Wednesday, May 18, 2016

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்



ஆசியா கண்டத்திலேயே முதலாவது வானொலி ஒலிபரப்பு நிலையம் இலங்கை கொழும்புவில் 'கொழும்பு வானொலி' என்ற பெயரில் நிறுவப்பட்டு 1925, டிசம்பர் 25-ல் ஒலிபரப்பு தொடங்கியது. அப்போது இலங்கை ஆங்கிலேயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கிலத்திலேயே ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இடையிடையே தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின.

வானொலி ஒலிபரப்புகள் கேட்பவர்களை வந்தடைய மூல காரணமாக விளங்குபவர்கள் வானொலி அறிவிப்பாளர்கள். அறிவிப்பாளர் என்பதை விட ஒலிபரப்பாளர் என்ற சொல் இவர்க ளின் பணியை முழுமையாக எடுத்துக் கூறும்.

'இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்' என்ற நூல் இலங்கை வானொலியின் பல ஒலிபரப்பாளர்கள் பற்றிய விவரங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. இலங்கை வானொலியும் உலகம் போற்றும் பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கியிருக்கிறது.

ஆங்கிலத்தில் ஜிம்மி பரூச்சா, டிம் ஹாசிங்டன் போன்ற பலரையும் ஹிந்தியில் அமீர் சயானி போன்ற பலரையும் உருவாக்கிய இலங்கை வானொலி, தமிழிலும் பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கியிருக்கிறது.

தமிழில் முதல் ஒலிபரப்பாளராக இருந்தவர் சோ. நடராசன் என்பவர். இவர் பிரபல யாழ்ப்பாணத்துப் புலவர் சோமசுந்தரனாரின் மகன். தமிழ், சம்ஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த நடராசன் சம்ஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்த அறிஞர்.

இன்னொரு பிரபல ஒலிபரப்பாளர் சோ. சிவபாதசுந்தரம். இவரைப் பற்றி தமிழகத்தில் பலரும் அறிவார்கள். 'ஒலிபரப்புக் கலை' என்ற நூலை எழுதியவர். அந்த நூலுக்கு அறிமுகவுரை எழுதிய இராஜாஜி அந்த நூலுக்கு 'ரேடியோ வாத்தியார்' என்றே பெயர் வைத்திருக்கலாம் என எழுதியுள்ளார். அந்த அளவுக்கு ஒலிபரப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் அந்த நூலில் எழுதப்பட்டுள்ளன.

இவர்களோடு, தமிழக வானொலி நேயர்கள் நன்கறிந்த மயில்வாகனன், சற்சொரூபவதி நாதன், இராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி, அப்துல் ஹமீத், கே.எஸ். ராஜா என்று மொத்தம் 50 ஒலிபரப்பாளர்கள் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கூடவே, ஒலிபரப்பாளர்களின் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், நூலாசிரியர், தனது சேகரிப்பில் இருந்த சில அரிய புகைப்படங்களையும் இந்த நூலில் வெளியிட்டுள்ளார். வேறெங்கும் பார்க்க முடியாத படங்கள் அவை.

இந்த நூலை எழுதிய தம்பிஐயா தேவதாஸும் ஒரு ஒலிபரப்பாளரே. ஒலிபரப்பாளர்களைப் பற்றி அவர் தந்திருக்கும் விவரங்களைப் படிக்கும்போதே இலங்கை வானொலி என்ற நிறுவனத்தின் வரலாறு, அந்த மண்ணின் கலாச்சாரம் போன்றவற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது.

- எஸ்.எஸ். உமா காந்தன்

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் 
தம்பிஐயா தேவதாஸ் 
விலை: ரூ. 150 
வெளியீடு: வித்யா தீபம் பதிப்பகம், கொழும்பு / 13 தமிழகத்தில் 
புத்தகம் பெற: ardicdxclub@yahoo.co.in

நன்றி: தி இந்து, நூல் வெளி, 17-5-2016

No comments: