என, என் நண்பர் ஒருவர் கூறினார். நான் யூமா வாசுகி முகத்தில் விழித்தேன். அதனாலேயே, விருது பெறும் அளவுக்கு என், எழுத்துகள் தேர்வாகி உள்ளது. "மெர்சியாவுக்கு மூன்று மச்சங்கள்' என், முதல் கவிதை தொகுப்பு. தொகுப்பு வெளியாகியவுடன், "காலச்சுவடு'வில், ம.அரங்கநாதனும், "காக்கை சிறகினிலே'வில், ஆதவன் தீட்சண்யாவும், விமர்சனம் எழுதி, என்னை ஊக்கப்படுத்தினர். சேலத்தில் உள்ள, "தக்கை' அமைப்பும், கோவையில் உள்ள, "இலக்கிய சந்திப்பு' அமைப்பும், என் நூலுக்கான விமர்சன கூட்டங்கள் நடத்தி, என்னை ஊக்குவித்தனர். நூல்கள் எதுவும் என் கைவசம் இல்லாத நிலையில், இளங்கோ கிருஷ்ணன் என்ற என் நண்பரும், வெளியீட்டாளரும் அறிவுறுத்தினர். நண்பரிடம் இருந்து வாங்கி, சாகித்ய அகடமிக்கு அனுப்பி வைத்தேன்; இப்போது, விருதுக்கு தேர்வானதில், மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

60 ஆண்டுகள்:

சாகித்ய அகடமியின் பால புரஸ்கார் விருது பெற்ற, சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் ரேவதி கூறியதாவது: கடந்த, 60 ஆண்டுகளாக குழந்தைகள் குறித்தும், அவர்கள் வளர்ச்சி குறித்தும் எழுதி வருகிறேன். இது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. எதிர்கால தலைமுறையை, ஆரோக்கியமாக உருவாக்க வேண்டும் என்பதால், குழந்தை இலக்கியங்களை மட்டுமே, அதிகம் கவனம் எடுத்து எழுதி வருகிறேன். மத்திய, மாநில அரசு வழங்கும் விருதுகள் உட்பட, 30க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளேன். தமிழகத்தில், குழந்தை இலக்கியம் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. தமிழக அரசு இப்பிரச்னையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து குழந்தை இலக்கியங்களை எழுதி வருவதால், ஒவ்வொரு நாளும் எனக்கு வயது குறைவதாகவே நினைத்துக் கொள்கிறேன். இவ்வாறு ரேவதி கூறினார்.

ரேடியோ முருகேசனும் கே.எஸ்.ராஜாவும்

ரேடியோ முருகேசன் என்ற முருகேசனை சந்தித்ததை உங்கள் நம்பிக்கை சார்ந்து, தற்செயல் அல்லது ஊழ் அல்லது வேறு ஏதொன்றுமாக நீங்கள் வைத்துக் கொள்ளலாம். கதையின் முடிவில் அதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். முருகேசனை நான் சந்திக்க வேண்டியிருந்தது என்ற எளிய உண்மை இப்போதைக்குப் போதுமானது.

                சிங்கப்பூர் மாமா, அம்மாவிற்கு சீதனமாகக் கொடுத்த சோனி டிரான்சிஸ்டர் ரேடியோ ஒன்று எங்கள் வீட்டில் நீண்ட காலமாக பாடிக்கொண்டு இருந்தது என்று சொன்னால், பக்கத்து வீட்டு சுப்பையா தாத்தா அடிக்க வருவார். அவரைப் பொறுத்தவரை அது கத்திக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு மட்டுமென்ன எங்கள் தாத்தாவிற்கும்தான். எங்கள் என்றால், எனக்கும் என் அக்காவிற்கும்.

                அக்கா நன்றாகப் பாடுவாள், அம்மா அப்படித்தான் சொல்கிறாள். அப்பா உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் வாணி என்று பெயர் வைத்திருப்பாரா?! வாணிஜெயராம் என்றால் போதும் அவருக்கு. "மல்லிகை என் மன்னன் மயங்கும்' - என்று ரேடியோவில் காதோடு மயங்கிடுவார் மனுசன் என்பாள் அம்மா, அம்மாவுக்கு வாணிஜெயராம் குரல் இல்லை என்பதில் அப்பாவுக்கு வருத்தம் ஏதும் உண்டா என்று தெரியாது. ஆனால் அம்மாவுக்கு உண்டு என்றாலும் அம்மா பாடி பார்த்ததில்லை, என்றால் கேட்ட தில்லை. சின்ன முணுமுணுப்பாகக்கூட, ஆனால் அப்பா பாடுவார். அது மெலிசாக, குண்டுமணி உருள்வது போல இருக்கும். ஆனால் அது வாணிஜெயராம் போல இருக்காது. எப்படி இருக்க முடியும்...! ஆனால் பெண்குரல் பாடலை ஆண்கள் பாடினால் ஏன் நன்றாக இருக்கக் கூடாது?! "வசந்தகால நதிகளிலே'... பாடலை ஜெயச்சந்திரனும் கூடத்தான் அதே நளினத்தோடு பாடுகிறார். இதை நான் சொல்லவில்லை அப்பாதான் சொன்னார். அப்படிச் சொல்லும் அவர் வாணிஜெயராம் பாடலை ஹம்மிங் அல்லது சீழ்க்கையில் தான் ஏனோ பாடுவார்.

                இதற்கெல்லாம் குறையில்லாமல் தான் அக்கா பாட ஆரம்பித்தாள். முதலில் ரேடியோவோடு ரேடியோவாக என்றால் விவிதபாரதி இல்லை இலங்கை வானொலி. விவிதபாரதி இரவில்தான் சற்று தெளிவாகக் கேட்க இயலும். பகலென்றால் பாடலும் இரைச்சலாக இருக்கும். கேட்க காதுவலிதான் மிஞ்சும். இலங்கை வானொலி அப்படி அல்ல; கழுவி விட்டதுபோல சுத்தமாக இருக்கும். அவர்களது தமிழும் அப்படித்தான். அதில் வரும் பாடலோடு பாடலாகச் சேர்ந்து பாடுவாள். பாடல், சங்கீதம் என்ப தெல்லாம் சினிமா பாட்டுதான். கர்நாடக சங்கீதம், அது இது என்பதெல்லாம் யாருக்கும் இங்கு விளங்குவதில்லை. பரிச்சயமுமில்லை. தாத்தாவிற்கு, அப்பாவின் அப்பாவிற்கு, சினிமா பாடல் என்பதும் அப்படித்தான்.

                அவர் உண்டு, அவர் நெல் மூட்டை மொத்த வியாபாரம் உண்டு, தூரத்தில் களைத்துப்போய் தாத்தா வீட்டிற்கு வரும் போதே ரேடியோவை நிறுத்தி வைத்து விடுவாராம் அப்பா.

                தாத்தா அப்படி ஒன்றும் சங்கீதத்திற்கு எதிரியில்லை. சினிமா பிடிப்பதில்லை... அவர் காலத்து படம் கூட அவருக்குப் பிடிப்பதில்லையாம். பார்ப்பதில்லையாம். "என்ன கூத்து! ஊரில் இல்லாத கூத்து" என்பாராம் அடிக்கடி. சினிமா பற்றிய பேச்சுக்கு அதுதான் முற்றுப் புள்ளி. ஏதாவது கோவில் கச்சேரி விசேச வீடுகளில் நாதசுரம் முடியும் மட்டும் இருந்து இரசிப்பார் அவ்வளவுதான்.

                தன் ஒரே மகன் வேலையில் சேர்ந்து முதல் மாத சம்பளத்தில் ரேடியோ வாங்கி வந்ததைப் பார்த்து "இவன் எங்கே உருப் படப்போகிறான்" என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கடை வாசலுக்குப் போனவர்தான் பிறகான காலங்களில் அங்குதான் படுக்கை, வியாபாரம் என்று ஆகிவிட்டது. எப்போதாவது காலை அல்லது இரா சாப்பாட்டிற்கு நினைத்துக்கொண்டால்தான் உண்டு. அதெல்லாம் மகனின் திருமணத்திற்குப் பிறகு கொஞ்ச நாள் போல நடந்தது.

                இவர் வீட்டிற்கு வந்து வாசல் சொம்பில் கால் நனைக்கவும், அப்பா வைத்திருந்த ரேடியோ அபசகுனமான, துக்கிரியான வார்த்தையில் பாடுவதற்கும் சரியாக இருந்ததாம். வந்த வேகத்திலேயே ரேடியோ பெட்டியை நடுக் கூடத்தில் வைத்து வீசி அடித்தாராம். பிறகேதும் பேசாமல், சாப்பிடாமல் கிளம்பிப் போய் விட்டாராம். அது நடந்து மூன்றாவது நாள் தாத்தா நெல் மூட்டை கோடவுனில் இறந்து கிடந்தாராம். எப்பவும் தாத்தாவுக்கு தேத்தண்ணி வாங்கிவரும் ரெங்கையா மாமா எழுப்பியும் அவர் எழும்பியதாய் இல்லையாம். பிறகே வீட்டில் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். அக்கா தேம்பி அழுதது நன்றாக நினைவிருக்கிறது.

                ஒருமுறை ரேடியோவோடு சேர்ந்து அக்கா பாடிக்கொண்டிருந்தாளாம்... "வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம்' என்று... தாத்தா வராந்தையில் வந்ததை எவரும் கவனித்திருக்கவில்லை. அது, அந்த நேரத்திற்கு அவர் வருகிறவர் இல்லை என்பதாக இருக்கக்கூடும். அக்காவும் நிறுத்தவில்லை. ரேடியோவும் நிறுத்தவில்லை. ஆனால் அம்மா ஓடிப் போய் நிறுத்தினாள் அக்காவை, ரேடியோவை. தாத்தா எதிரே நின்றார். எதுவும் சொல்லவில்லை. சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பெட்டி கேட்டு வாங்கிக் கொண்டு போகையில் அம்மாவிடம் சொன்னாராம். "இவனைப்போல மகளையும் குட்டிச்சோறா (சுவர்) ஆக்கிற போறான்" என்று. "அது அந்த காலம் இப்பல்லாம் இதுகள ஏதும் சொல்ல முடியுமா' என்பாள் அம்மா.

                அப்பா அப்படியில்லை பாடல் கேட்பார், இடையிடையே என்ன படம், இசை யார், யார் பாடினார் என்பதெல்லாம் நாம் கேட்காமலேயே சொல்வார். அக்கா தான் அதற்கெல்லாம் சரி. பொறுமையாகக் கேட்பாள் பாடுவாள்.

                ஒரு ஞாயிற்றுக்கிழமை அப்படித் தான் ஆயிற்று, அப்பா வீட்டில் இருந்தார். பின்னேரம் இலங்கை வானொலியில் ஒலிச்சித்திரம் இருக்கும். ஒலிச்சித்திரம் என்றால் திரைப்படத்தின் தொகுக்கப்பட்ட ஒலி வடிவம். (இதெல்லாம் வெகு பின்னால் தெரிந்து கொண்டவை) அக்கா புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வருவாள். அம்மாவுக்கும் ரேடியோவில் பிடித்தது அந்த ஒன்றுதான். என்ன ஆயிற்று என்றால், திடீரென்று நிகழ்ச்சியின் இடையே கரகரத்துப் பின் ஒரே அடியாக அடக்கமாகி விட்டது ரேடியோ. அதிலிருந்து எந்த சப்தமும் பிறகு வரவேயில்லை. பிறகென்றால், ரேடியோ முருகேசனிடம் எடுத்துப்போகும் வரை அப்படித் தானாயிற்று. அப்பா, ரேடியோவிற்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அக்காவை அதன் தலையில் தட்டச் சொன்னார். ம்கூம்! பிறகு அவரே ஈசி சேரை விட்டு எழுந்து வந்து தட்டோ தட்டென்று தட்டிப் பார்த்தார். அதுவோ சர்ரென்று உறுமி அடங்கியது. அக்காவிற்கு ஒலிச்சித்திரம் கேட்கும் ஆவலில், நின்று போனதால், கண்ணீர் முட்டிற்று. அவசரமாக கோடிவீட்டு ரேடியோவிற்கு ஓடினாள். அம்மா எரிச்சலோடு மீண்டும் அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள். அப்பா ஒரு திருப்புளி வைத்து ஏதேதோ திருகிப்பார்த்தார். சுவிட்சைப் போட்டார். பிறகும் ஏதும் ஆகவில்லை.

                ஆனால் ஒன்று ஆனது. அது சிங்கப்பூர் சோனி கம்பெனி டிரான்சிஸ்டர் என்று முன்பே சொன்னேன். ஆகையால் அதன் வோல்டேஜ் டிவைசை கழற்றியதால் அதாவது, அந்த ஊர் மின்சார அளவிற்கு தகுந்தாற்போல மாற்றும் விசையை மாற்றி விட்டதால் (தெரியாத்தனமாய் அப்பா) அதன் டிரான்ஸ்பார்மர் புகைந்துவிட்டது. இதை முருகேசன்தான் சொன்னான். அப்படி சொல்லும்போதே அவன் ரேடியோ பெட்டியை பலவிதங்களில் திருப்பி ஆராய்ந்தான். ஒரு தேர்ந்த விஞ்ஞானி போன்ற அவனது பாவ்லா எனக்கு எரிச்சலூட்டியது. அது மட்டுமல்ல இது நான் விளையாடப்போகிற நேரம். கையோடு சரிசெய்து எடுத்துவரச் சொல்லி வீட்டில் உடனே முருகேசனிடம் அனுப்பி விட்டார்கள்.

                முருகேசனின் கண்கள் மின்னின. "அருமையான செட்' என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டான். பிறகு என்னைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினான். இது முதல்நாள் மட்டுமல்ல, ஏறக்குறைய ஒருமாதம் வீட்டுக்கும் அந்த அடைசல் கடைக்குமாக அலைந்திருந்தபோதும் முருகேசன் இதைத்தான் செய்தான்.

                அப்பா பாட்டு கேட்கும் ஓய்வு நேரம் வந்தால் எரிச்சலடைவார். விடுமுறை நாட்களில் இது இன்னும் அதிகமாயிற்று. ஒலிச்சித்திர நேரத்தில் அக்கா, கோடி வீட்டிற்குப் போனாள். அம்மா பேன் குத்தினாள். ஆனால் என் பொழுது முருகேசன் கடையில், அவன் உதட்டுப் பிதுக்கத்தில் போயிற்று. அதில் மட்டுமா அவன் கண் பார்வையின் சாடையிலும் போயிற்று.

                அந்தப் பார்வை தெருவைக் கடந்து எதிர்வீட்டு மஞ்சுளாவுக்காக - மஞ்சுவுக்காக ஆவலுடன் நின்றது. அவன் சொல்லாதது அது. சொன்னது மற்றொன்று. அது செவி நோக்கு அவனுக்கு கே.எஸ்.ராஜா என்றால் போதும். முருகேசன் ரேடியோ முருகேசன் ஆனதே கே.எஸ்.ராஜாவால்தான்.

                முதலில் முருகேசன் குடும்பம் எங்கள் தெருவில்தான் இருந்தது. குடும்பம் என்றால் முருகேசன், அவனது தங்கை, தாய் இவ்வளவுதான். அப்பா இல்லை. ஆனால் அவனது காதோடு ஒரு சின்ன டிரான்சிஸ்டர் இருக்கும் வெண்மை நிறத்தில். முருகேசன் என்னைவிட சில வயது மூத்தவன். கொஞ்சநாள் எங்களுடன் பள்ளிக்கூடம் வந்துகொண்டிருந்தவன், பிறகு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேறு ஏதேதோ வேலைகளுக்கு போய்க் கொண்டிருந்தான்.

                ஆரம்பத்தில் ஒரு மளிகைக் கடையில் இருந்தான். வேலை நேரத்திலும் அவன் ரேடியோ கேட்டுக் கொண்டிருப் பதாக வாடிக்கையாளர்களிட மிருந்து புகார் வந்ததால் முதலாளி துரத்தி விட்டுவிட்டார்.

                ரேடியோ காதோடு இருக்கும் வரை அவனால் எதுவும் செய்வதாக இருக்கவில்லை. ரேடியோ, என்பதைவிட கே.எஸ்.ராஜா என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது அல்ல, ஒரு காலத்தில் கீழத்தஞ்சை மாவட்டம் முழுமைக்கும் ஏன் தென்கடலோர மெங்கிலும் இலங்கைத்தீவு வானொலியும் அதன் நிகழ்ச்சிகளும் ஏன் அதன் அறிவிப் பாளர்களும் சினிமா கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்களைக் கொண்டிருந் தார்கள், பேசப்பட்டார்கள்.

                முருகேசனும் அதற்குத் தப்ப வில்லை என்றாலும், இது விடயத்தில் அவனுக்கு கூடுதல், அதிஆர்வம், வெறி. வானொலி நிகழ்ச்சிகளைவிட, பாடல், இசை என்பதை யெல்லாம்விட வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் கே.எஸ். ராஜாவின் மதுரக் குரல் ஒன்றே போது மென்பான்.

                எங்களோடு கில்லி விளையாடிக் கொண்டிருப்பவன் திடீரென்று காணாமல் போய்விடுவான். மறுநாள், பிள்ளையார் கோவில் அரசமரத்தடியில் நின்று மறித்தால், "உங்கள் விருப்பம் நிகழ்ச்சிடா. மூன்று மணிக்கு மறந்தே போச்சு. மதுரக்குரலோன்ங் கறதே தோணல, கோவிச்சுக்காதடா' என்பான்.

                முருகேசன் ரேடியோ முருகேசன் ஆனது இப்படித்தான். ரேடியோ திருத்தம் செய்ய, ரேடியோ கூடவே இருந்து விடுவது என்று இந்தத் தொழிலை அவன் விரும்பி தேர்ந்திருக்கலாம். சொந்தக்கடை. முருகேசன்தான் இங்கு ராஜா. இங்கிருந்து அவனை யாரும் துரத்திவிட முடியாது. அவன்தான் துரத்திவிடுவான். ராஜாவின் குரல் வானொலியில் வரும்போது ரிப்பேருக்கு வரும் ரேடியோவில் ஏதாவதொன்றை சத்தமாகப் பாட வைப்பான். தவறு, அவனது அறிவிப்பாளர் பேசும்போது கை தானாகவே சென்று விசையைக் கூட்டும். அதுமட்டுமல்ல, முருகேசன் இன்னொன்றும் செய்வான். தனக்கு விருப்பமான பாடலை ஒலிபரப்பக் கேட்டு வானொலிக்கு எழுதிப்போடுவான். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அல்ல. அவனது அறிவிப்பாளர் பேசும் நாளுக்கு தகுந்தாற் போல அனுப்பி வைப்பான்.

                அப்படி ஒருநாள் முருகேசன் பெயரை அவனது ராஜா ஒரு பாடலை விரும்பிக் கேட்டதாக குறிப்பிடும்போது அது, பத்தோடு பதினைந்தாக இருந்தது என்றாலும், முருகேசன் முகத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. ஏதோ தன் பெயரை மட்டுமே விசேடமாக குறிப்பிடுவதைப்போல குதூகலித்தான்.

                அறிவிப்பாளர் திலகமாக அன்றைக்கு கே.எஸ்.ராஜா உலாவந்தது உண்மைதான். சனி, ஞாயிறு காலை, மாலை நேரங்களில் ராஜா நடத்தும் "திரை விருந்து' கடல்கடந்தும் தமிழகக் கரையோரங்களில் பிரபலம். முருகேசன் பல்துலக்கி குளிக்கிறானோ இல்லையோ... தவறாமல் ரேடியோ முன்னால் இருப்பான். "வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில் குழுமி இருக்கும் அன்பு இரசிக பெருமக்களுக்கு அன்பு வணக்கம்!" என்று ராஜா உற்சாகக் குரலில் ஆரவாரமாக ஆரம்பிக்கும் போதே உஸ் என்று உதட்டில் கைவைத்து எச்சரித்து விடுவான். தொந்தரவு அதிகமானால் ரேடியோவை எடுத்துக் கொண்டு தொலைவுக்குப் போய்விடுவான்.

                மூச்சு விடாமல் திரிசூலம் அல்லது மீனவநண்பன் வெளியாகும் இலங்கை திரையரங்குகளின் பெயரை ராஜா கடகடவென உச்சரிக்கும்போதே கேட்டுக் கொண்டிருக்கும் முருகேசன் திரும்பி நம்மை ஒருவித பெருமிதத்துடன் பார்ப்பான், பாருங்கள்... ஆனால் அதை யெல்லாம் குலைத்து சிதைப்பதுபோல அவனது கடைக்கு எதிரே வழமையாக தூங்கிக்கொண்டு நிற்கும் கழுதைகளில் ஒன்று சமயம் தெரியாமல் கத்தி தொலைக்குமானால், அப்படியொரு ஜென்ம வெறியோடு துரத்திக் கொண்டோடுவான்.

                கழுதைகள் எல்லாம் ஏதோ ஒன்று சேர்ந்து கே.எஸ்.ராஜாவின் குரலுக்கு பொறாமை கொண்டு கத்துவதாகவே முருகேசன் ஆவேசப்பட்டிருக்கலாம். எனினும் அதுபோல முருகேசன் ஆச்சரியமாக கோபப்படாத தருணங்கள் இருப்பதையும் இத்தனை நாளில் நான் அறிந்து கொண்டிருந்தேன். அது அவனது ராஜா ரேடியோவில் வந்து தென்றலாக வருடிக்கொண்டிருக்கும்போது. மஞ்சு தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டு தனது வளர்ப்பு நாய்க்கு சாப்பாடு வைக்க கர்ண கொடூரமாக கத்தி கூப்பாடு போடும் போது. நினைத்துக்கொள்ளும் நேர மெல்லாம் அந்த நாய் குமுறி குலைக்கும் போது முருகேசன் கோபப்படுவதாய் இல்லை. ராஜாதான் அப்போது அருகில் யாருமில்லாத ரேடியோவிலிருந்து அபத்தமாக பேசிக்கொண்டிருப்பதாகத் தோன்றும்.

                எனினும் ராஜா மீது முருகேசனுக்கு அபாரமான பிடிப்பு இருந்தது. ரேடியோவைவிட ராஜா மீது இருந்த காதலே அவனுக்கு, ரேடியோவையும், அதன் உள் உறுப்புகள் மீதான ஆர்வத்தையும் உருவாக்கியிருக்கலாம். முருகேசனின் ராஜா மீதான ஆர்வத்தை பல மணிநேரங்கள் ஒருவித வாதையுடன் அவன் உடனிருந்து அவதானித்திருக்கிறேன்.

                திரைவிருந்தாகட்டும், நீங்கள் கேட்டவையாக இருக்கட்டும் முருகேசனுக்கு சினிமாவிலெல்லாம் அவ்வளவு விருப்பம் இருப்பதாகச் சொல்ல இயலாது. ராஜா வந்து பேசிவிட்டு ஒரு படச்சித்திரத்தையோ, பாடலையோ போட்டுவிட்டுப் போனாரென்றால் அவர் வந்து மீண்டும் பேசும் வரை இடையே முருகேசனும் விலகி வேறு வேலைகளில் இறங்கிவிடுவான். ஆனால் ராஜா செய்யும் விளம்பரங்களைக்கூட பாடலைப்போல தலையாட்டி ரசிக்கக்கூடியவன் நம்ம முருகேசன்.

                ராஜாவின் பாணியில், பேசிப் பார்க்கவும், பல நாட்களாக முயற்சி செய்து பார்த்திருந்தான், "என்ன சொல்கிறீர்கள் திருப்தியா?!" என்பான். அதையே கடைக்கு வரும் தனது கஸ்டமரிடமும் மாற்றி போட்டுக் கேட்பான். (உங்கள் ரேடியோ பற்றி) "என்ன சொல்கிறீர்கள் கண்ணையா" என்பான். வரும் நபர்கள் திருதிருவென்று முழிக்க கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கோ எரிச்சல் பற்றிக்கொண்டு வரும்.

                ரேடியோவை சரிபண்ணித்தராது அலையவிடும் கடுப்பில், அவனிடம் ஒருநாள் அன்பு அறிவிப்பாளர் அப்துல் அமீது போல உங்கள் ராஜாவுக்கு உதயாவின் (பிறகான காலங்களில் லலிதா, அம்பிகா) பாட்டுக்குப் பாட்டு போல நடத்த வருமா என்று கேட்டுவிட்டேன், ஏதோ என்னுடைய கொஞ்சம் ரேடியோ கேட்கும் அறிவைக் கொண்டு. அவ்வளவுதான் மறுநாளே ரேடியோ திருத்தப்பட்டு வீட்டுக்கும் வந்து விட்டது.

                பிறகு முருகேசனை சந்திக்க வாய்த்தது, அது 83 ஆம் ஆண்டின் ஜ÷லை கலவரத்துக்குப் பிறகு என்று நினைக்கிறேன். (இலங்கையில்) மிதி வண்டியில் வேகமாக வந்து என் வீட்டில் கால் ஊன்றி நின்றிருந்தான். பதட்டத்தில் அவனது உடல் லேசாக நடுங்கிய வாறிருந்தது. "உனக்குத் தெரியுமா? கொஞ்ச நாளாகவே ராஜா ரேடியோவில் வார தில்லை. உடம்புக்கு ஏதும் பிரச்சனை யோன்னுயிருந்தேன்... நடந்தது தெரியுமா?! ராஜாவை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல வெச்சிருக்காங்களாம்...! எல்லாம் உங்க அப்துல்அமீது பண்ற வேலை" என்று பல்லை நறநறத்தான் கோபம் குறையாமல்.

                "எங்கள் அமீது!' எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அன்றைக்கு நான் விளையாட்டாகச் சொன்னதையிட்டு என்னை அமீது அணிக்கு பிரித்துவிட்டான் நினைவு வைத்திருந்து முருகேசன். உண்மையில் ராஜாவின் குரல் இப்போதெல்லாம் இலங்கை வர்த்தக சேவையில் வருவதாகத் தெரியவில்லை. முருகேசனை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருந்தது. முன்புபோல் அவன் உற்சாகமாக இல்லை. அதற்குக் காரணம் மஞ்சு. வீட்டை காலிப்பண்ணி போனதாக இருக்கலாம் என்றே நினைத்தேன். ஆனால் அது முற்றிலுமான உண்மை அல்ல.

                இப்போதெல்லாம் முருகேசன் கடை கூட்டம் குறைந்திருந்தது. திருத்த வேலைகளுக்கான ரேடியோ பெட்டிகளும் நிறைய இல்லை. ஒரு வேளை இலங்கை வர்த்தக சேவை ஒலிபரப்பு நிறுத்தப் பட்டதனால் இருக்கலாம் அல்லது முருகேசனின் முன்புபோல ஆர்வ மில்லாமையுமாக இருக்கலாம்.

                அது 86ஆம் ஆண்டு பிப்ரவரியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு பொழுதுபோகாமல் டிரான்சிஸ்டரை திருப்பிக் கொண்டிருந்தேன். ஒரு வினோதமாக, விவிதபாரதியின் பலகீனமான வர்த்தக ஒலிபரப்பில், திடீரென்று ராஜாவின் குரல் ஒலித்தது.

                முருகேசனைத் தேடி ஓடினேன். இப்போது கடையை ஒரேயடியாக மூடி விட்டதாகச் சொன்னார்கள். முருகேசன் ராஜாவைத்தேடி ஊர்ஊராகத்தான் போய்க் கொண்டிருந்தான்... போய்க் கொண்டிருக் கிறான். இங்கிருந்து கரியாப்பட்டினம் அல்லது தில்லைவிளாகம் என்று தேடிப் போய் கோயில் ஆர்க்கெஸ்ட்ராவில் நள்ளிரவுவரை உட்கார்ந்திருப்பான். பாடகர்கள் சினிமா பாடல்களை பழசு, புதுசு என்று கலந்து பாடிவிட்டு ஒரு சிறு இடைவேளையாக, மிமிக்கிரிக்காரர்கள், பலகுரல் மன்னன்கள் வருவார்கள். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர். போல என்று பேசுவார்கள். இதில் ராஜாவுக்கும் நிச்சயமான இடம் ஒன்று உண்டு. பல குரல் மன்னர்களுக்கு, மதுரக் குரலோனின் குரலில் பேசுவதென்பதே ஒரு சவால்தான். முருகேசன் அந்தக் குரலில் ராஜாவை சந்திப்பதற்கென்றே போகத் துவங்கி யிருந்தான். அவர்களும் வருவார்கள்; ராஜா போல ஏதேதோ பேசுவார்கள். ஆனால் இது எதுவும் முருகேசனை திருப்திப் படுத்து வதாய் இருப்பதில்லை. "அவன் என்னடா மூஞ்சூரு போல இருந்துகிட்டு ராஜா மாதிரின்னு பேசுறான். மூஞ்சில அப்பனும் போல வந்துச்சுடா!" என்பான். அப்படி சொன்னாலுமே, மறுபடியும் ராஜா குரலுக்குக் கிளம்பிவிடுவான்.

                இப்படியான நாளில்தான் ராஜா சிறையிலிருந்து விடுபட்டு, பறந்து வந்து தமிழகத்தில் கால் பதித்திருந்தார். அவரது பேட்டியும், புகைப்படமும் "ராணி' வாரந்தரியில் வந்திருந்தது. ராஜாவின் தோற்றத்தை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். முருகேசனும் இப்போதுதான் பார்த்திருப்பதாகக்கூடும். ஒரு ரவிச் சந்திரனைப் போன்றோ, ஜெய்சங்கரைப் போன்றோ ராஜாவின் தோற்றத்தை கற்பனை செய்திருந்த பலரில் முருகேசனும் இருந்திருக்கலாம். அவனோ "குயிலுக்கு குரல்தான் அழகு" என்பான். தமிழ் நாட்டில் இருக்கும் ராஜாவை சந்தித்து கைகுலுக்கும் புகைப்படம் ஒன்றை அவருடன் எடுத்து விடவேண்டும் என்பதே அவனது மூர்க்கமான திட்டமாக இருந்தது.

                பிறகான காலங்களில் அது நிறை வேறியதா என்று தெரிவதற்கு முருகேசன் ஊரில் இல்லை. அவனது கடை இருந்த இடத்தில் டெலிவிசன் ரிப்பேர் கடை ஒன்று வந்துவிட்டது. மஞ்சு இருந்த வீடும் பலமாடி குடியிருப்பாக மாறி விட்டிருந்தது. கழுதைகளும், ரேடியோ டிரான்சிஸ்டர் களும், இலங்கை வானொலி ஒலிபரப்பு களும் அரிதாகிவிட்ட காலம் ஒன்றில்தான், ராஜாவின், அந்த மதுரக்குரலோனின், இறப்புச் செய்தியை கேள்விப் பட்டிருந்தேன். முருகேசன் நினைவை தவிர்க்க இயலவில்லை.

                ராஜாவின் இறப்பு ஒரு செய்தியாக வெளிவந்து வெகு காலங்களுக்குப் பிறகே அவரும், அவரது மதுரக்குரலும் அது வெளிப்பட்ட குரல்வளையும் எப்படி நசுக்கி நெறித்து இறுக்கி நிறுத்தப்பட்டது என்பதை அறிந்து வருத்தப்பட நேர்ந்தது. இலங்கையில் இனக் கலவரங்களில் முற்றிய தீவிரவாத குழுக்களால் ராஜாவின் குரல் அலைக்கழிக்கப்பட்டதும், போட்டி குழு மோதல்களின்போது சகபோராளிகளின் சரணடையும் அறிவித்தலுக்கும், எச்சரிக் கைக்குமாக தெரு, தெருவாக ராஜாவின் குரல் சிராய்ப்புடன் இழுத்துச் செல்லப் பட்டதும், இயக்க மோதல்களில், யுத்த இரைச்சலின் நடுவே மதுரக் குரலோனின், சிறகடித்துப் பறந்த வானலையின் வசீகரக் குரல் ஒரு மெல்லிய சிறகு போன்றே பிய்த்து உதறப்பட்டதுமாக அலை கடலோரம் கேட்பாரற்று ஓய்ந்து ஒதுங்கி யதுமாக... ராஜாவை முருகேசன் பிறகெப் போதும் ஒரு இயல்பான புன்னகையோடே கூட கண்டிருக்க இயலாது என்றே தோன்றிற்று.

நன்றி: http://www.keetru.com

வானொலி இயக்குநர் வெள்ளரி நிலத்திலிருந்து...

வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு

பரீஸ் கர்பாதவ்
கதாசிரியர் பரீஸ் கர்பாதவ்
வெள்ளரி நிலத்தில் சங்கடம் நேர்ந்து விட்டது. வெள்ளரி நிலம் என்பது ஆர்க்டிக் (வடதுருவக்) கடலில் எங்கோ தொலைவில் தன்னந்தனியாக இருக்கும் ஒரு தீவு. உலக வரைபடத்தில் இந்தப் பெயரைத் தேடுவது வீண் முயற்சியாகும். வரைபடத்தில் இந்தச் சிறு புள்ளிக்கு உள்ள பெயர் இன்னொலியும் கவிநயமும் கொண்டது. ஆனால் துருவப் பரப்பிலுள்ள வானொலி இயக்குநர்கள் இதை வெள்ளரி நிலம் என்றே பிடிவாதமாக அழைத்துவருகிறார்கள். அவர்கள் கருத்தை மாற்றுவது முடியாத காரியம்! இந்த வானொலி இயக்குநர்களே இப்படித்தான். ஒரே கிண்டல் பேர்வழிகள். சிறிய அறைகளுக்குள் அடைபட்டிருப்பதால் அவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டிருக்கலாம்!
ஆயினும் இந்த விந்தைப் பெயருக்கும் ஒரு வரலாறு உண்டு. தீவு சமீபத்தில் தான், மிக அண்மையில் தான், கண்டுபிடிக்கப்பட்டது. தேடுதல் குழுத் தலைவன் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தின் வரைபடத்தை விரைவாகத் தயாரித்து (பனி உடைக்கும் கப்பலைச் சுற்றிலும் விடாது படிந்த பனிக்கட்டி அவனை அவசரப்படுத்தியது), அக்கணமே இப்படி அறிக்கை அனுப்பினான்: "புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தீவு வெள்ளரிக்காய் வடிவாக இருக்கிறது". அந்தப் பகுதிகளில் எந்த விஷயம் ஆனாலும் வானொலி இயக்குநர்கள் வாயிலாகத் தான் சொல்ல வேண்டும். ஆகவே அவர்கள் ஆர்க்டிக் தீவுக் கூட்டத்தின் இந்தப் புது பகுதிக்கு வெள்ளரி நிலம் என்று பெயர் வைத்தார்கள்.
மிகவும் தொலை வடக்கில் இருந்த இத்தீவு விரைவிலேயே அதிக முக்கியத்துவம் பெற்றது. பனிக் கட்டி மூடிய ஆர்க்டிக் பெருங்கடலின் பல இரகசியங்களை இனித் துருவி ஆராயத் தங்களால் முடியும் என்று மனநிறைவுடன் ஆய்வாளர்கள் கைகளைத் தேய்த்துக்கொண்டார்கள். தங்கள் ஆய்வுக்கு இன்னொரு நிலையம் கிடைத்த மகிழ்ச்சியில் பருவ நிலை முன்னறிவிப்பாளர்களும் இது குறித்துப் பெருமூச்சு விட்டார்கள். இளம் துருவ ஆராய்ச்சியாளர்கள் காதலியைப் பற்றிக் கனவு காண்பது போல வெள்ளரி நிலத்தையும் அதன் ஒப்பற்ற கவர்ச்சிகளையும் பற்றிக் கனவு கண்டார்கள். அங்கே சென்று அதை வெற்றி கொள்ள எத்தகு துணிகரச் செயல்களையும் புரியத் தயாராக இருந்தார்கள். "டிக்ஸன், திக்ஸீ, செல்யூஸ்க்கின் இவை பற்றி என்ன சொல்ல! அவை முழுதும் ஆராயப் பட்டு விட்டன. அங்கே போவதும் ஒன்றுதான், வீட்டில் இருப்பதும் ஒன்றுதான்" என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, "இதுவோ… இது வேடிக்கையில்லை… எழுபத்து எட்டாவது அட்சமாக்கும்…" எனக் கிளர்ச்சி பொங்கக் கிசுகிசுப்பார்கள்.
இவ்வாறாக, வெள்ளரி வடிவில் அமைந்த அத்தீவில் மக்கள் குடியேறினார்கள். கன்னி வெண்பனி மீது, கிண்ணங்கள் போன்று வளைவான கரடிகளின் பெரிய அடித் தடங்களுக்கு அருகே மாந்தர்களின் மனவுறுதியைக் காட்டும் கூர்ந்த காலடிச் சுவடுகள் தென்பட்டன. கட்டடங்கள் எழுந்தன. பனித் திடல்களில் வாழ்வு தளிர்த்தது. மக்களின் பழக்க வழக்கங்களும், களியும், கவலையும். கிளர்ச்சியும் ஏற்கெனவே நிலை பெற்று விட்டன. பள பளக்கும் செப்புக் காப்பிப் பானையில் காப்பி கொதிக்கும்; இரவு நேரத்தில் சதுரங்க ஆட்டம் மும்முரமாய் நடந்தது… ஆனாலும் சங்கடமும் வந்து சேர்ந்தது. பார்க்கப்போனால் உண்மையில் அது இன்பந்தான். ஆம், அது இன்பந்தான்!… ஆனால் விளைவு என்ன ஆகும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. விஷயம் இதுதான். ஒரு பெண் பயங்கரமாக, காட்டுக்கத்தாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். அவளருகே நின்ற வெளிறிய கொழுத்த ஆடவனது கரங்கள் செய்வகையறியாது நடுங்கிக் கொண்டிருந்தன. நெற்றியில் முத்துமுத்தாய் வியர்வைத் துளிகள் உருண்டோடின.
சோவியத் ஆர்க்டிக் பிரதேசங்களில் தொலை தூரத் தீவுகளில் வசிப்பவர்கள், தன்னந்தனியாக, அண்டை அயலாரைப் பற்றிய தகவல் எதுவுமின்றி வாழ்கிறார்கள் என்று நினைப்பது தவறு. மிக அண்மையில் உள்ள அயலார்களுக்கிடையே, அக்கம் பக்கத்துத் தீவுகளுக்கிடையே இருக்கும் தொலைவு ஆயிரம் கிலோமீட்டர்கள், அதுவும் எத்தகைய பிரதேசத்தில் என்பது உண்மையே! ஆயினும் வானொலி இயக்குநர்கள் இருக்கிறார்களே! தொலையிலுள்ள வெள்ளரி நிலத்தில் ஒரு பெண் பிரசவ வேதனையால் துடித்ததை ஆர்க்டிக் முழுவதிலும் பரப்பி விட்டார்கள். ஆர்க்டிக் வாசிகள் அனைவரும், நார்த்விக் சுரங்கக்காரர்கள், செல்யூஸ்க்கின் விஞ்ஞானிகள், டிக்ஸன் வானொலி இயக்குநர்கள், திக்ஸீ துறைமுகக் கொத்தர்கள், பேலிய் தீவில் வாழ்பவர்கள் ஆகிய, கடுகடுப்பும் அச்சமின்மையும் கொண்ட இம்மனிதர்கள் எல்லாரும், தாங்களே கர்ப்பிணியின் படுக்கைக்கு அருகே, இருமுவதற்குக் கூட அஞ்சியவர்களாய், குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கி, அதன் முதலாவது அதிகாரக் கத்தலைக் கேட்டு, தந்தையர் போன்று முறுவலிக்கக் காத்திருப்பவர்கள் போன்று, இந்தப் பிரசவத்தின் முடிவை மூச்சுக்கூட விடாமல் எதிர்பார்த்திருந்தார்கள்.
"என்ன சேதி? என்ன ஆயிற்று?" என்று காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் ஒருவரையொருவர் விசாரித்த வண்ணமாயிருந்தார்கள்.
கர்ப்பிணியோ கூச்சலிட்டவாறு இருந்தாள். அவளது கூக்குரல்கள் ஆர்க்டிக் பிரதேசம் முழுவதிலும் சென்று ஒலிப்பது போலத் தோன்றியது. அவளுடைய கணவன், இத்தகைய சந்தர்ப்பத்தில் எல்லா ஆண்களும் நடந்து கொள்வது போலவே, செய்வது அறியாது அவளருகே நின்று கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தான். மருத்துவரோ, ஒன்றும் செய்ய முடியாமல் பதற்றத்துடன் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தார். அவர் பேறு காலம் பார்க்கும் மருத்துவர் அல்ல. அத்துடன் குழந்தையும் கருப்பையில் குறுக்காகக் கிடந்தது – இது அசாதாரண பிரசவம்.
அன்றைய தினம் உளத் தவிப்பு நிறைந்த செய்தி ஒன்று வெள்ளரி நிலத்திலிருந்து வானொலி மூலம் ஒலி பரப்பட்டது.
"காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்! ஏதாவது செய்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றுங்கள்" என்று கெஞ்சினான் அவளுடைய கணவன்.
என்ன செய்வது? செய்தியைப் பெற்றுப் பதிவு செய்த வானொலி இயக்குநர் வேதனையுடன் முகத்தைச் சுளித்து, ரிசீவரைக் கழற்றி வைத்துவிட்டு, நிலையைத் தலைவனிடம் சொன்னான்: "என்ன செய்யலாம்? பாவம் நிறைமாத கர்ப்பிணி… குழந்தை வேறு ஆபத்தில் இருக்கிறது…"
நிலையத் தலைவனும் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளனும் அவளுக்கு எப்படி உதவலாம் என்பது பற்றி ஆலோசித்தார்கள்… மருத்துவரை விமானத்தில் ஏற்றி அனுப்பவும் வகையில்லை. நிலையத்தில் ஒரு விமானம் கூடக் கிடையாது. அத்துடன் குளிர்காலம் வேறு. வடதுருவ இரவு. பறக்கத்தான் முடியுமா? கட்சிச் செயலாளன் புருவத்தைச் சுளித்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றான்.
arctic-2மருத்துவரின் பெயர் ஸெர்கேய் மாத்வேயிச். அவரைப் பற்றி என்ன சொல்வது? சாதாரணமான மருத்துவர். எதிலும் வியப்போ, மனத்தாங்கலோ, அச்சமோ அடையாத வகை ஆட்களில் ஒருவர். அவரது தோற்றமும் மிகச் சாதாரணமானது: அளவான வயிறு; அறுவை மருத்துவருக்கு இயல்பான பெரிய சிவப்புக் கரங்கள்; நல்லியல்பு தொனிக்கும் கட்டைக் குரல்; வழுக்கைத் தலையை மறைத்து வாரி விடப்பட்ட அருகிய முடி; கொம்புப் பிரேம் போட்ட கறுப்பு மூக்குக் கண்ணாடி; உடை, கைகள் எல்லாவற்றிலும் கார்பாலிக் அமிலம், மருந்துகள், மருத்துவ மனை வாடை – ஆக ஒரே வார்த்தையில் சொன்னால், மருத்துவருக்கு உரிய தோற்றம், எனவே, தங்க ஜரிகையில் நங்கூரச் சின்னம் பொறித்த கடற்படை உடுப்பு அணிந்து அவர் பொது அறையில் காணப்பட்டால், "இவர் ஏன் வெள்ளை மருத்துவ உடுப்பு அணியவில்லை?" என்று பார்ப்பவர்கள் நினைப்பதுண்டு.
அவரிடம் இருந்த ஒரே அசாதாரண இயல்பு என்னவென்றால் அவர் ஆர்க்டிக் பிரதேச மருத்துவரான போதிலும் மிகச் சாதாரணமாக இருந்தார் என்பதே. இருப்பினும் ஆர்க்டிக் மருத்துவர், ஒரு வகையில் கவிதைப் பாங்கு கொண்டவர் ஆயிற்றே. வரைபடத்தைச் சற்றே உற்றுப் பார்த்தால், வடதுருவ ஆராய்ச்சிப் பயணிகளின் நினைவுச் சின்னங்களாக வரைபடத்தில் விளங்கும் பெயர்களில் மருத்துவர்களின் பெயர்களையும் காணமுடியும்: டாக்டர் ஸ்தாரகாதொம்ஸ்க்கிய் தீவு, டாக்கர் இஸாச்சென்கோ முனை என்பன போல. டிக்ஸன் தீவில், அடக்கம் வாய்ந்த வட துருவ வீரரான உதவி மருத்துவர் விளாதீமிரவின் கல்லறையைச் சுற்றிக் காட்டுவார்கள்; அதற்கு வணக்கம் செலுத்துவோம். வ்ராங்கெல் தீவை அடைந்ததும், ஆர்க்டிக் பிரதேசத்தில் மக்களுக்குத் தீச்செயல் புரிந்து வந்தவனான ஒருவனுடன் போராடி உயிர்துறந்த வீர மருத்துவர் வுல்ப்ஸனின் சமாதியை பயணிகளே எல்லாவற்றுக்கும் முன்பு தேடிக்கண்டு அஞ்சலி செலுத்துவார்கள்.
ஆனால் ஸெர்கேய் மாத்வேயிச்சிடமோ இத்தகைய கவிதைப் பாங்கு மருந்துக்குக் கூடக் கிடையாது. அவர் சர்வ சாதாரணமான, விவகாரப் போக்குள்ள மருத்துவர். பனிப்பாளங்கள், புயல்கள், ஆடிக் குலுங்கும் கப்பல் மேல் தளம், டப்பா உணவு, கடலின் உவர் நாற்றம் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் துணிச்சலான கப்பல் மருத்துவர்கள் போல் கூட இல்லை அவர். ஒருவேளை அவர் மருத்துவ ஆராய்ச்சியாளரோ, விஞ்ஞானியோ?
அண்மைக் காலத்தில் மருத்துவ விஞ்ஞானிகள் வடதுருவப் பிரதேசங்களுக்கு விருப்பத்துடன் செல்லுகிறார்கள். உயிரியல், ஓரளவு விலங்கியல், தாவர இயல் ஆகியவற்றில் எதிலாவது ஈடுபாடு உள்ளவர்கள். இவர்களில் சிலர் இறால்களையும், விசித்திர நிலநீர் உயிர்களையும், பல்லிகளையும் சேகரித்து, ஸ்பிரிட் குப்பிகளில் இட்டு வைத்திருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்; வேர் முதல் முடி வரை உள்ளங்கை அளவான குட்டை வில்லோ மரங்களை உலர்த்தி ஆல்பத்தில் பொருத்தி வைத்துக் கொள்வார்கள் வேறு சிலர்; இன்னும் சிலரோ, வட துருவச் சூழ்நிலையில் நோய்கள் பற்றியும், மக்களின் நடத்தை, உளப்போக்கு பற்றியும், நோய் தொற்றுவதற்குரிய வாய்ப்புக்கள் பற்றியும், துருவ இரவு, துருவப் பகல் ஆகியவை மனிதன் மீது விளைக்கும் தாக்கம் பற்றியும் ஆராய்ச்சி செய்வார்கள்…
ஸெர்கேய் மாத்வேயிச், இறால்களை ஸ்பிரிட்டில் இடவுமில்லை, பாசிக் காளான்களை உலர்த்தவும் இல்லை. தமது நாட்குறிப்பில் "மருத்துவத் தொழில் சம்பந்தமான அக்கறைக்குரிய சிறு குறிப்புக்களை"க் கூட எழுதி வைத்துக்கொள்ளவில்லை. ஒரு தரம் ஏதோ செய்ய முயன்றார், ஆனால்… நேரமின்மையால் விட்டுவிட்டார்: நோயாளிகள், கவலைகள், மருத்துவமனை. அவர் ஆர்க்டிக்கில் ஆண்டுகளைக் கழிப்பதனால் விஞ்ஞானம் புதிய கண்டுபிடிப்புகளால் அதிக வளம் அடையாது என்பது எல்லாருக்கும் தெளிவாகப் புலப்பட்டது.
Communismகாந்த இயல் அறிஞனான மோதரவ் என்ற இளைஞன் கப்பலிலேயே ஸெர்கேய் மாத்வேயிச்சைச் சந்தித்தான். அறிவியலின் பொருட்டே அத்துறையில் ஊக்கம் காட்டுபவர்களும், வட துருவ நிலையங்களில் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு மிகுதியும் ஏற்ற வாய்ப்பு உண்டு என்று கருதுபவர்களும் ஆகியவர்களில் மோதரவும் ஒருவன். குதூகலப் புன்னகையுடன் மருத்துவரிடம் சொன்னான்:
"உங்கள் நோக்கு எனக்குப் புரிகிறது. வடதுருவத்தில் வேலை செய்கிற எங்கள் அனைவரையும் பற்றிய உங்கள் கருத்தும் எனக்குப் புரிகிறது. உங்கள் கண்களுக்கு நாங்கள் எல்லாரும் சோதனை விலங்குகள் தாம். எங்களை ஆராயப் போகிறீர்கள், அப்படித்தானே? அவசர வேலைக்கு முன்பும் பின்பும் எங்கள் நாடித் துடிப்பைக் கணக்கெடுப்பீர்கள், துருவ இரவின் போதும் பகலின் போதும் எங்கள் இருதயங்கள் எப்படி அடித்துக்கொளுகின்றன என்று கேட்பீர்கள். பின்னர் அறிவியல் ஆராய்ச்சி நூல் எழுதி வெளியிடுவீர்கள், இல்லையா? சரிதானே விலங்காகப் பயன்படத் தயாராக இருக்கிறேன்!"
ஸெர்கேய் மாத்வேயிச் அவனை மிரண்டு நோக்கினார், குழம்பினார், பின்பு இது மாதிரி ஏதாவது செய்வதற்குத் தான் திட்டமிட்டிருப்பதாகக் குழற்றினார். ஆனால் அவர் அப்போது தவித்த தவிப்பைக் கண்ட மோதரவு, 'சோதனை விலங்கு'கள் பற்றியோ அறிவியல் ஆய்வு பற்றியோ அவரிடம் மறுபடி பேசவே இல்லை. நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வது, கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் பார்ப்பது, பல் பிடுங்குவது, மூலத்திற்கு அறுவை செய்வது ஆகியன மட்டுமே அவர் இங்கு வந்ததன் ஒரே நோக்கம் என்று தெரிந்தது.
இவற்றிற்காக அவருக்கு மருத்துவமனை தேவைப் பட்டது. மருத்துவமனை இல்லாத மருத்துவன் "கப்பல் இல்லாத கொலம்பஸ்" மாதிரி என்று அவர் சொல்வதுண்டு. அதுவும் ஏனோ தானோவென்று பெயரளவிற்கு அது இருந்தால் அவருக்குப் போதவில்லை. ஆர்க்டிக்கோ ஆர்க்டிக் இல்லையோ, நோயாளிகுத் தக்க முறையில் சிகிச்சை அவசியம் என்று கருதினார். அதனால் தான் கப்பல் கரை சேர்ந்து சாமான்கள் இறக்கப்பட்டதோ இல்லையோ மருத்துவப் பெட்டிகளை அவரே தனது முதுகில் சுமந்து சென்றார். யாராவது உதவிக்கு வந்தால், "கவனமாக, பார்த்து! உடைத்து விடாதீர்கள்" என்று கோபத்துடன் இரைந்தார்.
தானே ரம்பத்தையும் இழைப்புளியையும் கொண்டு சட்டங்கள் தயாரித்தார், தச்சர்களின் வேலையை ஓடியாடி மேல் பார்த்தார், சுவர்களுக்கு வெள்ளை எண்ணெய்ச் சாயத்தை இவரே அடித்தார். தரையில் தார்ப்பாயைத் தம் கைப்பட விரித்தார். ஆட்கள் குறைவு, வேலை நெரிந்தது. வானொலிச் செயதி நிலையம் கட்டப்பட்டது, துறைமுகத்தில் நிலக்கரிக் கிட்டங்கி நிறுவுவதற்காகத் தரை வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து நான்காம் ஆண்டு – ஆர்க்டக்கிற்கு வரலாற்று முக்கியத்துவம் ஆய்ந்த ஆண்டு. பனிக்கடலின் வெறிச்சோடிய கருங்கற்கரைகள் மீது கட்டடங்களும் துறைமுகங்களும் தொழிற் கூடங்களும் சுரங்கங்களும் அப்போதுதான் மந்திரத்தால் உண்டாக்கப்பட்டன போன்று தோன்றலாயின.
மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டது. சிறியது, ஐந்தே படுக்கைகள் கொண்டது, எனினும் முற்றிலும் போதுமானது. ஸெர்கேய் மாத்வேயிச் எந்த மாதிரி மருத்துவ மனைகளில் தலை நரைத்து வழுக்கை விழுந்து, அயோடின் மணமும் கார்பாலிக் அமில வாடையும் நிரந்தரமாக வீசும் அளவிற்கு வேலை செய்திருந்தாரோ, அந்த மாதிரியான மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் எல்லாம் இதில் இருந்தன. வார்னிஷ் பூசப் பெற்ற வெண் சுவர்கள் அம்மாதிரியே பளிச்சிட்டன, கண்ணாடி அலமாரிகளில் இருந்த நிக்கல் கருவிகள் மீதும் ஜாடிகள் மீதும் சூரிய ஒளி பட்டு மின்னியது. ஒரே துப்புரவு. ஒரே நிசப்தம். கார்பாலிக் அமிலத்தின் வாடை. நோயாளிகள் வந்தார்கள், பெரும்பாலும் பெண்களே. தொலையிலுள்ள கூட்டுறவுத் தொழிற் பண்ணைகளிலிருந்து, நாய் இழுத்த ஸ்லெட்ஜுகளில் ஏறி நூற்றுக் கணக்கான கிலோமீடர் தூரத்தைக் கடந்து, பேறு காலத்திற்கு ஒரிரு மாங்களுக்கு முன்பாகவே வந்தார்கள். பாத வெடிப்பு, மூலம், குளிரில் மரத்த விரல்கள், எலும்பு முறிவு, பல்வலி ஆகியனவற்றிற்கு மருந்துவம் செய்து கொள்ள ஆண்களும் வந்தனர். ஸெர்கேய் மாத்வேயிச் பல் மருத்துவமும் பார்த்தார், பல் துளைகளை அடைத்தார். ஊரில் பற்களைச் செவ்வைப்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாது போனவர்கள், ஸெர்கேய் மாத்வேயிச்சிடம் பற்களைச் சரி செய்து கொண்டார்கள். ஆனால் அவர் அடிகடி சொல்வது இதுதான்:
"அடடா! இவ்வளவு மோசமாக இருக்கும் இந்தச் சொத்தைப் பல் உனக்கு எதற்காக? ஊம்? பிடுங்கிவிடுகிறேன், சரியா?"
பல் பிடுங்குவதற்கு முன்பு நோயாளிக்குத் துணிவு வருவதற்காக முப்பது மில்லி சாராயம் குடிக்கக் கொடுப்பார். இது அவருடைய வழக்கம். ஆனால் ஆட்கள் தன்னை ஏமாற்றுவதைப் பின்னர் அவர் கண்டுகொண்டார். சாராயத்தைக் குடித்துவிட்டு, பல் பிடுங்கிக்கொள்ள மறுத்து விடுவார்கள். "அதாவது, டாக்டர், பல் வலி இப்போது குறைந்துவிட்டது. அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம்" என்பார்கள். அது முதல் அவர் பல் பிடுங்கிய பிறகு சாராயம் கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொண்டார்.
தொழிலிலும் மனப் போக்கிலும் அறுவை மருத்துவர் ஆகையினால் அவர் மருந்து கொடுப்பதைவிட அறுவை செய்வதையே எப்போதும் அதிகம் கையாண்டு வந்தார். அவருடை நண்பர்கள் வேடிக்கையாகச் சொன்னது போல, யாரையாவது "அறுக்க" வாய்ப்பு கிடைத்தால் அவரது மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
"இதோ பார், கொஞ்சம் போல நறுக்குவோம், எல்லாம் சரியாகிவிடும். ஆ, அவ்வளவுதான்! நறுக்கிவிட்டோம். இதோடு தொலைந்தது உன் நோய்" என்பார்.
உள் நோய்களை அவர் சந்தேகக் கண்ணோடு நோக்கினார்.
"இந்தா, உள்ளுக்கு மருந்து சாப்பிடுவது என்பது வெட்டிப் பணக்காரர்கள் செய்யும் வேலை. உங்களுக்கு இந்த நோய்கள் எல்லாம் எதற்காக வரவேண்டும், வெறுங்குப்பை!" என்று ஆரம்பித்து, "இவற்றை இயற்கையின் போக்கில் விடுங்கள்… இயற்கை இருக்கிறதே, எல்லாவற்றையும் விட விவேகம் நிறைந்தது. பீடைகள் தாமே போய் விடும்… இங்கேயோ பருவநிலை அற்புதம்… உடல் நலத்துக்கு ஏற்ற பருவநிலை, இல்லையா?" என்று நோயாளிக்கு ஆறுதல் கூறுவார்.
நண்பர்களுக்கு இது நிலையான வேடிக்கை ஆகிவிட்டது. சாப்பாட்டு வேளையில் ஒருவன் டாக்டரே விளித்து, "இதோ பாருங்கள், டாக்டர், இன்று எனக்கு ஏனோ ஒரே தலைவலி. தானே சரியாகிவிடும்? ஊம்? என்று கேட்பான்.
"சரியாகிவிடும், சரியாகிவிடும்" என்று நிச்சயத்துடன் சொல்லுவார்.
இத்தகைய மிகச் சாதாரண மருத்துவராகிய ஸெர்கேய் மாத்வேயிச்சிடம் புரியாத விஷயம் ஒன்று உண்டு என்றால், அது அவர் ஆர்க்டிக்கிற்கு எதற்காக வந்தார் என்பது மட்டுமே.
அவரைப் பொருத்தவரை, ஆர்க்டிக்கை அவர் பார்க்கவே இல்லை. மருத்துவமனை, பொது அறை, ஆர்க்டிக்குக்கு வந்திருப்பவர்களின் வீடுகள் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றி வந்தார்… ஒரு முறை வேட்டைக்குப் போகத் திட்டமிட்டார், ஆனால் அது செயல்படவில்லை. தொலைவிலுள்ள வேட்டைக்காரர் கூட்டுறவுப் பண்ணைகளுக்குப் போய்வர நினைத்தார், ஆனால் மருத்துவமனைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் இல்லை- எத்தனையோ மாதர் பிரசவத்துக்குக் காத்திருந்தார்கள் (வியப்பளிக்கும் விஷயம் என்னவென்றால் ஆர்க்டிக்கில் நிறையப் பெண்கள் குழந்தைகள் பெற ஆரம்பித்திருந்தார்கள் என்பது) ஆகவே தொலை தூரப் பண்ணைகளுக்கு உதவி மருத்துவன்தான் போய் வந்தான். ஒரே ஒரு தடவை மட்டுமே, இலையுதிர் காலத்தில், வெண் திமிங்கிலங்கள் கிளம்பும் தருவாயில், மருத்துவர் இளைஞர்களுடன் வேட்டைக்குச் சென்றார். ஆனால் அவர் செய்ததெல்லாம், அனைவருக்கும் இடைஞ்சலாயிருந்ததும், சொட்டச் சொட்ட நனைந்ததும், வலையைத் தவறவிடப் பார்த்ததும் தான். நீரில் நனைந்து ஊறிய போதிலும் மிகுந்த திருப்தியுடன் கரை திரும்பினார். திமிங்கிலத்தைத் தம் கத்தியால் அறுத்தார். ("திமிங்கிலத்திற்கு மூலநோய் இருக்கிறதா என்று பார்க்கிறார்" என்று வாலிபர்கள் சிரித்தார்கள்.) பழகிய கைத்தேர்ச்சியுடன் திமிங்கிலத்தின் உள்ளுறுப்புக்களை அறுத்து, அதன் நுரையீரலையும் வயிற்றையும் எல்லாருக்கும் காட்டினார். "இவை அனைத்தும் மனித உறுப்புக்களைப் போலவே இருக்கின்றன, பார்த்தீர்களா!" என்றார்.
ஒரு நாள் மாலை காப்பி அருந்திய பின், பொது அறையில் கதகதப்பும் வசதியும் வாய்ந்த நிலையில் காந்த இயல் ஆராய்ச்சியாளன் மோதரவ் மருத்துவரின் அருகே அமர்ந்து, "ஒன்று கேட்கிறேன், தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நீங்கள் எதற்காக ஆர்க்டிக்குக்கு வந்தீர்கள், சொல்லுங்கள்" என்றான்.
ஸெர்கேய் மாத்வேயிச் கூச்சத்துடன் கைகளை விரித்தார்.
"இதை எப்படி விவரிப்பது" என்று முணுமுணுத்தார். "எங்கும் ஆர்க்டிக்கைப் பற்றியே பேச்சாய் இருந்தது, நாமும் போவோமே என்று நினைத்தேன். நான் கிழவனாகிவிடவில்லை. என்ன சொல்லுகிறீர்கள்? நான் ஒன்றும் கிழவன் இல்லை, சரியா?" என்று இளவட்டம் போன்று மீசையை முறுக்கினார். "அப்புறம் எங்கள் மருத்துவமனைக்குப் புதிய மருத்துவர் ஒருவர் வந்து சேர்ந்தார். அப்போதுதான் வடக்கேயிருந்து திரும்பியவர். அளவிட முடியாத உற்சாகம் அவருக்கு. ஆர்வமிக்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற விரிவான களம் அது என்றார். ஆகவே அங்கே வேலை செய்ய என் பெயரைக் கொடுக்கக் கூடாது என்று எண்ணினேன். நான் போர்முனைக்கும் போனவன் தான்… எல்லாவற்றையும் அநுபவித்து விட்டேன்… தவிர…" இவ்வாறு கூறியபடியே, நேர்மை ததும்பும் நீல விழிகளை மற்றவன் பக்கம் திருப்பி, எளிமையுடன் தொடர்ந்தார்: "இத்துடன் பணமும் கைநிறையக் கொடுக்கிறார்கள். இரண்டு ஆண்டை இங்கே கடத்திவிட்டால் கணிசமான தொகை சேர்ந்து விடும், இல்லையா! மாஸ்கோவுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன வீடு வாங்குவதாக எண்ணம். அதாவது, சிறு தோட்டம், பூப்பாத்திகள், எல்லாவற்றுடனும். நாஸ்டர்ஷியம் மலர்கள் என்றால் எனக்கு உயிர். சன்னலுக்குக் கீழே ஆர்க்கிடு செடி வளர்க்கவும் எனக்கு ஆசை."
இந்த உரையாடலுக்குப் பிறகோ, மருத்துவர் முன்னிலும் சலிப்பூட்டும் வறண்ட பேர்வழி என்று எல்லாரும் நினைக்கத் தொடங்கினார்கள்.
பெரிய சிவப்புக் கரங்களும், மேலங்கிக்குள்ளே தொப்பையும், கார்பாலிக் அமிலம், அயோடின் இவற்றின் நெடியுமாக இலகிய இந்த மனிதர் என்னதான் சுவையோ கவர்ச்சியோ அற்றவராயினும், வெள்ளரி நிலத்து மாதுக்கு வடதுருவ நிலையம் முழுவதிலும் கஷ்டப் பிரசவத்தில் உதவக் கூடிய ஒரே ஆள் அவர் தான். அவர் இதில் எப்படி உதவ முடியும் என்பதுதான் ஒருவருக்கும் விளங்கவில்லை.
கட்சிச் செயலாளன் மருத்துவமனைக்கு வந்த மருத்துவருடன் அவரது அறையில் உரையாடினான்.
"எபடியாவது உதவி செய்ய வேண்டும்" களைத்த விழிகளால் டாக்டரை நோக்கியவாறே சொன்னான்.
மருத்துவர் வியப்படைந்து, "பொறுங்கள், பொறுங்கள், ஐயா! உதவ வேண்டும் என்கிறீர்கள். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நோயாளியை இங்கே அழைத்து வாருங்கள். தாராளமாக. எங்கேயோ, ஊம்… வான வெளியில் நிகழும் பிரசவத்தில் நான் எப்படி மருத்துவம் பார்க்க முடியும்?" என்றார்.
"இருந்தாலும் நாம் உதவத்தான் வேண்டும்" என மீண்டும் வற்புறுத்தினான் கட்சிச் செயலாளன்.
"ஆக, அற்புதந்தான் போங்கள்!" என்று டாக்டர் கைகளை உயரே ஆட்டியவாறு கெக்கலித்தார். "ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள கைகள் எனககுக் கொடுங்கள்- கர்ப்பிணிவரை எட்டும்படி. அதோடு தொலைநோக்கி விழிகளும் தாருங்கள்- ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளதைப் பார்க்க வசதியாக. அப்போது நான் சேவைக்குத் தயாராயிருக்கிறேன், ஆயத்தமாயிருக்கிறேன்."
"ரொம்ப சரி. அம்மாதிரிக் கரங்களும் கண்களும்கூடத் தங்களுக்கு அளிக்கிறோம், டாக்டர். அப்போது…"
"நீங்கள் சொல்வது விளங்கவில்லையே… எம்மாதிரிக்கைகள்? எவ்விதக் கண்கள்?"
வானொலி. கர்ப்பிணியின் நிலைமையையும், மருத்துவர்கள் சொல்வது போலக் கருப்பையில் குழந்தையின் கிடக்கையையும் பற்றி அங்கிருந்து தகவல் தெரிவிப்பார்கள். என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் இங்கிருந்து சொல்லி நடத்தி வையுங்கள்."
ஸெர்கேய் மாத்வேயிச் எழுந்தார், மேலங்கியை அணிந்து கொண்டார், உறுதியான தோரணையில் வாயிலை நோக்கி அடி எடுத்து வைத்தார்.
"கர்ப்பிணியைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்" என்றார் திடீரென நின்று, "ஆனால், இதற்கு மேலங்கி எதற்காக? கிடக்கிறது, எல்லாம் ஒன்றுதான். உலகத்தில் எத்தனையோ விந்தைகள் நிகழ்கின்றன. இம்மாதிரி… ம்ம்… அஞ்சல் மூலம் பிரசவம் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் முதல் தடவையாகக் கிடைத்திருக்கிறது… அதாவது வானொலி மூலம் பிரசவ மருத்துவம். என் சக மருத்துவர்கள் இதைக் கேட்டு எவ்வளவு வியப்பு அடைவார்கள் என்பதைக் கற்பனை செய்துகொள்கிறேன்… போகட்டும், எல்லாம் ஒன்றுதான். வாருங்கள், போகலாம்" என்றார்.
வெள்ளரி நிலத்துடன் வானொலித் தொடர்பு கிடைத்தது. "வெள்ளரி நிலத்துடன் வானொலித் தொடர்பு வெகு நேரம் நீடிக்கவிருப்பதால், பிரசவம் ஆகும் வரை மற்ற எல்லா நிலையத் தொடர்புகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன" என வானொலி இயக்குநர் அறிவித்தான்.
"நல்லது, ஆரம்பிக்கலாம்" என்று மேலங்கி பைக்குள் கைகளை நுழைத்துக்கொண்டு கூறத் தொடங்கியவர், மேலே என்ன சொல்வதென்று தயங்கினார். "இன்றைக்கு உடம்பு எப்படியிருக்கிறது உங்களுக்கு?" என்று வழக்கம் காரணமாகக் கேட்க வாயெடுத்தவர், தனக்கு எதிரே நோயாளி இல்லை என்பதை நினைவுகூர்ந்து அடக்கிக் கொண்டார். எதிரே இருந்தது வெறுமை. ஆகாயம். ஒரு விதத்தில்… வானவெளி.
அவரது அவரது சங்கடமான சூழ்நிலை தெளிவாகப் புலப்பட்டது. தான் வேலை செய்து பழகிய சூழ்நிலை, தனக்கு இன்றியமையாத நிதானத்தை ஏற்படுத்த இல்லாததை உணர்ந்தார். கர்ப்பிணியைக் காண்பது, அவளது முனகல்களையும் முறையீடுகளையும் கேட்பது, அவளுடைய வலியைப்பற்றி அனுதாபம் தெரிவிப்பது, பேசினில் இரத்தத்தைப் பார்ப்பது, கருவை, அந்தச் சின்னஞ்சிறு, வழவழப்பான, நிர்க்கதியான பிஞ்சு மேனியைத் தம் கைகளால் தொட்டு உணர்வது அவருக்கு அவசியமாயிருந்தது.
இப்போதோ, இவற்றில் எதுவுமே இல்லை. குண்டுமாரி பொழிகையில் கலங்காத படைவீரன், மறை குழியின் பயங்கர மௌனத்தில் நடுநடுங்குவது போலவும், எந்திர இரைச்சலில் அமைதியாகத் தூங்கும் அரைவை மில்காரன், சந்தடி அடங்கியதுமே திடுக்கிட்டு விழித்துக் கொள்வது போலவும் தமது நிலைமை இருப்பதை உணர்ந்தார்.
labourஇங்கே, வானொலி நிலையத்தில், அவரது நிலை கரையில் எறியப்பட்ட வெண் திமிங்கிலம் போல இருந்தது. கிறீச்சிட்டது. வேறு சந்தடியே இல்லை. நோயாளி கிடையாது, முனகல்கள் கிடையாது, வேதனை கிடையாது.
வேதனை கிடையாதா? ஆனால் அவள் எங்கேயோ வானவெளியில் வேதனையை உணர்ந்து, உதவியை எதிர்நோக்கியிருந்தாள். மருத்துவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய நாற் புறமும் மற்ற எல்லாரும் ஆவலாகக் காத்திருந்தார்கள்.
வானொலி இயக்குநரின் பக்கம் குனிந்தார்.
"பாரு, குழந்தை எந்த வாகில் கிடக்கிறது என்று மருத்துவரிடம் கேளேன்" என்றார்.
தமது சொற்கள் சிதறும் பட்டாணிக் கடலைகள் போலப் புள்ளிகளும் கோடுகளுமாகத் தெறித்து வானில் மிதந்து செல்வதை ஆவலுடன் நோக்கினார். சில நிமிடங்களில் பதில் வந்தது.
அதைப் படித்துவிட்டு நெற்றியைச் சுருக்கிக்கொண்டார். இவ்வாறு தொடங்கியது இந்த அசாதாரணமான "அஞ்சல் மருத்துவம்."
"ஹும். குழந்தை குறுக்காகக் கிடக்கிறதாக்கும். ஊம். கஷ்டமான பிரசவம்தான், ஆமாம்" என்று தமது எண்ணங்களை வாய்விட்டுச் சொல்லி விட்டு வானொலி இயக்குநரைப் பார்த்து, "இந்தா, என் துணை மருத்துவரிடம் கேள், பிராக்ஸ்டன்-ஹிக்ஸ் முறைப்படி குழந்தையைத் திருப்புவது அவருக்குத் தெரியுமா, அல்லது குறைந்த பட்சம் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாரா என்று" எனக் கூறினார்.
"ஆனால் அவருக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது? இளைஞர், போதாக்குறைக்கு மருத்துவச் சிகிச்சையாளர் வேறு" என்று நினைத்துக்கொண்டார்.
எல்லா அறுவை மருத்துவர்களையும் போலவே மருத்துவச் சிகிச்சையாளர்களிடம் அவருக்கு அவநம்பிக்கை.
ஸெர்கேய் மாத்வேயிச் எதிர்பார்த்ததே போன்ற பதில் வந்தது: "கேள்விப்பட்டிருக்கிறேன், இருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று தயங்காமல் எனக்குச் சொல்லுங்கள்."
"ஸ்பிரிட்டாலும் அயோடினாலும் கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள். விரல்களில் எல்லாம் அயோடின் பூசிக் கொள்ளுங்கள். கைகளைப் பத்து நிமிடம் தொடர்ந்தாற் போலக் கழுவிக்கொண்டிருங்கள்" என்றார் டாக்டர். ஏதோ புண்ணியமான தொண்டில் துணை செய்வது போன்ற பாவனையுடன் வானொலி இயக்குநர் அவரது சொற்களை எல்லாம், முனகல்கள் உள்பட, அஞ்சல் செய்தான்.
கைகளை முறைப்படி கழுவிக் கொண்டாகிவிட்டது என்று வெள்ளரி நில மருத்துவர் பணிவுடன் அறிக்கை செய்தார்.
"சரி" என்று திருப்தியுடன் தலை அசைத்தார் ஸெர்கேய் மாத்வேயிச். "இப்போது, கர்ப்பிணிக்கு நோயணு நீக்கம் செய்வது எப்படி என்று சொல்கிறேன்." இவ்வாறு கூறி, விவரமான குறிப்புக்களைக் காகிதத்தில் எழுதி வானொலி இயக்குநரிடம் கொடுத்தார். தமது மூளைக்குள் ஒரு நிமிடத்துக்கு முன்வரை மறைந்திருந்த எண்ணங்கள் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் மாய வித்தை போல அனுப்பப்படுவதை ஆவலும் வியப்பும் ததும்ப மீண்டும் கவனித்தார் ஸெர்கேய் மாத்வேயிச். வானொலி இயக்குநர் மீது அவர் உள்ளத்தில் முதன் முதலாக மரியாதை பிறந்தது.
சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தால் கிளர்ச்சியுற்ற இயக்குநர் தன் முயற்சி காரணமாக இறுக்கமடைந்து முகமெல்லாம் சிவந்து போனான். தவறு நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தால் அவன் ஒவ்வோர் எழுத்தையும் அழுத்தி அடித்தான். பதிலைக் குறித்துக் கொள்ளும் போதும் இயல்புக்கு ஏற்பக் கிறுக்கித் தள்ளாமல், சிந்தனையுடன் நிறுத்தி எழுதினான்.
"மெல்லச் சொல்லு. ஓர் எழுத்து தப்பானாலும் குழந்தையும் தாயும் ஆபத்துக்கு உள்ளாகிவிடுவார்கள்" என்று வெள்ளரி நிலத்து வானொலி இயக்குநரை எச்சரித்தான்.
"ஆயிற்றா? இப்போது உள் சோதனை தொடங்குங்கள். இடது கையை நுழையுங்கள்…" என்று சொல்லிக் கொண்டு போனார் டாக்டர்.
உறுதியான இறுதிக் கணம் நெருங்கிவிட்டது.
"கருப்பையின் வாய் போதிய அளவு திறந்திருக்கவில்லை என்றால்…" மருத்துவர் கவலையுடன் சிந்தித்தார். "நான் மட்டும் அருகே இருக்க முடிந்தால்! கண்ணால் பாராத ஒன்றுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது அல்லவா?"
பதிலுக்காகக் காத்திருக்கையில் அவர் ஒருபோதுமில்லாதவாறு பதற்றமடைந்தார். நிதானத்துக்கு வர சன்னல் அருகே சென்று தெருவில் பார்வையைச் செலுத்தினார். தெருவா? அங்கே ஏது தெரு? சன்னலுக்குக் கீழே வெண்பனி குவிந்திருந்தது. அதற்கு அப்பால் களஞ்சியம், விரிகுடா. இன்னும் தொலைவில் கண்ணுக்கு எட்டிய வரையில் ஒரே வெண்பனி மயம். கிட்டங்கிகளின் முகடுகள் மேலும், விரிகுடா மீதும், தூந்திர வெளியிலும் எங்கும் வெண்பனி. பசுமை படிந்த வெண்பனியும் நிலவும்.
"நெடுந் தொலைவு வந்திருக்கிறாய், அல்லவா, ஸெர்கேய் மாத்வேயிச்?" எனத் திடீரென்று எண்ணும் போதே வியப்பில் மூழ்கினார். தாம் இவ்வளவு தூரம் வந்திருப்பது பற்றிய நினைவு அவரை மலைக்க வைத்தது. ஏதோ இந்த எண்ணம் முதன் முதல் இப்போதுதான் உதித்தது போலவும், தாம் இங்கே கழித்திருப்பது இரண்டு ஆண்டுகள் அல்ல, முதல் நாள்தான் போலவும் பிரமித்தார்.
"ஸெர்கேய் மாத்வேயிச்!" என்று யாரோ தணிந்த குரலில் அழைத்தார்கள்.
சடக்கெனத் திரும்பியவர் இரண்டு மாதரைக் கண்டார். ஒருத்தி வானொலி இயக்குநரின் மனைவி, மற்றவள் புவிப்பௌதிகயியலரின் வீட்டுக்காரி.
"டாக்டர் ஐயா, என்ன சேதி?" என்று, அவர்களில் அதிகத் துணிச்சல் உள்ளவளான வானொலி இயக்குநரின் மனைவி பதற்றத்துடன் கேட்டாள்.
soviet-peopleமருத்துவருக்கு கோபம் வந்துவிட்டது. "என்ன சேதியாவது கீதியாவது? உங்கள் வீட்டுக்காரரிடம் கேளுங்கள். அதோ வானொலிப் பெட்டியருகே ஏதோ மாயம் பண்ணிக் கொண்டிருக்கிறார். என்னைவிட அதிகமாக அவருக்குத்தான் தெரியம். நானோ எதையும் கண்ணால் பார்க்கவே இல்லை… எதையுமே பார்க்கவில்லை… வெண்பனியைத் தவிர" என்றார்.
"நாங்கள் என்ன சொல்ல வந்தோம் என்றால்…" என்று சங்கோசத்துடன் இழுத்தாள் புவிப்பௌதிகயியலரின் மனைவி. "விஷயம் என்னவென்றால் எனக்கு ஒரு தோழி இருந்தாள். அவளும் இதே மாதிரித்தான் குழந்தை பெற்றாள், நிலைமையும் இது போலத்தான் இருந்தது. அந்தப் பிரசவத்தின் விவரம் எல்லாம் எனக்குத் தெரியும்… சொல்லட்டுமா? ஒருவேளை உங்ளுக்கு உதவியாயிருக்கும்!"
மருத்துவர் முகத்தைச் சுளித்தார்.
"ஏனம்மா, உங்களுக்கு என்ன வந்தது? பிரசவிப்பவள் உங்கள் தோழி அல்லவே! நீங்கள் எதற்காக இப்படி? என்றார்.
"அதற்காக இப்படியா? ஏன் இந்த மாதிரிப் பேசுகிறீர்கள்?" என்று அப்பெண் வியப்புடன் சொன்னாள்.
"இதற்குள் வானொலி இயக்குநர் வெள்ளரி நிலத்திலிருந்து வந்த பதிலைக் குறித்துக் கொண்டு வந்து கொடுத்தான். செய்தி நல்லதா, கெட்டதா என்பது அவனுக்குத் தெரியாது. மருத்துவச் சொற்கள் அவனுக்கு விளங்கவில்லை. எனினும் பதில் கெட்டது எனப் புரிந்து கொண்டவன் போல அதற்குள்ளாகவே சஞ்சலப்படலானான்.
மருத்துவர் படித்துப் பார்த்துவிட்டு முறுவலித்தார். "ஓகோ, அப்படியா? கருப்பை வாய் இரண்டரை விரற்கிடை திறந்திருக்கிறதா, பரவாயில்லை, அதற்கென்ன? பிராக்ஸ்டன்-ஹிக்ஸ் முறைப்படி குழந்தையைத் திருப்பிவிடுவோம்" என்றார்.
வானொலிப் பெட்டிக்கு அருகே வந்தார். யாரோ ஒருவன் அவர் உட்கார்வதற்காக நாற்காலியை நகர்த்தினான். உறுதியான கணம் வந்துவிட்டது என்று எல்லாரும் எப்படியோ உடன் அறிந்து கொண்டார்கள். இயக்குநரின் முகம் வெளிறியது. நிறைய ஆட்கள் குழுமியிருந்த போதிலும் அறையில் ஒரே நிசப்தம், ஆச்சரியமூட்டும் மௌனம் நிலவியது. ஆயினும் கட்சிச் செயலாளன் "உஷ்" என்று சீறினான். நம்பிக்கையும் அச்சமும் கவலையும் கொண்ட விழிகளுடன் அனைவரும் மருத்துவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர் மனத்தில் இந்த எண்ணம் பளிச்சிட்டது: "எங்கிருந்து எனக்கு இவ்வளவு துணிவு, இவ்வளவு அதிகாரம் வந்தது? இங்கே நான் பேசுவேன், அங்கே அவர் என் சொற்படி எல்லாவற்றையும் செய்வார். எல்லாம் நலமே நிறைவுறக் கூடும் ஒருவேளை. இதைச் செய்விப்பவன் நான்… நான்!…"
"வலக்கை விரல்கள் இரண்டை நுழைத்து, குழந்தையின் பாதத்தைப் பற்ற முயலுங்கள்" என உரக்கக் கூறினார்.
வானொலிப் பெட்டியன் ஒலிக் கருவி கிறீச்சிட்டது, புள்ளிகளும் கோடுகளும் சிதறின, மருத்துவரது மூளையிலோ வேறு எண்ணங்களே இல்லை. பிரசவிப்பவளை அவர் தமது கண்ணெதிரே கண்டார். இதோ, அவர்தாம் விரல்களை நுழைக்கிறார். பிரசவிப்பவள் ஓலமிடுவதைக் கேட்கிறார். குழந்தையின் காலை, செயலற்ற காலைத் தொட்டு உணர்கிறார்…
"உன்னிப்பாய்க் கவனியுங்கள்!" என்று மருத்துவர் கத்தியதைப் பணிவுடன் அஞ்சல் செய்தான் வானொலி இயக்குநர். "கையைக் கால் என்று தவறாக நினைத்து விடாதீர்கள். குதிகாலை நெருடிக் கண்டுகொள்ளுங்கள். குதிகாலை, தெரிந்ததா? நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் குழந்தையின் கையைப் பற்றி இழுத்து விடப் போகிறீர்கள்… அம்மாதிரி நடப்பது உண்டு…" தொடர்ந்தார் மருத்துவர்.
வெள்ளரி நிலத்திலும் மக்கள் வானொலி இயக்குநரைச் சுற்றிக் கவலையுடன் குழுமியிருந்தார்கள். பிரசவிப்பவளின் கணவன், உடல் வியர்த்து வடிய, அலங்கோலமான ஆடைகளுடன் வானொலிப் பெட்டிக்கும் மனைவியின் படுக்கைக்கும் இடையே போய்வந்தபடி இருந்தான். வானொலி மூலம் வந்த உத்தரவுகளை மருத்துவரிடம் கொடுப்பது அவருடைய பதிலை வாங்கிக்கொண்டு, ஏதேனும் சொல்ல விட்டு விடவோ, தவறு செய்து விடவோ கூடாது என்பதற்காக அதை வாய்க்குள்ளாகப் படித்தவாறு வானொலிப் பெட்டியருகே திரும்பி ஓடுவதுமாக இருந்தான்.
மருத்துவர் பதற்றமடைந்திருந்தார் எனினும் ஸெர்கேய் மாத்வேயிச்சின் ஆதரவு அவருக்குத் தெம்பு அளித்தது. பிரசவிப்பவளின் கண்ணீரும் வேதனையும் பொங்கும் விழிகள் தம்மையே உற்று நோக்குவதை அவர் கண்டார்.
வேலை செய்தவாறே அவர் முணுமுணுத்தார்:
"ஒன்றுமில்லை, கவலைப்படாதீர்கள். ஸெர்கேய் மாத்வேயிச்சும் நானும் உங்களுக்கு ஒத்தாசை செய்கிறோம்… கவலைப்படாதீர்கள்… இதோ குதிகால்… பட்டுப் போல…"
"காலைப் பற்றிக் கொண்டு விட்டேன்" என்ற செய்தியைப் படித்தார் ஸெர்கேய் மாத்வேயிச்.
"ஆகா! காலைப் பற்றிக்கொண்டு விட்டான். அருமை" என்று உரக்கக் கூறினார்.
மகிழ்ச்சி நிறைந்த, அடங்கிய முணுமுணுப்பு அறையில் தவழ்ந்தது: "காலைப் பிடித்துவிட்டார். காலைப் பிடித்துவிட்டார்" என்று எல்லாரும் அசைந்தார்கள், முறுவலித்தார்கள், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக் கூறத் தயாராகிவிட்டார்கள். ஆனால் ஸெர்கேய் மாத்வேயிச்சின் முகம் மறுபடியும் உர்ரென்று ஆகிவிடவே அனைவரும் மௌனமானார்கள்.
"நல்லது, இப்போது பாதத்தைப் பற்றியபடியே குழந்தையைத் திருப்புங்கள். மற்றக் கையால்…" என்று மருத்துவர் உத்தரவிடத் தொடங்கினார்.
தொலைவு பற்றிய நினைவே அவருக்கு இல்லை. பிரசவிப்பவளின் படுக்கையருகே நின்றவாறு உதவி மருத்துவருக்குச் சுருக்கமாக உத்தரவிடுவது போல அவருக்குத் தோன்றியது. "அவன் கெட்டிக்காரன், கெட்டிக்காரன்! மருத்துவச் சிகிச்சையாளன்தான் என்றாலும் பிரமாதமானவன். அருமை!" என்று உதவி மருத்துவரைப் பற்றி நினைத்துக் கொண்டார். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை அவர் உள்ளத்தில் வரவர அதிகரித்தது. முழு வெற்றி கிடைக்கும் என்ற உறுதி முன்னமேயே தமக்கு இருந்தது என இப்போது அவருக்குப் பட்டது. அதாவது வேலையில் நிதானம் அவருக்கு முடிவில் வந்து விட்டது. மறுபடியும் வழக்கமான சூழ்நிலையில் இருந்தார்.
யுகம் போலத் தோன்றிய கணங்கள் கழிந்தன. ஸெர்கேய் மாத்வேயிச் முதல் செய்தியை அனுப்பி ஒரு மணி ஆகிவிட்டது.
"எல்லாவற்றையும் யோசித்துத் திட்டம் செய்து விட்டேனா? எதிர்பாராதது ஏதேனும் இப்போது நிகழக்கூடுமோ? இந்த ஆள் ஈடு கொடுப்பானா? ஏன்தான் நான் அங்கே இருக்க முடியாமல் போயிற்று? அவனை ஏதாவது கேட்க மறந்துவிட்டேனோ?"
ஒலி பெருக்கியிலிருந்து இக்கேள்விகளுக்குப் பதிலை நேராகக் கேட்க முடியும் போல அதையே நோக்கினார். அவருக்குக் கேட்டவையோ, புள்ளிகள், கோடுகள், புள்ளிகள், கோடுகள்… அவ்வளவுதாம். அவையோ விளங்காப் புதிர்கள்.
இயக்குநரின் தோளுக்கு மேலாகக் குனிந்து, அவன் எழுதும் போதே படித்தார்: "பத்திரமாகத் திருப்பி விட்டேன்".
"பத்திரமாக! "என்று அடக்கமாட்டாமல் கூவினார் இயக்குநர்.
"பத்திரமாக, பத்திரமாக!" என்று உயிர்ப்புற்று நிமிர்ந்தனர் அறையிலிருந்தவர்கள் எல்லாரும். "டாக்டர்! ஸெர்கேய் மாத்வேயிச்! அன்பார்ந்த டாக்டர்!"
"குழந்தையின் இதயத் துடிப்பைக் கவனியுங்கள்!" என்று சீறினார் மருத்துவர்.
வானொலி மூலம் வந்த பதிலைக் கேட்டுக் கிளர்ச்சியுற்றதற்காக, முதலாண்டு மாணவன் போல, முதல் அறுவையின் போது துணை மருத்துவன் போல நடந்து கொண்டதற்காக அவருக்குத் தன் மீதே கோபமுண்டாயிற்று.
"வெட்கம், வெட்கம், டாக்டர்! அவமானம்!"
"குழந்தையின் இதயத் துடிப்பைக் கவனியுங்கள்!" என்று இன்னொரு முறை கத்தினார். இயக்குநர் அச்சொற்களை அவசரத்துடன் அஞ்சல் செய்தான்.
baby"பிரசவம் இன்னும் நடந்தாகவில்லை. ஆமாம், அதற்குள் நடந்து விடாது" என்று பொதுவாக அறையிலிருந்தவர்களை நோக்கிக் கடிந்துகொள்ளும் தோரணையில் கூறினார் மருத்துவர். மீண்டும் அறையில் மௌனம் குடிகொண்டது. "அதற்குள் நடந்து விடாது" என்று மறுமுறை தணிந்த குரலில் முணுமுணுத்துவிட்டு, ஒலி பெருக்கியை உறுத்துப் பார்க்கலானார்.
திடீரென அவர் உள்ளத்தில் ஓர் ஆசை, அடக்கமுடியாத ஆசை எழுந்தது. குழந்தை உயிரோடு பிறக்க வேண்டும் என்ற ஆசை. உயிரோடு, அதுவும் ஆணாகப் பிறக்க வேண்டும். சுருட்டை மயிருடன்… தானே குழந்தையின் தகப்பன் போன்று அதை விழைத்தார். தாய்க்கு இனி ஆபத்து இல்லை. ஆனால் குழந்தை, குழந்தை…
"இதயத் துடிப்பு துலக்கமாக, தெளிவாகக் கேட்கிறது" என்ற பதிலைப் பிடித்தார் இயக்குநர்.
ஆனால் மருத்துவர் கேட்டது இயக்குநரின் சொற்களை அல்ல, இன்னும் தாயின் கருப்பையிலிருந்த குழந்தையின் இதயத் துடிப்பையே. இன்னும் உலகில் உதிக்காத மானிடனின் இதயத் துடிப்பு அது. ஆனால் அவன் இதோ பிறந்து விடுவான், வெற்றி முழக்கம் செய்து தனது உரிமைகளை வலியுறுத்துவான். அவன் இதயம் எப்படிப் பட்டதாயிருக்கும்? தான் உயிருடன் பிறந்ததன் பொருட்டு தாய்நாட்டிற்கு – வானொலி இயக்குநர்கள் அனைவருக்கும், இதோ சுங்கான் புகைத்துக் கொண்டிருக்கும் கட்சிச் செயலாளனுக்கும், மருத்துவச் சிகிச்சையாளனுக்கும் (அவன் பாராட்டுக்குரியவன், கெட்டிக்காரன்!), ஸெர்கேய் மாத்வேயிச்சுக்கும் கடமைப்பட்டுள்ள இந்த மனிதனின் இதயம் எத்தகையதாயிருக்கும்? அவர் வாய்விட்டுச் சிரித்தார். அதற்கு முன் ஒருபோதும் சிரிக்காத விதத்தில் நகைத்தார். அவரது நகைப்பில் வெற்றியோ, கர்வமோ, திருப்தியோ இல்லை. அவருக்கே இன்னும் விளங்காத ஏதோ ஒன்றுதான் அதில் இருந்தது.
கர்ப்பிணிக்கு வலியெடுக்கத் தொடங்கியது. வெள்ளரி நிலத்திலிருந்து செய்திக்கு மேல் செய்தியாக மளமளவென்று வரத் தொடங்கின. பிரசவிப்பவளின் நிலைமை பற்றியும் வலிகளுக்கு நடுவிலுள்ள இடைநேரம் பற்றியும் அங்குள்ள மருத்துவர் சுருக்கமான அறிக்கைகள் விடுத்துக்கொண்டிருந்தார். அவளது கணவனோ, "பயங்கர வேதனைப்படுகிறாள்… மகா கோரமாகக் கூச்சலிடுகிறாள்… என்ன செய்வது? என்ன செய்வது, டாக்டர்? ஐயோ, என்ன வேதனைப்படுகிறாள், பாவம்! ஏதாவது செய்யுங்கள். இந்தக் கதறலை என்னால் பொறுக்க முடியவில்லை!" என்று தானாகவே சேர்த்துக் கூறினான்.
பிரசவிப்பவளின் கோரக் கூச்சல் இங்கே, ஒலிபெருக்கி மூலம் கேட்பது போலப் பிரமை உண்டாயிற்று. கட்சிச் செயலாளன் சுங்கானை வலிவாகக் கடிப்பதையும் அவன் முகம் சாம்பலாக வெளுத்துவிட்டதையும் ஸெர்கேய் மாத்வேயிச் கண்டார்.
"நீங்கள் என்ன இப்படி? ஏன், ஐயா, உங்களுக்கு என்ன? உங்கள் மனைவி பிரசவிக்கவில்லையே, ஊம்?" என்றார்.
கட்சிச் செயலாளன் சோர்வுடன் முறுவலித்து, "உண்மைதான், அவள் என் மனைவி இல்லை. ஆனால் தாயும் சேயும், எப்படி உங்களுக்குச் சொல்வது, நம்மவர்கள் அல்லவர்?" என விடையளித்தான்.
தனது முட்டாள்தனமான கேள்விக்கும் கட்சிச் செயலாளனின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளத் தவறியதோடு அவன் மனத்தைப் புண்படுத்தி விட்டதற்கும் ஸெர்கேய் மாத்வேயிச் வெட்கமுற்றுத் தம்மையே நொந்து கொண்டார். ஆனால் இதைப் பற்றிச் சிந்திக்கவே இப்போது நேரமில்லை.
"குழந்தையின் இதயத் துடிப்பைக் கவனியுங்கள்!"
…மூன்று மணி நேரம் கழிந்துவிட்டது. வானொலிப் பெட்டியின் அருகே அவர் உட்கார்ந்தது மூன்று மணிக்கு முன்பு. இப்போது ஒருபோதுமில்லாத களைப்பும், உரலில் இடிக்கப்பட்டது போன்ற தளர்வும் அவரைக் கவ்விக் கொண்டது. சீக்கிரத்தில், சீக்கிரத்தில் முடியுமா இதெல்லாம், வானொலி மூலம் நடக்கும் இந்த அசாதாரணப் பிரசவம்?
"பையன்! பையன்! ஆமாம். இதோ! பையன்!" என்று வானொலி இயக்குநர் மகிழ்ச்சியுடன் கூவியது திடீரென அவர் காதில் பட்டது. ஆப்பரேட்டர் வானொலிச் செய்தியை ஸெர்கேய் மாத்வேயிச்சிடம் நீட்ட அவர் அதை உரக்கப் படித்தார்:
"டாக்டர், தோழர்களே, நண்பர்களே! எனக்கு ஆண் மகவு பிறந்திருக்கிறது, மகன், பையன். நன்றி, நீங்கள் செய்த எல்லாவற்றுக்காகவும் உங்களுக்கு நன்றி. ஸெர்கேய் மாத்வேயிச், நன்றி. நீங்கள் அருமையான மனிதர். உங்களுக்கு நன்றி!"
எல்லாரும் மருத்துவரின் கையைப் பற்றிக் குலுக்க விரும்பினார்கள். உளமார்ந்த, நட்பு ததும்பும், உணர்ச்சி பொங்கும் கைகுலுக்கல்கள். எல்லாரும் அவரை வாழ்த்தினார்கள், புகழ்ந்தார்கள், அவருக்கு நன்றி கூறினார்கள். கட்சிச் செயலாளன் நீண்ட நேரம் அவர் கையை ஆர்வத்துடன் குலுக்கி, "ஆகா, ஸெர்கேய் மாத்வேயிச்! நீங்கள் உண்மையான போல்ஷெவிக்கைப் போலச் செயல்பட்டீர்கள்!" என மீண்டும் மீண்டும் கூறினான்.
மருத்துவரோ, மலைப்புடன் திடீரென ஒரேயடியாகச் செயலிழந்து உட்கார்ந்திருந்தார். எல்லாரையும் ஒன்றும் புரியாமல் நோக்கினார். செய்தியைப் படித்தார், ஆனால் விளங்கிக் கொள்ளவில்லை. ஆட்கள் வாழ்த்துவதைக் கேட்டாரே தவிர அவர்கள் சொல்லுவது அவருக்குப் பிடிபட வில்லை. அவர் மூளை குழம்பியது. அறுவை மருத்துவர் தனது நிதானத்தை இழந்துவிட்டார்.
தமது வாழ்வு முழுவதும், தாமும், தமது தொழிலும், மாணவராயிருக்கையில் தாம் கண்ட கனவுகளும், தாம் செய்தவை, செய்பவை, செய்யக் கூடியவை அனைத்துமே திடீரென அவருக்குப் புதிய, எதிர்பாராத ஒளியில் தென்பட்டன.
அமைதி நிறைந்த முதுமைப் பருவத்தைப் பற்றி, சிறு வீடு, நாஸ்டர்ஷியம் பூப்பாத்திகள், சன்னலுக்குக் கீழே ஆர்க்கிட் செடிகள், இவை பற்றி நேற்றுக் கனவு கண்டது அவர் தானா?
- பரீஸ் கர்பாதவ்
ராதுகா பதிப்பகம் வெளியிட்ட ருஷ்ய அமர இலக்கிய வரிசை – சோவியத் சிறுகதைகள் – 4 என்று நூலிலிருந்து
நன்றி: வினவு இணைய தளம்