Saturday, June 05, 2010

பிபிசி நேயர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிபிசியின் உலகச் செய்திகளை வானொலியிலும் தொலைக்காட்சியிலும், இணையதளம் மூலமாகவும் அறிந்துகொள்கின்ற நேயர்களின் வாராந்திர எண்ணிக்கை முன்பில்லாத அளவுக்கு 24 கோடியாக அதிகரித்துள்ளது.

சிற்றலை வரிசை மூலம் பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை கேட்பவர்கள் எண்ணிக்கையில் 2 கோடி குறைந்துள்ளது என்றாலும்கூட, மொத்த நேயர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவிலும் வங்கதேசத்திலும் சிற்றலை நேயர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது.

பிபிசி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியிலும் இணையம் மூலமாகவும் பெறுகின்ற புதிய நேயர்கள் கோடிக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளது இந்த அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.

பிபிசி செய்திகள் பல வெளிநாடுகளில் உள்ள நேயர்களைச் சென்றடைவதற்கான முக்கிய வழியாக ஒரு காலத்தில் விளங்கியது சிற்றலை வானொலி ஒலிபரப்புகள்தான். ஆனால் தற்போது மக்களிடையே சிற்றலை ஒலிபரப்புகளைக் கேட்கின்ற வழக்கம் மிக வேகமாகக் குறைந்துவருகிறது.

பிபிசி தனது நிகழ்ச்சிகளை மென்மேலும் சிற்றலை வானொலி ஒலிபரப்பிலிருந்து பண்பலை வானொலி ஒலிபரப்புக்கும், தொலைக்காட்சிக்கும் இணையதளத்துக்கும் மாற்றி வருகிறது.

இந்த மூன்று வகையான சேவைகளிலும்தான் பிபிசி செய்திகளுக்கான நேயர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என்று பல வகைகளிலும் செய்திகளை வழங்குவது என்ற பிபிசியின் உத்தி வெற்றிபெற்றுள்ளது என்பதை இந்த நேயர் எண்ணிக்கை அதிகரிப்பு காட்டுவதாக பிபிசியின் உலகளாவிய செய்திச் சேவைகள் பிரிவுகான இயக்குநர் பீட்டர் ஹாரக்ஸ் தெரிவித்துள்ளார்.

உலக சேவையை நடத்துவதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிதியை பிரிட்டிஷ் வெளியுறவுத் துறையிடம் இருந்து பெறுவதற்கான ஆயத்தப் பணிகளை பிபிசி நிறுவனத்தார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

பெரிய அளவில் செலவுக் குறைப்புகளை அறிவிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் எண்ணியுள்ள நிலையில், பிபிசி உலக சேவைக்கான நிதியைப் பெறுவதில் வெளியுறவுத் துறையுடன் பிபிசி நிறுவனத்தார் அதிகம் விவாதிக்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments: