Saturday, July 09, 2011

தமிழோசைக்கு வயது 70

சர்வதேச ஒலிபரப்பு வரலாற்றில் தனி இடம் பிடித்திருக்கும் பிபிசி உலக சேவையின் பல்வேறு மொழிப்பிரிவுகளில், தெற்காசிய மொழிப்பிரிவுகளில் ஒன்றான, பிபிசி தமிழோசை தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகிறது.


தமிழோசை தொடங்கப்பட்ட காலம் என்பது இரண்டாம் உலகப்போர் முற்றிய காலகட்டம், பின்னர் காலனித்துவத்தின் சரிவின் ஆரம்ப காலம் ஆகிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் அமைந்திருந்தது.
1941 மே மாதம் மூன்றாம் நாள் தனது ஒலிபரப்பைத் தொடங்கிய பிபிசி தமிழ்ப் பிரிவு, வாரம் ஒருமுறை இலங்கை மடல் என்ற பெயரில் தான் தனது ஒலிபரப்பை முதலில் நடத்தியது.

முதலில் வாரம் ஒரு முறை, பின்னர் வாரமிருமுறை இலங்கை மடலாக ஒலித்து வந்த தமிழோசை, அப்போதைய காலகட்டங்களில் சஞ்சிகை வடிவிலேயே வந்தது. தமிழ் இலக்கியம், நாடகம், கலை என செய்திகளைவிட பிற அம்சங்களை அதிகம் தாங்கி ஒலித்தது தமிழோசை.

அப்போதெல்லாம், தமிழோசையின் தயாரிப்பாளர்கள் சொந்தமாக வடித்த நாடகங்கள் தவிர ஆங்கில மற்றும் பிற மொழி நாடகங்களின் மொழியாக்கங்களும் தமிழோசையில் இடம்பெற்று வந்தன. குறிப்பாக, புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்கள் தமிழோசையின் ஆசிரியர் சங்கர் என்ற சங்கரமூர்த்தியால் தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழோசையில் அரங்கேறின.

இனப்பிரச்சினை

எண்பதுகளின் முற்பகுதியில் இலங்கையில் இனப்பிரச்சினை பெரிதாக வெடித்த போது , தமிழோசை அந்தப்பிரச்சினையினை செய்திகள் மற்றும் பேட்டிகள் மூலம் நேயர்களுக்கு விளக்க உதவியது.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அப்போதைய தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் லண்டன் வந்தபோது தமிழோசைக்கு பேட்டி அளித்தார்.

தமிழர் அரசியலில் மிதவாதம் பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆயுத அரசியலின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியபோது 1986ல் பெங்களூரில் நடந்த சார்க் மாநாட்டின் போது பெங்களூர் வந்திருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தமிழோசைக்கு பேட்டியளித்தார்.

இலங்கைப் பிரச்சினை மட்டுமல்லாது, தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் இந்திய அரசியலையும் பிரதிபலிக்கும் செய்திகளையும் தமிழோசை தொடர்ந்து ஒலிபரப்பியுள்ளது.



No comments: