Thursday, July 19, 2012

வானொலிக்கு வயது 75


எம்.எஸ்.கோபால், விஜயதிருவேங்கடம், கே. செல்வம், ஏ.நடராஜன், த. கணேசன், அகிலா சிவராமன், பி.ஆர். குமார், கே.பி. சீநிவாசன்

எம்.எஸ்.கோபால்
(1973 - 1977) காற்றின் காம்பில் இசையை, உரையை, நாடகத்தை கடந்த 1938 முதல் கசியவிட்டுக்
கொண்டிருக்கும் சென்னை வானொலிக்கு வயது 75!
1950-களில் சென்னை மாகாணத்தில் ஐந்து
ஸ்டேஷன்களுடன் (திருச்சி, மெட்ராஸ் 1, மெட்ராஸ் 2,
விஜயவாடா, திருவனந்தபுரம்) வளர்ச்சியடைந்து, இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே
11 நிலையங்கள் இயங்குகின்றன. அகில இந்திய சென்னை வானொலியின் முதல் நிலைய இயக்குநராக விக்டர் பரஞ்சோதி தொடங்கி ஏறக்குறைய
20க்கும் மேற்பட்டவர்கள் நிலைய இயக்குநராக
இருந்திருக்கின்றனர். இங்கே சில முன்னாள் இயக்குநர்கள் முதல் இந்நாள் இயக்குநர் வரை
வானொலியுடனான தங்களின் மறக்கமுடியாத அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்:
நான் முதன்முதலாக சென்னை வானொலியில் 1946 ஜூலை 8 இல் நிகழ்ச்சி உதவியாளராக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். அப்போது அது சென்னை மாகாண வானொலியாக இருந்தது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என நான்கு மொழிகளிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன.
அதற்குப் பிறகு திருச்சி, டெல்லி, பெங்களூர், கோழிக்கோடு, திருவனந்தபுரம் எனப் பல இடங்களில் வேலை செய்துவிட்டு மீண்டும் 1973 இல் சென்னை வானொலிக்கே நிலைய இயக்குநராக வந்தேன்.
நான் நிலைய இயக்குநராக இருந்த காலத்தில் பெரியசாமிதூரன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், அப்பாதுரை, வையாபுரிபிள்ளை, அ.ச.ஞானசம்பந்தன்,பெ.நா.அப்புஸ்வாமி, விந்தன், நாரணதுரைக்கண்ணன், தீபம் நா.பார்த்தசாரதி ஆகியோரை வானொலியில் பங்கேற்கச் செய்ததை மறக்க முடியாது. அகிலனும், தி.ஜானகிராமனும் வானொலியில் பணிபுரிந்தவர்கள்.
"இளைய பாரதம்' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி நடத்தியது என் பணிக்காலத்தில்தான். அப்போது "யுவவாணி' என்ற பெயரில் இந்தியா முழுவதும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு முன்பு ஆகாசவாணி என்ற பெயரை எதிர்த்து கி.ஆ.பெ.விசுவநாதன் போன்றவர்கள் பேசியிருக்கிறார்கள். எனவே எதற்கு யுவவாணி என்று யோசித்தேன். பாரதியாரின் இளையபாரதத்தினாய் வா... வா... என்று பாடிய கவிதை வரிகள் நினைவுக்கு வரவே இளைய பாரதம் என்று பெயர் சூட்டினேன்.
இந்த இளையபாரத நிகழ்ச்சியை இளைஞர்களே திட்டமிட்டு, தயாரித்து, ஒலி பரப்பும்படி செய்தேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பல இளைஞர்கள் பலர், பிற்காலத்தில் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் சிறப்பான பங்களிப்புச் செய்தார்கள்.
வானொலியில் கர்நாடக இசை, திரைப்படப் பாடல்கள் அதிகமாக ஒலிபரப்பப்பட்டன. மெல்லிசைக் குழு ஒன்றை டி.ஆர்.பாப்பா தலைமையில் உருவாக்கி, திரைப்படப் பாடலுக்கு இணையான பாடல்களை ஒலிபரப்பினோம்.
அதுபோல "சேர்ந்திசை'க் குழுவை எம்.பி.சீனிவாசன் தலைமையில் உருவாக்கி, நாட்டுப்பற்று, ஒற்றுமையுணர்வு, உழைப்பின் உயர்வு போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட பாடல்களை ஒலிபரப்பினோம்.
இளையராஜா 1974க்கு முந்தைய ஆண்டுகளில் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இசைக் குழு வைத்திருந்தார்கள். அவர்களுக்கு சென்னை வானொலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் வாய்ப்புக் கொடுத்ததைப் பெருமையாக நினைக்கிறேன். பின்னாட்களில் கங்கை அமரன் இதை பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
1975 - 77 இல் அவசரநிலைக் காலம். மத்திய அரசின் 20 அம்சத் திட்டத்தின் நன்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கத்தோடு கவிஞர் கண்ணதாசனைப் பாடல்கள் எழுதச் சொல்லி, குன்னக்குடி வைத்தியநாதனை இசையமைக்கச் சொன்னேன். அந்த நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. அந்நேரத்தில் தி.மு.க. ஆட்சியைக் கலைத்திருந்தார்கள். ஆனால் அந்நிகழ்ச்சிக்கு கருணாநிதி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்தார். எனக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தது. 10 நிமிடம் இருந்துவிட்டுப் போனார். இது மறக்க முடியாத நிகழ்ச்சி.
சென்னை வானொலியில் பண்ணை இல்லம் என்று விவசாயிகளுக்கான நிகழ்ச்சியை ஒலிபரப்பலாம் என்று நான் சொன்னபோது, சென்னை போன்ற நகரத்துக்கு எதற்கு விவசாய நிகழ்ச்சி என்று மேலிடத்தில் திருப்பிக் கேட்டார்கள். அதற்கு நான் சென்னையைத் தாண்டியுள்ள விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர் போன்ற ஊர்களுக்கு அருகில் உள்ள ஏராளமான விளைநிலங்களைப் பற்றி எடுத்துச் சொன்னேன். அங்குள்ள விவசாயிகள் திருச்சி வானொலியின் பண்ணை இல்ல நிகழ்ச்சியைக் கேட்க முடியவில்லை என்று எழுதிய ஏராளமான கடிதங்களைக் காட்டி அனுமதி வாங்கினேன். அதற்கு முன்பாக திருச்சி வானொலியில் பண்ணை இல்ல நிகழ்ச்சியை ஆரம்பித்து நடத்திய அனுபவம் எனக்கிருந்தது.
1973 இல் தந்தை பெரியார் மறைந்தபோது அவர் இறுதி ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்புச் செய்தேன். அதற்கு முன்பு இறந்த தலைவர்களைப் பற்றி பல முக்கியப் பிரமுகர்கள் பேசுவதாக மட்டும் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் இருந்தன.
1977 இல் முதன்முதலாகப் பண்பலை வானொலி சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. ஊழ்ங்வ்ன்ங்ய்ஸ்ரீஹ் ம்ர்க்ன்ப்ஹற்ண்ர்ய்(ஊங) என்பதை எப்படித் தமிழில் சொல்லலாம் என்று குழப்பமாக இருந்தபோது, நான்தான் துல்லியமான ஒலிபரப்புத் தரும் பண்பட்ட அலை என்ற பொருளில் பண்பலை என்ற பெயரை வைத்தேன். இப்படி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்'' என்கிறார் எம். எஸ்.கோபால். அவருக்கு வயது 93.

வானொ நிலையத்தில் புலவர் கூட்டம்! - விஜயதிருவேங்கடம்
(1992 ஜூலை - 1996 நவம்பர் 30 வரை)
1992-ஆம் ஆண்டு டிசம்பரில் ஒருநாள் அப்போது வானொலியின் தலைமை இயக்குநராக இருந்த சசிகாந்த் கபூர், சென்னை வானொலியின் இயக்குநரான என்னை, தொலைபேசியில் அழைத்துப் பேசினார். "பண்பலை'யில் இனிமேல் காலை, பகல், மாலை எல்லா நேரங்களிலும் ஒலிபரப்ப வேண்டும் என்றார். அப்போது பண்பலையில் மாலை நேரத்தில் மட்டும் இசை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வந்தோம். இதில் அவர் குறிப்பிட்டுச் சொன்னது என்னவென்றால், இந்த ஒலிபரப்புக்காக கூடுதலாக நிதியோ, பணியாளர்களோ ஒதுக்கப்படமாட்டார்கள் என்பதுதான்.
எனவே இது ஒரு சவாலான வேலையாக எனக்கு இருந்தது. 1993 இல் பொங்கலன்று காலையில் பண்பலை ஒலிபரப்பைத் தொடங்கினோம். ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு அன்று பகல் ஒலிபரப்பைத் தொடங்கினோம்.
பண்பலையில் நேரத்தை விலை கொடுத்து வாங்கி தனியார் தங்களுடைய நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிக் கொள்ளலாம் என்கிற அரசின் முடிவு, அதற்கு அடுத்த சில மாதங்களில் அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பரில் பண்பலை வானொலிகளைத் தொடங்க தனியார் அனுமதிக்கப்பட்டனர். இப்போது பண்பலை வானொலிகள் (எஃப்.எம்.) மிகவும் பிரபலமாகிவிட்டன. அதற்கான முதல் விதைகள் நான் பொறுப்பிலிருந்த காலத்தில்தான் ஊன்றப்பட்டன.
1994 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் "சிறுவர் சோலை' நிகழ்ச்சி வானொலியில் ஒலி பரப்பானது. அந்த நிகழ்ச்சியைப் பொறுப்பேற்று நடத்தியவர் வானொலி அண்ணா என்றழைக்கப்படும் என்.சி.ஞானப்பிரகாசம். அன்றைய நிகழ்ச்சியில் சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த "அரும்பு இல்லத்தில்' இருந்த சிறுவர்களை நேர்காணல் செய்து ஒலிபரப்பினோம். இந்த அரும்பு இல்லத்தில் பெற்றோர் ஆதரவின்றி - பெற்றோரை விட்டுப் பிரிந்து - தெருவில் சுற்றித் திரியும் சிறுவர்களைப் பாதுகாத்து வந்தனர். இந்த நிகழ்ச்சியைக் கேட்ட திண்டிவனத்தைச் சேர்ந்த இரு பெற்றோர்களிடம் இருந்து வானொலி நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்களின் குரல்கள் காணாமற் போன தங்களுடைய மகன்களின் குரல்கள் போல இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மறுநாள் திண்டிவனத்திலிருந்து அவர்கள் சென்னை வானொலி நிலையத்துக்கு வந்தனர். அவர்களை அரும்பு இல்லத்துக்கு அழைத்துச் சென்று பெற்றோர்களை விட்டுப் பிரிந்து இருந்த சிறுவர்களை அவர்களுடன் சேர்த்து வைத்தோம். இது என் பணிக்காலத்தில் நடந்த மிகவும் நெகிழ்ச்சி தந்த நிகழ்ச்சி.
1995 இல் "தொழிலாளர்களுக்கான வானொலி கல்வி' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. தொழிலாளர் சட்டங்கள், பணி பாதுகாப்பு, உரிமைகள், கடமைகள் பற்றிய நிகழ்ச்சி அது. இந்நிகழ்ச்சியை வழங்கியவர் எஸ்.எஸ்.பாண்டியன். இந்நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்படும். அந்தக் கேள்விகளுக்குச் சிறந்த முறையில் பதில் அளித்த தொழிலாளர்களுக்கு ஆண்டு இறுதியில் பரிசுகளும் விருதுகளும் வழங்கினோம். அப்போது மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்த சிங்தேவ் இந்நிகழ்ச்சியை மிகவும் பாராட்டினார்.
1996 இல் வானொலி நிலையத்தைப் பார்த்தால் தமிழ்ப் புலவர்களால் நிரம்பி வழியும். 49 தமிழ்ப் புலவர்களை வானொலி நிலையத்துக்கு அழைத்து கவிதை, உரை, நேர்காணல், இலக்கியப் பேருரை என பல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து ஒலி பரப்பினோம். வானொலி நிலையத்தில் ஏதோ தமிழ்மாநாடு நடப்பதைப் போன்று இருக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக "தமிழ்ச் சான்றோர்' என்ற விருது எனக்கு வழங்கப்பட்டது'' என்கிறார் பெருமையாக.
சந்திப்பு : ந.ஜீவா

இன்று ஒரு தகவலைக் கொண்டு வந்தேன்!
கே. செல்வம்
நான் நிலைய இயக்குநராகப் பதவி வகிப்பதற்கு முன் அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தேன். அறிவிப்பாளராக இருந்த போது மக்களின் முன்பாக அதுவும் திறந்த வெளியில் பல நிகழ்ச்சிகளை நடத்தினேன்.
அந்தக் காலகட்டத்தில் ஜி.எஸ். விஜயராவ் என்ற சக அறிவிப்பாளர் இருந்தார். அவருக்கு கேட்கும் திறன் சற்று குறைவு. ஒருமுறை மறதியில் அறிவிப்பாளர் பேசும் கருவியைத் திறந்து வைத்துக்கொண்டே அங்கிருந்த அலுவலக உதவியாளரிடம் தேநீர் கேட்டார். அந்த உதவியாளர் விளையாட்டாக, "நான் டீ கொடுக்க மாட்டேன்' என்று சொல்ல இவர் "டீ கொடுடா,இப்ப கொடுக்கப் போறியா இல்லையா' என்று மிரட்டினார். இந்த உரையாடல் அந்தக் கருவியின் வழியே அப்படியே ஒலிபரப்பானது. அப்போது நிலைய இயக்குநராக இருந்த ஜி.டி. சாஸ்திரி என்பவரின் வீடு அருகில்தான் இருந்தது. அவர் ஓடோடி வந்து அந்தக் கருவியை மூடினார். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
அறிவிப்பாளருக்குப் பிறகு எனக்கு நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பொறுப்பு கிடைத்தது. அப்போது நான் "மக்கள் மேடை' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கினேன். மக்களிடம் நேரிடையாக சென்று அவர்களின் குறைகளைக் கேட்பது, பிறகு அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பது அந்த நிகழ்ச்சியின் நோக்கம். அந் நிகழ்ச்சி இன்று வரை வானொலியில் தொடர்கிறது. அதேபோல் முக்கிய இடங்களைப் பற்றிய அரிய தகவல்களை ஒலிபரப்பினேன்.
உதாரணத்திற்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, வேலூர் கோட்டை போன்றவை குறித்து மக்கள் அறியாத, ஆச்சரியப்படுகின்ற தகவல்களை அறிய வைத்தேன். நான் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தபோது பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை நேர்முக வர்ணனை செய்ததை என்னால் மறக்க முடியாது.
பெரும்பாலும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளவர்கள் கவர்னர் மாளிகையிலோ, தலைமைச் செயலகத்திலோதான் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள். ஆனால் அண்ணாவோ ராஜாஜி ஹாலில் பதவிப் பிராமாணம் செய்துகொண்டார். "என்னை மக்கள் தான் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் அனைவரும் காண்பதற்கு வசதியாக ராஜாஜி ஹாலில் பதவிப் பிரமாணம் செய்துகொள்கிறேன்' என்று கூறியிருந்தார். அந்தச் செய்தியை நேர்முக வர்ணனையில் ""மக்கள் காண வேண்டும் என்பதற்காக ராஜாஜி ஹாலில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அண்ணா இப்போது அதே ஹாலில் மக்கள் வெள்ளத்தில் உறங்குகிறார்'' என்று நான் குறிப்பிட்டபோது சுற்றியிருந்த மக்கள் கதறி அழுதார்கள்.
1980ஆம் ஆண்டு நான் சென்னை வானொலி நிலைய இயக்குனராகப் பொறுப்பேற்றேன். அப்போது நிறைய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினேன். அரசுத் தேர்வு எழுதும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வானொலியின் மூலம் பாடம் நடத்தும் நிகழ்ச்சியைக் கொண்டு வந்தேன். சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளைத் தொடங்கினேன். பொது இடங்களில் எப்படி நடந்துகொள்வது என்பது குறித்து சிறுவர்களுக்கு அந்நிகழ்ச்சியில் சொல்லப்பட்டது. ""மாமியாருக்கு ஒரு சேதி, மருமகளுக்கு ஒரு சேதி'' என்றொரு நிகழ்ச்சி. இந்த வாரம் மாமியார் குறித்து அந்த நிகழ்ச்சி நடந்தால் அடுத்த வாரம் மருமகள் குறித்து நிகழ்ச்சி அரங்கேறும். அதற்குக் கிடைத்த வரவேற்பு பிரம்மாண்டமானது. மாமியார்களிடமிருந்தும், மருமகள்களிடமிருந்தும் அந்நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட கடிதங்கள் வந்தன.
தென்கச்சி சுவாமிநாதனை நான்தான் "இன்று ஒரு தகவல்' சொல்ல வைத்தேன். அதற்குமுன் அவர் அடிக்கடி இலங்கை சென்று அங்கிருந்த தமிழர்களை பேட்டி கண்டு வந்தார். அவை வானொலியில் ஒலிபரப்பாயின. "இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியைத் தொடங்க நினைத்து சுவாமிநாதனை ஒரு புகழ்பெற்ற புத்தக நிலையத்திற்கு அழைத்துச் சென்றேன். ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கி அவருக்குக் கொடுத்தேன். இவற்றை இன்று ஒரு தகவல் சொல்ல பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றேன். அந்த புத்தகங்களை எல்லாம் எனது அறையில் கொண்டு வந்து வைத்தவர் தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறேன் என்றார். ஆனால் கடைசி வரை அவற்றில் ஒரு புத்தகத்தைக் கூட அவர் தொடவில்லை. அந்த அளவிற்கு அவர் ஏற்கெனவே நிறைய புத்தகங்களைப் படித்திருந்தார். அவர் ஒரு இயல்பான அறிவாளி; இயற்கையான அறிவாளி. அவருடைய பேச்சுக்களையும், நகைச்சுவையையும் நீண்ட நாட்கள் கவனித்தே இந்த வாய்ப்பைக் கொடுத்தேன். இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியின் வெற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை.
1988ஆம் ஆண்டு சென்னை வானொலியின் பொன் விழா நடந்தது. துவக்க விழாவின் போது பாடிய செம்மங்குடி சீனிவாசய்யரையே அவ்விழாவில் பாட வைத்ததை என்னால் மறக்க முடியாது.
- பா.சரவணகுமரன்

எம்.எஸ்.ஸின் கோபத்தைப் போக்கினோம்!
 ஏ.நடராஜன்
அந்தக் காலக்கட்டத்தில் "நகர்வலம்' என்ற
நிகழ்ச்சி பெரும் பிரபலமாகியிருந்தது. இன்றும் செய்திக்குப் பின் ஒலிபரப்பப்படும் அந்த நிகழ்ச்சியை
வடிவமைத்தவன் நான்தான்.
நிகழ்ச்சிப் பொறுப்பாளராகத்தான் 1963-ஆம் ஆண்டு வானொலியில் சேர்ந்தேன். அன்றைக்கு நிலைய இயக்குநராக இருந்த துறைவன்தான் என்னை ஆளாக்கிய குரு என்பேன். அப்போது ஏற்பட்ட பல சம்பவங்கள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன.
பாரதியாரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஓர் உயர்மட்டக் குழுவை மாநில அரசு அமைத்தது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் தலைமையில் செயல்பட்ட அந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்களில் மீடியா சார்பாக வானொலியின் பிரதிநிதிகளாக சத்யபாமா அவர்களும் அகிலன் அவர்களும் பங்கேற்றார்கள்.
அந்தக் காலக்கட்டத்தில் "நகர்வலம்' என்ற நிகழ்ச்சி பெரும் பிரபலமாகியிருந்தது. இன்றும் செய்திக்குப் பின் ஒலிபரப்பப்படும் அந்த நிகழ்ச்சியை வடிவமைத்தவன் நான்தான் என்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். பத்திரிகையாளர்களை பெருமளவில் வானொலிக்கு எழுதவைத்தது அந்த நிகழ்ச்சிதான். ஒருமுறை பாரதியாரின் நூற்றாண்டு விழா உயர்மட்டக் குழு கூட்டத்துக்கு இயக்குநரும் அகிலனும் போயிருந்தபோது "நகர்வலம்' நிகழ்ச்சியைத் தவறாமல் கேட்கும் எம்.ஜி.ஆர். அதுபற்றி பாராட்டி இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார். மதிய உணவுக்காக அலுவலகம் திரும்பியதும் சத்யபாமா அவர்கள் என்னை அழைத்தார்.
""பாராட்டுகள்!' முதல்வரே உங்கள் நிகழ்ச்சியை அந்த ஐடியாவை - பெரிதும் பாராட்டினார்..'' என்றார்.
1981-ஆண் ஆண்டில் பொங்கல் தின சிறப்பு கவியரங்கத்தை கலைஞரின் தலைமையில் நடத்த புதுவை நிலையம் சார்பாக முடிவெடுத்தோம். அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். பலவிதமான இக்கட்டான அரசியல் பணிகளுக்கு இடையே அவர் இருந்தாலும், என்னுடைய அன்பான வற்புறுத்தலின் காரணமாக கவியரங்க தலைமைக்கு ஒத்துக்கொண்டார். கவியரங்க நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன ஆயிற்றோ தெரியவில்லை. யார் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. சென்னை வானொலி நிலையமும் திருச்சி வானொலி நிலையமும் அந்தக் கவியரங்கத்தை ஒலிபரப்புவது இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தன.
இதற்கிடையில் கலைஞரை புதுவை நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பையும் எனக்கு வழங்கியிருந்தனர். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் இருக்கும்போது, என்னுடைய மாமியாருக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்தோம். இந்த நேரத்தில் எப்படி போகமுடியும்? என்னுடைய நிலையை அவருடைய உதவியாளருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தினேன்.
சிலமணிநேர இடைவெளியில் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இந்த முறை மறுமுனையில் கலைஞரே பேசினார். அவரின் குரலில் கோபம் வெளிப்பட்டது.
""என்ன நீங்க வரமுடியாத நிலையாமே... உங்களுக்காகத்தானே நிகழ்ச்சிக்கு நான் ஒப்புக்கொண்டேன்...'' என்றார். அவரிடம் என் நிலைமையை விளக்கினேன்.
கலைஞரின் கவியரங்கை திட்டமிட்டபடி அஞ்சல் செய்யமுடியாதது, அவரோடு புதுவைக்குப் போகமுடியாமல் போனது, என்னுடைய மாமியாருக்கு ஏற்பட்ட சுகவீனம்... என்று மூன்று நெருக்கடிகள்.
இறுதியில் கவியரங்கத்தை சென்னை மற்றும் திருச்சி வானொலி நிலையங்கள் ஒலிபரப்பின. இந்த மாற்றத்துக்குக் காரணமாக இருந்தவர் டாக்டர் கலாநிதி எம்.பி., நிலையத்திற்கு ஓர் ஒலிப்பதிவிற்காக வந்தவர் என்னுடைய சோகத்திற்கான காரணத்தைக் கேட்டபோது, மேற்சொன்னவற்றை நான் அவரிடம் கூறினேன்.
உடனே அவர் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக அன்றைக்கு இருந்த ஆரிப் கானுடன் தொலைபேசியில் பேசினார். ஆரிப் கான் எல்லா நிலையங்களிலும் கவியரங்க நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். இது வானொலியில் நான் பணியாற்றிய போது எனக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபவம்.
அதேபோல் நிலையத்தோடு முரண்பட்டிருந்த இரண்டு இசைக் கலைஞர்களை (கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி) ஆகியோரை மீண்டும் நிலையத்துக்கு அழைத்துவந்து பாடவைக்கும் நிகழ்வும் என்னால் நடந்தது.
கே.பி.எஸ். புகழின் உச்சியில் இருந்த நேரம். ஒருமுறை சென்னை வானொலி நிலையத்திற்கு அவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது, நிலையத்தின் வரவேற்பறையிலேயே கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த நிலைய அதிகாரி ஒருவர், கே.பி.எஸ். உள்ளே வருவதைப் பார்த்தும் அவரை வரவேற்காமலேயே அமர்ந்திருக்கிறார். இதை தன்னுடைய கலைக்கு ஏற்பட்ட அவமானமாகவே எண்ணிய கே.பி.எஸ். உடனே வானொலிக்கு இனி பாடுவதில்லை என்ற நிலையில் உறுதியாக இருந்தார்.
சில ஆண்டுகள் கடந்தன. அப்போது திருச்சி வானொலி நிலையத்தில் எம்.எஸ். கோபால் இருந்த நேரம். நான் அங்குதான் பணியிலிருந்தேன். "ஏன் கே.பி.எஸ். கச்சேரிகளை ஒலிபரப்புவதில்லை?' என்று ஏகப்பட்ட கடிதங்கள் வந்தன.
கே.பி.எஸ்.சை மீண்டும் நிலையத்திற்கு அழைத்துவந்து பாட வைக்கும் பொறுப்பை என்னிடம் அளித்தார் இயக்குநர்.
நானும் கொடுமுடிக்குப் பயணமானேன். அவருடைய வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து வந்திருக்கும் விவரத்தைக் கூறினேன். அவர் நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவே இல்லை. மெதுவாக நானும் "இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான்... நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் மாப்பிள்ளைதான் நான்...' என்று நான் கடைசியாகச் சொன்னதும் அவர் மகிழ்ச்சியாக என்னுடைய முகத்தைப் பார்த்துப் பேசஆரம்பித்தார்.
""அவருடைய மாப்பிள்ளையா நீ... அட நீ நம்ம பையன்...'' என்றவர், எனக்கு உணவு கொடுத்து அன்பு பாராட்டினார். நிலையத்துக்கு வந்து பாடவும் சம்மதித்தார்.
சென்னை வானொலி நிலையத்தில் துறைவன் நிலைய இயக்குநராவதற்கு முன் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தின் மூலமா எம்.எஸ்., சில ஆண்டுகள் வானொலியில் பாடாத நிலை இருந்தது.
சென்னை வானொலி நிலையத்தின் இயக்குநராக துறைவன் இருந்தபோது, "எம்.எஸ்., வானொலியில் பாடாத நிலையை அப்படியே நீடிக்க விடக்கூடாது..' என்று முடிவெடுத்தார்.
மீ.ப.சோமு மூலமாகவும் எம்.எஸ்., குடும்பத்தோடு மிகுந்த ஈடுபாடுடைய நிலையக் கலைஞர் கடையநல்லூர் வெங்கட்ராமன் மூலமாகவும் எம்.எஸ்., அம்மாவை மீண்டும் வானொலிக்காகப் பாட வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அந்த முயற்சிகளில் ஒன்றாக ஒரு குழுவை எம்.எஸ். அம்மா இல்லத்துக்கு அனுப்பி வைத்தார். அந்தக் குழுவில் ஒருவனாக இருந்தேன் என்பது மனதுக்கு மிகவும் நிறைவான அனுபவமாக இருந்தது. முயற்சியில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
-யுகன்

16 மொழிகளில் தமிழ் நாடகங்கள்!
த. கணேசன் கோவையில் இருந்தபோது வானொலியிலும்
நேரடி ஒலிபரப்பை அறிமுகம் செய்தேன்.
இளநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்து, நிலைய இயக்குநராக வளர்ந்த 35 ஆண்டு கால அகில இந்திய வானொலி நிலையத்தின் அனுபவத்தோடு, குறையாத ஆர்வத்தோடும் பேசுகிறார் அவர்.
திருச்சி வானொலியில் பணியைத் தொடங்கி, அதே திருச்சி வானொலியிலேயே ஓய்வு பெறும் வாய்ப்பைப் பெற்றவர் அவர்.
திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ஓய்வு
பெற்ற பிறகு இதுவரை சுமார் 14 ஆண்டுகளில் ஐந்து நூல்களை எழுதியிருக்கும் அந்த ஓய்வறியாத படைப்பாளி, 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
""திருச்சி வானொலி நிலையத்தில் 1963}ல் இளநிலை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தேன். பல மாநிலங்கள், பல மாவட்டங்களில் பணியாற்றி, நிகழ்ச்சிப் பொறுப்பாளர், துணை இயக்குநர் எனப் பதவி உயர்வு பெற்று, 10 ஆண்டுகளாக நிலைய இயக்குநராக கேரள மாநிலம் திருச்சூரிலும், தமிழ்நாட்டில் கோவை, திருச்சியிலும் பணியாற்றி 1998-ல் ஓய்வுபெற்றேன்.
எனது பணிக்காலத்தில் இரு முக்கிய அம்சங்களாக நான் பார்ப்பது ஒன்று விளையாட்டு, மற்றொன்று நாடகம். பள்ளி, கல்லூரிப் படிப்பின்போதே எனக்கிருந்த விளையாட்டு ஆர்வம் காரணமாக, வானொலியில் சேர்ந்த பிறகு ஏராளமான வர்ணனைகளை செய்திருக்கிறேன்.
அத்தோடு மட்டுமில்லை, ஏராளமான வர்ணனையாளர்களையும் உருவாக்கியிருக்கிறேன்.
அதன்பிறகு, நாடகம். தமிழ் எழுத்துத் துறையில் தடம் பதித்த பெரும் எழுத்தாளர்களின் நாவல்களையெல்லாம் நாடகமாக உருவாக்கி ஒலிபரப்பியிருக்கிறேன். லட்சுமியின் "அவள் தாயாகிறாள்', ஜெயகாந்தனின் "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', சு. சமுத்திரத்தின் "ஒரு கோட்டுக்கு வெளியே', சுஜாதாவின் "ரத்தம் ஒரே நிறம்' போன்ற நாவல்களை உதாரணங்களாகக் கூறலாம்.
"ரத்தம் ஒரே நிறம்' நாவல் ஆயிரத்து 300 பக்கங்களைக் கொண்டது. பல நூறு கதாபாத்திரங்களைக் கொண்டது. ஒரு மணி நேர நாடகமாக்கி ஒலிபரப்பான போது "இதை அப்படியே ஏன் படமாக்கக் கூடாது?' என்றார் சுஜாதா. "நம்ம ரேடியோ கணேசன்தானே?' என்பார் ஜெயகாந்தன்.
இவை அத்தனையும் 16 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் ஒலிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நானே எழுதி தயாரித்த "வெள்ளம்' நாடகமும் 16 மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு, நாடு முழுவதும் ஒலிபரப்பானது.
இப்போது தொலைக்காட்சிகளில் தொடர்களுக்கு இருக்கும் வரவேற்பு அப்போது வானொலி நாடகத்துக்கு இருக்கும். பிற்பகல் 3 மணிக்கு பெரும்பாலானவர்கள் நாடகம் கேட்பார்கள்.
திருச்சூரில் நான் நிலைய இயக்குநராக இருந்தபோது, பாலு மகேந்திரா, பாலமுரளி கிருஷ்ணா போன்றோரைக் கொண்ட தேர்வுக் குழுவின் மூலம் சிறந்த வானொலி நிலையத்துக்கான மூன்று பரிசுகளைப் பெற்றிருக்கிறேன்.
"இளைய பாரதம்' நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறேன். அந்த வாய்ப்புகள் அவர்களுக்கு பெரிய வாழ்க்கையைத் தந்திருக்கிறது. இப்போது இளைய பாரதத்தில் பங்கேற்ற பலரும் வெளிநாடுகளில் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள்.
இப்போது தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் "நேரடி ஒலிபரப்பு' என்கிறார்களே, அதை முதலில் 1991-ல் கோவையில் நிலைய இயக்குநராக இருந்தபோது நான்தான் அறிமுகப்படுத்தினேன்.
ஓய்வுபெற்று 14 ஆண்டுகள் ஆகின்றன. ஓய்வும்கூட எனக்கு ஆய்வுதான். விளையாட்டு தொடர்பாக 3 நூல்கள், வாழ்வியல் சிந்தனைகள் குறித்து ஒரு நூல், ராஜாஜியின் ஆங்கிலப் பேருரைகள் என்ற மொழிபெயர்ப்பு நூல் ஒன்று என மொத்தம் 5 நூல்களை எழுதியிருக்கிறேன்.
திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி கொடுத்த "தாய்ப்பால்', ஜமால் முகம்மது கல்லூரி கொடுத்த "தனிப் பால்', வானொலி கொடுத்த "திரட்டுப் பால்' இவைதான் என்னுடைய இத்தனைப் பணிகளுக்கும் அடிப்படை'' என்றார் கணேசன்.
சந்திப்பு: சா. ஜெயப்பிரகாஷ்
படம்: தேனாரமுதன்

நன்னனின் நிகழ்ச்சிக்கு அபார வரவேற்பு!
சென்னை வானொலி நிலையத்தில் 1958-ம் ஆண்டு நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், 1980 முதல் ஆறு ஆண்டுகள் பாண்டிச்சேரி வானொலி நிலையத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் அகிலா சிவராமன். அவர் சொல்கிறார்:
""நான் சென்னை வானொலி நிலையத்திலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் பணியாற்றிக் கொண்டிருந்த சமயங்களில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். இந்த மூன்று துறை சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளோம்.
சென்னை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் என் தங்கை சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு தமிழ் பேராசிரியர் மா.நன்னன் என்பவர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அவரின் தமிழ் பேச்சால் கவரப்பட்ட என் தங்கை என்னிடம் வந்து,என் தமிழ் பேராசிரியர் நன்னனைப் போன்று தமிழில் பேச முடியுமா என்று என்னிடம் சவால் விட்டாள். உடனே அப்படியானால் அவரை சென்னை வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்புக்கான நிகழ்ச்சியில் பங்கேற்கச் சொல்லலாம் என்று கருதி, அவருக்கு அழைப்புவிடுத்தேன். பொதுவாக ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருபவர்கள் ஏற்கெனவே தயார் செய்து காகிதத்தில் எழுதிக்கொண்டு வருவார்கள். ஆனால் இவரோ வெறும் கையாக வந்தார். அவரிடம், என்ன எழுதிக்கொண்டு வரவில்லையா என்று கேட்டதற்கு, "நம் தாய்மொழியைப் பேசுவதற்கு எழுத வேண்டுமா?' என்றார்.
உடனே நிலையத்தின் அருகில் இருந்த பள்ளியைச் சேர்ந்த நான்கு குழந்தைகளை அழைத்து வந்து பிழையற தமிழ் பேசுவது எப்படி? என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். நானும் அவரின் நிகழ்ச்சியை பதிவு செய்யும் அறைக்குள் சென்றுவிட்டேன்.
குழந்தைகளிடம் மிகவும் இயல்பாக இன்றைக்கு காலையில் இருந்து என்ன செய்தீர்கள்? என்று ஆரம்பித்தார்.
அவர்களோ, ""காத்தால எழுந்தோம், பழைய சோறு திண்ணோம், கடல்ல விளாண்டோம்'' என்றனர். பேராசிரியர் நன்னனோ, ""அப்படி அல்ல காலையில் எழுந்தோம், பதார்த்தம் சாப்பிட்டோம், கடற்கரையில் விளையாடினோம்'' என்று ஒவ்வொரு வார்த்தையாக திருத்தினார். அவர்களுடன் பேசிக்கொண்டே எளிமையாகத் தமிழைக் கற்றுக் கொடுத்தார்.
பதிவான அந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு சிறிய பகுதியைக் கூட நாங்கள் நீக்கவில்லை. அப்படியே ஒலிபரப்பினோம். அந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து நான் தொலைக்காட்சிக்குச் சென்ற பிறகு அவரை மீண்டும் அழைத்து "வாழ்க்கைக் கல்வி' என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு தமிழ் பிழையின்றிப் பேசுதல் குறித்த நிகழ்ச்சியை தயாரித்தோம்.
ஒருவரிடம் திறமை இருந்தால் அவரை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்மை விளையும் என்ற எண்ணத்தில் அவரை அறிமுகப்படுத்தினேன். ஒரு நல்ல தமிழ்ப் பேராசிரியரை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இது இருக்கிறது.
- ஜெனி

செயற்கைக் கோள் மூலம் நேரடி ஒ பரப்பு!
பி.ஆர். குமார்
நான் சென்னை, நாக்பூர், கொல்கத்தா, திருச்சி என பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளேன். தில்லி, மும்பை, புணே போன்ற இடங்களில் சிறிது காலம் பணியாற்றச் சென்றுள்ளேன். வடஇந்தியாவிலேயே அதிகம் இருந்துள்ளேன். 1984 தொடங்கி சுமார் 20 வருடங்கள் வானொலி நிலைய இயக்குநராகப் பணியாற்றி, துணை தலைமை இயக்குநர் பதவி உயர்வுடன் ஓய்வு பெற்றேன்.
கொல்கத்தாவில் பணியாற்றியபோது, நிர்வாகத்தில் எளிமையைக் கொண்டுவந்தேன். என் அறைக் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். டீ குடித்தாலும் சரி, டிபன் சாப்பிட்டாலும் சரி... அலுவலகத்தில் எல்லோரும் பார்க்கலாம். என் அறைக்கு அறிவிப்பாளர்கள் முதல் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் வரை யார் வேண்டுமானாலும் வரலாம். இதை எல்லோரும் பாராட்டினார்கள். அதே நடைமுறையை சென்னை வானொலி பொறுப்புக்கு வந்தபோதும் புகுத்தினேன்.
இசைக் கலைஞர்கள், துறை வல்லுநர்கள் என பலரும் வானொலி நிலையத்துக்கு வருவார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள். அவர்கள் படி ஏறி என் அறைக்கு வரமுடியாது. எனவே நான் கீழிறங்கி வந்து அவர்களை வரவேற்று ஒலிப்பதிவுக் கூடத்துக்கு அழைத்துச் செல்வேன்.
நிறையப் பேருக்கு வெளிநாடு செல்வதற்கு கடிதம் தந்து உரிய உதவிகளைச் செய்திருக்கிறேன். யாரையும் உதாசீனப் படுத்தியதில்லை. நான் ராமகிருஷ்ண குருகுல மாணவன் என்பதால் இயல்பிலேயே இந்த குணங்கள் எனக்கு வந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் பணியாற்றிய காலங்களில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியுள்ளேன். கொல்கத்தாவில் தொலைபேசி மூலம் நேயர்கள் தொடர்பு கொண்டு பேசும் நிகழ்ச்சியைத் தொடங்கினேன். இது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் சென்னையில் 2002-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினோம். இங்கும் அந்த நிகழ்ச்சி பிரபலமானதால் விளம்பரங்கள் குவிந்தன.
1991-ம் ஆண்டு திருச்சி வானொலி நிலையம் மூலம் திருவையாறு தியாகராஜர் இசைவிழாவை செயற்கைக்கோள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்தோம். அதன் பின்னர், சென்னையில் டிசம்பர் சீஸனின் போது, மியூசிக் அகாதமி உள்ளிட்ட இடங்களில் வைத்து செயற்கைக்கோள் மூலம் நேரடி ஒலிபரப்பு செய்தோம். அதில் நேயர்கள் நேரடியாகப் பேச அவர்களின் கேள்விகளுக்கு பாடகர்களே பதிலளிக்கும் புதுமையைப் புகுத்தினோம்.
வானொலிலியில் பலருடைய குரல் பொக்கிஷங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. என் காலத்தில் புகழ்பெற்ற பாடகர்கள், வரலாற்று நாயகர்கள், துறை வல்லுநர்கள் இவர்களின் பேட்டிகளைத் தொகுத்து வைத்துள்ளோம்.
ஒரு முறை நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வானொலிக்காக நேர்காணல் எடுத்து வைக்க முயன்றேன். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளவில்லை. அவரை வற்புறுத்தி, அவர் வீட்டுக்கே சென்று காத்திருந்து பின்னர் அவரை வானொலி நிலையத்துக்கு அழைத்து வந்து 3 மணி நேரம் அவருடைய அனுபவங்களைப் பதிவு செய்தோம். அது எனக்கு மறக்க முடியாத அனுபவம்தான்!
- ஜெனி

"பவளப் பேழை' தருகிறோம்!
கே.பி. சீநிவாசன் (இந்நாள் இயக்குநர்)
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்துதான் சென்னை வானொலி நிலையத்திற்கு துணைத் தலைமை இயக்குநராகியிருக்கிறேன். பவள விழா ஆண்டில் நான் பணியிலிருப்பதை பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். வானொலி நிலைய அதிகாரிகளின் உதவியுடனும் பவள விழாக் கொண்டாட்டத்தை பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை நேயர்களுக்குக் கொடுப்பதின் மூலம் கொண்டாட இருக்கிறோம்.
கடந்த ஏப்ரலில் சித்ரா பெüர்ணமியிலிருந்து இதற்கு அடிக்கல் நாட்டிவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். திருவண்ணாமலையில் பெüர்ணமி தோறும் பிரபல கலைஞர்களைக் கொண்டு நேயர்கள் முன்னிலையில் நிகழ்ச்சிகளை நடத்தி அதை நேரடியாக சென்னை ரெயின்போ பண்பலையிலும் புதுச்சேரி பண்பலையிலும் இரவு 8 மணிமுதல் 9 மணிவரை ஒலிபரப்புகிறோம்.
"வானொலியும் நானும்' என்னும் தலைப்பில் சென்னை வானொலி நிலையத்தோடு தொடர்புடைய பிரபலங்களின் நேர்முகங்களை ஒலிபரப்புகிறோம். இந்த நிகழ்ச்சி சென்னை1 மத்திய அலைவரிசையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஒலிபரப்பாகிறது.
"பவளப் பேழை' என்னும் தலைப்பில் ஒலிக் களஞ்சியத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறோம். ஒவ்வொரு திங்கட்கிழமை காலை 7 மணிக்கும் செவ்வாய்க்கிழமை இரவு 9-30 மணிக்கும் இவை சென்னை அலைவரிசை ஒன்றில் ஒலிபரப்பாகி வருகின்றன. அதோடு சென்னையின் நிகழ்ச்சி எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் பல நிகழ்ச்சிகளை நேயர்கள் முன்னிலையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
வானொலி நிகழ்ச்சிகளை மேலும் சிறந்த முறையில் தயாரிப்பதற்கான கருத்தரங்கை தமிழ்நாட்டின் அனைத்து நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு நடத்த இருக்கிறோம். தொழில்நுட்பப் பிரிவிலும் பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு பணிமனையை நடத்த இருக்கிறோம். பவள விழா மலரை வெளியிடுவதோடு, பவள விழா ஆண்டு நிறைவு விழாவையும் இந்த ஆண்டின் இறுதியில் சிறந்த முறையில் கொண்டாட திட்டமிட்டிருக்கிறோம்.
- ரவிக்குமார், படங்கள்:ப. ராதாகிருஷ்ணன், க.ஸ்ரீ. பாரத்
(Via கே.சி.சிவராஜ்.எடப்பாடி-சேலம்)




   

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தொகுப்பு ...

பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...

JC Narasimhan said...

Thanks for the yeoman service to AIR related news !

I am a die hard fan of AIR (not the commercial fast track FMs).

Is there a website where I can hear live AIR (preferably, Chennai/Tiruchi !)

Thanks very much