Saturday, January 14, 2012

உன்னதத் திருவிழா பொங்கல் !

தமிழினப் பகைவர்கள் திருந்தட்டும் 
தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வரட்டும் 

உலகின் முதல் மொழிக்காரனின்
உன்னதத் திருவிழா பொங்கல் !

உழைப்பைப் போற்றும் பொன்னாள்
உயர்ந்த ஆதவனைப் போற்றும் நன்னாள் 

உழுது நீர் பாய்ச்சி நாத்து நட்டு 
உரம் போட்டு களை எடுத்து 

வளர்த்து அறுத்து அடித்து அரைத்து 
வளமான அரிசியில் வெல்லம் இட்டு 

இனிதே படைக்கும் இனிக்கும் பொங்கல் போல 
இனிமை பிறக்கட்டும் தமிழர் வாழ்வில் 

கொலை வெறிப் பாடல் மோகம் ஒழியட்டும் 
அன்பின் நெறியில் அகிலம் திரளட்டும் 

மதுவின் மீதான மயக்கம் தெளியட்டும் 
மதியைப் பயன்படுத்தி மனிதனாக மாறட்டும் 

தொலைக் காட்சித் தொடர்களின் வக்கிரம் ஒழியட்டும் 
தொலைக் காட்சிகள் நல்லதை மட்டும் ஒளிப்பரப்பட்டும் 

வார இதழ்களின் ஆபாசம் அடியோடு அழியட்டும் 
வாசகர்களைப் பண்படுத்தும் படைப்புகள் வரட்டும் 

பெண்ணடிமைத்தனத்தை ஆண்களே வெறுக்கட்டும் 
பெண்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கட்டும் 

தனித் தமிழ் ஈழம் வெகு விரைவில் மலரட்டும் 
தவிக்கும் ஈழத்தமிழர் வாழ்வு சிறக்கட்டும்

மைய அரசின் மாற்றான் தாய்ப் போக்கு மாறட்டும் 
மடத் தனமான வெளியுறவுக் கொள்கை ஒழியட்டும் 

கேரள அரசியல்வாதிகளின் பித்தலாட்டமான 
கேவலமான அரசியல் முடிவுக்கு வரட்டும் 

புதிய அணை என்ற வேதாளம் அழியட்டும் 
பழைய அணையில் நீரின் உயரம் உயரட்டும் 

கர்நாடகத்தின் கஞ்சத் தனம் காணாமல் போகட்டும் 
காவிரியில் தண்ணீர் கரைப் புரண்டு ஓடட்டும் 

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாகட்டும் 
எங்கோ ஓடி ஒளிந்தார் தமிழ்ப்பகை என்றாகட்டும் 
-- 
நன்றி
கவிஞர் இரா .இரவி 

No comments: