Tuesday, August 05, 2008

நேயர் உறவுகளுடன் வத்திக்கான் வானொலி தமிழ்பிரிவு

கோடை காலத்தில் இதமாக இருந்த நாளான கடந்த 25 மே 2008 ஞாயிறு அன்று திருச்சி தூயவளனார் கல்லூரி அரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நேயர் உறவுகளுடன் வத்திக்கான் வானொலி தமிழ்பிரிவு சார்பில் நேயர் சந்திப்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு ரோமிலிருந்து அருட்சகோதரி தெரேசா அவர்களும், வத்திக்கான் வானொலி இந்தியஅலுவலகத்தின் இயக்குனர் அருட்பணி சேவியர் ராஜன் மற்றும் திரு. ஜார்ஜ் அவர்களும் வருகை தந்து சிறப்புற நடத்தினர். நீண்டகால நேயர்கள், வளமையான நேயர்கள், பிற மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த நேயர்கள் மற்றும் புதிய அறிமுக நேயர்கள் என பல தரப்பு நேயர்களும் வருகை தந்து விழாவினை சிறப்பித்து கொடுக்கும் முகமாக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.


தொடர்ந்து நிகழ்ச்சிகள் பற்றிய பொதுவான விமர்சனக் கருத்துக்களை நேயர்கள் நேரடியாக பகிர்ந்து கொண்டனர். நேயர்களின் ஐயங்களுக்கு அருட்சகோதரி தெரேசா அவர்களும், திரு. சேவியர் ராஐன் அவர்களும் உடனுக்குடன் விளக்கமாக பதில் அளித்தனர்.


இதற்கிடையே விழா அரங்கிற்கு வெளியே வத்திக்கான் தலைமை கலையகத்திலிருந்து தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட திரு. கிருஸ்டோபர் அவர்கள், விழா நடைபெறும் விதம் பற்றி கேட்டறிந்து, சிறப்பு நிகழ்ச்சிக்காக நேயர்களின் கருத்துக்களை தொலைபேசி வழியாகஒலிப்பதிவு செய்து கொண்டார்.


ஒலிபரப்பு தரம் பற்றி நேயர்கள் விவாதித்த வேளையில் வானொலி கேட்பதில் நீண்டகால அனுபவம்பெற்ற விழுப்புரம் திரு. ஜமீல்அகம்மது அவர்கள் சிற்றலை ஒலிபரப்பின் தன்மை குறித்தும் தொழில் நுட்பம் சார்ந்தும் பலவித விசயங்களை விரிவாக விளக்கிக் கூறினார்.
மேலும் சிற்றலை ஒலிபரப்பை கேட்பதில் அனைத்து நேயர்களும் அறிய வேண்டிய அடிப்படைநுணுக்கங்கள் பற்றி தனது நேரடி அனுபவங்களுடன் எளிமையாக எடுத்துக் கூறியது சிற்றலையில் இன்னும் அறிய வேண்டியது எவ்வளவோ உண்டு என்பதை அறிய முடிந்தது.


அடுத்து உரையாற்றிய திருச்சி அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் புலவர் கோ.சந்திரசேகர் அவர்கள் ஏறக்குறைய 48 ஆண்டுகள் தன் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்ட வானொலி ஊடகம் பற்றிய பல அரிய தகவல்களை நகைச்சுவை நயம்பட எடுத்துக் கூறியது, கலந்து கொண்ட நேயர்களின் மனதில் வானொலி கேட்பதை தீவிரப்படுத்த வேண்டும் என்கின்ற தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இதுபோல வானொலி செவிமடுப்பது தொடர்பான விளக்கங்களை விழா நடத்தும்ஒவ்வொரு வானொலியும் தனது விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்து கொடுத்தால், வானொலிநேயர்களை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். மேலும் பல புதிய நேயர்களை உருவாக்கவழிவகுக்கும்.


நிறைவாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தூய வளனார் கல்லூரியின் அருட்பணி திரு. லாசர்அவர்களின் ஆசியுடன் கூடிய நிறைவுரை மற்றும் சிதம்பரம் திரு. விஜயராகவன் அவர்களின் நன்றியுரை யுடன் மாலை 4 மணிக்கு விழா இனிதே நிறை வடைந்தது.

- மின்னகல் செல்வராஜ்.

No comments: