Tuesday, August 27, 2013

K.S..ராஜா பற்றிய ஒரு குறிப்பு: பழைய விகடனில் இருந்து

சாகும் வரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..!


ற்பாடு செய்தவர்களே எதிர் பார்க்கவில்லை. மதுரை காந்தி மியூஸிய திறந்தவெளி அரங்கு திணறியது. எங்கெங்கும் ஆரவாரத் துடன் ரசிகர்கள் கூட்டம். 
இலங்கை வானொலியின் அலை வரிசைகளில் ஆதிக்கம் செய்த அபிமான அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சமீபகாலமாகக் கேட்க முடியாமல் தவித்த வானொலி நேயர்களுக்கு, ஈழப் போராட்ட நிதிக்கு அவர் இங்கு நேரடியாக நிகழ்ச்சிகளைத் தரப்போகிறார் என்ற செய்தி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அவர் கம்பீரக் குரலை நேரில் கேட்கவும் அவரைப் பார்க்க வும் ஆர்வத்துடன் பரபரத்தனர்.
'பராக்' சொல்வதுபோல் முதலில் ஒருவர் 'வருகிறார்... வருகிறார்... கே.எஸ்.ராஜா' என அறிவிக்க, அதைத் தொடர்ந்து பிரமாண்டமான மியூஸிக். மற்றொருவர் வந்து மைக் பிடிக்க, இவரும் கே.எஸ்.ராஜா Posted Imageவருவதை அறிவிக்கிறாரோ என நாம் எதிர்பார்த்து இருந் தோம். மைக்கைப் பிடித்தவுடன், ''வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்...'' என அதே மிடுக்கான குரல் ஒலிக்க, ராஜாவின் குரலை நேரில் கேட்ட மகிழ்ச்சியில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
லேசான சாம்பல் நிற சஃபாரியில் சற்றே குள்ளமாக, தொப்பி வைத்துக்கொண்டு, நாம் சற்றும் எதிர்பார்க்காதபடி வித்தியாசமான ராஜாவாக இருந்தார். தேனிசை மழையின் ஆரம்பத்தில் ஒரு மாணவி, கே.எஸ்.ராஜாவிடமே பர்சனாலிடி பற்றிக் கேட்டுவிட... அவர், ''நீங்கள் எப்படி எதிர்பார்த்தீர்கள்?'' என்றவுடன், ''கொஞ்சம் ஹைட்டா, வெயிட்டா அமிதாப் பச்சன் ஸ்டைலில் இருப்பீர்கள் என்று எதிர்பார்த் தேன்'' என்றார் அந்த மாணவி. ''அமிதாப்புக்கு என்னைப் போன்று அழகான தமிழ்க் குரல் கிடையாதே'' என்றார் கே.எஸ்.ராஜா. அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. 'பாட்டுக்குப் பாட்டு' இசை நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே சூடுபிடித்தது. அதிகாலை 3 மணி வரை பார்வையாளர்களைத் தனது பேச்சிலும் கிண்டலிலும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
மறுநாள் யானைக்கல்லில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்டில் கே.எஸ்.ராஜாவைச் சந்தித்தோம்.
தினமும் வானொலியில், வணக்கம் கூறி விடைபெற்று நழுவிவிடும் ராஜாவைப் பற்றிய முழு விவரம் தெரிய வேண்டாமா?
இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர். அம்மா ஆசிரியை, சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள். முக்கியமாக, பிளாஸ்டிக் சர்ஜரியில். படிப்பு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் ரசாயனப் பட்டதாரி.
''1966-ல் கொழும்பு ராயல் காலேஜில் படிக்கும்போது, மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்து நின்றவர் ஒரு சிங்களர். அந்த செயின்ட் தாமஸ், செயின்ட் பீட்டர்ஸ் பகுதிகளில் சிங்களர் கள்தான் அதிகம் என்றாலும், அவர்களும் தமிழரான என்னையே தெரிவு செய்தார்கள். (நடுநடுவே பயங்கரமான தும்மல். தமிழ்நாட்டு க்ளைமேட் ஏற்றுக்கொள்ளவில்லையாம்!)
''சிலோன் யுனிவர்சிட்டியில் கொஞ்ச நாட்கள் புரொஃபஸராகப் பணியாற்றினேன். எக்ஸாம் கவுன்சிலிலும் நியமித்தார்கள். அப்போதெல்லாம் பி.ஹெச்டி. வாங்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். 'ரேடியோவில் அறிவிப்பாளர் கேட்டு விளம்பரம் வந்திருக்கு. நீங்கதான் நன்றாகப் பேசறீங்களே. அப்ளை பண்ணுங்க'னு ஸ்டூடன்ட்ஸ் சொன்னாங்க.
அப்போதெல்லாம் பொதுவாக நாடகத்தில் பேசினவங்களைத்தான் தெரிவு செய்தார்கள். ஆனால், அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்கள், எனது உச்சரிப்பினையும் குரல் வளத்தையும் கண்டுகொண்டு, என்னையே அந்தப் பணிக்கு நியமித்தார். எனது முன்னேற்றத்துக்கு அவருடைய உற்சாகமும் உறுதுணையும்தான் முக்கியக் காரணம்'' என்றார் ராஜா.
Posted Image
1970-ல் ராஜாவின் நுழைவுக்குப் பின், வானொலி ஒலிப்பரப்பில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றிக் கேட்டபோது...
''சாதாரண பொதுமக்களுக்கும் நிலையத்துக்கும் மிகுதியான உறவினை ஏற்படுத்தும் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினேன். பி.பி.சி-யில் 'ஹீட்பரேட்' (இசை அணித் தேர்வு) - நிகழ்ச்சி யினை முதன்முதலாக அறிமுகப்படுத்தினேன். 'இசைச் செல்வம்' நிகழ்ச்சிகூட அதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.
நான் அமைக்கும் 'திரை விருந்து' நிகழ்ச்சி யினைத் தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள் மிகவும் பாராட்டியிருக்கிறார். நடிகர் திலகம் அவர்களும் அவருடைய துணைவியாரும் 'ஹீட் பரேட்' நிகழ்ச்சியினை மிகவும் ரசித்துக் கேட்ப தாகக் கூறியிருக்கிறார்கள்.
மாணவ - மாணவியருக்காக நடத்தப்படும் 'பொது அறிவுக் களஞ்சியம்' நிகழ்ச்சி, மக்களிடையே மிகுதியான வரவேற்பு. 1981-ல் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளே அரசுத் தேர்வுக்கு மிகுதியாக வந்திருந்தன. ''தொலைபேசி மூலம் உரையாடும் 'உங்கள் விருப்ப நிகழ்ச்சி'க்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு'' என்றார்.
''புதுமை என்றாலே எதிர்ப்புகள் இருக்குமே... தங்களுக்கு?''
''இல்லாமலா என்ன... ஆரம்பத்தில், வழக்க மான ஒலிப்பதிவு முறைக்கு எதிராகச் செயல் படுகிறேன் என்று சொல்லி, முழுமையாக இடையூறு செய்தார்கள். ஆனால், ரசிகர்களின் ஏராளமான கடிதங்கள், அதிகாரிகளின் மனத்தை மாற்றிவிட்டு, என்னையும் விருப்பம்போல் செயல்படவைத்துவிட்டது!''
உரையாடல் கவிதை மீது தொற்றியது.
''இலங்கையில் கவியரசர் கண்ணதாசனுக்கு ஏராளமான ரசிகர்கள். கருணா ரத்தின அபய சேகரர் என்பவர் ஒரு சிங்களக் கவிஞர். அவர் கண்ணதாசனின் தமிழ்க் கவிதைகளைச் சிங்களத் தில் மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டு, அப்படியே அதனைக் கவியாக வடித்துவிடுவார்'' என்றார் ராஜா.
ராஜா, இலங்கை வானொலியைவிட்டு வெளியேறிய நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினார்.
Posted Image''நான் எழுச்சிப் பாடல்களாக ஒலிபரப்பி னேன். உடன் இருப்பவர்களே பொறாமையினால் காட்டிக்கொடுத்துவிட்டார்கள். பின் என்ன, இடைநிறுத்தம் செய்துவிட்டார்கள். ராணுவத் தினரிடம் சித்ரவதை. நான்கு மாதக்கஷ்டம். அதைத் தொடர்ந்து வட இலங்கை நோக்கிப் பயணமாகிவிட்டேன். யாழ்ப்பாணம் குடா நாடு முழுமையாகப் போராளிகளின் கட்டுப்பாட் டில் இருப்பதால், பிரச்னை எதுவும் இல்லை.
இயக்கங்கள் அனைத்தும் ஒரு கொடியின் கீழ் இணைய வேண்டும். சமீபத்திய வவுனத் தீவு சண்டை ஒரு ஆரோக்கியமான அறிகுறி'' என்கிறார்.
''இப்போதெல்லாம் ஈழ மக்கள் இலங்கை வானொலியை நம்புவது இல்லை. 'லங்கா புவத்' - என்பதை 'லங்கா பொய்' என்றே கேலியாக அழைக்கிறார்கள்.
இந்தியப் பத்திரிகைகள் மற்றும் இந்திய வானொலி நிலையங்களில் ஒலிப்பரப்பாகும் செய்திகளையே நம்புகிறார்கள்'' என்கிறார்.
''சாகும் வரையிலும் அறிவிப்பாளராகப் பணியாற்றவே விரும்புகிறேன். ஆனால், மறுபடியும் இலங்கை வானொலி நிலையம் சென்றால், என்னால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாது இல்லையா?''
- அந்தக் கம்பீரமான குரலில், ஓர் இனம் புரியாத சோகம் இழையோடியது!
- பி.இளங்கோவன், ஆர்.தேன்மொழி

நன்றி: விகடன் பொக்கிசம் Via http://www.yarl.com

3 comments:

சத்தியா said...

ஒரு உண்ணதமான மதுரக் குரல் தமிழ்க் கலைஞனை இழந்து விட்டோம். காலையில் இவர் குரல் கேட்டால் அன்று முழுநாளும் உற்சாகமாய் இருக்கும்.

சார்லஸ் said...

தேன் குரலுக்கு சொந்தக்காரார் கே . எஸ். ராஜாவை பற்றிய செய்தி மீண்டும் என்னை குழந்தை பருவத்திற்கு கொண்டு சென்றது. அந்த நாட்களும் இசைச் செல்வமும் மீண்டும் வந்திடாதோ?

Anonymous said...

அதுஒருஆழகிய கனா காலம்