Friday, October 19, 2007

பிபிசியில் ஆட்குறைப்பு

எமது லண்டன் பிபிசியில், ''குறைந்தளவிலான ஆனால், தனித்துவமிக்க சிறப்பான நிகழ்ச்சிகளைத் தயாரித்ததல்'' என்ற ஆறு ஆண்டுகாலத் தீவிரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனம், தனது ஊழியர்களில் 2500 பேரை ஆட்குறைப்புச் செய்யவுள்ளதாக உறுதி செய்துள்ளது.
ஆயினும் தமிழ் சேவை உள்ளடங்கலான பிபிசியின் உலக சேவைக்கு இந்த ஆட்குறைப்பினால், உடனடியான நேரடிப் பாதிப்பு எதுவும் கிடையாது.
அதேவேளை, புதிய ஆட்கள் பணிக்குச் சேர்க்கப்படவுள்ளதாலும், யதார்த்தமான விரயங்களைத் தவிர்ப்பதன் மூலமும் உண்மையான ஆட்குறைப்பின் அளவு குறைவாகவே இருக்கும் என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.
இங்கு பிரிட்டன் எங்கிலும் தொலைக்காட்சி உரிம வரி செலுத்தும் பாவனையாளர்கள், தாம் விரும்பும் நிகழ்ச்சிகளை, தாம் விரும்பும் நேரத்தில் பார்த்துக் கேட்க வழி செய்யும் நோக்கில், இணையத்திலும், மற்றும் ஏனைய டிஜிட்டல் தொழில்நுட்பங்களிலும், புதிய முதலீடுகளையும் பிபிசி செய்யவுள்ளது.
இந்தத் திட்டத்தை பிபிசி மறு ஆய்வு செய்யாவிட்டால், வேலைநிறுத்தங்கள் தவிர்க்க முடியாதவையாகிவிடும் என்று தொழிற்சங்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.
உலகின் அனைத்து ஊடகங்களின் மீதும் தாக்கம் செலுத்தவல்ல, டிஜிட்டல் புரட்சியை உள்வாங்கிக்கொள்ளும் வகையில், பிபிசியும் தன்னை சிறிதாக்கிக் கொண்டாலும், இவற்றுக்கு தம்மை பொருந்தும் வகையில் மாற்றிக்கொள்ளவுள்ளது என்று இந்தத் திட்டத்தை அறிவித்த போது பிபிசியின் பணிப்பாளர் நாயகம் மார்க் தாம்ஸன் தெரிவித்துள்ளார்.
ஆகவே குறைந்த அளவு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படும், ஆனால், உரிமக் கட்டணம் செலுத்துவோர் அவற்றில் அவர்கள், விரும்பியவற்றை, விரும்பிய பொழுது பார்த்துக் கேட்க ஏதுவாக அவை இருக்கும்.
பிபிசியின் கட்டிடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும். மேற்கு லண்டனில் உள்ள டெலிவிஷன் செண்டர், இந்தக் காலகட்ட இறுதியில் விற்பனை செய்யப்படும்.
பணியாளர் எண்ணிக்கையும் குறைக்கப்படும்.
2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டாலும், யதார்த்தத்தில் அந்த எண்ணிக்கை 1800 மாத்திரமே, ஏனென்றால், நீக்கப்படும் பல ஊழியர்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப பணிகளுக்கான மீண்டும் உள்வாங்கப்படுவார்கள் என்றும் மார்க் தாம்சன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தளங்களுக்கான செய்திப் பீடங்கள் ஒன்றாக இணைக்கப்படுவதால், செய்திப் பிரிவில் பணியாற்றும், 400 ஆட்கள் குறைக்கப்படுவார்கள்.
ஆனால், புதிய, இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட செய்திச் சேவைக்காகவும், விளையாட்டுச் சேவைக்காகவும், 300 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் முதலீடு செய்யப்படும்.

//////////

No comments: