Thursday, June 27, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 4

முடிவுக்கு வருகிறது 160 ஆண்டுகால தந்தி சேவை!

புதுடெல்லி: செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் ஹைடெக்காக மாறிவிட்ட நிலையில்,  தந்தி சேவையை  ஜூலை 15 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.

செல்போன்கள் 90 களின் மத்தியிலேயே இந்திய சந்தைக்கு வந்தபோதிலும் 2001 - 2002 வரை செல்போன்களின் விலையும், அதில் பேசுவதற்கான கட்டணமும் அதிகமாக இருந்ததால், மரணச் செய்தி, திருமண, பிறந்த நாள் வாழ்த்து என ஆத்திர அவசரத்திற்கு பொது தொலைபேசி சேவையுடன், தந்தி சேவையும் ஓரளவு பயன்படுத்தப்பட்டுதான் வந்தது.

ஆனால் 2003 வாக்கில் 500 ரூபாய்க்கு செல்போன், இன்கம்மிங் கட்டணம் இலவசம், அவுட்கோயிங் ரூ. 1 அல்லது 2 ரூபாய்தான் என தனியார் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்போன் சேவை சந்தையில் களமிறங்கியதிலிருந்து, குடிசை வீடு முதல் கோபுரங்கள் வரை அங்கிங்கெனாதபடி எல்லார் கையிலும் செல்போன்கள்.
படிப்பறிவு இல்லாதவர்கள் கூட சிவப்பு பட்டன், பச்சை பட்டன் என செல்போன் அழைப்பை பக்காவாக டீல் செய்ய கற்றுக்கொண்டுவிட்ட நிலையில், கணினி புழக்கம் உள்ளவர்கள் இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என தங்களது தகவல் பரிமாற்றங்களை ஹைடெக்க்காக மாற்றிக்கொண்டுவிட்டனர். 

விளைவு தந்தி என்ற ஒரு சேவை இருப்பதே பெரும்பாலானோருக்கு மறந்துவிட, இன்றைய இளைய தலைமுறைக்கோ தந்தி சேவை என்ற ஒன்று இருப்பதே தெரியாத நிலை.இவற்றையெல்லாம் மீறி தந்தி கொடுக்க செல்பவர்களை, " இந்த காலத்தில் தந்தியா...? ஹே...ஹே..!" என உறவினர்கள் மற்றும் நட்பு வட்டங்கள் ஏளனமாக பார்க்கின்றனர். 

இப்படியான ஒரு நிலையில் தபால் அலுவலகங்களில் தந்தி சேவை பிரிவு காத்து வாங்குவதால், அச்சேவையை வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ( தந்தி சேவை) சீனியர் ஜெனரல் மேனஜர், பல்வேறு தொலைபேசி மாவட்ட மற்றும் சர்க்கிள் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளதாகவும்,  அதில் 2013 ஜூலை 15 ஆம் தேதியுடன் தந்தி சேவையை நிறுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் டெல்லி பி.எஸ்.என்.எல்.  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தந்தி சேவை நிறுத்தப்படுவதால், கூடுதலாக இருக்கும் பணியாளர்களை மொபைல் போன் சேவைகள், தரை வழி இணைப்பு தொலைபேசி சேவைகள் மற்றும் பிராண்ட்பாண்ட் சேவைகள் போன்றவற்றிற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 
Source; http://news.vikatan.com

No comments: