Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் மறைந்தார்

பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.

சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்சென்னைில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார்.

அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.

தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.

பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகிசென்னைவானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம்.

இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். செல்வ வளம் கொண்ட இவர் எளிமையாக வாழந்தார். மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வந்த இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

சில வாரங்களுக்கு முன் இனிய உதயம் இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

''ஈழத் தமிழர்கள்!''
(Source: http://thatstamil.oneindia.in)

அம்பலம் மின்னிதழுக்கு கொடுத்தப் பேட்டி

வானொலியில் 'இன்று ஒரு தகவல்' மூலம் இலட்சக்கணக்கானவர்கள் மனங்களில் இடம் பிடித்தவரும் சென்னை வானொலி நிலையத்தின் உதவி நிலைய இயக்குநருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களைச் சந்தித்தோம். அவரது நேர்காணல் இங்கே.

தென்கச்சியைப் பற்றிச் சொல்லுங்கள்?

தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரத்துச் சிற்றூர். தென்காஞ்சிபுரம் என்பது பழைய பெயர். காஞ்சி பல்லவ மன்னனின் படைவீரர்களின் ஒரு பகுதியினர் குடியேறி உருவான ஊர் இது என்று எங்கள் முன்னோர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக பழங்கால கத்திகள் கேடயங்கள் இப்போதும் எங்கள் வீடுகளில் உண்டு.

தென்கச்சி கோ.சுவாமிநாதனைப் பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் பகுதியில் சுவாமிநாதன்கள் நிறையபேர் உண்டு. சுவாமிமலை பக்கத்தில் இருப்பது ஒரு காரணம்.

கும்பகோணத்தில் படிக்கிறபோது ஒரே வகுப்பில் நிறைய சுவாமிநாதன்கள் இருந்தோம். அடையாளம் தெரிவதற்காக வகுப்பு ஆசிரியர் ஊர்ப் பெயரையும் சேர்த்துவிட்டார்.

'இன்று ஒரு தகவல்' - என்ற சிந்தனை எப்படி வந்தது?

இந்த சிந்தனை எனக்கு வரவில்லை. சென்னை வானொலி நிலைய இயக்குநர் கோ.செல்வம் அவர்களுக்கு வந்தது.

இதுவரைக்கும் எத்தனை இன்றுகளைக் கடந்திருக்கிறீர்கள்?

இதுவரைக்கு 11 ஆண்டுகளைக் கடந்திருக்கிறேன்.

மறக்க முடியாத இன்று எது?

இன்று ஒரு தகவலை இன்றோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று என்றைக்கு என்னுடைய அதிகாரிகள் சொல்கிறார்களோ அன்றுதான் எனக்கு மறக்கமுடியாத இன்று.

கதை இல்லாமல் தகவலே சொல்வதில்லையே. தனியாகச் சிறுகதையோ நாவலோ எழுதியதுண்டா?

ஆரம்பகாலத்தில் என்னுடைய இளம் வயதில் ஒருசில சிறுகதைகள் எழுதியது உண்டு. என்னைவிட சிறப்பாக பலபேர் எழுதுவதைப் பார்த்ததும் நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்.

கொஞ்சம் இழுத்துப் பேசுகிற இந்த கிராமிய பாணிப்பேச்சு எப்போது வந்தது?

இழுத்துப் பேசுவதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் எனக்குள் நடப்பது என்ன தெரியுமா? மூச்சு வாங்குகிறது. அவ்வளவுதான்.

உங்கள் கிராமிய வாழ்க்கைக்கும் பட்டண வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு?

கிராமிய வாழ்க்கையில் பட்டணங்களைக் கனவு கண்டு கொண்டிருந்தேன். பட்டண வாழ்க்கையில் கிராமங்களைக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

உங்கள் கிராமத்தில் உங்களை மிகவும் கவர்ந்த மனிதர் யார்?

அப்படி ஒருவர் இப்போதும் இருக்கிறார். அவரைத் தினமும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன் - நிலைக்கண்ணாடியில்!

அரசியலில் கூட்டணி பற்றி ஒரு கதை சொல்ல முடியுமா?

அரசியலைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன். ஒரு அரசியல்வாதி பேசுகிறார்:

"பொதுமக்களே! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் உங்கள் எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு சைக்கிள் கொடுப்போம். இரண்டாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு கார் கொடுப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு விமானம் கொடுப்போம்...!"

கூட்டத்தில் ஒருவர்: "விமானத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது?"

அரசியல்வாதி : "என்ன இப்படி சொல்லிட்டீங்க... இப்போ.. மதுரையிலே ரேஷன் கடையிலே மண்ணெண்ணெய் ஊத்தறதாக கேள்விப்படறீங்க.. உடனே நீங்க உங்க விமானத்துலே ஏறிப்போய்... அங்கே கியூவுலே முதல் ஆளா நின்னுக்கலாமே!"

உங்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்பட பாடல் எது? ஏன்?

"பத்தினிப்பெண்' என்கிற படத்தில் வாணி ஜெயராம் பாடியிருக்கிற 'உலகம் என்பது ஒரு வீடு' என்கிற பாடல். காரணம் : அதன் அருமையான கருத்து அற்புதமான இசை.. இனிமையான குரல் எல்லாமும்தான்!

உண்மையைப் போன்ற ஒரு கற்பனையையும் கற்பனையைப் போன்ற ஓர் உண்மையையும் சொல்ல முடியுமா?

இது, விசு அல்லது அறிவொளி ஆகியோரிடம் கேட்க வேண்டிய கேள்வி. முகவரி மாறி என்னிடம் வந்துவிட்டது.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் யார்? எந்தக் காட்சியில் நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்தீர்கள்?

நாகேஷ்.

'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' என்கிற படம் பார்த்தபோது அப்படிச் சிரித்த அனுபவம் உண்டு.

நீங்கள் வீட்டில் இருக்கும்போது ஏதேனும் ஜோக் அடித்ததுண்டா?

ஜோக் அடிக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியே வருவதுண்டு.

உங்கள் திரையுலக அனுபவம் எப்படி இருந்தது?

திரையுலகத்தில் நீண்ட அனுபவம் ஏதுமில்லை. 'பெரிய மருது' - என்கிற படத்தில் டணால் தங்கவேலுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தேன். 'காதலே நிம்மதி' - என்கிற படத்தில் நீதிபதியாக கொஞ்சநேரம் வந்தேன்.

அதன் விளைவு -
அதற்குப் பிறகு யாருமே என்னை நடிக்கக் கூப்பிடுவதில்லை!

உங்களுக்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது?

எனக்கு.. கேட்பது பிடிக்கும்! பேசுவது பிடிக்காது!

உங்களுக்கு மிகவும் பிடித்த சுவாமிநாதன் யார்? பேச்சாளரா? எழுத்தாளரா? உதவிநிலைய இயக்குநரா? குடும்பத் தலைவரா? நடிகரா?

படுத்துத் தூங்குகிற சுவாமிநாதனைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் அவரால் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும் இல்லை!

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 31-10-1999)
Via
http://annakannan-interviews.blogspot.com/2005/08/blog-post_112399634088432220.html

2 comments:

சந்தனமுல்லை said...

அவருக்கு அஞ்சலிகள் :(

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்! :(