Wednesday, October 29, 2014

SONY உருவான கதை

SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்)
 
இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.
 
அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made  in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.
morita.jpg

சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.
 
1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.
 
பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.
 
1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.
 
அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது. 
 
சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.
SonyLogo1.jpg
இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.
walkman_sony_tps_l2_phonografic_525.jpg
அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும். 
 
1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.     
 
அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.   
 
மொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா? மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.   
 
தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.  
 
உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா? Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.  
Made+In+Japan+-+Cover.jpg
1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி. எதையுமே ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் தொலைநோக்குடனும் செய்ததால்தான் அக்யோ மொரிட்டாவுக்கு அந்த வானம் வசப்பட்டது.
 
மொரிட்டாவைப்போல நாமும் ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி தொலைநோக்கு ஆகியவற்றை காட்டினால் எந்த வானமும் நிச்சயம் நமக்கும் வசப்படும்.    

Source: http://www.yarl.com/

No comments: