Thursday, April 13, 2017

சீன வானொலி தமிழ் புத்தாண்டு போட்டி

நன்றி / தினமலர்

பிபிசி தமிழோசை வானொலியின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படுகிறது

பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்த மொழிப் பிரிவுகளில் ஒன்றான தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.



கடந்த 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிபிசி தமிழோசை வானொலிச் சேவையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஆண்டுடன் ஏறக்குறைய 76 ஆண்டுகளை தொடுகிறது.
சிற்றலை என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள், இந்தியா மற்றும் இலங்கையில் தொலைக்காட்சி, இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணமாகும்.

ஆனால் தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை.
பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புகள் 1980களிலிருந்து இலங்கையின் போர்க் காலத்தில் அப்பகுதி மக்களுக்கு ஓர் இன்றியமையாத முக்கிய சேவையை ஆற்றி வந்தன;
அந்த காலக்கட்டத்திலும், அதற்கு முன்னும் சங்கர் என்கிற சங்கரமூர்த்தி தலைமையில், ஷேக்ஸ்பியர் மற்றும் பெர்னாட்ஷா போன்றோரின் நாடக மொழிபெயர்ப்புகள் மற்றும் பிற சஞ்சிகை வடிவ நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனதாக பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிகள் இருந்தன.
பின்னர் 1990களின் பிற்பகுதியில் முழுமையான செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான செய்தி ஒலிபரப்பாக தமிழோசை மாறியது.
இந்த நீண்ட வரலாற்றில் பிபிசி தமிழோசைக்கு ஆதரவளித்து வந்த நேயர்களுக்கு பிபிசி தமிழ் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் தொலைக்காட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகம் போன்ற நவீன தளங்களில் பிபிசி தமிழை தொடர்ந்து ஆதரிக்குமாறு நேயர்களை கேட்டுக் கொள்கிறோம்.
Source: bbctamil.com

Tuesday, April 11, 2017

போர்த்துக்கல் வானொலியின் 80வது ஆண்டு

Renascença வானொலியின் 80வது ஆண்டுக்கு திருத்தந்தை செய்தி


ஏப்.11,2017. இத்திங்களன்று தனது எண்பதாவது ஆண்டு நிறைவைச் சிறப்பித்த, போர்த்துக்கல் நாட்டு Renascença வானொலிக்கு, நல்வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போர்த்துக்கல் நாட்டு கத்தோலிக்கத் திருஅவையின் இந்த வானொலி, கடந்த எண்பது ஆண்டுகளாக ஆற்றி வந்த மகத்தான சேவையைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, இவ்வானொலி, மனித சமுதாயத்தின் இதயத்தில், உடன்பிறப்பு உணர்வையும், கடவுளின் இரக்கத்தையும் விதைப்பதன் வழியாக, இயேசுவின் நற்செய்தியை அறிவித்து வருகிறது எனக் கூறியுள்ளார்.

Renascença வானொலியின் எண்பதாவது ஆண்டு நிறைவு விழாவில், திருப்பீடச் செயலகத்தின் நேரடிச் செயலர் பேரருள்திரு ஆஞ்சலோ பெச்சு அவர்கள் கலந்துகொண்டு, திருத்தந்தையின் இச்செய்தியை வாசித்தார்.

மேலும், இளையோர், தங்கள் வாழ்வுக்குப் பொறுப்பேற்பவர்களாகவும், தாத்தா பாட்டிகளுடன் உரையாடி, அவர்களின் கனவுகளை நனவாக்குகின்றவர்களாகவும் வாழுமாறு கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

32வது உலக இளையோர் நாளை முன்னிட்டு, உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில், ஆயிரக்கணக்கான பல நாடுகளின் இளையோரைச் சந்தித்து உரையாடிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

வாழ்வில் எத்தனைமுறை தவறி விழுந்தாலும் எழுந்து நடக்குமாறும், வாழ்வில், ஒருநாளும் சோர்ந்துவிடாமல், துணிச்சலுடன் இருக்குமாறும் கூறியத் திருத்தந்தை, வத்திக்கானில் இளையோர் பற்றி நடைபெறவிருக்கும், உலக ஆயர்கள் மாமன்றத்தில், எந்த ஓர் இளையோரும் ஒதுக்கப்பட்டவராக உணரக் கூடாது எனத் தெரிவித்தார்.

கத்தோலிக்க இளையோருக்காக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்றாலும், அது கத்தோலிக்கக் கழகங்களோடு தொடர்புடைய அனைத்து இளையோருக்குமானது எனவும், இளையோரின் குரலைக் கேட்பதற்குத் தேவை உள்ளது எனவும், இளையோர் வருங்காலத்தைக் கண்முன்கொண்டு முன்னோக்கி நடக்க வேண்டுமெனவும், கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி